Tuesday, November 20, 2012

இதயமே… இதயமே…


ஒவ்வொருத்தருக்கும் அவங்க வாழ்க்கைய மாத்துறதுக்கு ஒரு சம்பவம் நடக்கும். எனக்கென்ன நடந்திச்சுனு கேக்குறீங்களா? சொல்றேன்.. எவ்ளோ ஓடுறோம்.. ஆடுறோம்.. விழுந்து விழுந்து சம்பாதிக்குறோம்… எதுக்காக? நம்ம ஒருத்தருக்காகவா? ஆனா நான் அப்படிதான் நினைச்சேன். என் வாழ்க்கைய நான்தானே வாழணும். தேவையேயில்லாம சில கமிட்மேண்ட்ஸ்ஸ நாமளே உருவாக்கிட்டு அதுக்காக ஏன் நம்ம வாழ்க்கைய கடினமாக்கிக்கணும்னு. ஆனா என்னை பெத்தவங்க வேற மாதிரி நினைச்சாங்க. சிங்கிள் பிளேயரா என் வாழ்க்கைன்ற கேம் நான் விளையாடிட்டு இருந்தப்ப எனக்கு துணையா ஒரு டபிள் பிளேயர பார்க்கணும்றது அவங்களோட ஆசை. காதலுங்குற நதியில நீந்தவே பயந்துகிட்டு கரையில நிக்குறேன். எல்லாருமா சேர்ந்து கல்யாணம்ன்ற கடல்ல தூக்கி போடப்பாக்குறாங்களே? அட அதுக்காக குதிச்சுடமுடியுமா? எப்படி தப்பிகணும்னு யோசிக்கணும்ல… அட அதுக்கும் அவங்களே ஒரு வழி வகுத்துகொடுத்தாங்க.

இவ்வளவு நேரமாகியும் அவள் வரவில்லையே என்று எரிச்சலாயிருந்தாலும் இன்னும் நல்லா தயார் பண்ண சந்தர்ப்பம் இருப்பதை நினைத்து பொறுமையாக மூச்சுவிட்டு எப்படி பேசுவதேன்று மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்தேன். பதட்டம்தான் அதிகமானது. மனதை வேறு பக்கம் திருப்ப சுற்றிமுற்றி என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். அழகான ரெஸ்டாரண்ட்தான். தனிமையில் காதலர்கள் பேசுவதற்கென்றே ரசித்து கட்டியிருக்கிறார்கள். ஆனால் சுற்றிலும் ஜோடியாக அமர்ந்திருக்கும் காதலர்கள் பேசுவதாகவே தெரியவில்லையே…. எதிர் எதிரே அமர்ந்திருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர இந்த உலகத்தை ஒரு பொருட்டாக எண்ணியதாகவே தெரியவில்லை. ஓ… இதுதான் காதலா? ஏனோ எனக்குதான் இதுல நாட்டமேயில்ல. ஏன் வரல? அதுவும் வரல… நானும் போகல…

எவ்வளவு நேரம்தான் என்னோட நானே பேசிக்கிட்டு இருக்கிறது என வெறுப்போடு சலிப்பும் வர ரெஸ்டாரண்ட்டின் கதவை திறந்துகொண்டு மயிலா! மரகதமா? மேகமா? இல்ல எனக்கு வரப்போற சோகமா? ஐயயோ இப்பனு பாத்து ஒரு உவமையும் கைவசம் இல்லியே… ஏதோ! அவரவர் எண்ணத்துக்கு உவமைகளை தாராளமாக பயன்படுத்தக்கூடியமாதிரி அவ்ளோ அழகா ஒரு பொண்ணு வந்தா. போட்டோவ விட நேர்ல அம்சமா…….. அதுக்குள்ள என் பக்கத்துல வந்துட்டா. நான் மட்டும் என்ன மட்டமா? கமல், அஜித் மாதிரி அழகா இல்லாட்டியும் ரஜினி, விஜய் மாதிரி மாநிறமா இருந்தாலும் பார்க்குவறவங்கள ஈர்க்குற மாதிரி கவர்ச்சியா இருப்பேன். ஆனா அது நம்ம பிரச்சினை இல்லை. இவ்ளோ அழகான பொண்ண பாத்ததுக்கு பிறகும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்ற என் கொள்கையில இருந்து நான் மாறலயே பாத்துகோங்க. ஏற்கனவே பெத்தவங்க எல்லாம் பேசிட்டதனால ஒரு சம்பிரதாயத்துக்கு இந்த சந்திப்பு. அவ எனக்கு முன்னால இருந்த கதிரைல உக்காந்தா.
சிரிச்சா.. நானும் சிரிச்சேன். டக்குனு சிரிப்பு மறைஞ்சு வேற எங்கயோ பாத்து யோசிச்சா? என்னடானு நான் அவளயே பாத்தேன். என் பக்கம் திரும்பி மறுபடியும் அதே சிரிப்பு. ஆத்தாடீ… இப்படியே சிரிச்சு கவுத்துடுவா போலயே… நானே அந்த மௌன சங்கிலிய உடைச்சேன்.

‘நீங்க.. உங்கள பத்தி நீங்க எப்படி… எல்லாம் அம்மா சொன்னாங்க. பட் பேசவேண்டியது நாமதானே…. (முகத்துல ஒரு உணர்ச்சியும் இல்லாம கல்லுமாதிரி உக்காந்திருந்தா. ம்ம்ம்) ஒரு பொண்ணா உங்களுக்கு வரப்போற கணவன் மேல உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்… ஆனா….. அதுக்கு நான் பொருத்துமானவனானு எனக்கு தெரியல. ( இப்ப முகத்த நிமிந்து என்னை பாத்தா..) ஹ்ம்ம் வந்து… நான்…. ஏதாவது பேசுங்களேன். அப்பதானே நானும் தைரியமா பேசலாம்..

(நான் அப்படி சென்னதும் உதட்டோரத்துல ஒரு மொட்டு பூவா அரும்புமே அப்படி ஒரு சிறுநகை… மயங்கிடாதடா… மனசை கட்டுபடுத்திவிட்டு என்ன சொல்லபோறாள்னு ஆர்வமா ஆனா அத வெளிள காட்டாம கவனிச்சேன்.)
‘நீங்க சொல்றது சரிதான். எனக்கும் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு. மத்தவங்க மாதிரி புருசன் என்ன தப்பு பண்ணாலும் பரவால அனுசரிச்சு போவோம்னு நினைக்கமாட்டேன். குடிக்குறது, சிகரெட், டைம்பாஸ்ஸுக்காக பொண்ணுங்ககூட ஊரசுத்துறது இப்பிடியான ஆம்பிளங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படி ஒருத்தர் கிடைக்காமலேபொனாலும் என் தீர்மானத்துல இருந்து மாறமாட்டேன். ஆனா அப்பிடி ஒருத்தர நான் தேடிப்போகல. அதப்போல நீங்க எப்படியிருந்தாலும் அத பத்தியும் தான் கவலப்படல.’

(அவ பேசப்பேச அவளயே பாத்துட்டு இருந்தேன். அதுவும் எப்படி? சிதம்பர சக்கரத்த பேய் பாத்த மாதிரி… ஒண்ணுமே புரியல. என்ன சொல்லவாறா? அவ விரும்பின மாதிரி நான் இருக்க வேண்டாம்னா அவளுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயா? அப்ப இன்னும் சுலபமா முடிஞ்சுமே… அத எப்பிடி விடமுடியும்… இதுக்காகவே ராத்திரியெல்லாம் உக்காந்து யோசிச்சு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன். அத அழகா பெர்ஃபாமன்ஸ் பண்ணி மொத்தமா கழட்டிவிட்ருலாம். அப்புறம் டேய்.. அவ எப்படி திக்காம திணறாம தைரியமா பேசுறா? மானத்த காப்பாத்துடா. கெத்த மெயின்டன் பண்ணு)

‘(சோகமா முகத்த வச்சுகிட்டு) பாருங்க விதிய… நீங்க எதிர்பார்க்குற எல்லாம் எங்கிட்ட இருக்கு. குடி, சிகரெட் வாசனையே எனக்கு பிடிக்காது. பொண்ணுங்க பக்கமே திரும்பினது கிடையாது. ஆனா … ஆனா ( அழுவது போல) நீங்களும் நானும் கல்யாணம் பண்ணனும்னு நம்ம பெத்தவங்க ஆசப்பட்றது நடக்கவே நடக்காதுங்க… (சொல்லிட்டு தலயில கையவச்சு அழுவது மாதிரி ஓரக்கண்ணால அவ ரியாக்ஸன பாத்தேன். நெத்திய சுருக்கி ஒண்ண் புரியாம குழப்பமா என்னை பாத்தா. அசத்திடடா.. கண்டின்யூ…)

‘ஏன்? புரியல… தெளிவா சொல்லுங்க’

‘என்னத்த சொல்லுறது? எல்லாம் ஆண்டவனின் திருவிளையாடல். இப்பிடி ஒரு கெட்டபழக்கமும் இல்லாம வீட்டுக்கு அடங்கின பிள்ளையா ஒழுங்கா வேலைக்கு போய்ட்டு வந்திருக்கும்போதுதான் என் வாழ்க்கைல விதி விளையாடிடுச்சு. (அவள் மேலும் குழம்பியதை ரசித்தவாறே தொடர்ந்தேன்.) ஒருநாள் காலைநேரம்… எல்லாருக்கும் விடிஞ்சுச்சு. எனக்கு மட்டும் எனக்கு மட்டும் …. இருட்டிடுச்சு. வேலைக்கு போறதுக்காக சும்மா ஸ்டைலா பைக்ல போய்ட்டு ஒருந்தேன். ரோட்ல போற எல்லாரும் என் ஸ்டைலத்தான் பாத்துட்டுருந்தாங்க.(வாய சுளிச்சா பாருங்க.. தேவயாடா உனக்கு கதைய மட்டும் சொல்லு) திடீருனு மூச்சு எடுக்க முடியாம மயங்கி கீழ விழுந்திட்டேன். எல்லாரும் தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேத்தாங்க. டாக்டர் செக் பண்ணிபாத்துட்டு… எங்கிட்ட வந்து… எங்கிட்ட வந்து… எனக்கு இதயநோய்னு சொன்னாருங்க… அவ்வ்வ்

(ஒரு கேப் விட்டு அவள நிமிந்து பாத்தேன். அவ அப்படியே உறைஞ்சுபோய் உக்காந்திருந்தா.. ஹாஹாஹா இத இத இததான் எதிர்பாத்தேன். என் பெர்ஃபான்ஸ பாத்து நானே வியக்குறேன். வாவ்.. சரி சரி இப்பிடியே தொடர்ந்து போ)
அப்பிடி டாக்டர் சொன்னத கேட்டு என் இதயமே நின்னுபோச்சு… எப்பிடியும் கூடிய சீக்கிரம் நிக்கப்போற இதயம்தானே… வாழ்க்கையே வெறுத்தமாதிரி ஆயிடுச்சு. யார்கிட்டயும் சரியா பேசல. மனசு வெறுத்துபோய் வீட்டுக்குள்ளயே முடங்கிட்டேன். என் அப்பா அம்மா இத தாங்கமாட்டாங்கனு அவங்ககிட்ட மட்டும் இல்ல யார்கிட்டயுமே இத சொல்லல. அது தெரியாம அவங்க இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. என்னால இன்னொரு பொண்ணுட வாழ்க்கை பாதிக்குறத நான் விரும்பல. அதான் உங்ககிட்ட உண்மைய சொல்லி கல்யாணத்த நிறத்தலாம்னு முடிவு பண்ணேன். தயவு செஞ்சு என் பிரச்சினைய சொல்லாம நீங்களே ஏதாவது ஒரு காரணத்த சொல்லி கல்யாணத்த நிறத்திடுங்க’

(அப்பாடீ… ஒருவழியா கதை முடிஞ்சுது.. எவ்ளோ நடிக்கவேண்டியிருக்கு.. ஆனா ஒண்ணுமே வீண் போகல. அதான் எதிரிலயே உக்காந்து தாரை தாரையா கண்ணீர் வடிக்குறாளே.. கதை சொல்லிட்டு இருக்கும்போதே கவனிச்சேன். அழத்தொடங்கினா. ஆனா இப்ப அவளயும் மீறி இம்புட்டு அழுகையா? எல்லாம் ஐயாவோட பெர்ஃபாமன்ஸ். எனக்குள்ள இத்தன திறம இருக்குனு என்னாலயே நம்ப முடியல. எங்கப்பா இருக்கு அந்த அக்காடமி ஆஃப் ஆர்ட்ஸ்.. ஒரு ஆஸ்கார் பார்ஷல் பண்ணி வையுங்கடா.
ஆனா அவ அழுகுறததான் பாக்கமுடியல. ரொம்ப ஓவரா போய்டோமோ? இவ இவ்வளவு இளகின மனசுக்காரினு தெரியாம்ப்போச்சே… பாவம்)
‘ஏங்க… நானே இவ்ளோ கவலப்படல.. நீங்க ஏன்? விடுங்க ப்ளீஸ் நீங்க அழுகுறது எனக்கு இன்னும் கஷ்டமாயிருக்கு.’

‘(அழுகையுடனேயே) அது.. அது இல்ல. நான் என்ன சொல்ல வந்தேனோ அதத்தான் நீங்க சொல்லியிருகீங்க…’

(அப்பிடியே சம்மட்டியால யாரோ பின் மண்டைல அடிச்சது போல இருந்திச்சு)

‘என்னங்க சொல்றீங்க? நீங்க சொல்ல வந்ததா? புரியல! ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க?’

(அவள் தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு என்னைப்பார்த்தாள். நான் அதே குழப்பதோட அவளைப் பார்த்தேன். ஏதோ நினைத்தவளாய் மேசை மீது வைத்திருந்த என் கை மீது அவள் கையை வைத்தாள். மின்னல் தாக்கும்போது சுனாமி வந்து மோதினா எப்பிடி இருக்கும்? அப்பிடி இருந்திச்சு. ஆனா பிடிச்சிருந்திச்சு. இத்தனை நாள் எதையோ இழந்துவிட்டமாதிரி என்மேல எனக்கே கோபமா வந்திச்சு. பரீட்சை பேப்பர பாக்குறதவிட அதிக குழப்பம், குழந்தைங்க சிரிப்பை பாக்குறதவிட அதிக சந்தோசம், கிரிக்கெட்டின் கடைசி ஓவரைவிட அதிக பதட்டம், மழைநேர உறக்கத்தவிட அதிக நிம்மதி எல்லாம் ஒண்ணா… ஒண்ணா வந்து உயிரைப் பிய்ச்சிடுச்சு. அந்த நிமிஷம் முடிவு பண்ணேன். பிடிச்ச இந்த கைய இனி விட்றதே இல்லனு. ஆனா இன்னும் அவ ஏன் அழுறானு தெளிவா சொல்லவே இல்லயே. என்ன என்பதுபோல அவளப் பாத்தேன். என் வாழ்க்கைலயே முதல்முறையா காதல்பார்வையோட பாத்தேன்.)

‘இது எப்படினு எனக்கும் புரியல. எனக்கும் இதயநோய் இருக்கு. அத மறைச்சு இந்த கல்யாணத்த செய்ய என் அப்பா முடிவு பண்ணாரு. எனக்கு மனசு வரல. அதான் உங்ககிட்டயே சொல்லி கல்யாணத்த நிறுத்தலாம்னு வந்தேன். ஆனா… இப்பிடி… எல்லாம் கடவுளோட… அது வந்து… என்னை கல்யாணம்… பண்ணிப்பீங்களா?’

(அழுதுகொண்டே கேட்டு முடித்தாள். அடப்பாவி. அவளே கல்யாணத்தை நிறுத்தத்தான் வந்திருக்கா. வாய மூடிகிட்டு சும்மா இருக்காம பெரிய கதாசிரியர் மாதிரி சீன் எல்லாம் கிரியேட் பண்ணி மாட்டிகிட்டியே… ஆனா நான் அப்பிடி சொல்லாம இருந்திருந்தா இப்ப இந்த தேவதை என்னைக் கல்யாணம் பண்ணசொல்லி கேட்டிருப்பாளா? ஒவ்வொருத்தருக்கும் காதல் ஒவ்வொரு புள்ளியில ஆரம்பிக்கும். எனக்கு நோயில ஆரம்பிச்சிருக்குனு விடவேண்டியதுதான். ரொம்ப யோசிக்காதடா… பதிலுக்காக மூஞ்சியயே பாத்துட்டு இருக்கா. டக்குனு பதில சொல்லு.. ம்ம்ம் எப்பிடி சொல்றது. எதிர் எதிரா இருந்த நான் அவளுக்கு பக்கத்தில கதிரைய போட்டு அவ தோளமேல கையவச்சு என் நெஞ்சோட அணைச்சேன். அவளும் அடையவேண்டிய இடத்தை அடைஞ்ச திருப்தியில கண்மூடி சாய்ந்துகொண்டாள்)

அஞ்சு வருஷமாச்சு. இன்னும் அப்பிடியேதான் என் நெஞ்சில ஒரு குழந்தபோல சாஞ்சு டீவில சீரியல் பாத்துட்டு… இதோ என் பக்கத்துலதான் என் தேவதை இருக்கா. நான் ஒரு நல்ல கணவனா நடந்தேன்னு சொல்லமாட்டேன். அவ ஒரு நல்ல மனைவியா நடந்துகறதுக்கு இடமளிச்சேன். இன்னிய வரைக்கும் அவ இதயத்துக்கு எதுவும் ஆகாம வந்தாச்சு. இனிமேலும் நடக்க விடமாட்டேன். ஆ.. நடுவுல ஒருக்கா எனக்கு உண்மையாவே இதயத்துல ஒரு பிரச்சினையும் இல்லனு அவளுக்கு தெரிஞ்சப்பதான் பொய் சொன்னதுக்காக கொஞ்சம் கோபப்பட்டா. அதுவும் கொஞ்சநேரந்தான். நினைச்சுப்பாத்தவே பிரமிப்பா இருக்கு. என் வாழ்க்கை கேம்க்கு ஒரு டபிள்பிளேயர் கிடைச்சாச்சு. காதலே புடிக்காம சுத்திட்டு இருந்த நான் இப்ப எல்லாத்தையும் ஏன் என்னையே காதலிக்க வச்சது இந்த காதல். கவலய விட்டுட்டு லவ் பண்ணுங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும் :) 

Thursday, November 15, 2012

அவரவர் நியாயம்

‘முதியோர் இல்லங்குறது எவ்ளோ வேதனையான அனுபவம் தெரியுமா? தப்பு பண்ணாதவங்களுக்கு தண்டனை கொடுக்கிற சிறைச்சாலை அது. நமக்காக எவ்ளவோ தியாகம் பண்ண அப்பா அம்மாக்கு இதுவா பரிசு? அவங்க அங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு நீ கொஞ்சமாவது யோசிச்சியா? நீ இப்டி பண்ணுவனு நான் நினைக்கல அண்ணா…’

 ‘என்னையென்ன பண்ண சொல்ற? வேல வேலனு ஊர சுத்தவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. வீட்டுல அவளும் அம்மாவும் போடுற சண்ட தாங்க முடியல. நான் வெளிவேலய பாப்பேனா? இல்ல இவங்களுக்கு மத்தியஸ்தம் பண்ணுவேனா? இப்படியே போனா குடும்பம் நடத்த முடியாதுனுதான் அப்பிடி ஒரு முடிவெடுத்தேன். அங்க அவங்களுக்கு எல்லா வசதியும் இருக்கு. நீ அதப்பத்தி கவலப்படாம இரு.’

‘உன்ன அண்ணானு கூப்பிடவே அசிங்கமாயிருக்குடா…. செய்யக்கூடாதத செஞ்சிட்டு இப்ப சப்பகட்டு கட்டுறியே… அப்பிடி என்னதான் உன்ன மயக்கி வச்சிருக்கா உன் பொண்டாட்டி?’

 ‘ஹே, அவள தப்பா பேசாதா? அவ என்ன செய்வா? பாவம். வயசானா வீட்டு நெலமய அனுசரிச்சு அமைதியா இருக்கணும். அத வுட்டுட்டு இருக்குறவங்களுக்கும் தொல்லை கொடுத்துட்டு அவங்களும் மூக்க சிந்திட்டு இருந்தா எப்படி நிம்மதியா வாழமுடியும்? பெத்தவங்கன்றதுக்காக எவ்வளவுதான் பொறுத்துக்கமுடியும்.. ஆமா நீ என்ன என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கே? உலகத்துல யாரும் செய்யாததயா நான் செஞ்சிட்டேன்?’

 ‘பெத்தவங்களுக்கு ஒருவாய் சாப்பாடு குடுக்க வக்கில்லாம சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்கே… வெக்கமா இல்ல?’ ‘அப்பிடீன்னா நீ கூட்டிட்டு போய் உங்கூடயே வெச்சிக்க வேண்டியதுதானே?’

‘அங்க அவரும் நானுமே இருக்க வசதியில்ல.. கரண்ட கட் பண்றதால புழுக்கத்துலயே வேகவேண்டியிருக்கு. இதுல அவங்கள வேற வச்சு எப்படி பாத்துக்கமுடியும்? ஆம்பிளப்பிள்ளனு சொத்த மட்டும் அதிகமா வாங்கிகிட்டியே ஆம்பிளயா லட்சணமா அப்பா அம்மாவ பாத்துக்ககூடாதா?'

‘ஓஓ…. அதுனாலதான் உன் மாமனார் மாமியார நீ புகுந்த வீட்டுக்கு போன அடுத்தமாசமே முதியோர் இல்லத்துக்கு அனுப்பினியா? உன் பேச்ச கேட்டு மச்சான் அவங்க பெத்தவங்கள தள்ளிவக்குறது தப்பில்ல.. ஆனா என் பொண்டாட்டிக்காக நான் பண்ணா தப்பா? வந்துட்டா நாட்டாம பண்ண. வேலயப் பாத்துட்டு போ’

 ‘……………………………………………’

Tuesday, July 17, 2012

பாதப்பலகை…

வழக்கம்போல பாடசாலைவிட்டு வீட்டுக்கு நடந்துவந்துகொண்டிருந்தாள் திவ்யா. உயர்தரப் பரீட்சை நெருங்கும் காலமென்பதாலும் இத்தனைவருடகால பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி நெருங்கிவிட்டது என்பதாலும் பாடசாலைக்கு வெளியே வந்துகூட கரும்பலகையும் பள்ளிசுவர்களும் கண்களிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. நல்ல ரிசல்ட்ஸ் எடுத்து ஒரு பெரிய கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு மாணவியாக தான் நிற்கும் கோலத்தை மனக்கண்ணிலே கண்டு பூரித்துக்கொண்டாள். கற்பனையிலே குதூகலித்துக் கொண்டிருந்தவளின் முன் ஆவேசமாக வந்து நின்றான் குணா. அவனைக் கண்டதும் உண்டான பயத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்து கோபமாக அவனைப் பார்க்க முயற்சி செய்தாள் திவ்யா. இது முதல் தடவையல்ல. பல நாட்களாகவே அவனது தொல்லை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எங்கு சென்றாலும் பல்லை இளித்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவான். கோவில், கடை என்று தான் செல்லும் இடங்களை எவ்வாறோ அறிந்து அவளுக்கு முன் அங்கு சென்று நின்றுகொண்டு சினிமா ஹீரோமாதிரி போஸ் கொடுப்பான். அதைப் பார்த்தாலே அவளுக்கு அருவருப்பாக இருக்கும். இருந்தாலும் பயத்தினால் வீட்டில் சொல்லாமல் வைத்திருந்தாள். இப்படியே சென்றுகொண்டிருந்ததால் அவன் பொறுமையிழந்திருப்பான் போல. அவள் தனியாக வரும் ஒரு நாளில் திடீரென்று அவள் முன் சென்று ‘நான் உன்னைக் காதலிக்குறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் என்னை வேணாம்னு சொல்லாத. உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன். என் காதல் ரொம்ப புனிதமானது. நீயும் என்னைக் காதலிக்குறேன்னு சொல்றவரைக்கும் சாப்பிடமாட்டேன், தூங்கமாட்டேன்… என் காதல புரிஞ்சுக்கோ’ என்று மிரட்டுவதுபோல சொல்லவும் அவள் அழுதேவிட்டாள். அழுது முடித்தவுடன் சரியென்று சொல்லுவாள் என அவனும் காத்திருந்தான். அவளும் சொன்னாள். இவ்வளவு நாட்களில் கண்டது கேட்டது மூலமாக தெரிந்துகொண்ட அத்தனை வார்த்தைகளையும் சொல்லி அவனை திட்டித் தீர்த்தாள். அவன் கண்ணில் காதல் இல்லை. மாறாக ஏதோ ஒன்றை அடையவேண்டுமென்ற வெறியே இருந்தது. அதன்பிறகு அவனை எங்கு பார்த்தாலும் முறைத்துக் கொண்டு திரும்பிவிடுவாள். ஆனால் இன்று யாரும் இல்லாத தனி இடத்தில் இப்படி மாட்டிக்கொண்டாளே…

பாதப்பலகை என்பது ஒரு பஸ்ஸினுள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுவது. ஆனால் அதில் தொங்கிக்கொண்டு செல்வதுதான் ஸ்டைல் என்றாகிவிட்டது. பஸ்ஸினுள் தேவையான இருக்கைகள் இருந்தாலும் ஃபுட்போர்ட்டில் தொங்கிச் சென்றால்தான் இளைஞர்கள் என்பதற்கே அழகாம். வீதி ஒழுங்குமுறையை சீராக கடைப்பிடிக்காத நமது நாட்டில் தெருக்களில் இப்படி சாகசம் காட்டி செல்வது எவ்வளவு ஆபத்தானது என புரியாத குரங்குக்குட்டிகள்தான் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டுபோகும். நினைக்கும்போது சரவணனுக்கு சிரிப்புதான் வந்தது. ஃபுட்போர்ட்டில எவன் ஒருத்தன் தொங்கிகிட்டு போறானோ அவன் இதுவரைக்கும் கீழுவிழுந்து அடிபடலனு அர்த்தம். எங்கேயோ கேட்ட இந்த துணுக்கு அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அந்த ஃபுட்போர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். இதில் அப்படி என்னதான் இருக்கிறது. இதிலே நின்று பயணம் செய்வதில் அப்படி என்ன கௌரவத்தை கண்டுவிட்டார்கள்… அவன் மனம் விடைதேடும் அதே நேரத்தில் இதே பாதப்பலகையால் அவன் எத்தனைமுறை அவனது நண்பர்கள் முன்னால் அவமானப்பட்டிருக்கிறான்…. இயல்பாக சரவணன் பயந்த சுபாவம் கொண்டவன். அதனால் எந்த விசயத்தையும் எடுத்தவுடன் தைரியமாக அவன் செய்ததே இல்லை. ஓடி விளையாடக்கூட அஞ்சுவான். இத்தனைக்கும் அவன் ஒரு உயர்தரம் படிக்கும் இளைஞன். இந்த பாதப்பலகை விசயமும் அப்படித்தான். பள்ளிக்கூடம் விட்டு நண்பர்களுடன் பஸ்ஸில் வரும்போது அவர்கள் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு உள்ளே பம்மிக்கொண்டிருக்கும் சரவணனை கேலி பேசிக்கொண்டிருப்பார்கள். ஃபுட்போர்ட்டுலகூட நிக்க முடியல, நீயெல்லாம் ஸ்டூடண்ட்டுனு சொல்லிக்குற என்று அவனை குத்தும் வார்த்தைகள் அவனுக்கு இப்போது நினைவு வந்தது. பொதுவாக கேலி என்பது நகைச்சுவையான சந்தோசமான விடயமாகத்தான் இருக்கும். கேலிக்குள்ளாகும் அந்த ஆளைத்தவிர. இன்னும் இந்த கேலி தொடரவிடக்கூடாதென்று முடிவு செய்தான். நண்பர்கள் முன்னால் கெத்தாக மரியாதையைக் காப்பாற்றவேண்டுமே… அதோ அங்கே ஒரு சந்து வரும், அங்கே அதிகமாக ஆட்கள் இருக்கமாட்டார்கள். அந்த நேரம் ஃபுட்போர்ட்டில் நின்றுபார்ப்போம். பஸ்ஸுக்குள்ளேயும் சனம் குறைவாக இருப்பதால் ஃபுட்போர்ட்டில் நின்று நடுங்கிக்கொண்டு இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லையென்று பெரிய அதிரடித்திட்டங்களை போட்டு அதை செயற்படுத்தவும் தயாரானான். சந்து நெருங்கும்போது மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்து பஸ் சென்றுகொண்டிருக்கும்போதே ஃபுட்போர்ட் அருகே வந்தான். மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி கடைசி படியில் இரண்டு கால்களையும் வைத்தான். தனக்கு முன்னால் இருந்த ஒரு நீளமான கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ஒருவழியாக செட்டில் ஆனபிறகு தலையை லேசாக வெளியே காட்டினான். எதிர்காற்று சில்லென்று அவனது முகத்தில் மோதி பரவசமூட்டியது. ஏதே ஒரு அசட்டுத்துணிச்சல் இடங்கொடுக்க தன் நண்பர்கள் நிற்பதுபோலவே ஸ்டைலாக நின்றான். அவனாலேயே இதை நம்ப முடியவில்லை… யாஹூ… நானும் ஒரு வீரன்தான்….

‘என்னடீ முறைக்கிறே? ஒரு ஆம்பிள பைத்தியக்காரன்மாதிரி உன் பின்னால சுத்துறானே.. பாவம்னு பாத்தியாடீ! இனிமே உன்னால பாக்கவே முடியாது. இன்னிக்கு உனக்கு ஒரு முடிவு கட்டுறேண்டி’ தன்னை வழிமறித்து மிரட்டிக்கொண்டிருக்கும் குணாவிடமிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் குழம்பிநின்றாள் திவ்யா. கைகள் பரபரத்துக்கொண்டு நிற்க கண்ணில் கொலைவெறியுடன் திவ்யாவை நகரவிடமுடியாமல் தடுத்துநின்றான் குணா. அவளை திடுக்கிட செய்வதற்காக அவளது உடையின்மீதிருந்த துப்பட்டாவை பிய்த்து தூக்கியெறிந்தான். ஆவேசமடைந்த திவ்யா ‘ஒரு பொண்ணுக்கு உன்னை பிடிக்கலனா விட்டுட்டு போகவேண்டியதுதானே. ஏண்டா இப்படி அடுத்தவங்க வாழ்கையோட விளையாடுறீங்க?’ என்று காரி அவன் முகத்தில் துப்பினாள். அடுத்த நொடியே அவளது கன்னத்தில் அவன் கைரேகை பதிந்தது. ‘நான் எவ்ளோ பெரிய ரவுடினு தெரியாம என்னை துப்பிட்ட இல்ல. கடவுள வேண்டிக்க. இன்னிக்குதான் உன் கடைசி நாள்’ அவள் சற்றும் எதிர்பாராத விதமாய் பாக்கெட்டில் இருந்து கைக்கத்தி ஒன்றை எடுத்தான். அப்படியென்றால் தன்னைக்கொல்லும் எண்ணத்தில்தான் வந்திருக்கிறானே.. அவனை பார்க்கும்போதே ஒரு பொறுக்கி என்பது தெரிந்தது. ஆனால் கொலை செய்யும் அளவுக்கு போவான் என்று எதிர்பார்க்கவில்லையே… அவன் முதல்முறை தொந்தரவு செய்தபோதே பெற்றோரிடம் சொல்லாமல்விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று இப்போது புரிகிறது. இப்படி உதவிக்குகூட யாரும் வரமுடியாத இடத்தில் அநாதரவாக சிக்கியதை நினைக்க தொண்டையடைத்தது. படபடப்பாக உடல் நடுங்கியதில் அவளுக்கு வேர்த்துக்கொட்டியது. அவன் நேரத்தை தாமதிக்காமல் அவளின் கழுத்தை ஒருகையால் பிடித்து மறுகையால் கத்தியை ஓங்கினான். அவளின் அப்பா அம்மா பாட்டி தோழிகள் ஜிம்மிநாய்க்குட்டியெல்லாம் அவளது கண்முன்னால் வந்து போனது. அடக்கடவுளே எனக்கு இப்படியா விதி முடியவேண்டும் என்று புலம்பத்தொடங்கினாள். அந்த சந்தின் வழியாக வந்த பஸ் ஹார்ண் அடித்தது.

கம்பியை இறுக்கமாகப் பிடித்திருந்தாலும் ஏதோ வழுக்குவதுபோல இருந்தது சரவணனுக்கு. அதுமட்டுமில்லாமல் வழக்கமாக இந்த சந்தில் பஸ்ஸை மெதுவாக ஓட்டமாட்டர்கள். கிரைண்டரில் ஆட்டுக்கல்போல கதிகலங்கும். இப்ப மேல ஏறி உள்ளே போகவும் பயமாய் இருக்கு. இங்கேயே நிக்கவும் முடியல. என்ன பண்ணுறது கடவுளே… ஸ்டைலுக்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வச்சானே! நான் எவ்வளவு பெரிய முட்டாள், ஆத்தா கருமாரியாத்தா முண்டகன்னியம்மா கருப்பண்ணசாமியே சொரிமுத்தய்யனாரே என்னை உயிரோடு காப்பாத்தி விட்டீங்கன்னா ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வந்து மொட்டை போடுறேன் கடவுளேன்னு ஊரில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் கும்பிடு போட்டுக்கொண்டிருந்தான். அந்த இளவெடுத்த டிரைவர் வேற வேகத்தை குறைக்காமல் ஏரோப்பிளேனை ஓட்டுறமாதிரி பறந்தான். ஆபத்தான விசயமென்பது எப்போதுமே ஆபத்தான விசயம்தான். அதன் வடிவம் மாறலாம் ஆனால் விளைவு ஒன்றுதான் என்பது அவனுக்கு அப்போது புரிந்தது. இருந்தாலும் இதுவே கடைசி என்றும் இனிமே இந்த ஃபுட்போர்ட் கருமத்தை நினைத்தும் பாரப்பதில்லையென்றும் முடிவுபண்ணி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு கம்பியை கெட்டியாக பிடித்தான். ஆனாலும் விதி விடவில்லை. எங்கிருந்தோ காற்றில் பறந்துவந்த ஒரு துப்பட்டா டிரைவருக்கு முன்னாலிருந்த கண்ணாடியை மறைத்துவிட வழிதெரியாமல் பதட்டமடைந்த டிரைவர் நாலு அடிக்குமேல் போகமுடியாமல் வந்த வேகத்திலேயே பிரேக் போட்டான். அந்த பிரேக்கில் தடுமாறிய சரவணன் கைவழுக்கி முன்னுக்குத் தள்ளப்பட்டு தூக்கியெறியப்பட்டான்.


கலங்கிய கண்களுடன் தனக்கு முன் வழிதெரியாமல் நிற்கும் திவ்யாவை கொல்ல இதுதான் நேரம் என எண்ணி கத்தியுடன் கையை ஓங்கினான் குணா. அவன் கையை ஓங்கியது மட்டும்தான் நினைவிருக்கிறது. அந்தரத்தில் எறியப்பட்டு வந்த சரவணன் தெருமூலையில் திவ்யாவை மடக்கிபிடித்திருந்த குணாவின்மீது போய்விழுந்தான். திடீரென்று ஒரு மனிதன் விழுந்ததால் தள்ளப்பட்ட குணா சுவரில்போய் தலையில் அடிபட்டு மயங்கிவிழுந்தான். அதுதான் சமயம் என எதைப்பற்றியும் யோசிக்காமல் வீட்டைநோக்கியோடினாள் திவ்யா. குணாவின் மீது விழுந்த சரவணனுக்கு அங்கிருந்த கல்லொன்றில் கால் மோதி ரத்தம் வரத்தொடங்கியது. உயிர்போற வேதனையில் துடித்தான் அந்த அதிர்ச்சியிலேயே அவனும் மயங்கிப்போனான். பஸ்ஸில் இருந்த ஒருவன் விழுந்ததைப் பார்த்த மற்றவர்கள் உடனே இறங்கிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டனர்.

மிகவும் கஷ்டப்பட்டுதான் கண்திறக்க வேண்டியிருந்தது. கொஞ்சம்கொஞ்சமாக அனைத்தையும் பார்க்கவும் முடிந்தது. ஆம், தான் இப்போது ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தான் சரவணன். அவனுக்கு எதிரில் காக்கிச்சட்டை போட்ட ஒரு ஆள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைக்கண்டு அஞ்சி எழ முயற்சித்தவனை அவர் தடுத்து ‘வேணாம்பா படுத்திரு, ஒடம்பு இப்ப எப்பிடியிருக்கு?’ அவர் மீதிருந்த பயம் போகாமலேயே ‘கால்தான் வலிக்குது..இப்ப பரவால’…. ‘எவ்ளோ பெரிய விசயத்த செஞ்சிட்டு சாதாரணமா படுத்திருக்கே தெரியுமா? பஸ்ஸுலேந்து ஒருத்தன் மேல விழுந்தியே.. அவன் நாங்க தேடிக்கிட்டுருக்க பெரிய ரவுடி, நீ போயி விழுந்ததுல சாககிடக்குறான், அப்படியே உயிர்பொழச்சாலும் சுயநினைவுக்கு வாறது கஷ்டமாம். எங்க வேலய சுலபமாக்கினதுக்கு உனக்கு நன்றி சொல்லத்தான் நான் காத்திருந்தேன்.’ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ‘சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார், நான் வேணும்னு ஒண்ணும் பண்ணல. இப்ப எனக்கு இருக்குற பிரச்சினை நான் அடிபட்டு கெடக்குறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரொம்ப கவலப்படுவாங்க சார்’.. அவர் சிரித்துக்கொண்டே ‘கவலப்படாத, உங்க வீட்டுக்கு சொல்லிட்டோம். உனக்கெந்த பிரச்சினையும் வராம நாங்க பாத்துக்குறோம். உன் காலுக்கும் ஒண்ணும் இல்ல. சீக்கிரம் குணமாயிடுவ. நான் வறேன்.’ அவர் போனபின் அழுதுகொண்டே வந்த பெற்றோரைப்பார்த்து சரவணனும் அழுதுவிட்டான். பின் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட்டு காலிசெய்து புறப்பட்டார்கள். அவன் மீதிருந்த திருஷ்டிதான் இதற்கெல்லாம் காரணமென்று அவனது தாயார் அவனுக்கு சுற்றிப்போட்டார்கள். அவர்கள் ஆஸ்பத்திரி பில் கட்டிக்கொண்டு நிற்கும்போது நொண்டி நொண்டி சரவணன் வீதிக்கு வந்தான். அவனைக்கண்டு மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு ஒரு பெண் அவனை நோக்கி வந்தாள்.

‘உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியல. உங்கள என் வாழக்கைல மறக்கமுடியாது. அந்த பாவி என்னைக் கொல்லவந்தான். நீங்க மட்டும் அப்போ வரலன்னா நான் உயிரோடயே இருந்திருக்கமுடியாது. ஆனா நான் கீழ விழுந்த உங்கள பாக்காம ஓடிட்டேன். என்னை மன்னிசிருங்க’. என்று கண்களில் ஈரத்துடன் ஒரு பெண் கூறிவிட்டு தேம்பிதேம்பி செல்வதைப் பார்க்கும்போது அவனுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆர்வக்கோளாறில் என்னவென்று தெரியாமல் ஃபுட்போர்ட்டில் தான் போய் நின்றதால் மரணத்தின் விளிம்புவரை சென்று கும்பிட்ட சாமிகளின் புண்ணியத்தால் சில அடிகளோடு தப்பித்து ஒருவாரம் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து படிக்கவேண்டிய படிப்பும்போய் சிரமபடுகிறோம். அதேகாரணத்தால் உள்ளே ஒருவன் உயிருக்கு போராடுறான். அதுக்கு ஒருத்தி நன்றி சொல்லிட்டு போறா.. ஒரு சம்பவத்தால ஏற்பட்ட பல்வேறுபட்ட விளைவுகளுக்கு பாதிப்புகளுக்கு இன்னொரு சம்பவம் எப்படி காரணமாயிருக்கும் என அவன் குழம்பிக்கொண்டிருக்கையில், அவனைக்கடந்து சென்ற ஒரு பஸ்ஸில் நாலு, அஞ்சு பேர் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு விசிலடித்து பாட்டுபாடிக்கொண்டு சென்றனர்.

Monday, July 16, 2012

சிவன் ஆட்டம்

‘ஹாய்! ஹாய்! ஸாரிப்பா லேட்டாயிடுச்சு…. அசைன்ட்மெண்ட் பத்தி யோசிச்சுகிட்டேயிருந்ததுல ஒரே தலவலி. ஒண்ணுமே தோணல. நீங்களாவது ஏதாவது யோசிச்சுவச்சீங்களா?’

‘………………………………………………………….’

தான் வந்ததை கவனிக்காமல் தனக்கு பதில்கூட சொல்லாமல் ஏதோ மும்மரமாக தயாராகிக் கொண்டிருக்கும் சந்தோசையும் ஹரிணியையும் ஆச்சரியமாகப் பார்த்தான் சிவா.

‘என்னங்கடா? ஒரு மனுசன் வந்து நிக்கறதுகூட தெரியாம அப்படி என்ன வேல செய்றீங்க?’

‘காஞ்சிபுரம் கிளம்புறம்… சீக்கிரம் ரெடியாகு. நிறய வேல இருக்கு.’

‘என்ன இப்பவா? அப்பிடி என்ன அவசரம்?’

‘அசைன்ட்மென்ட் வேர்க்’

‘ஏண்டா? ஒரு ஜீனியஸ் இங்க இருக்கான்… அவன விட்டுட்டு நீங்களா அசைன்ட்மெண்ட் பத்தி முடிவயும் பண்ணிட்டு வெளியூர் போறதுக்குவேற ரெடியாகியிருக்கீங்க? என்னங்கடா நினச்சிட்டு இருக்கீங்க?’

‘நாங்க ரெடியாகிட்டோம்.. நீ வாறதுண்ணு வா. இல்லாட்டி இங்க இருந்து மத்த வேலயெல்லாம் பாரு’

‘டேய் டேய் விட்டுட்டு போயிடாதீங்க…. உங்கள நம்பித்தான் என் அசைன்ட்மென்டும் இருக்கு. போனாபோகுது நான் உங்கள மன்னிச்சிட்டேன். ஆமா என்னத்த பத்தி எழுதுறதுக்கு காஞ்சிபுரம் போறோம்?’

‘கூத்து’

‘என்ன? கூத்தா? அப்பிடின்னா என்னன்னே இங்க பாதிப்பேருக்கு தெரியாது… அவன் அவன் மெக்ஸிகன் யராபி, சைனீஸ் ஓபரான்னு ஹைலெவலா செஞ்சிட்டிருக்கும்போது நாங்க செஞ்சது கூத்துனு கொண்டுபோய்காட்டினா என்ன நினப்பாங்க? அவ்ளோயேன்… அந்த கிஷோர்கூட பாலிவுட் பத்தி அசைன்ட்மெண்ட் செய்யுறான்…. நாமளும் சும்மா கெத்தாபோயி நிக்கவேணாமா? பேசாம மறுபடியும் முதல்ல இருந்து யோசிச்சு ஒரு நல்ல புரோஜக்ட் செய்வோம்… ஏன் ஹரிணி நீகூட எப்பிடி சம்மதிச்ச?’

‘இந்த யோசனைய சொன்னதே நான்தான்…. மத்தவங்களுக்கு தெரியாத ஒரு விசயத்த சொல்லி அத அவங்களுக்கு புரியவைக்குறதுதான் கெத்து. நம்ம நாட்டுலயே பல அற்புதமான விசயங்கள் இருக்கப்போ நாம ஏன் வெளிநாட்டுக்காரனுகளப் பத்தி எழுதணும்? நம்ம அசைன்ட்மெண்ட் கூத்துதான். முழு மனசோடு சம்மதிச்சு வேல செய் சிவா, நாம நிச்சயம் தோக்கமாட்டோம்’

சுவாரசியமாக ஏதாவது புராஜக்ட் செய்யலாம் என்று வந்த சிவாவிற்கு கூத்து என்றதும் அலுப்படிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் ஹரிணி சொல்லிவிட்டாள், இனி அவன் மறுக்கப் போவதில்லை… ஏனென்றால்….. அதேதான். அரைமனதோடு அவர்களுடன் புறப்பட்டு காஞ்சிபுரம் சென்றான். செல்லும் வழியெங்கும் தங்களின் அசைன்ட்மெண்ட் எந்த வடிவத்தில் வரவேண்டுமென விவாதித்துக்கொண்டே சென்றார்கள். அவர்கள் பேசப்பேச சிவாவிற்குதான் கண்களில் உறக்கம் சுழன்றடித்துக் கொண்டுவந்தது. தான் அத்தனைதூரம் சொல்லியும் கேட்காமல் இவ்வளவு மெனக்கிடுகிறார்கள். கல்லூரியில் எல்லோருக்கும் முன்பாக அவமானப்படவேண்டியிருக்கப்போகுதே என சிந்தித்துக் கொண்டேயிருந்தான்.
காஞ்சிபுரத்தையடைந்ததும் மாடசாமி என்பவர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்தார். பின் அவர்களிடம் வந்த விடயத்தை தெளிவாகக்கேட்டார்.

‘ஐயா, என் பேரு ஹரிணி, இது சந்தோஷ், அப்புறம் சிவா. நாங்க சென்னையில விஷுவல் கம்யுனிகேஷன் படிக்குறோம். எங்க ஃபைனல் புராஜக்ட், ஓபன் டாபிக் டாகுமென்டரி ஒண்ணு செஞ்சணும். அதனால நாங்க கூத்துக்கலையைப் பத்தியும் அத சார்ந்திருக்குற மக்களோட வாழ்க்கைமுற பத்தியும் படமெடுக்க வந்திருக்கோம். இங்க இருக்குற நவீன கூத்துக்கலை அபிவிருத்தி சங்கத்தலைவர் பிரகாசம் எங்க அப்பாவோட நண்பர்தான். அவருமூலமாத்தான் உங்கள தொடர்புகொண்டோம். நீங்கதான் நாங்க படம் எடுக்குறதுக்க முழு ஒத்துழைப்பும் தரணும்’

‘இந்தக் காலப் பிள்ளைகளுக்கும் கூத்துமேல பிடிப்பு இருக்குறத நினச்சா ரொம்ப சந்தோசமாயிருக்கு… நிச்சயமா என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்யிறேன்மா’
அவர்களை அழைத்துக்கொண்டு பல குழுக்களிடம் சென்றார் மாடசாமி. செல்லும் வழிகளில் தனக்குத் தெரிந்த சில விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டும் வந்தார்.

‘சிலம்பு, கும்மி, கரகாட்டம், பொய்க்கால்குதிரை, வில்லுப்பாட்டுனு தமிழ்பாரம்பரியகலைகள் நம்ம மக்களோடு சிறப்பான வாழ்க்கையை மத்தவங்களுக்கு அழகா எடுத்துசொல்லுது. அவ்வளவு ஏன் சங்ககாலத்துலயே பகல்ல கடுமையா உழைச்சு களைச்சுப்போயி ராத்திரில பரத்தையரோட ஆட்டம் பாக்கப்போறது வழக்கம். மத்த ஊர்க்காரனுங்க மாதிரி கலையை ஒரு பொழுதுபோக்கா பார்க்காம வாழ்வியல் அம்சமா நம்ம ஆளுங்க வளத்திருக்காங்க….’


அவர் கூறும் விடயங்களை காகிதத்தில் பதிவுசெய்துகொண்டனர். அதுபோக பல குழுக்களிடம் நேரில் சென்று பேட்டி எடுத்து அவர்கள் கூறும் விடயங்களை படம்பிடித்தனர். கூத்து தமிழர்களின் அரியபெரிய பாரம்பரியக்கலை என இன்றும் மார்தட்டி சொல்லுபவர்கள் இருக்கிறார்களென்றாலும் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையோ அவலம் நிறைந்ததாகவும் மற்றவர்களால் கேலிக்குள்ளாகும் நிலையிலும் இருப்பது இந்த பயணத்தில் அவர்கள் அறிந்துகொண்ட ஒரு விடயம். ஒவ்வொரு கூத்துக்கலைஞர்களிடமும் பிரத்யேகமாக கூத்தைப்பற்றி கேட்டனர். அவ்வாறு அவர்கள் வேலை செய்யும்போது யாரோ படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்று அங்கும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. அங்கிருந்த அனைவரின் முகங்களும் சந்தோஷின் கேமராவில் பதியப்பட்டது. எல்லாவற்றிலும் முக்கியமாக கந்தையா எனும் முதியவர் கூறிய விடயங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தது.

‘ஆயிரம் ஆயிரம் வருசமா நம்மகூட பொழங்கி வாறது இந்த கூத்து. சிவனோட ஆட்டமுனு சொல்லுவோம். இப்ப மாதிரி முந்தியெல்லாம் கொட்டில் கிடையாது. தெருவிலதான் ஆடணும். அதுகூட ஏனோதானோன்னு இருக்காது. தங்களுக்குன்னு ஒரு பாணிய கடைப்பிடிச்சி ஒரு கட்டுக்கோப்பாக ஒருக்கும். இப்ப மாதிரி அப்பல்லாம் தப்பான ஆட்டம் ஆடுறதில்லை. ராமன் கதை, அர்ச்சுனன் கதைனு கடவுள் பாட்டுதான். இப்ப இந்த இளசுகெலாம் சினிமானு பறக்குறமாதிரித்தான் சரியா நூறு வருசத்துக்கு முன்னால அப்ப இருந்தவங்களெலாம் கூத்துக்கு அடிமையானவங்க. இப்பகூட காஞ்சிவரம், விழுப்புரம், தீவண்ணாமலை, சேலம், செங்கல்பட்டனு இந்த கலைக்கு உயிர்குடுக்குறவங்க இருக்காங்க. ஆனா அவங்களுக்கு உயிர்குடுக்கத்தான் ஆருமேயில்ல. எங்க ஊருல மட்டும் கூத்தாடுற முப்பது கூட்டம் இருக்கு. திருவிழான்னாத்தான் அவங்க வயிறு நனையும். ஒரு கூட்டத்துலகூட பதினஞ்சுக்குமேல ஆக்க இருப்பாங்க. எங்க பக்கம் ஆடுறது தெக்கத்தி பாணி. அதுக்கு போடுறது தெக்கத்தி மெட்டு. வடக்கத்து பாணி பாக்கணும்னா நீங்க வந்தவாசிக்குத்தான் போகணும். எங்க கூட்டத்த சமான்னு சொல்லுவாங்க. சமாக்கு தலைவர வாத்தியார்னு சொல்லுவாங்க.. முக்கியமா இது ஒரு வழிப்பாட்டுக்கலைங்க, கோயில்ல ஆடுறது சிறப்பான விசயமுங்க. ஆடக்குல முகத்துக்கு நிறய பூச்சு பூசுவோம். இது முழுக்க அலங்காரத்த அண்டின தொழிலு. ஏன்னா முக உணர்ச்சியை அதிகமாக் காட்டுறதுக்குத்தான் இந்த வண்ணங்க. அந்த வண்ணமெல்லாம் முத்துவெள்ள, குங்குமம், செந்தூரம்னு விதவிதமான பொருட்கள எண்ணயில கொழச்சு பூசுவோம். காளிக்கு சிவப்பு, பீமனுக்கு கருப்பு, அர்ச்சுனனுக்கு நீலமுனு பூசுவோம். பெரியமீச, நாமம் கண்டிப்பா போடணும். அப்புறம் ஆடக்குல கையில புஜக்கட்டை வச்சிக்குறது, கிரீடம், குச்சிமுடி போடுறது, நெஞ்சுல பட்டை கட்டுறது, கன்னக்கதுப்பு இப்பிடி நெறய நகை போடுவோம். பாட்டுதான் ரொம்ப முக்கியம். டோலக், ஆர்மோனியம் வச்சு பாட்டுப்பாடி ஆடுறதுதான் வேல. கூத்தாடுறவங்களுக்கு சுயமரியாத ரொம்ப முக்கியம். கலைக்கு ஒரு அவமானம்னா பொறுத்துக்கமாட்டாங்க. கொதிச்சுடுவாங்க. அதனாலயே கூத்தாடுறவங்கள திமிர்காரங்கனு எல்லாரும் பேசுவாங்க. அப்புறம் இப்பகூட வெளிநாட்டுல இருந்து வாறவங்க கூத்துன்னா என்னனு ஒங்கள மாதிரி கேள்வியெலாம் கேட்டு போயி அவுக ஊருல சொல்லிக்கிறாங்க. ஆனா கூத்தாடுற இந்த சனங்களுக்குதான் ஒரு நல்ல வழி பொறக்கமாட்டேங்குது.’


தலைப்பாகையுடனும் பெரியமீசையுடனும் கம்பீரமாக உட்கார்ந்து அந்த பெரியவர் கூறியதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. அவரைப் பார்த்தாலே தெரிகிறது மனதுக்குள் தன்னை ஒரு ராஜாவாக பாவிப்பவர் என்று. அடேயப்பா கூத்து என்றால் இவ்வளவு இருக்கிறதா? ஒரு பாட்டு போடுவாங்க அதுக்கு நாலு பேரு ஆடுவாங்கனுதானே இவ்வளவு நாளும் நினைத்தோம் என்று சிந்திக்கத் தொடங்கினான். மேலும் இவ்வாறான பல பேட்டிகளை எடுத்ததோடு நிஜ கூத்துக்களையும் வீடியோ செய்தனர். அங்கிருந்த கூத்துக்கலைஞர்கள் அவர்களை அன்பாக பார்த்துக்கொண்டனர். தங்கள் கூடாரத்திலேயே இடம் கொடுத்து தங்கள் உணவையே பகிர்ந்தளித்தது சிவாவிற்கு புது அனுபவமாக இருந்தது. கிராமத்து சுகந்தத்தில் ஒன்றிப்போனான் அவன். சந்தோஷும் வேலை பாதி முடிந்தது இனி எடிட்டிங்தான் என்று கவலையில்லாமல் இருந்தான். அங்கிருந்த கலைஞர்களின் குழந்தைகளோடு மீதிப் பொழுதை போக்கினாள் ஹரிணி. அவள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் விதத்தை தூரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான் சிவா. இனிமையும் எளிமையுமாக எப்படி இருக்கிறாள் என அவளை நினைத்து சிலாகித்தான். தன் எண்ண வண்ணங்களை அவள் இதயத்தில் பூசும் தருணம் வாராதா என்று அவன் இதயமும் இமைகளும் ஒன்றாய் துடித்தது. யாரோ அழைத்தது போல அவளும் திரும்பி அவனைப் பார்க்க அவன் திடீரென்று சுதாரித்துக் கொண்டான். அவன் மனம் அறிந்தவளாக அருகே வந்து….

‘சார் என்ன யோசிக்குறீங்க?’

‘அது வந்து…. இல்லை இது… ஆ இப்படி கூத்து படம் எடுக்கணைம்னு எப்பிடி ஒனக்கு தோணிச்சு’

‘ஓ அதுவா… வேறொண்ணுமில்ல எங்க தாத்தாவும் ஒரு கூத்துக்கலைஞர்தான். அது என் ரத்ததுலயே வந்தது. எங்கப்பாவுக்குத்தான் கூத்தோட இருந்தா வாழ்க்கைல உருப்பட முடியாதுன்னு பட்டணத்துக்கு வந்துட்டாரு, தனக்கப்புறம் இந்த கலைய கொண்டு செல்ல வாரிசில்லயேன்னு தாத்தாக்கு ரொம்ப கவல. இதோ இப்ப என்னால முடிஞ்ச ஒரு வேல.’

‘அதுசரி, அசைன்மெண்டுல பாஸாகணுமே?’

‘ம்ம்ம்… ஒரு நல்ல விசயத்த சொல்லுற திருப்தி கிடைக்குதே சிவா. அதுபோக நாம பாஸாக மாட்டோம்னு எப்டி சொல்ற? பாரு நாமதான் ஹையஸ்ட் ராங்க் வாங்கப்போறோம்.’

‘வாங்கினா சந்தோசம்தான். ஆனா என்னால திருப்தியாக முடியாது. இங்க பாரு ஹரிணி, இவங்கலாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? சோமாலியா மாதிரி நாட்டுல வறட்சியில வேல இல்லாம வந்த பட்டினியா இது? இல்லயே.. தங்களுக்குனு ஒரு வேல இருந்தும் அதுக்கு ஆதரவில்லாததால வந்த பட்டினி. அந்த பிஞ்சு குழந்தைகளப் பாரு. எதிர்காலத்த வெறுங்கையோட எதிர்பார்க்கறாங்க.. இவங்க முன்னேற என்னதான் வழி? அட இவ்வளவு கஷ்டத்துலயும் இவங்க இந்த தொழில விடலயே, இன்னும் தெய்வமாத்தனே பாக்குறாங்க.லிப்பதான் ஹரிணி எனக்கு நிஜமாவே தமிழன்னு கர்வம் வருது. நிச்சயமா இவங்களுக்கு ஏதாவது செய்யணும். இந்த ஒரு டாகுமெண்டரி பத்தாது. உலகளவுல இவங்களுக்கு அங்கீகாரம் கெடக்கணும். அது நம்மளமாதிரி இன்னொரு கலைஞர்களாலதான் முடியும். எனக்கு நம்பிக்க இருக்கு. இங்க வரும்போது நான்கூட பிடிப்பில்லாமத்தன் வந்தேன் இப்ப மாறலயா.. இந்த உலகமும் ஒரு நாள் நம்ம பாரம்பரியத்துக்கு தலவணங்கும். அதுக்கு நாமதான் ஏதாவது பண்ணனும். இந்த கூத்துல இருந்துதானே நாடகம் வந்திச்சு, நாடகத்துல இருந்துதானே சினிமா வந்திச்சு… சினிமாவ எல்லாரும் தலயில தூக்கிவச்சு ஆடலயா.. அட்லீஸ்ட் அந்த சினிமா மோகத்தால அழியுற கட்டுத்துக்கு வந்துட்ட இந்த கூத்துக்கலைய ஒரு நிமிஷம் காப்பாத்த யோசிச்சா என்ன?’

ஆவேசமாக பேசிக்கொண்டே போன சிவாவை ஆச்சரியமாகப்பார்த்தாள் ஹரிணி. இவன் எப்போதும் இப்படித்தான். மகிழ்ச்சியையோ சோகத்தையோ மிகையாகத்தான் காட்டுவான். ஆனாலும் இப்போது அவன் கோபப்படுவது சரியென்று படவே அவனது கையை மெதுவாக பற்றி அவன் தோளில் சாய்ந்தாள். ஆனால் அவன் கண்களோ எதிரில் இருந்த வண்ணங்களையும் கிரீடத்தையும் பட்டாடைகளையும் கண்டு கலங்கியது. ‘கண்ணுக்கெதிரே நம்ம சொத்து அழிஞ்சிகிட்டிருக்கிறத பார்த்துட்டு வெளிநாட்டுக்கு வக்காலத்து வாங்குறமே?’

Saturday, July 14, 2012

தோழியா இல்லை காதலியா?

பஸ் ஸ்டாண்டு. போட்டிக்கு வேற எந்த பஸ்ஸும் இல்லை என்று தெரிந்த டிரைவர் தைரியமாக பஸ்ஸை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு எஞ்சினை ஆஃப் செய்தான். இந்த ஊரில் அப்படித்தான். இனி பஸ்ஸில் கூட்டம் நிறையும்வரை அதை எடுக்கமாட்டான். இது ஏற்கனவே பஸ்ஸில் இருக்கும் பிரயாணிகளுக்கு எரிச்சலைமூட்டியது. கண்ணனுக்கும்தான். அலுப்போடு ஜன்னல்வழியாக வெளியே பார்த்தான். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காகவும் அவற்றைமுடித்து வீடு திரும்புவதற்காகவும் பல இளவயது மாணவமாணவிகள் சாலையோரத்தில் திரண்டிருந்தனர். ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பல் கும்பலாக இருந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பதும் சகஜமாக தொட்டுப்பேசி சிரித்துக்கொள்வதையும் பார்த்து அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆச்சரியம். இதே ஒருவருடத்திற்கு முன்பிருந்த நிலையென்றால் ‘நானும் இந்தக்கால இளைஞன்தானே, எனக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்தோழிகளும் இல்லை. நான் மட்டும் என்ன வேற்றுக்கிரகவாசியா’ என்று வயிறெரிந்த எரிச்சலில் காதுவழியாக புகைவிட்டிருப்பான். அப்பேற்பட்ட நிலைக்கு இன்றைய மாற்றம் அபரிபிதமானதுதான். ஆனால் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் அஸ்ராவின் நினைவு வருவதைமட்டும் அவனால் தடுக்கமுடியவில்லை.

கண்ணன். இருபது வயது. உயர்தரம் முடித்து அடுத்தது என்ன செய்யலாம் என்று தீர்மானித்து கம்ப்யூட்டர் மல்டிமீடியா துறைமீதுள்ள ஆர்வத்தால் நகரின் பிரபலமான ஒரு கணனி நிறுவனத்தில் இணைந்தான். படிப்பு என்பது அவனுக்கு சிரமமாக இல்லை. பழக்கமென்பதே சிரமமாக இருந்தது. சிறுவயதுமுதலே அடக்கமான ஒரு குடும்பத்தின் பிரதிநிதியாக அவன் வளர்ந்ததால் இலகுவில் அடுத்தவரோடு பழகுவதோ குறிப்பாக பெண்களோடு சகஜமாக நடப்பதுவோ அவனுக்கு புதிதாக இருந்தது. அதில் தவறொன்றும் இல்லை என்றே அவன் நினைத்தான். காரணம் தன்னுடன் படிக்கும் சகமாணவர்கள் இடைவேளைநேரம் கூட்டாக சேர்ந்து சிகரெட் பிடிப்பது, சனிக்கிழமை மாலைகளில் எங்காவது கூட்டமாக சேர்ந்து சாராயம் குடிப்பது, அருகில் பெண்களை வைத்துக் கொண்டு ஆபாச நகைச்சுவைகளைக்கூறி கைதட்டி சிரிப்பது போன்றவை அவனுக்கு பிடிக்காத விடயங்கள். அதைவிட அந்த நகைச்சுவைகளை அருகில் இருந்து கேட்கும் பெண்களும் தங்களுக்கென்ன என்பதுபோல கூடச் சேர்ந்து சிரிப்பது அவனுக்கு அருவருப்பாக இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தான் ஒரு கலியுகத்து ராமன், ஒழுக்கங்காக்கும் உத்தமன் என்று தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்வான். அவனது வீட்டில்கூட தன் மகன்தான் லிந்தக்காலத்திலேயே தப்புவழி போகாத ஒரே பிள்ளை என்று அவனை தலையில்தூக்கி ஆடுவார்கள். எல்லோர் வீட்டிலும் அப்படித்தான் என்றாலும் தன்மீதான நம்பிக்கையை அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். சகமாணவர்கள் இவனது பழக்கவழக்கங்களால் பெரிதாக இவனை அண்டுவதில்லையென்றாலும் அவனை முற்றாக ஒதுக்கவுமில்லை. சகஜமாகவே பழகினார்கள்.
ஆனாலும் மற்றவர்கள்போல தன்னுடன் பெண்கள் பெரிதாக நட்புகொள்வதில்லையேயென்ற கவலை மட்டும் அவனை வாட்டியது. ஒவ்வொருவனும் இது என் ஆளுன்னு சொல்லும்போது நானும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சொல்வதற்கு எனக்கொரு ஆற் இல்லையை என்ற கவலை. அதற்காக பெண்களிடம் தானாக சென்று பேசியதுகூட கிடையாது. தன்னுடைய படிப்பு, பழக்கவழக்கம், ஒழுக்கத்தைப் பார்த்து பெண்களாக தன்னிடம் வந்து பேசுவார்கள் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான். அது மணல்கோட்டை என்றாகிவிட்டது. விரக்தியின் விளிம்புக்கு அவன் செல்லும்போது அவன் வாழ்க்கையில் வந்தாள் அஸ்ரா.

அஸ்ரா... மல்டிமீடியா பாடநெறியில் அவனுக்கு அடுத்த பெட்ச். கண்டதும் கிரங்கடிக்கும் அழகு இல்லையென்றாலும் பார்ப்போரின் கண்களை ஒருநிமிடம் தன்னிடமே பதியவைக்கும் அளவு பெண்மையானவள். கம்ப்யூட்டர் படித்தால் தாங்களும் வெள்ளைக்காரர்கள்தான் என்ற மிதப்பில் அலையும் பகட்டுப்பேர்வழிகளுக்கு அவள் மட்டும் என்ன விதிவிலக்கா…. இயல்பாய் வரும் மொழிநடையை மாற்றி ஆங்கிலசாயலில் பேசுவது, இலகுவாக இல்லாவிட்டாலும் உடலோடு ஒட்டிய இறுகிய ஆடையை மலைப்பாம்பிடம் சிக்கிய மனிதன்போல கஷ்டப்பட்டு போட்டுக்கொண்டு அலைவது, நண்பர்களுடன் ஹோட்டல் சென்றால் பெயர்கூட உச்சரிக்கத் தெரியாத வெளிநாட்டு உணவை வீம்புக்கென்று வாங்குவது என்று கலியுக கன்னியாக வலம்வந்தாள் அஸ்ரா.

புதிதாய் வந்த மாணவர்கள் பழைய மாணவர்களுடன் இணைந்து செயற்திட்டம் ஒன்று செய்யவேண்டுமென ஒரு சுழல் வந்து கண்ணனையும் அஸ்ராவையும் இணைத்தது. அவனது திறமையறிந்த ஆசிரியர்களும் அவனிடம் இருந்து நீ நிறைய கற்றுக்கொள்ளலாம் என்ற சிபாரிசு வேறு. முதலில் கடமைக்காக கூடப்பழகியவள் பின் அவனது குணம் பிடித்துப்போய் நெருக்கமானாள். ஊரறிய ஒன்றாக சுத்த தொடங்கினார்கள். இரவு முழுதும் செல்போனில் தகவல் பரிமாற்றம்தான். தன்னுடைய அனைத்து வேலைகளையும் கண்ணன்மூலமே செய்து படிப்பில் முன்னேறினாள். தன்னைப்பற்றியே நாள்முழுதும் சிந்திக்கும் ரோபோவாக அவனை மாற்றினாள். இது அஸ்ராவின் நிலை. கண்ணனுக்கோ???? முதல்முறை அவள் பேசும்போது ஒரு பெண்ணிடம் பேசும் கூச்சம்தான் அவனிடம் இருந்தது. அவனிடம் நட்பு கொண்டு அவள் நெருங்கி வந்தபின் அவன் மனது மார்பை பிய்த்துக்கொண்டு வானத்தில் பறந்தது. தன்னிடம் ஒரு பெண் இவ்வாறான முறையில் பழகுவது அவனுக்கு தன்மீதே ஒரு பொறாமை வந்தது. ஆண்பெண் நட்பு கூடாது என்று வளர்ந்ததினாலேயே அவளது உறவை வெறும் நட்பு என்ற வட்டத்துள் அவனால் கடைசிவரை பார்க்கமுடியாமல் போனது. செல்போன் மெசேஜ் என்பது அவளுக்கு கண்சிமிட்டுவது போல. பல நண்பர்களுக்கு பலவாறாக மெசேஜ் போய்க்கொண்டேயிருக்கும். ஆனால் அவளது எஸ்.எம்.எஸ் அவனுக்கு இதயத்துடிப்பாக இருந்தது. ஒரு மெசேஜ் வரத்தாமதமானாலும் இதயம் நின்று போவது உறுதி. அவளது தொடுகை அவளுக்கு சாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு பெண் தெட்டால் ஆணுக்குள் ஏற்படும் ஆயிரக்கணக்கான அதிர்வுகளை அவர்கள் உணர்வதில்லை. இதுபோக அவர்கள் இருவரின் நட்பை காதலென்று கதைகட்டும் நண்பர்கள் வேறு. அதை கேட்கும்போது ஒருபக்கம் கூத்தாடவேண்டும் போலவும் மறுபக்கம் கூச்சமும் அவனை கொன்றுதீர்க்கும்.

இதற்குமேல் தாங்காது என்று பொறுமையிழந்தவனாய் பெரும்பாடுபட்டு அவளது கண்களைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று செல்லிவிட்டான். அவள் என்ன சொல்லப்போகிறாளோ என இருதயம் துடித்த ஓசை அவனது காதில் கோயில்மணி போல ஒலித்தது. இருக்கும் நட்பிற்கும் வேட்டு வைத்து விட்டோமா என கண்கலங்க ஆரம்பித்தது. ஆனால் அவளோ எந்த அதிர்ச்சியும் இல்லாதவளாய் சிரித்துக்கொண்டு ‘ஐ லவ் யூ சோ மச்’ என்றாள். என்னது, லவ்…. என் காது என்னிடம் பொய் சொல்லுமா? இல்லை உண்மைதான்… அட உண்மைதான். எரிமலையொன்றில் பனிமழை பெய்ததுபோல மனதுகுளிர்ந்தது. நிற்கமுடியாமல் தடுமாறினான். உலகத்தின் ராஜாவாகிவிட்ட நினைப்பு அவனுக்கு. டங் டடங் டடடங் டடடடடங் என்று மனசுக்குள்ளேயே ஒரு குத்துப்பாட்டு போட்டு ஆட தயாராகும்போது அவனுக்கு மட்டுமில்லை அவளுடன் நட்பாய் பழகும் அனைத்து ஆண்களுக்குமே அவள் ஐ லவ் யூ சொல்வது வழக்கம் எனத்தெரிந்ததும் அவனது குத்துப்பாட்டு டடடடடங் டடடங் டடங் டங் என சுதிகுறைந்தது.

அவளைப் பொருத்தவரை மற்றவர்களும் தானும் ஒன்றில்லை என்பதை அனைவருக்கும் நிரூபிக்க அவன் இல்லாத முயற்சியெல்லாம் எடுத்துப் பார்த்தான். நானும் நீயும் ஒரேமாதிரி யோசிக்குறோம் நாம ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது, என்னைவிட இன்னொருத்தன் உன்னை சந்தோசமா பாத்துக்கமாட்டான், வாழ்ந்த உன்கூடமட்டும்தான் இல்லேனா கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என்று இப்படி பல சினிமா வசனங்களெல்லாம் சொல்லி சொல்லி அவர்கள் சந்திக்கும் தருணங்களையெல்லாம் அவளுக்கு வெறுப்பாக மாற்றினான். அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சுகமாக சந்தோசமாக வாழத் துடிப்பவள். காதலினால் கஷ்டங்கள்தான் மிஞ்சும் என்பதையறிந்தும் அவள் காதலிப்பாளா? வேண்டாம்… நாம பிரண்ட்ஸாவேயிருப்போம், ஏன் காதல் காதல்னு வாழ்க்கைய கெடுத்துக்குற?, காதலத் தவிர நாம நாதிக்க எவ்வளவோயிருக்கு அப்படின்னு அவளும் அதிகமா யோசித்து பல அறிவுரைகளைக் கூறினாள். அவன் எதையும் ஏற்க தயாராக இல்லை. அப்ப ஏண்டி உரசி உரசி வந்த? பார்க்குல ஒண்ணா உக்காந்து ஐஸ்கிறீம் தின்னது, கடல்ல இரண்டுபேரும் ஒண்ணா குளிச்சது இதுக்கெல்லாம் என்னடி அர்த்தம் அப்படினு அவனும் கொஞ்சம் மதியிழந்தவனாய் பேச ஆரம்பிக்க அவர்கள் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. அவள் அவனை தவிர்க்கத் தொடங்கினாள். அவன் முன்பாக மற்ற ஆண்களுடன் நெருக்கமாகப் பழகினாள். கல்லூரிக்கு வெளியே அவனது தொடர்பை துண்டித்தேவிட்டாள். இதனால் மேலும் டிஸ்டர்ப்பான கண்ணன் நீ சரியென்று சொல்லாவிட்டால் நான் தற்கொலை செய்திடுவேன் என்று பூச்சாண்டிகாட்டினான். இந்த கடும் நெருக்கடியான சூழலைழெவ்வாறு சமாளிப்பது என்று தெரியாதவளாய் அவள் யோசித்து ஒரு முடிவெடுத்தாள்.

அவன் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றான். எல்லாம் சாதாரணமாக இருப்பது போலவே அவனுக்கு தோன்றியது. இடைவேளையின்போது அவனது நண்பர்கள் கூப்பிட்டார்கள் என்று மாடியில் உள்ள தனியறைக்கு சென்றான். அவனது ஆசிரியர்களோடு அவனை முறைத்தவண்ணம் அங்கே நின்றிருந்தாள் அஸ்ரா… எதற்கு இவர்கள் இங்கே நிற்கிறார்கள், என்னையேன் இங்கே அழைத்துவந்தார்கள் என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் இடதுபுறமாக ஒரு பலம்வாய்ந்த கை அவனது கன்னத்தில் பளார் என்று அளைந்தது. நிலைதடுமாறிய கண்ணன் இந்த யொங் என்ற சத்தம் அறையின் எந்தப் பக்கம் இருந்து வருகிறது என சுற்றிமுற்றிப் பார்த்தான். அங்கிருந்த பெரியவர்களின் வாய் அசைவது மட்டும் விளங்கியது. என்ன சொல்லியிருப்பார்கள் என உணர்வது அவ்வளவு கடினமானது அல்ல. இவ்வளவு நாளும் நல்லவன் என்று பெயர்வாங்கிய கல்லூரியில் இன்று ஒரு பொம்பளப்பொருக்கி என முத்திரை குத்தப்பட்டதுகூட அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அவளுக்கு தான்தான் விருப்பமான நபர் என்று நினைத்திருந்தானே… இன்று அவனை அடிக்க யார்யாரையோ கூட்டி வந்திருக்கிறாளே? அப்போ என்னை அவளுக்கு தேவையில்லையா என்று நினைக்க நினைக்கத்தான் அவன் மனம் வெதும்பியது. அந்த யொங் ஓசை மறைந்து காது கேட்க ஆரம்பிக்கம்போது ‘இனிமேல இவள தொந்தரவு பண்ணா போலீஸ்கிட்ட சொல்லவேண்டியிருக்கும், ஜாக்கிரதை’ என அவனது கல்லாரி தலைமை ஆசிரியர் சொன்னது மட்டும் அவனுக்கு கேட்டது.


என்ன யோசித்து என்ன பலன்? எல்லாம் நடந்துபோன விசயங்கள்… யாரால மாத்தமுடியும்…. அதன்பிறகு அவளை அவன் பார்க்கவேயில்லை. ஒருமுறைமட்டும் கல்லூரிக்கு சென்றான். அனைவரின் பார்வையிலும் ஒரு தோத்தாங்கோளியாக மானம் போனவனாக நிற்பதை விட படிப்பைவிடுவதே மேல் என்று மயிர்நீப்பின் வாழாக்கவரிமானாக சொல்லாமல் கொல்லாமல் கல்லூரியைவிட்டு நீங்கினான். இன்றுவரை பெற்றோருக்கு தெரியாமலும் பாதுகாத்து வருகிறான். மகன் என்ன செய்தாலும் சரியாத்தான் இருக்கும் என்று நம்பும் பெற்றோரும் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவளை காலம் முழுக்க நான்தான் பார்க்கபோறேன்னு நினைச்சான். ஆனா அவ அவனை பார்க்கவேபோறதில்லன்றததான் அவன் மனசு ஏத்துக்க கஷ்டப்படுது. ஆனால் பல சமயங்களில் அந்த கஷ்டத்தை மறந்து குடும்பம், படிப்பு, வேலைதான் உலகத்திலேயே முக்கியம் என்பதை உணர்ந்து பாடுபட்டு வெளியுலகில் தன் நல்லபெயரைக் காப்பாற்றிவருகிறான். பஸ் எஞ்சின் ஸ்டார்டானதில் தான் இருக்கும் நிலையுணர்ந்து ஓரக்கண்ணில் வரும் கண்ணீர்த்துளியை யாரும் காணாமல் துடைத்தான். எஞ்சினின் பேரிரைச்சலுடன் பஸ் புறப்பட்டு செல்ல ஆரம்பிக்க அந்த இடத்தில் இன்னொரு பஸ் வந்து நின்றது.

Wednesday, June 13, 2012

2007 - அது ஒரு போர்க்காலம்

'வெரி ஸொரி! இது ரொம்ப ரிஸ்க்... பர்மிஷன் கொடுக்க முடியாது'

'ப்ளீஸ் ஸார்.. கொஞ்சம் முயற்சி பண்ணுங்கோ! நிறைய நாளா நான் இதுக்காக கஷ்டப்படுறன்.'

'மிஸ்டர் குணசேகர சொன்னதுனாலதான் நான் இவ்வளவு தூரம் செஞ்சனான்! இதுவே பெரிய விசயம், இதுக்குமேல என்னால எதுவும் செய்யமுடியாது...நீங்க போறதெண்டா போங்கோ… அதுக்குவேண்டுமெண்டா எழுதிக்கொடுக்கிறேன்.'

இதற்குமேல் அந்த மனிதனிடம் கெஞ்சி பிரயோசனமில்லை என்று முடிவுசெய்த சுகுமார் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டு பிரான்ஸூக்கே திரும்பிவிடலாம் என்ற யோசனையுடன்தான் வெளியே வந்தான். ஆனால் அதோ.. வெயில் காயக்காய வெட்டவெளியில் அமர்ந்திருந்து தன் மகன் எப்படியும் தன் விருப்பத்தை நிறைவேற்றுவான் என விழிகளில் ஏக்கத்தோடு காத்திருக்கும் தந்தை, அவருக்கு என்ன பதில் சொல்வது? சரி இவ்வளவுதூரம் வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே என உள்ளம் கொடுத்த ஊக்கத்தால் மலர்ந்தமுகத்துடன் தன் தந்தையை எதிர்கொண்டான்...

'என்னய்யா... போகலாம்தானே?'

ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்த தந்தையின் முகத்தை ஏறிடாமல் 'அது... ஓமப்பா... ஒண்டும் பிரச்சனையில்ல. மிஸ்டர் ரஞ்சனுக்கு கொஞ்சம் வேலயிருக்காம்.. எங்கள போக சொல்லிட்டார். நாளைக்கு வெளிக்கிடுவம்.' என்று கூறியதுதான் தாமதம், மகிழ்ச்சி பெருக்கால் மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் அந்த நரைபூத்த கிழவன்.

இன்று இரவும் அதே அம்பிகா லொட்ஜில் தங்குவதென்று தீர்மானித்த காலி செய்வதற்காக கட்டிவைத்த மூட்டைகளில் ஒன்றை மட்டும் அவிழ்தனர். சுகுமாரின் மனதில் மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுந்து பதிலின் வழிதெரியாமல் ஒன்றோடொன்று முட்டிமோதிக் கொண்டிருந்தன. எப்படி அங்கே செல்வது? அதுவும் இந்த சூழ்நிலையில்..... அப்பாவை சமாதானப்படும் கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டதால் இனி அதை பற்றி நினைத்து பிரயோசனமில்லை. கொழும்பிலேயே இருந்து அடுத்தது என்னவென்பதை திட்டமிட்டல்லவா வந்திருக்கவேண்டும்... இங்கே வந்துவிட்டு அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நின்று தத்தளிக்கவேண்டியிருக்கிறதே என மனதை போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். இந்த கவலைகள் எதுவுமில்லாமல் சிறுகுழந்தையைப் போல உறங்கிகொண்டிருக்கும் அவன் தந்தையின் மனதில்தான் இந்நேரம் எவ்வளவு மகிழ்ச்சி படர்ந்திருக்கும். எத்தனை நாள் கனவிது... நாளை நினவாகும் என்ற நம்பிக்கையில்தானே இந்த தூக்கம். அது நடக்காதென்றால் எத்தனை பெரிய ஏமாற்றம்... நொருங்கிபோய்விடுவாரே என்ற கவலையில் உறக்கம் வராமல் உலவிக்கொண்டிருக்கும்போது கதவை திறந்துகொண்டு உள்ளேவந்தான் சுந்தரம்பிள்ளை.

யாழ்நகரில் ஒரு வேன் வைத்துகொண்டு வரும்வேலைகளை பார்த்து பொழுதைக்கழிப்பவன் சுந்தரம்பிள்ளை. நாட்டில் யுத்தசூழல் நிலவுவதால் பெரிய சம்பாத்தியங்கள் ஒன்றும் வருவதில்லையென்ற கவலை அவனுக்கு. யுத்தம் முடிந்தது, யாழ்ப்பாணத்துக்கு யாரும் வரலாம் யாரும் போகலாம் என்ற நிலைமட்டும் வந்தால் தனக்கு நல்ல வாழ்க்கையேற்படும் என கனவு கண்டுகொண்டிருப்பவன். குறிஞ்சிபூ மாதிரி சுற்றுலாபயணிகள் வந்திருப்பதாக தெரிந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தான். இந்த ஒரு பயணத்தை ஒழுங்காக முடித்தாலே கிட்டத்தட்ட இரும்புக்கடைக்கு செல்வதற்கு தயாராயிருக்கும் அவனது ஓட்டை வேனை குறைந்தபட்சம் ஓடுமளவிற்காவது திருத்திவிடுவான். ஆனால் ஊரில் வேறு வேனே இல்லாத மாதிரி என்னுடைய வண்டியை ஏன் கேட்கிறார்கள் என்ற குழப்பதோடு நுழைந்தவனை அவசர அவசரமாக தனியாக இழுத்துக் கொண்டுபோனான் சுகுமார்.

'ஸார்.. அவசரமா ஊருக்கு போக வண்டி வேணுமெண்டு கேட்டனியளாம். எண்ட வேன் இருக்கு ஸார். சும்மா பறக்கும் ஸார்...எப்ப போகோணும்? நாளைக்கா? எங்க கொழும்புக்கா?'

அடுக்காக பேசிமுடித்தான் சுந்தரம்பிள்ளை. நிதானமாக அவனை பார்த்து 'கொழும்புக்கில்ல, வடமராச்சிக்கு போகோணும்.' என்று கூறிவிட்டு அவன் என்ன யோசிக்கிறான் என நோட்டமாக பார்த்தான் சுகுமார்.

பீதியில் உடல்வெளிரிப்போனான் சுந்தரம்பிள்ளை... 'என்ன சொல்லுறியள் ஸார்? நாட்டு நிலம என்னவெண்டு தெரிஞ்சுதான் கதக்கிறியளா? டவுணுக்குள்ளேயே மனுசனால நிம்மதியா வாழ முடியேல. ஆர்மி செக்கப்பெல்லாம் வீதிக்கு ஒண்டு போட்டுருக்கானுவள். எல்லாத்தயும் தாண்டி போறதெண்டுறது நடக்காத காரியம். நான் என்ன எவனும் வரமாட்டான். பேசாம கொழும்புக்கே போயிடுங்கோ. ஒருவேள கொழும்புக்கு நீங்கபோறதுண்டா சொல்லுங்க எண்ட வேன் இருக்கு.'

'எனக்கு எல்லாம் நல்லா விளங்குது! யாரும் வரமாட்டேன்றாங்கறதாலதான் உன்ன கூப்புட்றேன். உனக்கு எவ்வளவு காசு வேணுமோ கேளு.'

'காசா? கடவுளே! போறவழியில எவ்வளவு காடு இருக்கெண்டு தெரியுமா? உங்கள பார்த்தா பர்மிஷன் இல்லாத ஆள்மாதிரிவேற இருக்கு. யார்மேலயாவது சந்தேகம் வந்தா பேச்சுக்கேயிடமில்லை! உசிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலய ஏன் செய்யணும். உள்ளூர்காரன் எண்ட பொழப்பயும் சேத்து கெடுக்க பாக்குறியள்.'

'இல்ல... கண்டிப்பா போகத்தான் வேணும். ஒரு நாளேள போயிட்டு வந்துடலாம். உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நான் பாத்துக்கிறேன்.'

'நீங்க என்ன சொன்னாலும் சரி நான்.. சம்மதிக்கமாட்டன்.'

'பத்தாயிரம் ரூபா தாரன்'

'சரிவராது ஸார்.. என்ன விடுங்கோ'

'அம்பதாயிரம் தாரன்... கடசி பேச்சு. நாளக்கு காலம வெளிக்கிடோணும்'என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான் சுகுமார்.

தனக்கு இருக்கும் காசுபிரச்சினையை மனதில் வைத்து அரைமனதாக தயாரானான் சுந்தரம்பிள்ளை. காலையெழுந்தவுடன் உற்சாகத்தோடு புறப்பட்ட தந்தையை மகிழ்ச்சியோடு பார்த்தான் சுகுமார். ஒரு மண்பாண்டமும் கிலோ அரிசியும் எடுத்துக்கொண்டனர். ஆறுமணிக்கெல்லாம் சுந்தரம்பிள்ளையும் வந்து சேர்ந்தான். தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறினார்கள். காலையிளங்காற்றின் சுகந்தம் இதயத்தை தாலாட்ட பயணம் சீராக போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்க போகுதோ என்ற பீதியில் சுந்தரம் வண்டியோட்ட தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவேண்டுமேஎன்ற படபடப்பில் சுகுமார் மூழ்க கிழவரோ செல்லும் வழியெங்கும் தான் வாழ்ந்த இடங்களின் நினைவுச்சுவட்டை எண்ணியெண்ணி பரவசமடைந்தார்.

அதோ அந்த புல்வெளியில் நான் விளையாடியிருக்கிறேன் இதோ இந்த குளத்தில் நான் குளித்திருக்கிறேன் என்று அவரது பிள்ளைப்பிராயத்தை மீண்டும் மனதில் இருத்தி ஒரு குழந்தையாய் மாறினார். அப்பப்பா.. அஞ்சு வயசில ஓடியாடிய இடங்களையெல்லாம் அறுபத்தஞ்சு வயசுல வந்து பார்க்கும்போது அந்த பூரிப்பு இருக்கே அதையெப்படி வார்த்தைகளால் சொல்லமுடியும்? நான் பிறந்துவளர்ந்த இடங்களையெல்லாம் மறுபடியும் பார்க்கத்தான் இவ்வளவுகாலமா அந்த ஆண்டவன் என்னை கூப்புடாம இருந்தான்போல.... இதயெல்லாம் திரும்பி பார்க்க பவானிக்கு குடுத்துவக்கலியே... எத்தனை கஷ்டத்துலயும் எங்கூடவேயிருந்தாளே. எனக்கு பத்தொம்பது வயசிருக்கும்போது அவ கையபிடிச்சேன். அவ சாகுறவரைக்கும் அதே கைக்குள்ளதானே தாயின் செட்டைக்குள்ளே சுகம் காணும் ஒரு குருவிக்குஞ்சைப்போல அடங்கியிருந்தாள். அவ இல்லாம நான் வாழுவனெண்டு நினைச்சும் பார்க்கலியே.. எண்பதுலயும் தொண்ணூறுலயும் சண்ட முத்தி இந்த மண்ணவிட்டே போகணும்னு ஒரு சூழ்நில வந்தப்போ இதவிட்டே வரமாட்டேன் செத்தாலம் பரவாலயெண்டு மண்ணில் புரண்டு கதறினாளே பிள்ளட எதிர்கலத்துக்காக நான் என்ன கஷ்டப்பட்டு அவள கூட்டிகொண்டு பிரான்சுக்கு போனனான். பிறந்த மண்ணுலதான் தன்ற உசுர் போகணும்னு சொல்லிக்கொண்டிருந்தாளே! கடைசில அது நிறைவேறாமலே போயிடுச்சே... தாய்க்கு தாயாய் மனைவிக்கு மனைவியாய் குழந்தைக்கு குழந்தையாய் என்னுடன் இருந்தாளே.. இவன் சுகுமார் பிறந்து எங்களுடன் தவழ்ந்து விளையாடும்போதெல்லாம் அவனைவிட இவள் குழந்தையாயிருந்தாளே அவன் வளரந்து பெரியவனாகிவிட்டான் ஆனால் அவள் சாகும்போதுகூட ஒரு குழந்தைதனத்தோடு இருந்தாள். அவள் மரணப்படுக்கையில் என்னிடம் கேட்ட ஒரு வார்த்தைக்காகத்தானே இவ்வளவு தாரம் பாடுபட்றேன்.

எண்ணத்தில் கோர்த்துகொண்டிருந்த வண்ணநினைவுகளையெல்லாம் சிதைக்கும்விதமாக எங்கோ தூரத்தில் டமாலென்று ஒரு பெரியகுண்டு வெடித்தது. சற்றுநேரத்தில் உடல்பதறி இதயத்துடிப்பு நின்றுபோனதுபோலிருந்தது. ஐயோ கடவுளே இதுக்குத்தான் நான் அப்பவே வரமாட்டனெண்டனான் என்று புலம்பியபடி வண்டியை வேகமாக ஓட்டினான் சுந்தரம். பயம்தொற்றிக்கொண்ட சுகுமார் தந்தையையும் சேர்த்து குனிந்துகொண்டான். அதே அதிர்வுகளோடு இன்னும் இரண்டு குண்டுவெடித்த சத்தம் கேட்டது. ஆனால் அது மிகத் தொலைவில்தான் வெடித்திருக்கவேண்டும். இந்த இடத்தில் பயணம்செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிடித்தார்கள் என்றால் வண்டிசாரதிஅனுமதிபத்திரத்தை ரத்து செய்வதோடு தன்னை எத்தனைகாலம் சிறையில்போடுவார்களோவென்ற அச்சம் சுந்தரத்திடம். சிறைதானா அல்லது நேராக சுவர்க்கம்தானா என்பது தனது முன்னோர் செய்த புண்ணியத்தில்தான் இருக்கிறது. அம்மாதாயே யெனக்கென்ன வந்தாலும் பரவால... என் புள்ளக்கு எந்த தீங்கும் வராம காப்பாத்தி விட்டுறுமா என ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்த தந்தையை பாசத்தோடு பார்த்தான். எத்தனை கிலோமீட்டர் தாண்டி வந்தாயிற்று என்று தெரியவில்லை. குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்கவில்லை. பதட்டம் சற்று குறைந்த நிலையில் இயல்பிற்கு வந்தனர் மூவரும். இன்டைக்கு யார்ட முகத்துல முழிச்சேனோ தெரியல என்று சலித்துக் கொண்டான் சுந்தரம்.

நீண்டநெடிய பாதை.பாதையின் இருபக்கங்களும் செழிப்பாக வளர்ந்திருக்க வேண்டிய பனைமரங்களின் கருகிய எச்சங்கள். அவைதான் யுத்தம் கொடுத்த பரிசு. அழகிய கிராமமாக இருக்கவேண்டிய இடம் இன்று ஆள் அரவமில்லாத சுடுகாடாக திகழ்ந்தது. பதட்டத்தில் ஒருவன் வண்டியோட்ட,நினைத்ததை முடிக்கும் முனைப்பில் இருவர் செல்லும் அந்த பயணம் ரத்தத்தை மேலும்கீழும் அனுப்பும் வேலையை மட்டும் செய்யும் இதயத்தில் எங்காவது உணர்ச்சியிருக்கிறதாவென தேடி அதை தட்டியெழுப்புவதாகவிருந்தது. வண்டியின் டயர் சத்தத்தை தவிர ஒரு அரவமும் இல்லாமல் தொடர்ந்த அந்த பயணம் இப்போது வடமராச்சிக்குள் நுழைந்து வல்லிபுரம்வரை வந்துவிட்டது. சற்றும் எதிர்பார்க்காதது என்று செல்லமுடியாது ஆனாலும் திடீர்திருப்பமாக எதிரேகண்ட அந்த ஆர்மிக்காரர்களின் குவியல் மூவருக்கும் தொண்டைக்குழியையடைத்தது. அது ஒரு ஆர்மி காம்ப். சரிதான் அடுத்தவருடம் இந்நேரம் நமக்கு திவசம் நடக்கபோகுது என்று முடிவேசெய்தான் சுந்தரம். வேனைக்கண்டவுடன் ஒரு ஆர்மி கையைக்காட்டி வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்த மூவரும் தமிழர்கள் என்பதை கண்களாலேயே அளந்து ஏதோ தீவிரவாதியையே பிடித்தவிட்ட நினைப்பில் ஒரு ஏளனச்சிரிப்பு சிரித்தான். மூவரும் வண்டியிலிருந்து இறங்கினர். அவர்களை ஆர்மிகளெலாம் சுற்றிவளைத்தனர். இப்பிடி வந்து மாட்டிக்கொண்டோமேயென சுந்தரம் பதற வந்த காரியம் நடக்காதோவெனப் பயந்தனர் மற்ற இருவரும். மேலதிகாரிபோல ஒருவன் வந்து ரெண்டு நிமிடம் மேலும்கீழும் பார்த்தான். யார் நீங்கள் என்று சிங்களத்தில் கேட்டான். அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பேந்த பேந்த முழித்தனர். அவன் மீண்டும் கேட்டான். மூவருக்கும் அந்த மொழி தெரியாததால் அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தகொள்ளமுடியவில்லை. மேலும்மேலும் கேட்டு சலித்த அந்த அதிகாரி அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லையென்பதையுணர்ந்து கோபத்துடன் சிங்களம் தெரியாம இந்த நாட்டுக்கு ஏண்டா வந்தனியள் என்று அவனுக்கு தெரிந்த கொச்சைத்தமிழில் அதட்டவதுபோல முன்னுக்குவரவும் சுந்தரத்திற்கு காய்ச்சலே வந்துவிட்டது. ஐயா நானு அப்பவே சொன்னனான் இவையள்தான் கேட்கயில்ல என்று அழுவது போல சுந்தரம் கூறியதும் அங்கிருந்த வாய்களெல்லாம் நக்கல் சிரிப்பு குடிகொண்டது.

'நாங்க இங்க சுட்டிபுரம் கோயிலுக்கு வந்தனாங்க..' என்று சுகுமார் மெதுவாக கூற சுந்தரம் கேள்விக்குறியோடும் அந்த ஆர்மி ஆச்சரியக்குறியோடும் அவனை நோக்கினர்.

'என்ன! கோயிலுக்கா? இங்க சண்ட நடக்குது தெரியாதா?' என்று மிரட்டினான் அந்த ஆர்மிக்காரன்.

‘ஆமாம்! ஆனா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பிரான்ஸுல இருந்து வந்து பர்மிஷன் வாங்கினோம். கொழும்புல இருக்குற அரச அதிகாரி மிஸ்டர் குணசேகர பிரான்ஸ்ல எங்கூட வேலபாக்குற ஒரு லேடியோட பிரதர். அவர்ட உதவியால யாழ்நகர காவலாளி ரஞ்சனிடமும் பேசினோம். அவர் போலிஸ் உதவி கிடைக்காது வேண்டுமெண்டா நீங்க போங்கவெண்டு எழுதிக்கொடுத்தவர்’ எனக்கூறி ஒரு காகிதத்தை நீட்டினான்.

அதை வாங்கி படித்தவன் உடனே யாழ்நகர போலிஸுக்கு போன் செய்தான். சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களிடம் வந்தான். ‘உங்க நேரம் நல்லாயிருக்கு. இதே வேறயாக்களெண்டால் நாங்க டீல் பண்ற விதமே வேற. ரஞ்சன் நல்ல பொலிஸ். அவர் கெஞ்சிகேட்டதால உள்ள அனுப்புறன். ரெண்டு மணித்தியாலத்துல திரும்பி வந்து எங்களிற்ற சொல்லிட்டு வந்த வழியே ஓடிடுங்க…புரியுதா’ என அதட்டினான்.



விட்டது சனியன் என மூவரும் வண்டியில் அமர்ந்து நேராக சுட்டிபுரத்தில் சென்று நின்றனர். அது ஒரு சிறுகிராமம். கூப்பிட்டால்கூட கேட்காத தொலைவு இடைவெளியில் ஒவ்வொரு வீடும் இருந்தது. வேலிகளுக்கு அப்பால் ஒரு கோபுரம் தெரிய மூவரும் இறங்கினர். வண்டியிலிருந்து முதலில் இறங்கியது சுகுமாரின் தந்தைதான். அவருக்கு நேராக தெரிந்ததோ சுட்டிபுரம் கண்ணகியம்மன் கோவில். அம்மா என்று உணர்ச்சி பெருக்கெடுக்க கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே சாஸ்டாங்கமாக விழுந்தார். அவரைதொடர்ந்த சுகுமார் அவரை கைத்தாங்கலாக தூக்கி, ‘கோயிலுக்குள்ள போகலாம் வாங்கோ’ எனக்கூற ‘இல்ல தம்பி, முதல்ல பொங்கோணும்.. சாமாங்கள இறக்கு’ என்றார். கோயிலுக்கு முன்னேயிருந்த பரந்த நிலத்தில் பொங்கல் காய்ச்சுவதற்காகவே அங்கங்கு மூன்று மூன்று கற்கள் இடப்பட்டு இருந்தன. அந்த வயதான காலத்திலும் உற்சாக மிகுதியால் விறகு எடுத்து அந்த கற்களுக்கிடையில் வைத்து தீமூட்டி பானையைவைத்து தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் கல்லரித்த அரிசியை அதில்கொட்டி அது பொங்கும்வரை பக்கத்திலேயே இருந்துகொண்டிருந்த தந்தையை சற்று தள்ளிநின்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். அதுவரை பொறுமையாக இருந்த சுந்தரம்பிள்ளை நேராக சுகுமாரிடம் வந்து கோபமாக முறைத்துப் பார்த்தான்.

‘என்ன ஸார்? இப்படி சாமி கும்பிடத்தானா என்ற உசுரப் பணயம்வச்சு கூட்டிவந்தனியள்.’

‘இது என்ற அப்பாட நிறையநாள் கனவு. அத நிறவேத்தி வக்காட்டி நான் என்ன பிள்ள.’

‘நான் கோபத்துல இருக்கன். பேசாதீங்கோ… வந்தவரக்கும் உசுரு தப்பினது மூத்தார் புண்ணியம். அப்படி இந்த கோயிலுக்கு கட்டாயம் வரத்தான் வேணுமோ?’

‘இந்த மண்ணவிட்டு உசுர தப்பிச்சு வெளில வாழுற எங்கட சனங்களெல்லாமுமே எண்டக்காவது ஒருநாள் தங்கட பிறந்த மண்ண பார்க்கமாட்டமாண்டு எப்படி ஏங்குறாங்கள் தெரியுமா? இந்த சந்தர்ப்பம் எங்கட வாழ்க்கைல இனி எப்ப கிடைக்கபோகுது? நான் அம்மாட வயித்துல இருக்ககுல இந்த கோயிலுக்கு வந்து நான் நல்லா பொறக்கவேண்டுமெண்டு அம்மாவும் அப்பாவும் நேர்த்தி வச்சவயள். கலவரத்தால இடம்பெயர்ந்ததால நான் பொறக்கும்போது அத செய்யமுடியேல. பிறகு வேத்து தேசத்துக்கு போய் நல்லாவற்றதுக்காக நாய்பாடுபட்டதுல கொஞ்சகாலம் போயிட்டு. பிள்ளக்காக வச்ச நேர்த்தி செஞ்சேயாகோணுமெண்டு அம்மா ஒத்தக்கால்ல நின்னவா. கடசிவரக்கும் அவாக்கு அந்த குற இருந்துகொண்டேதானிருந்தது. அவா போனபிறகு அப்பாவ என்னால சமாதானப்படுத்த முடியேல. நெடுங்காலமா நெஞ்சுக்குள்ள வச்சிருந்த ஆச நிறவேறாம உங்கம்மா மாதாரா நானும் போகணுமெண்டு நினக்கிறியா எண்டு கவலப்பட தொடங்கிட்டார். வேற வழியல்லாம அவர சந்தோசப்படுத்த இத்தனை கஷ்டங்களயும் தாண்டி வந்துட்டன்.’

‘உங்கட நோக்கம் புரியாம பேசிட்டன். மன்னிசிடுங்கோ. உங்களமாதிரி இந்த காலத்துல எந்த பிள்ளயள் இருக்குதுகள்? இருந்தாலும் உசுர வெறுத்து இப்படி சாகசம் பண்ணினது கொஞ்சம் அதிகமாத்தான்படுது.’ என சுந்தரம் சொல்லவும் இருவரும் குபீரென சிரித்தனர்.

‘தம்பி, பொங்கிடுச்சு… வா படைப்போம்.’ என தந்தை கூப்பிட்டதும் சுகுமார் அவரிடம் ஓடினான். சுந்தரம் இனம்புரியாத சந்தோசம் கிடைத்த திருப்தியில் வேனில் ஏறி இருக்கையில் சாய்ந்து வேன்ரேடியோவைப் போட்டான். காய்ச்சிய பொங்கலை கையில் எடுத்துக்கொண்டு தகப்பனும் மகனும் கோயிலைநோக்கி சென்றனர். அடிவாரத்திலிருந்து கோபுரத்தை பார்த்தார்கள். நமது பாரம்பரிந்த்தின் கடைசி அடையாளமாயிற்றே. மெலும் உற்சாகம் பொங்க ஒரு சிறுகுழந்தைபோல தந்தை கோயிலினுள்ளேயோட அவருக்கு பின்னால் ஓடியவன் தடுமாறி யார்மேலோ விழுந்துவிட்டான். சுதாரித்து எழுந்தபின்தான் தெரிந்தது அது ஒரு அழகான இளம்பெண். அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றவன் அவள் எழுந்து செல்லசெல்ல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் திரும்பி திரும்பி பார்த்து புதுப்பிரச்சனைக்கு வித்திட்டாள். அவள் கண்ணிலிருந்து மறந்தபின் திரும்பவும் இங்க வரோணும் என்று சிரித்துவிட்டு தந்தையிடம் ஓடினான். எங்கிருந்தோ வானோலியில் மிதந்துவந்தது ஒரு கீதம் ‘இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை, இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.’

Tuesday, June 5, 2012

முகப்புத்தகம்

என்ன ஒரு முட்டாள்த்தனம்! நான் ஏன் இப்படி செய்தேன்? சரியா தவறா என்று யோசிக்காமல் அவசரத்தில், அவசரம் என்றுகூட சொல்லமுடியாதே… இது ஒரு சபலம். இந்த சபலத்தில் நான் செய்த காரியம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்படுத்தப்போகிறதோ என்று நினைத்தாலே தலையை சுத்தி பத்துபேர் நின்று ஒரேநேரத்தில் சுடுவதுபோல இருக்கு… ஆ… என்ன சுடும்போது குனிந்துவிடவேண்டியதுதானே என்கிறீர்களா… என் மனச்சாட்சி என்னை சுடுமே அதிலிருந்து எப்படி தப்பிச்செல்வது? ஆ… அதற்கு முதல் அந்த ஃபேஸ்புக்கை சுடவேண்டும். எவன்தான் கண்டுபிடிச்சானோ அவன் இடி விழுந்துதான் சாவான். என்னை என்ன பாடு படுத்தியது…….

ஃபேஸ்புக். முகப்புத்தகம். 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இன்று இலங்கையில் 90வீத மக்களுக்கு இணையஅறிவு இருக்கிறது. ஆனால் 2005, 2006 ஆண்டுக்காலங்களில் 50வீதமானோருக்கும் குறைவாகவே இணையபாவனையாளர்கள் இருந்தார்கள். முகப்புத்தகம் முதலில் சென்றடைந்தது பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்தான். அந்த கவர்ச்சியில் உந்தப்பட்டு இன்னும் பலர் அதற்கு அடிமையானார்கள். 2007,2008,2009 என வருடாந்தம் அதன் பாவனையாளர்கள் அதிகரித்து இன்று இலங்களையில் முகப்புத்தக பாவனையாளர்களாக இல்லாதோர் எவரும் இல்லை என்று ஆகிவிட்டது. மன்னிக்கவும் அகதிமுகாமில் அடுத்தவேளை உணவை யார் தருவார்கள் என்று ஏக்கத்தோடு வாழ்வோரும் புறக்கோட்டையில் நாள்கூலிக்காக தினமும் வண்டி இழுத்தும் மூட்டைதூக்கியும் சம்பாதித்து அந்த காசுகூட கையில் நிலைக்காமல் எதிர்காலத்தை வெறுங்கையுடன் எதிர்நோக்குவோரும் மலைநாட்டில் பிறந்து படிக்க வசதியில்லாமல் குடும்ப வருமானத்திற்காக கொழும்புக்கடைகளில் வேலைபார்க்கும் சிறுவர்களும் இந்த பட்டியலில் வர வாய்ப்பில்லை. காரணம் அவர்களுக்கு முகப்புத்தகத்தை அணுகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. கசப்பான உண்மை என்னவென்றால் இப்படி பரிதாபத்திற்குரிய மக்களுக்கும்கூட முகப்புத்தகத்தை பாவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களையும் அது விட்டுவைக்காது. அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? பொதுவாக இந்தமாதிரியான விடயங்கள் செவிவழியாகத்தான் பிரபலமடையும். 2009ல் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிமாணவர்களும் முகப்புத்தக பாவனையாளர்களாக இருந்தநேரம் எனக்கு அதைபற்றிய அணுகமுறை தெரியாததாலும்(ஏன் முகப்புத்தகம் பாவிக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது) எனது வீட்டில் கணினி இல்லாததாலும் நான் முகப்புத்தகத்தை உபயோகிக்கவில்லை. அது போகப்போக எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. மற்ற மாணவர்கள் என்னை ஒருவித பரிதாபத்தோடு பார்த்தார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எப்பாடுபட்டாலும் நாமும் முகப்புத்தகத்தில் இணைவது என்று முடிவெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக அதைபற்றி தெரிந்துகொண்டு எப்படியோ 2010ல் முகப்புத்தகத்தில் இணைந்தும்விட்டேன். புதிதாக ஒருவிடயத்தை பார்க்கும்போது அதுவும் உலகமே கொண்டாடும் ஒரு விடயத்தை நாமும் அனுபவிக்கபோகிறோம் என்ற வியப்பும் மிரட்சியும் என்னில் தொற்றிக்கொண்டன.



முகப்புத்தகத்தில் இணைந்தாயிற்று. இப்போ யாரை நண்பராக்குவது? என் பள்ளிதோழர்களின் பெயர்களை தட்டிப்பார்த்தேன். தக்ஷன் என்று கேட்டால் நூறு தக்ஷன்களின் வந்தது, அனைவரும் ஏதாவது ஒரு சினிமாநடிகனின் படத்தை போட்டிருந்தார்கள். இதில் என் நண்பனை எப்படி கண்டுபிடிப்பது? அதனால் அவர்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் விபரங்களை கேட்டுதெரிந்துகொண்டு அதன்பிறகு இணைத்துக்கொள்வோம் என நினைத்து அவர்களை தேடும் முயற்சியை விட்டுவிட்டு பொதுவாக தேடும் பொழுது அழகான பெண்கள் பலரின் முகவரிகள் கிடைத்தன. இத்தனை பெண்களோடு ஒரேநேரத்தில் நட்பு கிடைப்பதென்பது எத்தனை பெரியவிடயம்… முகப்புத்தகத்திற்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம்செய்து நானே முதல் ஆளாய் அர்ச்சனை செய்யவேண்டும் போலஇருந்தது. நான் கொடுத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு நண்பராக இணைத்த சில பெண்களோடு முதலில் ‘ஹை’ அளவில் பேச்சுக்கள் தொடங்கின. சிறிது நாட்களுக்குள் சிலர் நல்ல நெருக்கமாக பழகுவதால் மெதுவாக இரட்டையர்த்த வார்த்தைகளுடனான பேச்சு இடம்பெற்றது. அதற்கு மறுப்பு வராத நண்பிகளிடம் கொஞ்சம்கொஞ்சமாக ஆபாச உரையாடல் ஆரம்பமானது. சிலர் அந்த கணமே நண்பர்பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் சிலர் அதனூடும் தொடர்ந்தனர். இணையத்தினூடாக எத்தனையோ பெண்களுடன் சல்லாபித்திருக்கிறோம் என எனது நண்பர்கள் அளந்துவிடும்போதெல்லாம் வயிறு எரிந்து காதுவழியாக வந்த புகைக்கு நீர் ஊற்றி அணைக்கும் விதமாக ஆஹா!....ஓஹோ!... எத்தனை பெண்களடா! நாம் சொல்லும் அனைத்திற்கும் ஆமோதிக்கிறார்களே என்று பூரித்து இருக்கும் வேளையில்தான் நண்பர்கள் மூலமாக ஒரு விடயம் தெரிந்தது. அதாவது பொழுதுபோகாத சில பொறுக்கி பசங்க, பொண்ணுங்க மாதிரி கணக்கு வைத்துக்கொண்டு இன்னொரு ஆண், பெண் என்று நினைத்து வழியிறதை ரசிப்பாங்களாம். கண்றாவி. ஐயய்யோ! நான் எத்தனை பேரிடம் ஏமாந்தேன் என்று தெரியவில்லையே! அட மடையா எந்த பெண்ணாவது முன்னபின்ன பார்க்காத முகம்கூட தெரியாத ஆளோட இப்பிடி பேசுவாங்களா? முதல்வேளையாக அனைவரையும் நண்பரிலிருந்து தூக்கிவிட்டேன். என்னை ஏமாத்தின அத்தனை பாவிகளும் நடுரோட்ல நாய் தொரத்தாம சாகமாட்டாங்க.. அப்பிடி இருந்தும் மனம் ஆராததால் உடனே பெண்போல ஒரு கணக்கை ஆம்பித்து என்னை பத்துபேர் ஏமாத்தியதற்கு ஈடாக ஆயிரம்பேரை நான் ஏமாற்றியபின்தான் மனம் சற்று அடங்கியது.

அதன்பிறகு எனக்கு முகம் தெரியாத ஆட்களை நான் இணைத்துக் கொள்வதில்லை. தெரிந்தவர்களை இணைத்து அவர்கள் மூலமாக வேறு யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என அவர்களது நண்பர் பட்டியலை ஆராய்ந்து அவர்களையும் இணைத்துகொள்வது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் தேடும்போது சிவானியின் படத்தை பார்த்தேன். சிவானி ஜெய் என்று பெயர் இருந்தது. என் நினைவிலே என்றுமே துருப்பிடிக்காத அவளது சிரிப்புடனும் அவளை பார்த்து கிறங்கவைத்த அந்த பொட்டுடனும் அப்படியே இருந்தாள். ஒரு சிறு வித்தியாசம் நெற்றியில் வைத்திருந்த பொட்டுக்கு மேலாக உச்சிவகிட்டில் இன்னொரு பொட்டும் வைத்திருந்தாள். இவளை இனி என்றுமே பார்க்கமுடியாது என நினைத்த என் வாழ்க்கையைவிட்டு தொலைந்து போனவளை மீண்டும் கண்டுபிடித்து என் கண்முன்னே நிறுத்தியது முகப்புத்தகம்.

சிவானி. என் காதலி. ஜெய் அவளின் காதலன். அவளுக்கு என்னைவிட நான்கு வயது அதிகம். நான் பள்ளியில் படிக்கும்போது அவள் கல்லூரி முடித்திருந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் என் பெரியப்பாவின் மளிகைகடையில் ஆள்குறைவதால் என்னையும் உதவிக்கு அழைத்தார். ஒரு மாதம் தவணைவிடுமுறை இருந்ததால் ஒரு உதவிக்காகவும் வேலை பழகின மாதிரி இருக்கும் என்பதாலும் அங்கே சென்றேன். ஒரு மாதம்தான் அங்கே இருந்தேன். அந்த ஒரு மாதம்தான் அவளைப் பார்த்தேன். ஆனால் வாழ்க்கைக்கு மறக்கமுடியாது. பெண்களுக்கு இரண்டு காதல்கள் இருந்தாலும் புதுக்காதல் வந்தவுடன் தேவையில்லை என்று உதறிய பழைய காதலை அடியோடு மறந்துவிடுவார்கள். ஆனால் ஆண்களோ ஆயிரம் காதலிகள் வந்தாலும் அனைவரோடும் இருந்த தருணங்களை புத்தகமாக போடும் அளவுக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். சும்மா காதலுக்கே அப்படியென்றால் என்னுள் முதன்முதல் காதல் உணர்வை ஏற்படுத்தியவள் சிவானி. மரணத்தில்கூட அவள் நினைவு பசுமையாகத்தான் இருக்கும். எங்கள் கடைக்கு பக்கத்தில்தான் அவர்கள் வீடு இருந்தது. எதற்கெடுத்தாலும் அங்கே வந்துதான் பொருள் வாங்குவாள். நான் புதுசு என்பதால் பெரிதாய் பழக்கமில்லை. எங்கள் பெரியப்பாவுடன் நல்ல நட்பாய் பழகுவாள். ஒருநாள் பெரியப்பா கடையில் இல்லாத நேரம் வந்திருந்தாள். நானோ ஏற்கனவே வந்திருந்த ஒரு பெரியவரின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் ஏகப்பட்ட பொருட்களை கேட்டிருந்ததால் அனைத்தையும் சரிபார்ப்பதற்குள் விழிபிதுங்கிவிட்டது. அவள் என்னை திரும்பதிரும்ப கூப்பிட்டும் நான் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றவளாட்டம் ‘நீங்க இந்த கடையில வேல பாக்கணுமா வேணாமா?’ என்றாள். நிமிர்ந்து அவள் முகத்தை முதல்தடவையாக பார்த்தேன். அழகுல மயங்குறதுன்னு சொல்லுவாங்களே அதுதான் அதேதான்… என்ன முறைப்பு சாமி முன்னுக்கு நிற்பவர்கள் எரிந்துபோவதுபோல கோபம். முறைக்கும்போதே இவ்வளவு அழகென்றால் சிரித்தாள் எப்படி இருப்பாள். அட… இவள் எப்படி என் பெரியப்பா கடையில் இருந்து என்னையே மிரட்டுவாள் என எனக்கும் கோபம் வந்துடுச்சுனா பாருங்களேன். நானும் ஏட்டிக்குபோட்டியாக நின்றதால் கோபத்துடனே சென்றுவிட்டாள். பெரியப்பாவிடம் அவளைப்பற்றி கூற அவரும் அவள் விளையாட்டுப்பெண் சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பாள் என்று போய்விட்டார்.
நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கிடையிலான பேச்சு கொஞ்சமாய் மிகக்கொஞ்சமாய்த்தான் அதிகரித்தது. ஆனால் அவள் மீது கொண்ட காதலோ ஜெட் வேகத்தில் பறந்தது. வயது பிரச்சினை வருமே என புத்தி சுட்டிக்காட்டினாலும் இளமைக்கேயுண்டான துடுக்கால் அதெல்லாம் பெரியவிசயமா என மனசு போலிவீராப்பு காட்டியது. அவள் ஒவ்வொருமுறையும் கடைக்கு வரும்போதும் பாரதிராஜா படத்துல வாறமாதிரி நாலு தேவதைகள் அவளை பூத்தூவி வரவேற்பது போல கற்பனைக்குதிரை பூட்டிய கனவுத்தேர் என் தலையைசுற்றி வலம் வந்தது. அவள்தான் என் வாழ்க்கை என்று செத்துப்போன அப்பத்தா மேல சத்தியம்லாம் செஞ்சேன். அப்போதுதான் அவளும் ஜெய்ன்றவனும் லவ்வுறதாவும் அவன் கனடால இருக்குறதால இந்த மாசமே அவளும் கனடா போறாள்ன்றதும் தெரியவந்தது. ஒருநாள் முழுக்க கடைக்கு லீவு போட்டு ரூம் பூட்டிட்டு விடியவிடிய உக்காந்து அழுதேன். கனடாவுல இருக்குற அந்த ஜெய்க்கும் ஏதாவது ஒரு வெள்ளைக்காரிக்கும் காதல் வரக்கூடாதா? இல்லாட்டி இவளுக்கு விசா கிடைக்காம இருக்கணும் இப்படி ஆயிரம் பிரார்த்தனைகள் வைத்தும் கனடாக்கு போறதுக்கு ஆயத்தமாகி வந்து நின்றாள். மனம்திறந்து சொல்லவும் முடியவில்லை. பெரியப்பாவுக்கு தெரிந்திருந்தால் இந்நேரம் என் படம் பத்திரிகையில் இரண்டாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்று வந்திருக்கும். இப்படி நான் புலம்பி முடிப்பதற்குள் அவள் கனடா போய்விட்டாள். போறவள் சும்மா போகலாம்தானே சொல்லிட்டு போறதுன்ற பேர்ல வந்து சிரித்துட்டு போனாளே…. செத்துட்டேன். அப்ப அவ்வளதானா? என் தெய்வீக காதல் இப்படித்தான் முடியவேண்டுமா? யாரென்றே தெரியாத அந்த ஜெய்மீது கொலைவெறி உண்டானது. டேய் மவனே உன்னையே நம்பி வாற என் சிவானிக்கு ஏதாவது கொடுமை செஞ்சே….. செத்தடா.. ஐயோ இப்படி பைத்தியக்காரனாய் மாத்திட்டு போய்ட்டாளே!

போனவள் போனவள்தான் அவள் நினைவு மட்டுமே இனி நிஜம் ன்றிருந்த வேளையில் அவளோடு பேச இன்னொரு வாய்ப்பு கம்ப்யூட்டர்கதவை தட்டும் போது வேணாம்னா சொல்வேன். முதல்தடவை பார்க்கும்போது அவள் முறைத்த முறைப்பும் கடைசியாக போறதுக்கு முன்னால திரும்பி பார்த்து சிரித்த சிரிப்பும்தான் இப்போதைக்கு என் காதல்சின்னங்கள். இன்று அவளது முகப்புத்தக கணக்கும். அவளுக்கு உடனடியாக விண்ணப்பம் அனுப்பினேன். அவள் எப்போ வருவாள் எப்போ என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வாள் என முகப்பத்திலேயே தூங்கினேன். ஒரு தகவல் வந்தது. சிவானி ஜெய் உங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். என் காலை தரையில் தேடிப்பார்த்தேன். அது வானத்தில் பறந்துகொண்டிருந்தது. ‘ஹை, என்னை ஞாபகம் இருக்கா?’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்தேன். ம்ம்ம் என்று மட்டுமே பதில் வந்தது. அவளோடு நிஜமாகவே பேசுகிறோம் என்ற பிரமிப்பில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்ன செய்றீங்க சிவானி எனக்கு உங்க நினைவு பசுமையா அப்படியே இருக்கு என்றேன். சரி அந்த நினைவுகளை கொஞ்சம் சொல்லுங்கள் என்றாள். பதட்டம் அதிகரித்தது. கைகளும் நடுங்கியது. அவள் இருக்கும்போது என் மனது இறக்கைகட்டி பறந்த நினைவுகளை அழகாக எடுத்து சொன்னேன். கருமம் பிடிச்சவன் அவளை காதலிக்குறதையும் சொல்லி தொலச்சுட்டேன். எப்ப சொன்னேன்னு தெரியல. மனசுல இருந்ததெல்லாம் தட்டிகிட்டு இருக்கும்போது அதுவும் வந்திடுச்சு. கணனித்திரையில் நான் எழுதிய செய்தியை பார்த்தவுடன்தான் தெரிந்தது எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், நான் உங்கள காதலிச்சேன் இப்பயும் காதலிக்குறேன்னு எழுதியிருக்கிறேன். ஐயோ என்ன சொல்லப்போறாளோ என்று பயத்துடன் நகத்தை கடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் ‘நானும்தான்’ என்று பதில் வந்தது. இதயம் நின்னேபோச்சு. நெஞ்சுல தட்டிதட்டி இயங்கவைத்தேன். நான் மறுமொழி கூறுவதற்குள் ‘எனக்கு நேரமாச்சு ரவி, நான் நாளைக்கு வாறேன்’னு சொல்லிட்டு போயிட்டா. என்னையும் ஒருத்தி விரும்புறா அதுவும் நான் உயிருக்கு உயிரா விரும்பியவள் என நினைக்கும்போது அந்த உணர்வை அனுபவித்தால்தான் தெரியும். அதுவும் நிலைக்கவில்லை. மூளைக்கு வேலை கொடுக்காமல் உணர்வாலேயே அவளின் உறவை எதிர்பார்த்ததால் முட்டாளானேன். மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. உண்மை விளங்கியது.

அவளோடு நட்பாய் பழகிய காலத்தில் (நான் எங்கே நட்பாய் பழகினேன்? அவள் என்னோடு நட்பாய் பழகிய காலத்தில்) பொதுவாக சில விடயங்களை பேசிக்கொண்டு செல்வோம். அப்போது அவள் சொன்ன ஒரு விடயம். அவளுக்கும் அவள் காதலனுக்கும் ஒரு விசித்திர பழக்கம் இருக்கிறதாம். அதாவது அவன் இவளது பெயரை முதலாவதாகவும் அவனது பெயரை இரண்டாவதுமாக வைத்து முகப்புத்தக கணக்கு ஆரம்பித்து அதில் இவளின் படத்தை போட்டானாம். அதேபோல இவளும் அவனது பெயரை முதலாவதாக வைத்து அவனது படம் போட்ட கணக்கு ஆரம்பித்தாளாம். அப்படி பார்த்தால் நேற்று நான் பேசியது? அடச்சீ என்ன ஒரு முட்டாள்த்தனம்…. இப்போது நினைவுக்கு வருவது நேற்றே வந்திருக்கலாமே.. அட அதைவிடு! இங்கே இருக்கும்போது உன்னை நண்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து வேறுபட்டு ஒரு பார்வைகூட பார்க்காதவள் அங்கே சென்றதும் காதல் என்கிறாளே…. அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டாமா? ஒருவேளை இது அவளது காதலனாக இருந்து இன்னொருவன் அவளை காதலிப்பது பொறுக்காமல் அவளுக்கு எதாவது தீங்கு செய்தால்? ஐயோ நினைச்சுகூட பார்க்கமுடியலயே…. இனி மனதை போட்டு அலட்டிக்கொள்வதில் பிரயோசனம் இல்லையென்று ஒரு தீர்மானமான முடிவு எடுத்தேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக முகப்புத்தகம் சென்று அவளுக்கு செய்தி அனுப்பினேன். ‘என்ன அக்கா பயந்துட்டீங்களா? எனக்கு தெரியாதா நீங்க ஜெய் அண்ணாவ எவ்ளோ லவ் பண்றீங்கனு. நான் சும்மா உங்ககூட விளையாடினா நீங்களுமா எங்கூட இப்பிடி விளையாடுவீங்க? இங்க இருக்கும்போது யாரோடும் பேசாமல் தன் வேலை உண்டுனு அமைதியா இருக்குற சிவானி அக்காவ இப்பிடி பேசுறதுன்னு எப்பிடி ஆச்சரியப்படேன் தெரியுமா? சரி அக்கா… எனக்கு நிறைய படிக்க இருக்குறதால என் ஃபேஸ்புக் அக்கவுண்ட க்ளோஸ் பண்ணப்போறேன். திரும்பி வந்தா உங்களோடு மறுபடியும் பேசுறேன். நீங்களும் ஜெய் அண்ணாவும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா வாழ என் நல்லூர் முருகனை வேண்டிகொள்றேன். என்று சொல்லிவிட்டு என் முகப்புத்தக கணக்கை அழித்துவிட்டேன். அது அவளா அல்லது அவனா அல்லது வேறு யாராவது அவளது பெயரில் விளையாடினார்களா ஒன்றும் தெரியாது… ஆனால் இந்த முடிவுதான் சரியென்று மனதுக்கு பட்டது. ஏதோ மிகப்பெரிய பாரம் இறங்கிவிட்ட உணர்வு. கலைந்துபோன கனவை மீண்டும் முயற்ச்சிப்பது முட்டாளத்தனம். அத்தோடு அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. பழைய ரணம் என்றாலும் ஆறாவிட்டால் மருந்து போடத்தானே வேண்டும். மற்றவர்கள் என்றால் மதுவிலே மருந்து தேடியிருப்பார்கள் எனக்கு இசைதான் மது மருந்து எல்லாமே….அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வானொலியைப் போட்டேன்.

‘நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகாலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகாலாமா?’

Thursday, May 31, 2012

மே 31

இன்று உலக புகையிலை எதிர்ப்புதினம். உலகம் முழுதும் பல கோடி பேரை காவு வாங்கியும் மனிதனின் அலட்சியத்தால் இன்றும் வெற்றிகரமாக உயிர்வேட்டை நடாத்திவரும் புகைபாவனையை முடிந்தளவு குறைத்து சூழலை சுத்தப்படுத்தவும். உங்கள் உயிர்மேல் உங்களுக்கு அக்கறை இல்லாவிடினும் உங்கள் குடும்ப நலனையும் உங்களை சுற்றி வாழும் மக்கள் நலனையும் மனதில் கொள்ளுங்கள். புகை எதிர்ப்பிற்கான பிரத்யேக வீடியோவைக் காண இங்கே அழுத்துங்கள்.

Thursday, May 24, 2012

மூன்றாம் தலைமுறை!

2012ம் ஆண்டு தமிழ்சினிமாவிற்கு மூன்றாம் தலைமுறை நடிகர்கள் இருவர் அறிமுகமாகின்றனர். அதுவும் அறுபது ஆண்டுகளாக தமிழ்சினிமாவின் முண்ணனி நட்சத்திரக் குடும்பங்களிலிருந்து. வாரிசு நடிகர்கள் என்பது தமிழ்சினிமாவிற்கு புதிதல்ல. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசு விஜய், நடிகர் சிவகுமாரின் வாரிசுகள் சூர்யாவும் கார்த்தியும், டீ.ராஜேந்தருக்கு சிம்பு, கஸ்தூரிராஜாக்கு தனுஷ்,எடிட்டர் மோகனுக்கு ஜெயம்ரவியென பட்டியல் நீளும். கமல் மகள் ஸ்ருதியும் தற்போது களத்தில் குதித்துள்ளார். ஆனாலும் மூன்றாம் தலைமுறையென்பது தமிழ்சினிமாவிற்கு புதிய விடயம். அதிலும் இந்த இருவருக்கும் பல சிறப்புகள் உண்டு.

ஒருவர் மறைந்த நடிகர்திலகம் செவாலியே சிவாஜிகணேஸன் அவர்களின் பேரனும் இளையதிலகம் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு. இன்னொருவர் மறைந்த நவரசத் திலகம் முத்துராமனின் பேரனும் நவரசநாயகன் கார்த்திக்கின் மகனுமான கௌதம்.

யார் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் தமிழ்சினிமாவின் அடையாளம் எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்தான். இதில் நடிப்புக்கு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் சிவாஜி. 1927ம் ஆண்டு பிறந்த இவர் எட்டு வயதில் ராமாயண நாடகத்தில் சீதை வேடமேற்றதிலிருந்து ஆரம்பித்த நடிப்புப்பயணம் அவர் இறக்கும்வரை ஓயவில்லை.கிட்டத்தட்ட 300 திரைப்படங்கள். 50 வருட திரைவாழ்க்கை. ஆங்கிலேயர்கள் இவரை புகழும்போது untired acting career என்பார்கள். தமிழ்சினிமாவில் உழைப்புக்கு சிறந்த உதாரணமே சிவாஜிதான். இது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. 1952ம் ஆண்டு பராசக்தியில் அறிமுகமானார். பாடல்கள் ஆட்சி செய்த தமிழ்சினிமாவை மாற்றி வசனங்களால் விளையாடினார். சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகன் என்ற பெருமைக்கு உரியவர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஆஃப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பட்டம் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல அமெரிக்காவில் 1962ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கலாசார விழாவில் இந்திய கலாசாரத்தின் பிரதிநிதியாக நடிகர்திலகம் அழைக்கப்பட்டார். அப்படி வெளிநாட்டினரால் அழைத்து கௌரவிக்கப் பட்ட முதல் இந்திய நடிகர் சிவாஜிதான். உத்தம புத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், தில்லானா மோகானாம்பாள், திருவிளையாடல், கௌரவம், வியட்னாம் வீடு, எங்க மாமா, திரிசூலம், முதல் மரியாதை போன்றவை சிவாஜியின் கிரீடத்தில் உள்ள சில முத்துக்கள். 1990ம் ஆண்டு கிட்டதட்ட நடிகர்திலகத்தின் இறுதி தசாப்தத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக சிவாஜி முதல் இடத்தில் காணப்பட்டார். இரண்டாவதாக எம்.ஜி.ஆரும் மூன்றாவதாக ரஜினியும் காணப்பட்டனர். இன்றும்கூட இன்றைய இளம் நடிகர்கள் பலரைக் காட்டிலும் நடிகர்திலகத்திற்கு அதிக ரசிகர்கள் இருப்பதைக் காணலாம். 1996ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் கலைத்துறைக்கு வழங்கப்படும் செவாலியே பட்டத்தை பெற்றார். இறுதிவரையும் தமிழ்சினிமாவிற்கு சேவையாற்றிய நடிகர்திலகம் 2001மாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி பூவுலகை நீத்தார். தமிழ்சினிமா உள்ளவரை சிவாஜி நாமம் இருக்கும்.

அதேபோல தமிழ்சினிமாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் 1960களில் தனக்கென தனி முத்திரையுடன் வலம் வந்தவர் நவரசத்திலகம் முத்துராமன். திரைப்பிண்ணனி ஏதுமில்லாமல் கலையார்வத்தால் தனது சொந்த முயற்சியில் ஜெயித்தவர். அந்தக்காலத்தில் மிகவும் அழகான கவர்ச்சியான நடிகராக கருதப்பட்ட முத்துராமன் அனைவராலும் விரும்பப்பட்டார். 60களிலும் 70களிலும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ் ஈட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன் என பலருடனும் இணைந்து நடித்த முத்துராமன் சூரியகாந்தி, காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா, அனுபவி ராஜா அனுபவி, சர்வர் சுந்தரம் போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். பாலச்சந்தரின் ஆரம்பகால படங்கள் அனைத்திலும் சிறந்த கதாபாத்திரங்கள் பலவற்றில் தோன்றினார். காலம் கைகொடுக்காததால் பிரகாசமாகவிட்டாலும் தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத நபர்களில் ஒருவராகிவிட்டார் முத்துராமன். தனது ஐம்பத்திரெண்டு வயதிலேயே அவர் இறந்ததால் தமிழ்சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்த சோகம் கொண்டது.



சிவாஜி கணேசனும் முத்துராமனும் இணைந்து பார்மகளேபார், அன்னை இல்லம், பழனி, கர்ணன், திருவிளையாடல், திருவருட்செல்வர், வாணி ராணி, மூன்று தெய்வங்கள், காவல் தெய்வம், எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், இரு துருவங்கள், சிவந்த மண், வைர நெஞ்சம் மற்றும் மேலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறை பிரபுவும் கார்த்திக்கும். நடிகர்திலகத்தின் இளையமகன் பிரபு. நடிகர்திலகத்தின் நேரடியான கலைவாரிசு. 1956ம் ஆண்டு பிறந்த பிரபு சங்கிலி படம் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இளையதிலகம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபு இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஆங்கிலம் என நூறு படங்களுக்குமேல் நடித்துள்ளார். இவரது ப்ளாக்பஸ்டர் படமாக சின்னத்தம்பி திகழ்கிறது. தமிழ்சினிமாவின் வாரிசுகளுக்கு உதாரணம் கேட்டால் பிரபுவின் பெயர்தான் முதலில் கேட்கும். கிட்டதட்ட இருபது வருடங்களுக்குமேல் கதாநாயகனாக நடித்த பிரபு 2006மாண்டு வந்த உனக்கும் எனக்கும் படம்மூலம் குணசித்திர நடிகராக உருவாகினார். இன்றும் தினந்தோறும் படப்பிடிப்பகளுக்கு செல்லும் பிஸியான நடிகர். சந்திரமுகி, அசல் போன்ற படங்களை தயாரித்துள்ளார். குழிவிழும் கன்னம் இவரது ஸ்பெஸாலிடி. அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்தவர். இவரது ரசிகர்களுக்கு இன்றும் குறைவில்லை. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் வெற்றி நாயகனாக வலம்வந்தவர்.

பிரபுவின் சககாலத்தில் இன்னொரு வெற்றிநாயகனாக வலம்வந்தவர் நவரசநாயகன் கார்த்திக். பலவருடங்கள் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதிக ரசிகர்களைக்கொண்ட நாயகனாகத் திகழ்ந்தார். அதுவும் பெண் ரசிகர்கள் ஏராளம். தனக்கென தனித்துவமான ஸ்டைல் உடையவர். இவரது காதல்காட்சிகள் இனிமையாக இருக்கும். அனைவரையும் போல நானும் மௌனராகத்தையே உதாரணமாக காட்டுகிறேன். அந்த சார்ம் இதுவரை முறியடிக்கபடவில்லை. சிறந்த நடிப்பாற்றலை கொண்ட நடிகராக இருந்தாலும் பல ரசிகர்களைக்கவர்ந்தவர் என்றாலும் இன்றும் தனக்கென ஒரு கூட்டத்தை பலமாக கொண்டவராயினும் காலக்கொடுமையோ தீயசகவாசமோ வேண்டாத பழக்கவழக்கங்களோ ரஜினி கமலுக்கு அடுத்ததாக இன்று வளர்ந்திருக்கவேண்டியவர் யாராலும் கவனிக்கபடாதவராகவே இருக்கிறார். அரசியலுக்குள் சென்ற அனைவரும் ஜெயிப்பதில்லை என்பதை அவருக்கு யாராவது உணர்த்தவேண்டும். நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்வதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர்மேல் இருந்தாலும் பெரும்பான்மையோரால் ரசிக்கப்பட்ட சிறந்த நடிகன் கார்த்திக் என்பதில் ஐயமில்லை. அத்துடன் சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறையும் மாநிலவிருதை ஒருமுறையும் இவர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபுவும் கார்த்திக்கும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். உதாரணமாக அதிசயப்பிறவிகள், அக்னிநட்சத்திரம், காவலன் அவன் கோவலன், சுயம்வரம், தை பொறந்தாச்சு, குஷ்தி, மாஞ்சாவேலு, ராவணன் போன்ற படங்களை குறிப்பிடலாம். ஒன்றாக சேர்ந்து நடித்த ஒரு நடிகர்களின் வாரிசுகள் இணைந்து நடித்த பெருமையை பிரபுவும் கார்த்திக்கும் அன்றே அடைந்தனர்.

இன்று மூன்றாம் தலைமுறை நடிகர்கள் உருவாகிறார்கள் அதுவும் ஒரே ஆண்டில். இளையதிலகம் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கும்கி படம் மூலம் அறிமுகமாகிறார். மைனாவின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த பிரபுசாலமன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படம் வெளியாகும் முன்னே இளையதளபதி விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.


அதேபோல நவரசநாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கடல் படம்மூலம் திரையுலகத்திற்குள் பிரவேசிக்கவிருக்கிறார். அதுவும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில். சமந்தா, அர்ஜூன், அரவிந்தசாமி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். முதல்படமே இவ்வளவு பெரிய கூட்டணி என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இரண்டு பெரிய திரைக்குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் என்பதால் இவர்கள்மேல் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா? ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் மூன்றாவது தலைமுறையாக இணைந்து நடிக்கும் பெருமை இவர்களை வந்தடையும்.

Tuesday, May 22, 2012

விளையாட்டு வியாபாரம்…!

இத்தனை கமராக்கள், ஏசி போட்ட பெரிய அரங்கில் சந்திப்பு, வெளிநாட்டு பாணியில் மதுவிருந்து…… இதெல்லாம் சுப்புவிற்கு புதிதல்ல. ஆனால் பார்த்து பல காலமாகிவிட்டது. கிரிக்கெட்தான் தன் வாழ்க்கை என அவர் முடிவெடுத்த அந்த பத்தாமாண்டு ரிசல்ட்ஸ் வந்த நாளிலிருந்து மாவட்டம், மாநிலம் என கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி தேசிய அணிக்கு விளையாடியதும் சர்வதேச கிரிக்கெட்டில் யார்யாரையெலாம் மானசீக குருவாக நினைத்தாரோ அவர்களையே எதிர்த்தாடியதும் இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிகளை குவித்தபின் மனமுவந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவதும் சுப்புவின் மனத்திரையில் படமாய் ஓடியது. இன்று….. மீண்டும் தான் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்திருப்பது அவராக விரும்பி நடந்ததா? இல்லை

உலக பணக்காரர்களில் ஒருவரான ரோய் வில்லியம்ஸ் தான் தேடிய செல்வம் போதாமல் இன்னும் நிறைய சம்பாதிக்க இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன்(Indian championship federation) என்ற கிரிக்கெட் லீக் போட்டிகளை ஆரம்பித்து கொஞ்சம் மேல்நிலையடைந்திருக்கும் மாநிலங்களுக்கிடையில் போட்டிகளை நடத்தி தனது கல்லாவை நிரப்புகிறார். பெரிய வியாபாரியல்லவா! எந்த சந்தையில் எந்த வியாபாரம் களைகட்டும் என நன்கு தெரிந்துவைத்திருக்கிறார். அவருக்கென்ன?.....இந்தியாவில் மின்பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதால் பாதிக்கப்படும் சிறுவர்களின் கல்வி என்பதையெல்லாம் பற்றி எங்கோ லண்டனில் மில்லியன் பவுண்டு ஏசி மாளிகைக்குள் அல்ட்ரா ப்ரீமியம் சரக்கை குடித்துக்கொண்டிருப்பவருக்கு என்ன கவலை? அட அவரை விடுங்க…. தமிழ்நாட்டிலேயே நாள்முழுக்க கஷ்டப்பட்டு உழைக்குற காசை வீட்டுக்கு கொடுக்காம பொண்டாட்டி பிள்ளைங்க சாப்பிடாம இருக்க குடி, கஞ்சா, சூதாட்டம்னு செலவழிக்குற நம்ம நாட்டு முதுகெலும்புகளை என்ன சொல்வது? அடக்கடவுளே! எதையோ சொல்லவந்து எதையோ சொல்லிக்கிட்டிருக்கேன். இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன் பார்த்தோம்ல… அதுல தமிழ்நாட்டு டீம் பேரு சென்னை சிங்கம்ஸ். இந்த அணியின் உரிமையாளர் கௌதம் சர்மா. சோப்புல இருந்து சோடா வரைக்கும் இவரு பண்ணாத வியாபாரமே இல்லை. இருந்தும் தன்னை பற்றி இந்த உலகத்துக்கு தெரியாதே என்ற அவரது கவலையை போக்கத்தான் இந்த அணியை இவரு வாங்கியிருக்காரு. பின்ன சும்மாவா? ஆயிரம்கோடி சொத்து இருக்குறவங்களக்கூட மக்களுக்கு தெரியாது. ஆனா நாள் சம்பளத்துக்கு தொலைக்காட்சியில வந்து நிகழ்ச்சி பண்ற தொகுப்பாளர்கள் ரொம்ப பிரபலம். மீடியாவோட பவர் அப்பிடி. கௌதம் சர்மா சென்னை அணியை வாங்கின அடுத்து நிமிஷமே தமிழ்நாடு முழுக்க ஏன் இந்திய அளவுல பிரபலமாயிட்டாரு. பேப்பர்ல அவரைபத்தி நிறைய செய்திகள் வருது. facebookல அவருக்காக பக்கங்கள் எல்லாம் உருவாகியிருக்கு. சும்மாவே கார்ல பறக்குற அவரை இந்த புகழ் காத்துல பறக்க வச்சுது. தொடர்ந்து இந்த அணியை மேலும் வலுப்படுத்தி பிரபலமடையவைக்க வழிகளை தேடினார். இன்றைய இளைஞர்கள் அனைவரின் இதயநாடியாக இருக்கும் கிரிக்கெட் வீரர் ஜோஷியை பலகோடிகள் கொட்டி அணிக்குள் கொண்டுவந்தார். சிம்கார்ட்ல இருந்து சேலைகடை வரைக்கும் அனைத்து ஸ்பான்ஸர்களையும் வளைத்துப்போட்டார். தமிழ்நாட்டுல உச்சத்துல இருக்கும் நடிகர் மதனை ப்ராண்ட் அம்பாஸ்டராக்கினார். தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய திறமையான சுப்புவை பயிற்சியாளராக்கினார். இவற்றையெல்லாம் விட மைதானத்தில் வீரர்கள் களைப்படையாமல் இருக்க ஊக்கமளிக்கும் நடன அழகிகளை பார்த்துபார்த்து தெரிவுசெய்தார். காரணம் அவர்களை பார்பதற்காகவே ஒரு கூட்டம் இருப்பது அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பத்திரிகை தொலைக்காட்சிகளில் அணியின் பெயரை விளம்பரப்படுத்தி தள்ளினார். ஊருக்கு ஊரு தெருவுக்கு தெரு பேனர் போஸ்டர் என அமர்களப்படுத்தினார். வாராவாரம் பத்திரிகைகூட்டத்திற்கும் ஏற்பாடானது.

இதுவும் அப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்புதான். அத்துடன் சில புரோமோஷன்களும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்தவாரம் போட்டிகள் தொடங்கப்போவதால் இது முக்கியமான ஒரு சந்திப்புதான். கௌதம்சர்மா நேரத்தோடு வந்து அனைத்து வேலைகளையும் சரிபார்த்தார். அனைத்துமே சரியாக நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரமும் வந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுவிடாமல் கலந்தகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களும் வந்தாயிற்று. அணித்தலைவர் ஜோஷி அரங்கில் நுழையும்போது கைதட்டல் பட்டாசாய் வெடித்தது. அதைவிட நடிகர் மதன் வரும்போது கைதட்டல் ஒலி அடங்க சிலநேரம் ஆனது. அந்த ஏற்பாடுகள் எதிலும் மனம் ஒட்டாதவராய் விலகியே இருந்தார் சுப்பு. ஓய்வுபெற்றபின் கிரிக்கெட்டிலிருந்து அது முழு ஓய்வாக இருக்கவேண்டுமென அவர் நினைத்தார். தேசிய அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டுமென்றுகூட அழைப்பு வந்தது. அப்போதுகூட உறுதியாய் இருந்த அவரது முடிவை இந்த ஐ.எஸ்.எஃப் மாற்றிவிட்டது. இதன் தீவிர ரசிகனான தன் மகனை சமாதானப்படுத்த முடியாமல் தன்னிடம் வந்த இந்த பயிற்சியாளர் பதவியை ஏற்றார் சுப்பு. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தேசிய அணியில் பத்து வருடம் உழைக்கும் பணத்தை இதில் ஒரே வருடத்திலேயே உழைத்துவிடலாம். இப்பிடி ஒரு வாய்ப்பு இனி வருமா என மனைவியின் நச்சரிப்பும்தான் அவரை இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறது. அவரது காலத்தில் அவர் செய்த சாதனைகளை யாரும் இன்னும் மறக்கவில்லைஎன்ற ஒரே விடயம்தான் இங்கே ஆறுதல். அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அவர் மனதில்தான் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறை இருந்துகொண்டேயிருந்தது. அந்த குறை அவர் மனதை சோரவடையச்செய்திருந்தது. அந்த நேரத்தில் மேடையில் நிகழ்ச்சி ஆரம்பம் என்பதால் அனைவரும் மேடையேறி அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அனைவருக்கும் நடுவிலே கௌதம் அமர்ந்திருந்தது ஒரு ராஜா பாணியை ஒத்திருந்தது. ராஜவாழ்க்கை வாழ்பவன்தானே!....சுப்பிற்கு அருகில் நடிகர் மதன் வந்து அமர்ந்தார். சுப்புவை பார்த்து சிரித்து அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.


‘ஹாய் ஸார்’

‘ஹாய்’

‘நான் உங்க பெரிய ரசிகன் ஸார். எனக்கு அவ்வளவா கிரிக்கெட் விளையாடத்தெரியாது. ஆனா சின்ன வயசில உங்க மேட்ச்சு தவறினதே இல்ல. இப்ப உங்க பக்கத்துல உக்காந்து இருக்கறதே ரொம்ப சந்தோசமா இருக்கு.’

‘அப்படியா? இவ்வளவு பெரிய நடிகன் என் ரசிகரா இருக்குறது எனக்கும் ரொம்ப சந்தோசம். ஆமா…. கிரிக்கெட் தெரியாதுன்றீங்க. அப்புறம் எப்பிடி இங்க?....’

‘என்ன ஸார் பண்றது? காசு கொடுக்குறவங்க சொல்றத திருப்பி சொல்றதுதான் நடிகனோட வேல. ஆயிரம்கோடி கொடுத்து அணியை வாங்குறவர் எந்தெந்த வழியில அத திருப்பமுடியும்னு யோசிச்சிருப்பார்தானே.. எனக்கிருக்குற மக்கள் சப்போட் அவருக்கு தேவப்படுது. சோ… கமராவிற்கு வெளியேயும் இந்த மாதிரி நடிக்கவேண்டி இருக்கு.’

‘என்ன தம்பி சொல்றிங்க?... நடிகர் ஒருவர் சொல்லித்தான் ஜனங்க கிரிக்கெட் பார்க்கணுமா?ஆ… அப்ப அது கிரிக்கெட்டா இருக்காதே…’

‘நீங்க சொல்றது சரிதான் ஸார். எல்லாமே பணம்னு ஆனதுக்குப்பிறகு விளையாட்டுக்கு மரியாதை இருக்கும்னு நான் நினைக்கல. எல்லாமே பொழுதுபோக்குன்ற ஒரே கட்டதுக்குள்ள வந்திடுச்சி. இப்ப பொழுதுபோக்குன்றதுக்கு அர்த்தமே பாமரர்களிடம் பணம் சூரையாடப்பட்டு பிரபலங்களிடம் அது பரிமாறப்படுவதுதான். ஒரு படம் ரிலீஸான வேலை, குடும்பம், சாப்பாடு எல்லாம் விட்டுட்டு ஒருத்தன் உசிர வெறுத்து டிக்கெட் வாங்குறானே…அதுல எங்களுக்கு ஆயிரம் பலன் இருக்கு.ஆனா அவனுக்கு?.... அவங்கள பார்த்தா எனக்கு பாவமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ணமுடியும். இப்ப எனக்கிருக்குற போட்டிகளாள அவங்கள அப்பிடி பண்ணவேணாம்னு சொல்லமுடியல. நான் நடிக்க வரும்போது இத கடவுளா நினைச்சுதான் வந்தேன். ஆனா இங்க வளைஞ்சு கொடுக்காட்டி நம்ம அட்ரஸ் தொலஞ்சிபோயிடும். ஏன் கிரிக்கெட்கூட அப்பிடிதான். இத ஒரு புனிதமான தொழிலா நினைச்சு வாறவங்க எல்லாம் கடைசிவரைக்கும் அப்படியா இருக்காங்க?’

மேடையில் ‘அடுத்ததாக உங்கள் அபிமான நடிகர் மதன் இப்பொழுது’

மதன் சுப்புவிடம் விடைபெற்றுக்கொண்டு பேசச்சென்றான். ‘அனைவருக்கும் வணக்கம். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில உங்கள சந்திக்கிறத நான் சந்தோசமா நினைக்கிறேன். ஏன்னா நானும் ஒரு கிரிக்கெட் பிளேயர்தான். சினிமாவுல வந்துட்டதனால கிரிக்கெட் விளையாட முடியாமப் போச்சு. இல்லாட்டி நிச்சயமா நானும் கிரிக்கெட்டராகியிருப்பேன்.’
மதன் பேசப்பேச ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பு. சூழ்நிலை மனிதனை மாற்றுகிறதா? இல்லை மனிதனே சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகிறானா? மதன் சொன்னது சரிதான் இங்கே வளைஞ்சு கொடுக்காட்டி அட்ரஸ் தொலைஞ்சிடும். வயித்துக்காக மனுசன் இங்க கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறந்தானே சோறு என்ற பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்தது. உடனே அது தவறெனப் பட்டது. இங்கே யாரும் வயித்துக்காக பிழைக்கிறவங்க இல்ல. லாபத்துக்காக பிழைக்கிறவங்க. அந்த லாபத்த வச்சு இன்னும் லாபம் சம்பாதிக்கத்தான் பார்ப்பார்கள். வாழ்க்கையே இவர்களுக்கு வியாபாரம்தான். கிரிக்கெட்டா இங்க நடக்குது? ச்சீ கிரிக்கெட்டுக்காக நடக்குற விழாவுல கிரிக்கெட்னாலே என்னனு தெரியாத இந்த நடனமங்கைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நாம இங்க வந்தே இருக்ககூடாது. எல்லாம் வியாபாரம். இவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம்? இப்ப எங்கதான் வியாபாரம் இல்ல…. உயிர்போற நிலையில இருக்குற நோயாளிகிட்டகூட காசு வாங்காம மருத்துவம் பார்க்குற டாக்டர் யாராவது இருக்காங்களா? நல்லா படிக்குற ஆனா வசதியில்லாத ஒரு மாணவனுக்கு இலவசமா பாடம் சொல்லிக்கொடுக்குற வாத்தியார் யாராவது இருக்காங்களா? ஏன் கோயில்லகூட பாருங்க பத்துரூபா தட்சிணை கொடுக்குறங்களுக்கு ஏனோதானோன்னும் நூறுரூபா தட்சிணை கொடுக்குறவங்களுக்குவ ஆரஅமர பொறுமையாத்தானே அர்ச்சனை பண்றாங்க…. வியாபாரம் இல்லாத இடமே இல்லயே என அவர் எண்ணிக்கொண்டிருக்கையில் மதன் பேசிமுடித்து வந்து அமர்ந்தான்.

‘அடுத்ததாக அணித்தலைவர் ஜோஷி’ என்றதும் அரங்கமதிரும் விசிலோசைக்கு நடுவே பேசவந்தான் ஜோஷி. அவன் வடநாட்டுக்காரன் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசினான். அவன் பேசுவதை சுப்பு பெரிதாக கணக்கெடுகவில்லையென்றாலும் சில இடங்கள் அவரை உற்றுநோக்கவைத்தது. முக்கியமாக எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே உங்க முன்னால நல்லா தமிழ் பேசுவேன். தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இத விட்டு போகவே மனசில்லை என்றான். சுப்புவுக்கு சிரிப்புதான் வந்தது. ஒப்பந்தம் முடிஞ்சிட்டா வேறொரு மாநிலத்துக்கு வேறொரு அணிக்கு போயிடுவான். அங்க போயும் இப்பிடிதானே பேசப்போறான். தமிழ்நாட்டுக்காரனை சேர்த்தாதானே நம்ம ஊருக்காக விளையாடுற உணர்வு இருக்கும். இவங்கெல்லாம் காசுக்காகத்தானே விளையாடுறாங்க. ஊரு உணர்வெல்லாம் இவங்களுக்கு ரெண்டாம்பட்சம்தானே! ஏன் இப்ப தமிழ்நாட்டு அணியில இருக்கவங்கள்ள பாதிக்குமேல வேற ஊரு வேற நாடு… தமிழனுக்கு வாய்ப்பு குடுத்தா என்ன கொறஞ்சா போயிடும். இந்தியா தமிழர்கள் விசயத்துல பாரபட்சமா இருக்குதோனு சுப்பு சிலநேரம் நினைப்பார். ஆனா பாருங்க. மக்கள்தொகையில மூணுக்கு ஒரு வீதம் தமிழர்கள் இருக்குற இலங்கையில கிரிக்கெட் அணியில இப்ப ஒரு தமிழன்கூட இல்ல. அதுக்கு இந்தியா எவ்வளவோ மேல்.

ஏன் நான் கண்டதையும் நினைச்சிட்டு இருக்கேன்…ம்ம்ம் மனம் முழு ஈடுபாடோட இங்க கவனமா இருந்தாதானே.. இதுக்குமேல போலி பகட்டுக்கு நடுவுல இருக்குறது கஷ்டம் உடம்பு சரியில்லைனு சொல்லிட்டு கெளம்புவோம்னு சந்திப்புல இருந்து பாதியில புறப்பட்டார் சுப்பு. மனசு சரியில்லாததால் காரை போக சொல்லிவிட்டு நடந்தேசென்றார். ஆமா ஏன் மனசு சரியில்லை? காலைல இருந்து நடந்தவைகளை நினைத்துப்பார்த்தார். கிரிக்கெட்டை இப்படி நாசமாக்குகிறார்களே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அதிலிருந்து விடுபட கவனத்தை மாற்ற ஏதாவது இருக்கிறதா என எண்ணிக்கொண்டே சாலையில் சென்றார். ரோடு. ரோடா இது. ரோடு போட சொன்னா சின்ன பிள்ளைங்க களிமண்ல செய்ற பொம்மைமாதிரி பண்ணிவக்கிறாங்க. ஒரு மழை பெஞ்சாலே பாதி ரோடு தண்ணியோட போயிடுது. அந்த அணியை ஆயிரங்கோடிக்கு வாங்கினாராமே… அதுல நூத்துல ஒரு பங்கை இந்த மாதிரி ரோடு போட செலவு செஞ்சிருக்கலாமே… அதோ அங்க…. தண்ணிவண்டியில தண்ணிக்காக பொம்பளைங்க குடத்தே வச்சிகிட்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. என்ன கம்ப்யூட்டர் வந்தென்ன தொழில்நுட்பம் இந்தளவுக்கு முன்னேறியென்ன? இந்த சண்டேக்கு இன்னும் முடிவு வரல. யூத்ஸ்டார் மதன் நடிக்கும் வாலிபன். டிக்கேட் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம்ரொருக்கு. உப்பவே வந்த கால் வலிக்க நிக்குறாங்க. அஞ்சு நிமிஷம் படிக்க சொன்னா கசந்துடும். பத்தடி உயரமான கட்அவுட்டுக்கு ஒருத்தன் பால் ஊத்துறான். தவறுதலா கீழ விழுந்தா அவனுக்கே பால் ஊத்தணும்னு அவனுக்கு ஏன் புரியல? அவன் குடும்பத்துக்கு என்ன வழி? இந்த மாதிரி ரசிகர்களாளத்தான் தங்கள் பொழப்பே ஓடுதுனு மதன் சொன்னது நினைவுக்கு வந்தது.
திடீரென்று சுப்புவுக்கு உலகமே வெறுத்துப் போயிற்று. இந்த நிலையை மாத்த என்ன அவதாரபுருஷனா வரமுடியும்? அங்கே என்ன கும்பல்? ஓஓ… பிச்சைக்காரனா?.... ம்ம்ம் உலகத்தையே மாத்தக்கூடியளவுக்கு காசிருக்குற அந்த கௌதமே சும்மா இருக்கான். இந்த பிச்சைக்காரனால என்ன பண்ணிட முடியும்….

‘காலையில கிழக்குல சிவப்புவெளிச்சம் பாரு…
கரண்டில்லாம வானத்துக்கு லைட்டு போட்டது யாரு?
ஆளைப்பாக்காம இடிச்சிட்டு சிட்டாபோகுது காரு…
காலுபோன ஏழைக்கு பிச்சையெடுத்து சோறு!
ஆம்பளயும் பொம்பளயும் ஒண்ணாசேர்ந்து குடிக்குது…
உழைச்சகாச செலவுபண்ண வழியதேடி துடிக்குது…
தண்ணிக்காக ஒருகூட்டம் தலைதலையா அடிக்குது,
விஐபிங்க வீட்டுக்குத்தான் சுமிங் புல்லு கேட்குது!
ஒருவாய் சோத்துக்குத்தான் ஓயாமப் பாடுறேங்க.
பத்துபைசா பிச்சைபோடும் சாமியத்தான் தேடுறேங்க
பசிக்காத கடவுளுக்கு பால ஊத்தும் மனுசங்களே
பட்டினி வயித்துக்கு கஞ்சி ஊத்திட்டு போங்களே!’

ஒரு மத்தளத்த கையில வச்சிகிட்டு சின்னபையன் ஒருத்தன் பாட்டுபாடி பிச்சை கேட்டுகிட்டு இருந்தான். நிச்சயமா இந்த பாட்டில் ஏதோ இருக்கவேண்டும். நம்ம சுப்பு அசையாம அந்த பையனையே பாத்திட்டிருந்தார். அந்த பாட்டொண்ணும் அவ்வளவு புரட்சிகரமா இல்ல. அப்பிடியே பாட்டு பாடியே புரட்சி பண்ண அவன் ஒண்ணும் பாரதியும் இல்ல. ஆனா நம்ம சுப்பு கொஞ்சம் அமைதியாகிட்டார். உலகத்த ஒரேயடியா மாத்திட முடியாது. ஏதோ நம்மளாள முடிஞ்சத செஞ்சோம்னு ஒரு திருப்தி வரணும். அதுக்கு ஏதாவது செய்யணும். எப்பப்ப முடியுதோ அப்பப்ப இல்லாதவங்களுக்கு ஒரு வாய் சோறாவது போடணும். அதான் நம்மளாள முடிஞ்சது. இந்த பையனாலதானே இந்த எண்ணம் வந்திச்சு. இவன்கிட்ட இருந்தே தொடங்குவோம்னு அவனருகில் சென்றார். பார்த்துகிட்டு இருந்த கூட்டம் ஏதோ தங்களாள முடிஞ்சத போட்டுட்டு கலைஞ்சு போனது. சுப்பு அவன் அருகில் போய் ஒரு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டு..

‘நல்லா பாடின தம்பி..உன் பேரு என்ன?’

ஐநூறு ரூபாயை பார்த்த சந்தோசத்தில் கும்பிட்டுக்கொண்டே ’ஸார் பாரதி ஸார்’.

Tuesday, May 15, 2012

காதலை சொன்னபின்...!

காதலின் நினைவுகள் அழிந்துவிடாது
கனவுகள் கண்களை மூடவிடாது!
காற்றும் காதலும் வேலியைபோட்டு
காவல் காப்பதால் மறைந்துவிடாது!
உதட்டுக்கு சாயம்பூசி சிவப்பாக்கும் பெண்ணே!
உள்ளம் மட்டும் கருப்பாக ஏன் விட்டுவிட்டாய்?
உன்னிடம் காதலை உளறாமல் சொல்லியும்
உண்மையோடு உன் உணர்வையும் ஏன் மறைத்தாய்?
காசு கேட்டால் பிச்சை போடுவாய்!
காதலை கேட்டால் பிய்த்துக்கொண்டு ஓடுவாய்!
கண்டவரைக் கவரும் கண்களை உனக்கு தந்தான்
கருணையை தர அந்த கடவுளும் மறந்துவிட்டான்!

பெண்ணே!
உன்னிடம் என் காதலைப்பற்றி
உரைத்தது கொஞ்சம் மறைத்தது அதிகம்!
சூரியன் எங்கேயோ உதிக்க அந்த கதிர்கள் இங்கே விடிவதுபோலே
தொலைவிலே உன்னைக் கண்டதும் என் மனம் பிரகாசிப்பதும் ஏனோ?
பாரதியோ கம்பனோ துணைக்கு வரவில்லை,
தனியாக உன்னிடம் வந்து மாட்டிக் கொண்டேன்!
பேச்சுப்போட்டியில் வாங்கிய அத்தனை விருதுகளும்
பலனற்று போயின உன் பார்வையின் முன்னே!
கடவுளை வேண்டிக்கொண்டு காதலை சொன்னபோது உன்
கண்ணிமை துடித்த துடிப்பினிலே என் உடலே சற்று அதிர்ந்ததடீ!
காதலையும் சொல்லிவிட்டேன் கண்களையும் பார்த்துவிட்டேன்
இரண்டுமே வெற்றிதான் இப்போதைய சூழ்நிலைக்கு!
ஒன்றுமே சொல்லாமல் திரும்பிசென்றாலும்
ஒரப்பார்வை ஒன்று பார்த்தாயே! அதுவே போதும்!
காத்திருப்பேன் என்றும்…
என் காதலிக்காகவும் அவள் காதலுக்காகவும்…!