Tuesday, July 17, 2012

பாதப்பலகை…

வழக்கம்போல பாடசாலைவிட்டு வீட்டுக்கு நடந்துவந்துகொண்டிருந்தாள் திவ்யா. உயர்தரப் பரீட்சை நெருங்கும் காலமென்பதாலும் இத்தனைவருடகால பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி நெருங்கிவிட்டது என்பதாலும் பாடசாலைக்கு வெளியே வந்துகூட கரும்பலகையும் பள்ளிசுவர்களும் கண்களிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. நல்ல ரிசல்ட்ஸ் எடுத்து ஒரு பெரிய கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு மாணவியாக தான் நிற்கும் கோலத்தை மனக்கண்ணிலே கண்டு பூரித்துக்கொண்டாள். கற்பனையிலே குதூகலித்துக் கொண்டிருந்தவளின் முன் ஆவேசமாக வந்து நின்றான் குணா. அவனைக் கண்டதும் உண்டான பயத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்து கோபமாக அவனைப் பார்க்க முயற்சி செய்தாள் திவ்யா. இது முதல் தடவையல்ல. பல நாட்களாகவே அவனது தொல்லை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எங்கு சென்றாலும் பல்லை இளித்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவான். கோவில், கடை என்று தான் செல்லும் இடங்களை எவ்வாறோ அறிந்து அவளுக்கு முன் அங்கு சென்று நின்றுகொண்டு சினிமா ஹீரோமாதிரி போஸ் கொடுப்பான். அதைப் பார்த்தாலே அவளுக்கு அருவருப்பாக இருக்கும். இருந்தாலும் பயத்தினால் வீட்டில் சொல்லாமல் வைத்திருந்தாள். இப்படியே சென்றுகொண்டிருந்ததால் அவன் பொறுமையிழந்திருப்பான் போல. அவள் தனியாக வரும் ஒரு நாளில் திடீரென்று அவள் முன் சென்று ‘நான் உன்னைக் காதலிக்குறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் என்னை வேணாம்னு சொல்லாத. உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன். என் காதல் ரொம்ப புனிதமானது. நீயும் என்னைக் காதலிக்குறேன்னு சொல்றவரைக்கும் சாப்பிடமாட்டேன், தூங்கமாட்டேன்… என் காதல புரிஞ்சுக்கோ’ என்று மிரட்டுவதுபோல சொல்லவும் அவள் அழுதேவிட்டாள். அழுது முடித்தவுடன் சரியென்று சொல்லுவாள் என அவனும் காத்திருந்தான். அவளும் சொன்னாள். இவ்வளவு நாட்களில் கண்டது கேட்டது மூலமாக தெரிந்துகொண்ட அத்தனை வார்த்தைகளையும் சொல்லி அவனை திட்டித் தீர்த்தாள். அவன் கண்ணில் காதல் இல்லை. மாறாக ஏதோ ஒன்றை அடையவேண்டுமென்ற வெறியே இருந்தது. அதன்பிறகு அவனை எங்கு பார்த்தாலும் முறைத்துக் கொண்டு திரும்பிவிடுவாள். ஆனால் இன்று யாரும் இல்லாத தனி இடத்தில் இப்படி மாட்டிக்கொண்டாளே…

பாதப்பலகை என்பது ஒரு பஸ்ஸினுள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுவது. ஆனால் அதில் தொங்கிக்கொண்டு செல்வதுதான் ஸ்டைல் என்றாகிவிட்டது. பஸ்ஸினுள் தேவையான இருக்கைகள் இருந்தாலும் ஃபுட்போர்ட்டில் தொங்கிச் சென்றால்தான் இளைஞர்கள் என்பதற்கே அழகாம். வீதி ஒழுங்குமுறையை சீராக கடைப்பிடிக்காத நமது நாட்டில் தெருக்களில் இப்படி சாகசம் காட்டி செல்வது எவ்வளவு ஆபத்தானது என புரியாத குரங்குக்குட்டிகள்தான் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டுபோகும். நினைக்கும்போது சரவணனுக்கு சிரிப்புதான் வந்தது. ஃபுட்போர்ட்டில எவன் ஒருத்தன் தொங்கிகிட்டு போறானோ அவன் இதுவரைக்கும் கீழுவிழுந்து அடிபடலனு அர்த்தம். எங்கேயோ கேட்ட இந்த துணுக்கு அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அந்த ஃபுட்போர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். இதில் அப்படி என்னதான் இருக்கிறது. இதிலே நின்று பயணம் செய்வதில் அப்படி என்ன கௌரவத்தை கண்டுவிட்டார்கள்… அவன் மனம் விடைதேடும் அதே நேரத்தில் இதே பாதப்பலகையால் அவன் எத்தனைமுறை அவனது நண்பர்கள் முன்னால் அவமானப்பட்டிருக்கிறான்…. இயல்பாக சரவணன் பயந்த சுபாவம் கொண்டவன். அதனால் எந்த விசயத்தையும் எடுத்தவுடன் தைரியமாக அவன் செய்ததே இல்லை. ஓடி விளையாடக்கூட அஞ்சுவான். இத்தனைக்கும் அவன் ஒரு உயர்தரம் படிக்கும் இளைஞன். இந்த பாதப்பலகை விசயமும் அப்படித்தான். பள்ளிக்கூடம் விட்டு நண்பர்களுடன் பஸ்ஸில் வரும்போது அவர்கள் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு உள்ளே பம்மிக்கொண்டிருக்கும் சரவணனை கேலி பேசிக்கொண்டிருப்பார்கள். ஃபுட்போர்ட்டுலகூட நிக்க முடியல, நீயெல்லாம் ஸ்டூடண்ட்டுனு சொல்லிக்குற என்று அவனை குத்தும் வார்த்தைகள் அவனுக்கு இப்போது நினைவு வந்தது. பொதுவாக கேலி என்பது நகைச்சுவையான சந்தோசமான விடயமாகத்தான் இருக்கும். கேலிக்குள்ளாகும் அந்த ஆளைத்தவிர. இன்னும் இந்த கேலி தொடரவிடக்கூடாதென்று முடிவு செய்தான். நண்பர்கள் முன்னால் கெத்தாக மரியாதையைக் காப்பாற்றவேண்டுமே… அதோ அங்கே ஒரு சந்து வரும், அங்கே அதிகமாக ஆட்கள் இருக்கமாட்டார்கள். அந்த நேரம் ஃபுட்போர்ட்டில் நின்றுபார்ப்போம். பஸ்ஸுக்குள்ளேயும் சனம் குறைவாக இருப்பதால் ஃபுட்போர்ட்டில் நின்று நடுங்கிக்கொண்டு இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லையென்று பெரிய அதிரடித்திட்டங்களை போட்டு அதை செயற்படுத்தவும் தயாரானான். சந்து நெருங்கும்போது மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்து பஸ் சென்றுகொண்டிருக்கும்போதே ஃபுட்போர்ட் அருகே வந்தான். மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி கடைசி படியில் இரண்டு கால்களையும் வைத்தான். தனக்கு முன்னால் இருந்த ஒரு நீளமான கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ஒருவழியாக செட்டில் ஆனபிறகு தலையை லேசாக வெளியே காட்டினான். எதிர்காற்று சில்லென்று அவனது முகத்தில் மோதி பரவசமூட்டியது. ஏதே ஒரு அசட்டுத்துணிச்சல் இடங்கொடுக்க தன் நண்பர்கள் நிற்பதுபோலவே ஸ்டைலாக நின்றான். அவனாலேயே இதை நம்ப முடியவில்லை… யாஹூ… நானும் ஒரு வீரன்தான்….

‘என்னடீ முறைக்கிறே? ஒரு ஆம்பிள பைத்தியக்காரன்மாதிரி உன் பின்னால சுத்துறானே.. பாவம்னு பாத்தியாடீ! இனிமே உன்னால பாக்கவே முடியாது. இன்னிக்கு உனக்கு ஒரு முடிவு கட்டுறேண்டி’ தன்னை வழிமறித்து மிரட்டிக்கொண்டிருக்கும் குணாவிடமிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் குழம்பிநின்றாள் திவ்யா. கைகள் பரபரத்துக்கொண்டு நிற்க கண்ணில் கொலைவெறியுடன் திவ்யாவை நகரவிடமுடியாமல் தடுத்துநின்றான் குணா. அவளை திடுக்கிட செய்வதற்காக அவளது உடையின்மீதிருந்த துப்பட்டாவை பிய்த்து தூக்கியெறிந்தான். ஆவேசமடைந்த திவ்யா ‘ஒரு பொண்ணுக்கு உன்னை பிடிக்கலனா விட்டுட்டு போகவேண்டியதுதானே. ஏண்டா இப்படி அடுத்தவங்க வாழ்கையோட விளையாடுறீங்க?’ என்று காரி அவன் முகத்தில் துப்பினாள். அடுத்த நொடியே அவளது கன்னத்தில் அவன் கைரேகை பதிந்தது. ‘நான் எவ்ளோ பெரிய ரவுடினு தெரியாம என்னை துப்பிட்ட இல்ல. கடவுள வேண்டிக்க. இன்னிக்குதான் உன் கடைசி நாள்’ அவள் சற்றும் எதிர்பாராத விதமாய் பாக்கெட்டில் இருந்து கைக்கத்தி ஒன்றை எடுத்தான். அப்படியென்றால் தன்னைக்கொல்லும் எண்ணத்தில்தான் வந்திருக்கிறானே.. அவனை பார்க்கும்போதே ஒரு பொறுக்கி என்பது தெரிந்தது. ஆனால் கொலை செய்யும் அளவுக்கு போவான் என்று எதிர்பார்க்கவில்லையே… அவன் முதல்முறை தொந்தரவு செய்தபோதே பெற்றோரிடம் சொல்லாமல்விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று இப்போது புரிகிறது. இப்படி உதவிக்குகூட யாரும் வரமுடியாத இடத்தில் அநாதரவாக சிக்கியதை நினைக்க தொண்டையடைத்தது. படபடப்பாக உடல் நடுங்கியதில் அவளுக்கு வேர்த்துக்கொட்டியது. அவன் நேரத்தை தாமதிக்காமல் அவளின் கழுத்தை ஒருகையால் பிடித்து மறுகையால் கத்தியை ஓங்கினான். அவளின் அப்பா அம்மா பாட்டி தோழிகள் ஜிம்மிநாய்க்குட்டியெல்லாம் அவளது கண்முன்னால் வந்து போனது. அடக்கடவுளே எனக்கு இப்படியா விதி முடியவேண்டும் என்று புலம்பத்தொடங்கினாள். அந்த சந்தின் வழியாக வந்த பஸ் ஹார்ண் அடித்தது.

கம்பியை இறுக்கமாகப் பிடித்திருந்தாலும் ஏதோ வழுக்குவதுபோல இருந்தது சரவணனுக்கு. அதுமட்டுமில்லாமல் வழக்கமாக இந்த சந்தில் பஸ்ஸை மெதுவாக ஓட்டமாட்டர்கள். கிரைண்டரில் ஆட்டுக்கல்போல கதிகலங்கும். இப்ப மேல ஏறி உள்ளே போகவும் பயமாய் இருக்கு. இங்கேயே நிக்கவும் முடியல. என்ன பண்ணுறது கடவுளே… ஸ்டைலுக்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வச்சானே! நான் எவ்வளவு பெரிய முட்டாள், ஆத்தா கருமாரியாத்தா முண்டகன்னியம்மா கருப்பண்ணசாமியே சொரிமுத்தய்யனாரே என்னை உயிரோடு காப்பாத்தி விட்டீங்கன்னா ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வந்து மொட்டை போடுறேன் கடவுளேன்னு ஊரில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் கும்பிடு போட்டுக்கொண்டிருந்தான். அந்த இளவெடுத்த டிரைவர் வேற வேகத்தை குறைக்காமல் ஏரோப்பிளேனை ஓட்டுறமாதிரி பறந்தான். ஆபத்தான விசயமென்பது எப்போதுமே ஆபத்தான விசயம்தான். அதன் வடிவம் மாறலாம் ஆனால் விளைவு ஒன்றுதான் என்பது அவனுக்கு அப்போது புரிந்தது. இருந்தாலும் இதுவே கடைசி என்றும் இனிமே இந்த ஃபுட்போர்ட் கருமத்தை நினைத்தும் பாரப்பதில்லையென்றும் முடிவுபண்ணி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு கம்பியை கெட்டியாக பிடித்தான். ஆனாலும் விதி விடவில்லை. எங்கிருந்தோ காற்றில் பறந்துவந்த ஒரு துப்பட்டா டிரைவருக்கு முன்னாலிருந்த கண்ணாடியை மறைத்துவிட வழிதெரியாமல் பதட்டமடைந்த டிரைவர் நாலு அடிக்குமேல் போகமுடியாமல் வந்த வேகத்திலேயே பிரேக் போட்டான். அந்த பிரேக்கில் தடுமாறிய சரவணன் கைவழுக்கி முன்னுக்குத் தள்ளப்பட்டு தூக்கியெறியப்பட்டான்.


கலங்கிய கண்களுடன் தனக்கு முன் வழிதெரியாமல் நிற்கும் திவ்யாவை கொல்ல இதுதான் நேரம் என எண்ணி கத்தியுடன் கையை ஓங்கினான் குணா. அவன் கையை ஓங்கியது மட்டும்தான் நினைவிருக்கிறது. அந்தரத்தில் எறியப்பட்டு வந்த சரவணன் தெருமூலையில் திவ்யாவை மடக்கிபிடித்திருந்த குணாவின்மீது போய்விழுந்தான். திடீரென்று ஒரு மனிதன் விழுந்ததால் தள்ளப்பட்ட குணா சுவரில்போய் தலையில் அடிபட்டு மயங்கிவிழுந்தான். அதுதான் சமயம் என எதைப்பற்றியும் யோசிக்காமல் வீட்டைநோக்கியோடினாள் திவ்யா. குணாவின் மீது விழுந்த சரவணனுக்கு அங்கிருந்த கல்லொன்றில் கால் மோதி ரத்தம் வரத்தொடங்கியது. உயிர்போற வேதனையில் துடித்தான் அந்த அதிர்ச்சியிலேயே அவனும் மயங்கிப்போனான். பஸ்ஸில் இருந்த ஒருவன் விழுந்ததைப் பார்த்த மற்றவர்கள் உடனே இறங்கிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டனர்.

மிகவும் கஷ்டப்பட்டுதான் கண்திறக்க வேண்டியிருந்தது. கொஞ்சம்கொஞ்சமாக அனைத்தையும் பார்க்கவும் முடிந்தது. ஆம், தான் இப்போது ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தான் சரவணன். அவனுக்கு எதிரில் காக்கிச்சட்டை போட்ட ஒரு ஆள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைக்கண்டு அஞ்சி எழ முயற்சித்தவனை அவர் தடுத்து ‘வேணாம்பா படுத்திரு, ஒடம்பு இப்ப எப்பிடியிருக்கு?’ அவர் மீதிருந்த பயம் போகாமலேயே ‘கால்தான் வலிக்குது..இப்ப பரவால’…. ‘எவ்ளோ பெரிய விசயத்த செஞ்சிட்டு சாதாரணமா படுத்திருக்கே தெரியுமா? பஸ்ஸுலேந்து ஒருத்தன் மேல விழுந்தியே.. அவன் நாங்க தேடிக்கிட்டுருக்க பெரிய ரவுடி, நீ போயி விழுந்ததுல சாககிடக்குறான், அப்படியே உயிர்பொழச்சாலும் சுயநினைவுக்கு வாறது கஷ்டமாம். எங்க வேலய சுலபமாக்கினதுக்கு உனக்கு நன்றி சொல்லத்தான் நான் காத்திருந்தேன்.’ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ‘சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார், நான் வேணும்னு ஒண்ணும் பண்ணல. இப்ப எனக்கு இருக்குற பிரச்சினை நான் அடிபட்டு கெடக்குறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரொம்ப கவலப்படுவாங்க சார்’.. அவர் சிரித்துக்கொண்டே ‘கவலப்படாத, உங்க வீட்டுக்கு சொல்லிட்டோம். உனக்கெந்த பிரச்சினையும் வராம நாங்க பாத்துக்குறோம். உன் காலுக்கும் ஒண்ணும் இல்ல. சீக்கிரம் குணமாயிடுவ. நான் வறேன்.’ அவர் போனபின் அழுதுகொண்டே வந்த பெற்றோரைப்பார்த்து சரவணனும் அழுதுவிட்டான். பின் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட்டு காலிசெய்து புறப்பட்டார்கள். அவன் மீதிருந்த திருஷ்டிதான் இதற்கெல்லாம் காரணமென்று அவனது தாயார் அவனுக்கு சுற்றிப்போட்டார்கள். அவர்கள் ஆஸ்பத்திரி பில் கட்டிக்கொண்டு நிற்கும்போது நொண்டி நொண்டி சரவணன் வீதிக்கு வந்தான். அவனைக்கண்டு மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு ஒரு பெண் அவனை நோக்கி வந்தாள்.

‘உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியல. உங்கள என் வாழக்கைல மறக்கமுடியாது. அந்த பாவி என்னைக் கொல்லவந்தான். நீங்க மட்டும் அப்போ வரலன்னா நான் உயிரோடயே இருந்திருக்கமுடியாது. ஆனா நான் கீழ விழுந்த உங்கள பாக்காம ஓடிட்டேன். என்னை மன்னிசிருங்க’. என்று கண்களில் ஈரத்துடன் ஒரு பெண் கூறிவிட்டு தேம்பிதேம்பி செல்வதைப் பார்க்கும்போது அவனுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆர்வக்கோளாறில் என்னவென்று தெரியாமல் ஃபுட்போர்ட்டில் தான் போய் நின்றதால் மரணத்தின் விளிம்புவரை சென்று கும்பிட்ட சாமிகளின் புண்ணியத்தால் சில அடிகளோடு தப்பித்து ஒருவாரம் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து படிக்கவேண்டிய படிப்பும்போய் சிரமபடுகிறோம். அதேகாரணத்தால் உள்ளே ஒருவன் உயிருக்கு போராடுறான். அதுக்கு ஒருத்தி நன்றி சொல்லிட்டு போறா.. ஒரு சம்பவத்தால ஏற்பட்ட பல்வேறுபட்ட விளைவுகளுக்கு பாதிப்புகளுக்கு இன்னொரு சம்பவம் எப்படி காரணமாயிருக்கும் என அவன் குழம்பிக்கொண்டிருக்கையில், அவனைக்கடந்து சென்ற ஒரு பஸ்ஸில் நாலு, அஞ்சு பேர் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு விசிலடித்து பாட்டுபாடிக்கொண்டு சென்றனர்.

Monday, July 16, 2012

சிவன் ஆட்டம்

‘ஹாய்! ஹாய்! ஸாரிப்பா லேட்டாயிடுச்சு…. அசைன்ட்மெண்ட் பத்தி யோசிச்சுகிட்டேயிருந்ததுல ஒரே தலவலி. ஒண்ணுமே தோணல. நீங்களாவது ஏதாவது யோசிச்சுவச்சீங்களா?’

‘………………………………………………………….’

தான் வந்ததை கவனிக்காமல் தனக்கு பதில்கூட சொல்லாமல் ஏதோ மும்மரமாக தயாராகிக் கொண்டிருக்கும் சந்தோசையும் ஹரிணியையும் ஆச்சரியமாகப் பார்த்தான் சிவா.

‘என்னங்கடா? ஒரு மனுசன் வந்து நிக்கறதுகூட தெரியாம அப்படி என்ன வேல செய்றீங்க?’

‘காஞ்சிபுரம் கிளம்புறம்… சீக்கிரம் ரெடியாகு. நிறய வேல இருக்கு.’

‘என்ன இப்பவா? அப்பிடி என்ன அவசரம்?’

‘அசைன்ட்மென்ட் வேர்க்’

‘ஏண்டா? ஒரு ஜீனியஸ் இங்க இருக்கான்… அவன விட்டுட்டு நீங்களா அசைன்ட்மெண்ட் பத்தி முடிவயும் பண்ணிட்டு வெளியூர் போறதுக்குவேற ரெடியாகியிருக்கீங்க? என்னங்கடா நினச்சிட்டு இருக்கீங்க?’

‘நாங்க ரெடியாகிட்டோம்.. நீ வாறதுண்ணு வா. இல்லாட்டி இங்க இருந்து மத்த வேலயெல்லாம் பாரு’

‘டேய் டேய் விட்டுட்டு போயிடாதீங்க…. உங்கள நம்பித்தான் என் அசைன்ட்மென்டும் இருக்கு. போனாபோகுது நான் உங்கள மன்னிச்சிட்டேன். ஆமா என்னத்த பத்தி எழுதுறதுக்கு காஞ்சிபுரம் போறோம்?’

‘கூத்து’

‘என்ன? கூத்தா? அப்பிடின்னா என்னன்னே இங்க பாதிப்பேருக்கு தெரியாது… அவன் அவன் மெக்ஸிகன் யராபி, சைனீஸ் ஓபரான்னு ஹைலெவலா செஞ்சிட்டிருக்கும்போது நாங்க செஞ்சது கூத்துனு கொண்டுபோய்காட்டினா என்ன நினப்பாங்க? அவ்ளோயேன்… அந்த கிஷோர்கூட பாலிவுட் பத்தி அசைன்ட்மெண்ட் செய்யுறான்…. நாமளும் சும்மா கெத்தாபோயி நிக்கவேணாமா? பேசாம மறுபடியும் முதல்ல இருந்து யோசிச்சு ஒரு நல்ல புரோஜக்ட் செய்வோம்… ஏன் ஹரிணி நீகூட எப்பிடி சம்மதிச்ச?’

‘இந்த யோசனைய சொன்னதே நான்தான்…. மத்தவங்களுக்கு தெரியாத ஒரு விசயத்த சொல்லி அத அவங்களுக்கு புரியவைக்குறதுதான் கெத்து. நம்ம நாட்டுலயே பல அற்புதமான விசயங்கள் இருக்கப்போ நாம ஏன் வெளிநாட்டுக்காரனுகளப் பத்தி எழுதணும்? நம்ம அசைன்ட்மெண்ட் கூத்துதான். முழு மனசோடு சம்மதிச்சு வேல செய் சிவா, நாம நிச்சயம் தோக்கமாட்டோம்’

சுவாரசியமாக ஏதாவது புராஜக்ட் செய்யலாம் என்று வந்த சிவாவிற்கு கூத்து என்றதும் அலுப்படிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் ஹரிணி சொல்லிவிட்டாள், இனி அவன் மறுக்கப் போவதில்லை… ஏனென்றால்….. அதேதான். அரைமனதோடு அவர்களுடன் புறப்பட்டு காஞ்சிபுரம் சென்றான். செல்லும் வழியெங்கும் தங்களின் அசைன்ட்மெண்ட் எந்த வடிவத்தில் வரவேண்டுமென விவாதித்துக்கொண்டே சென்றார்கள். அவர்கள் பேசப்பேச சிவாவிற்குதான் கண்களில் உறக்கம் சுழன்றடித்துக் கொண்டுவந்தது. தான் அத்தனைதூரம் சொல்லியும் கேட்காமல் இவ்வளவு மெனக்கிடுகிறார்கள். கல்லூரியில் எல்லோருக்கும் முன்பாக அவமானப்படவேண்டியிருக்கப்போகுதே என சிந்தித்துக் கொண்டேயிருந்தான்.
காஞ்சிபுரத்தையடைந்ததும் மாடசாமி என்பவர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்தார். பின் அவர்களிடம் வந்த விடயத்தை தெளிவாகக்கேட்டார்.

‘ஐயா, என் பேரு ஹரிணி, இது சந்தோஷ், அப்புறம் சிவா. நாங்க சென்னையில விஷுவல் கம்யுனிகேஷன் படிக்குறோம். எங்க ஃபைனல் புராஜக்ட், ஓபன் டாபிக் டாகுமென்டரி ஒண்ணு செஞ்சணும். அதனால நாங்க கூத்துக்கலையைப் பத்தியும் அத சார்ந்திருக்குற மக்களோட வாழ்க்கைமுற பத்தியும் படமெடுக்க வந்திருக்கோம். இங்க இருக்குற நவீன கூத்துக்கலை அபிவிருத்தி சங்கத்தலைவர் பிரகாசம் எங்க அப்பாவோட நண்பர்தான். அவருமூலமாத்தான் உங்கள தொடர்புகொண்டோம். நீங்கதான் நாங்க படம் எடுக்குறதுக்க முழு ஒத்துழைப்பும் தரணும்’

‘இந்தக் காலப் பிள்ளைகளுக்கும் கூத்துமேல பிடிப்பு இருக்குறத நினச்சா ரொம்ப சந்தோசமாயிருக்கு… நிச்சயமா என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்யிறேன்மா’
அவர்களை அழைத்துக்கொண்டு பல குழுக்களிடம் சென்றார் மாடசாமி. செல்லும் வழிகளில் தனக்குத் தெரிந்த சில விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டும் வந்தார்.

‘சிலம்பு, கும்மி, கரகாட்டம், பொய்க்கால்குதிரை, வில்லுப்பாட்டுனு தமிழ்பாரம்பரியகலைகள் நம்ம மக்களோடு சிறப்பான வாழ்க்கையை மத்தவங்களுக்கு அழகா எடுத்துசொல்லுது. அவ்வளவு ஏன் சங்ககாலத்துலயே பகல்ல கடுமையா உழைச்சு களைச்சுப்போயி ராத்திரில பரத்தையரோட ஆட்டம் பாக்கப்போறது வழக்கம். மத்த ஊர்க்காரனுங்க மாதிரி கலையை ஒரு பொழுதுபோக்கா பார்க்காம வாழ்வியல் அம்சமா நம்ம ஆளுங்க வளத்திருக்காங்க….’


அவர் கூறும் விடயங்களை காகிதத்தில் பதிவுசெய்துகொண்டனர். அதுபோக பல குழுக்களிடம் நேரில் சென்று பேட்டி எடுத்து அவர்கள் கூறும் விடயங்களை படம்பிடித்தனர். கூத்து தமிழர்களின் அரியபெரிய பாரம்பரியக்கலை என இன்றும் மார்தட்டி சொல்லுபவர்கள் இருக்கிறார்களென்றாலும் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையோ அவலம் நிறைந்ததாகவும் மற்றவர்களால் கேலிக்குள்ளாகும் நிலையிலும் இருப்பது இந்த பயணத்தில் அவர்கள் அறிந்துகொண்ட ஒரு விடயம். ஒவ்வொரு கூத்துக்கலைஞர்களிடமும் பிரத்யேகமாக கூத்தைப்பற்றி கேட்டனர். அவ்வாறு அவர்கள் வேலை செய்யும்போது யாரோ படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்று அங்கும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. அங்கிருந்த அனைவரின் முகங்களும் சந்தோஷின் கேமராவில் பதியப்பட்டது. எல்லாவற்றிலும் முக்கியமாக கந்தையா எனும் முதியவர் கூறிய விடயங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தது.

‘ஆயிரம் ஆயிரம் வருசமா நம்மகூட பொழங்கி வாறது இந்த கூத்து. சிவனோட ஆட்டமுனு சொல்லுவோம். இப்ப மாதிரி முந்தியெல்லாம் கொட்டில் கிடையாது. தெருவிலதான் ஆடணும். அதுகூட ஏனோதானோன்னு இருக்காது. தங்களுக்குன்னு ஒரு பாணிய கடைப்பிடிச்சி ஒரு கட்டுக்கோப்பாக ஒருக்கும். இப்ப மாதிரி அப்பல்லாம் தப்பான ஆட்டம் ஆடுறதில்லை. ராமன் கதை, அர்ச்சுனன் கதைனு கடவுள் பாட்டுதான். இப்ப இந்த இளசுகெலாம் சினிமானு பறக்குறமாதிரித்தான் சரியா நூறு வருசத்துக்கு முன்னால அப்ப இருந்தவங்களெலாம் கூத்துக்கு அடிமையானவங்க. இப்பகூட காஞ்சிவரம், விழுப்புரம், தீவண்ணாமலை, சேலம், செங்கல்பட்டனு இந்த கலைக்கு உயிர்குடுக்குறவங்க இருக்காங்க. ஆனா அவங்களுக்கு உயிர்குடுக்கத்தான் ஆருமேயில்ல. எங்க ஊருல மட்டும் கூத்தாடுற முப்பது கூட்டம் இருக்கு. திருவிழான்னாத்தான் அவங்க வயிறு நனையும். ஒரு கூட்டத்துலகூட பதினஞ்சுக்குமேல ஆக்க இருப்பாங்க. எங்க பக்கம் ஆடுறது தெக்கத்தி பாணி. அதுக்கு போடுறது தெக்கத்தி மெட்டு. வடக்கத்து பாணி பாக்கணும்னா நீங்க வந்தவாசிக்குத்தான் போகணும். எங்க கூட்டத்த சமான்னு சொல்லுவாங்க. சமாக்கு தலைவர வாத்தியார்னு சொல்லுவாங்க.. முக்கியமா இது ஒரு வழிப்பாட்டுக்கலைங்க, கோயில்ல ஆடுறது சிறப்பான விசயமுங்க. ஆடக்குல முகத்துக்கு நிறய பூச்சு பூசுவோம். இது முழுக்க அலங்காரத்த அண்டின தொழிலு. ஏன்னா முக உணர்ச்சியை அதிகமாக் காட்டுறதுக்குத்தான் இந்த வண்ணங்க. அந்த வண்ணமெல்லாம் முத்துவெள்ள, குங்குமம், செந்தூரம்னு விதவிதமான பொருட்கள எண்ணயில கொழச்சு பூசுவோம். காளிக்கு சிவப்பு, பீமனுக்கு கருப்பு, அர்ச்சுனனுக்கு நீலமுனு பூசுவோம். பெரியமீச, நாமம் கண்டிப்பா போடணும். அப்புறம் ஆடக்குல கையில புஜக்கட்டை வச்சிக்குறது, கிரீடம், குச்சிமுடி போடுறது, நெஞ்சுல பட்டை கட்டுறது, கன்னக்கதுப்பு இப்பிடி நெறய நகை போடுவோம். பாட்டுதான் ரொம்ப முக்கியம். டோலக், ஆர்மோனியம் வச்சு பாட்டுப்பாடி ஆடுறதுதான் வேல. கூத்தாடுறவங்களுக்கு சுயமரியாத ரொம்ப முக்கியம். கலைக்கு ஒரு அவமானம்னா பொறுத்துக்கமாட்டாங்க. கொதிச்சுடுவாங்க. அதனாலயே கூத்தாடுறவங்கள திமிர்காரங்கனு எல்லாரும் பேசுவாங்க. அப்புறம் இப்பகூட வெளிநாட்டுல இருந்து வாறவங்க கூத்துன்னா என்னனு ஒங்கள மாதிரி கேள்வியெலாம் கேட்டு போயி அவுக ஊருல சொல்லிக்கிறாங்க. ஆனா கூத்தாடுற இந்த சனங்களுக்குதான் ஒரு நல்ல வழி பொறக்கமாட்டேங்குது.’


தலைப்பாகையுடனும் பெரியமீசையுடனும் கம்பீரமாக உட்கார்ந்து அந்த பெரியவர் கூறியதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. அவரைப் பார்த்தாலே தெரிகிறது மனதுக்குள் தன்னை ஒரு ராஜாவாக பாவிப்பவர் என்று. அடேயப்பா கூத்து என்றால் இவ்வளவு இருக்கிறதா? ஒரு பாட்டு போடுவாங்க அதுக்கு நாலு பேரு ஆடுவாங்கனுதானே இவ்வளவு நாளும் நினைத்தோம் என்று சிந்திக்கத் தொடங்கினான். மேலும் இவ்வாறான பல பேட்டிகளை எடுத்ததோடு நிஜ கூத்துக்களையும் வீடியோ செய்தனர். அங்கிருந்த கூத்துக்கலைஞர்கள் அவர்களை அன்பாக பார்த்துக்கொண்டனர். தங்கள் கூடாரத்திலேயே இடம் கொடுத்து தங்கள் உணவையே பகிர்ந்தளித்தது சிவாவிற்கு புது அனுபவமாக இருந்தது. கிராமத்து சுகந்தத்தில் ஒன்றிப்போனான் அவன். சந்தோஷும் வேலை பாதி முடிந்தது இனி எடிட்டிங்தான் என்று கவலையில்லாமல் இருந்தான். அங்கிருந்த கலைஞர்களின் குழந்தைகளோடு மீதிப் பொழுதை போக்கினாள் ஹரிணி. அவள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் விதத்தை தூரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான் சிவா. இனிமையும் எளிமையுமாக எப்படி இருக்கிறாள் என அவளை நினைத்து சிலாகித்தான். தன் எண்ண வண்ணங்களை அவள் இதயத்தில் பூசும் தருணம் வாராதா என்று அவன் இதயமும் இமைகளும் ஒன்றாய் துடித்தது. யாரோ அழைத்தது போல அவளும் திரும்பி அவனைப் பார்க்க அவன் திடீரென்று சுதாரித்துக் கொண்டான். அவன் மனம் அறிந்தவளாக அருகே வந்து….

‘சார் என்ன யோசிக்குறீங்க?’

‘அது வந்து…. இல்லை இது… ஆ இப்படி கூத்து படம் எடுக்கணைம்னு எப்பிடி ஒனக்கு தோணிச்சு’

‘ஓ அதுவா… வேறொண்ணுமில்ல எங்க தாத்தாவும் ஒரு கூத்துக்கலைஞர்தான். அது என் ரத்ததுலயே வந்தது. எங்கப்பாவுக்குத்தான் கூத்தோட இருந்தா வாழ்க்கைல உருப்பட முடியாதுன்னு பட்டணத்துக்கு வந்துட்டாரு, தனக்கப்புறம் இந்த கலைய கொண்டு செல்ல வாரிசில்லயேன்னு தாத்தாக்கு ரொம்ப கவல. இதோ இப்ப என்னால முடிஞ்ச ஒரு வேல.’

‘அதுசரி, அசைன்மெண்டுல பாஸாகணுமே?’

‘ம்ம்ம்… ஒரு நல்ல விசயத்த சொல்லுற திருப்தி கிடைக்குதே சிவா. அதுபோக நாம பாஸாக மாட்டோம்னு எப்டி சொல்ற? பாரு நாமதான் ஹையஸ்ட் ராங்க் வாங்கப்போறோம்.’

‘வாங்கினா சந்தோசம்தான். ஆனா என்னால திருப்தியாக முடியாது. இங்க பாரு ஹரிணி, இவங்கலாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? சோமாலியா மாதிரி நாட்டுல வறட்சியில வேல இல்லாம வந்த பட்டினியா இது? இல்லயே.. தங்களுக்குனு ஒரு வேல இருந்தும் அதுக்கு ஆதரவில்லாததால வந்த பட்டினி. அந்த பிஞ்சு குழந்தைகளப் பாரு. எதிர்காலத்த வெறுங்கையோட எதிர்பார்க்கறாங்க.. இவங்க முன்னேற என்னதான் வழி? அட இவ்வளவு கஷ்டத்துலயும் இவங்க இந்த தொழில விடலயே, இன்னும் தெய்வமாத்தனே பாக்குறாங்க.லிப்பதான் ஹரிணி எனக்கு நிஜமாவே தமிழன்னு கர்வம் வருது. நிச்சயமா இவங்களுக்கு ஏதாவது செய்யணும். இந்த ஒரு டாகுமெண்டரி பத்தாது. உலகளவுல இவங்களுக்கு அங்கீகாரம் கெடக்கணும். அது நம்மளமாதிரி இன்னொரு கலைஞர்களாலதான் முடியும். எனக்கு நம்பிக்க இருக்கு. இங்க வரும்போது நான்கூட பிடிப்பில்லாமத்தன் வந்தேன் இப்ப மாறலயா.. இந்த உலகமும் ஒரு நாள் நம்ம பாரம்பரியத்துக்கு தலவணங்கும். அதுக்கு நாமதான் ஏதாவது பண்ணனும். இந்த கூத்துல இருந்துதானே நாடகம் வந்திச்சு, நாடகத்துல இருந்துதானே சினிமா வந்திச்சு… சினிமாவ எல்லாரும் தலயில தூக்கிவச்சு ஆடலயா.. அட்லீஸ்ட் அந்த சினிமா மோகத்தால அழியுற கட்டுத்துக்கு வந்துட்ட இந்த கூத்துக்கலைய ஒரு நிமிஷம் காப்பாத்த யோசிச்சா என்ன?’

ஆவேசமாக பேசிக்கொண்டே போன சிவாவை ஆச்சரியமாகப்பார்த்தாள் ஹரிணி. இவன் எப்போதும் இப்படித்தான். மகிழ்ச்சியையோ சோகத்தையோ மிகையாகத்தான் காட்டுவான். ஆனாலும் இப்போது அவன் கோபப்படுவது சரியென்று படவே அவனது கையை மெதுவாக பற்றி அவன் தோளில் சாய்ந்தாள். ஆனால் அவன் கண்களோ எதிரில் இருந்த வண்ணங்களையும் கிரீடத்தையும் பட்டாடைகளையும் கண்டு கலங்கியது. ‘கண்ணுக்கெதிரே நம்ம சொத்து அழிஞ்சிகிட்டிருக்கிறத பார்த்துட்டு வெளிநாட்டுக்கு வக்காலத்து வாங்குறமே?’

Saturday, July 14, 2012

தோழியா இல்லை காதலியா?

பஸ் ஸ்டாண்டு. போட்டிக்கு வேற எந்த பஸ்ஸும் இல்லை என்று தெரிந்த டிரைவர் தைரியமாக பஸ்ஸை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு எஞ்சினை ஆஃப் செய்தான். இந்த ஊரில் அப்படித்தான். இனி பஸ்ஸில் கூட்டம் நிறையும்வரை அதை எடுக்கமாட்டான். இது ஏற்கனவே பஸ்ஸில் இருக்கும் பிரயாணிகளுக்கு எரிச்சலைமூட்டியது. கண்ணனுக்கும்தான். அலுப்போடு ஜன்னல்வழியாக வெளியே பார்த்தான். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காகவும் அவற்றைமுடித்து வீடு திரும்புவதற்காகவும் பல இளவயது மாணவமாணவிகள் சாலையோரத்தில் திரண்டிருந்தனர். ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பல் கும்பலாக இருந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பதும் சகஜமாக தொட்டுப்பேசி சிரித்துக்கொள்வதையும் பார்த்து அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆச்சரியம். இதே ஒருவருடத்திற்கு முன்பிருந்த நிலையென்றால் ‘நானும் இந்தக்கால இளைஞன்தானே, எனக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்தோழிகளும் இல்லை. நான் மட்டும் என்ன வேற்றுக்கிரகவாசியா’ என்று வயிறெரிந்த எரிச்சலில் காதுவழியாக புகைவிட்டிருப்பான். அப்பேற்பட்ட நிலைக்கு இன்றைய மாற்றம் அபரிபிதமானதுதான். ஆனால் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் அஸ்ராவின் நினைவு வருவதைமட்டும் அவனால் தடுக்கமுடியவில்லை.

கண்ணன். இருபது வயது. உயர்தரம் முடித்து அடுத்தது என்ன செய்யலாம் என்று தீர்மானித்து கம்ப்யூட்டர் மல்டிமீடியா துறைமீதுள்ள ஆர்வத்தால் நகரின் பிரபலமான ஒரு கணனி நிறுவனத்தில் இணைந்தான். படிப்பு என்பது அவனுக்கு சிரமமாக இல்லை. பழக்கமென்பதே சிரமமாக இருந்தது. சிறுவயதுமுதலே அடக்கமான ஒரு குடும்பத்தின் பிரதிநிதியாக அவன் வளர்ந்ததால் இலகுவில் அடுத்தவரோடு பழகுவதோ குறிப்பாக பெண்களோடு சகஜமாக நடப்பதுவோ அவனுக்கு புதிதாக இருந்தது. அதில் தவறொன்றும் இல்லை என்றே அவன் நினைத்தான். காரணம் தன்னுடன் படிக்கும் சகமாணவர்கள் இடைவேளைநேரம் கூட்டாக சேர்ந்து சிகரெட் பிடிப்பது, சனிக்கிழமை மாலைகளில் எங்காவது கூட்டமாக சேர்ந்து சாராயம் குடிப்பது, அருகில் பெண்களை வைத்துக் கொண்டு ஆபாச நகைச்சுவைகளைக்கூறி கைதட்டி சிரிப்பது போன்றவை அவனுக்கு பிடிக்காத விடயங்கள். அதைவிட அந்த நகைச்சுவைகளை அருகில் இருந்து கேட்கும் பெண்களும் தங்களுக்கென்ன என்பதுபோல கூடச் சேர்ந்து சிரிப்பது அவனுக்கு அருவருப்பாக இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தான் ஒரு கலியுகத்து ராமன், ஒழுக்கங்காக்கும் உத்தமன் என்று தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்வான். அவனது வீட்டில்கூட தன் மகன்தான் லிந்தக்காலத்திலேயே தப்புவழி போகாத ஒரே பிள்ளை என்று அவனை தலையில்தூக்கி ஆடுவார்கள். எல்லோர் வீட்டிலும் அப்படித்தான் என்றாலும் தன்மீதான நம்பிக்கையை அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். சகமாணவர்கள் இவனது பழக்கவழக்கங்களால் பெரிதாக இவனை அண்டுவதில்லையென்றாலும் அவனை முற்றாக ஒதுக்கவுமில்லை. சகஜமாகவே பழகினார்கள்.
ஆனாலும் மற்றவர்கள்போல தன்னுடன் பெண்கள் பெரிதாக நட்புகொள்வதில்லையேயென்ற கவலை மட்டும் அவனை வாட்டியது. ஒவ்வொருவனும் இது என் ஆளுன்னு சொல்லும்போது நானும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சொல்வதற்கு எனக்கொரு ஆற் இல்லையை என்ற கவலை. அதற்காக பெண்களிடம் தானாக சென்று பேசியதுகூட கிடையாது. தன்னுடைய படிப்பு, பழக்கவழக்கம், ஒழுக்கத்தைப் பார்த்து பெண்களாக தன்னிடம் வந்து பேசுவார்கள் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான். அது மணல்கோட்டை என்றாகிவிட்டது. விரக்தியின் விளிம்புக்கு அவன் செல்லும்போது அவன் வாழ்க்கையில் வந்தாள் அஸ்ரா.

அஸ்ரா... மல்டிமீடியா பாடநெறியில் அவனுக்கு அடுத்த பெட்ச். கண்டதும் கிரங்கடிக்கும் அழகு இல்லையென்றாலும் பார்ப்போரின் கண்களை ஒருநிமிடம் தன்னிடமே பதியவைக்கும் அளவு பெண்மையானவள். கம்ப்யூட்டர் படித்தால் தாங்களும் வெள்ளைக்காரர்கள்தான் என்ற மிதப்பில் அலையும் பகட்டுப்பேர்வழிகளுக்கு அவள் மட்டும் என்ன விதிவிலக்கா…. இயல்பாய் வரும் மொழிநடையை மாற்றி ஆங்கிலசாயலில் பேசுவது, இலகுவாக இல்லாவிட்டாலும் உடலோடு ஒட்டிய இறுகிய ஆடையை மலைப்பாம்பிடம் சிக்கிய மனிதன்போல கஷ்டப்பட்டு போட்டுக்கொண்டு அலைவது, நண்பர்களுடன் ஹோட்டல் சென்றால் பெயர்கூட உச்சரிக்கத் தெரியாத வெளிநாட்டு உணவை வீம்புக்கென்று வாங்குவது என்று கலியுக கன்னியாக வலம்வந்தாள் அஸ்ரா.

புதிதாய் வந்த மாணவர்கள் பழைய மாணவர்களுடன் இணைந்து செயற்திட்டம் ஒன்று செய்யவேண்டுமென ஒரு சுழல் வந்து கண்ணனையும் அஸ்ராவையும் இணைத்தது. அவனது திறமையறிந்த ஆசிரியர்களும் அவனிடம் இருந்து நீ நிறைய கற்றுக்கொள்ளலாம் என்ற சிபாரிசு வேறு. முதலில் கடமைக்காக கூடப்பழகியவள் பின் அவனது குணம் பிடித்துப்போய் நெருக்கமானாள். ஊரறிய ஒன்றாக சுத்த தொடங்கினார்கள். இரவு முழுதும் செல்போனில் தகவல் பரிமாற்றம்தான். தன்னுடைய அனைத்து வேலைகளையும் கண்ணன்மூலமே செய்து படிப்பில் முன்னேறினாள். தன்னைப்பற்றியே நாள்முழுதும் சிந்திக்கும் ரோபோவாக அவனை மாற்றினாள். இது அஸ்ராவின் நிலை. கண்ணனுக்கோ???? முதல்முறை அவள் பேசும்போது ஒரு பெண்ணிடம் பேசும் கூச்சம்தான் அவனிடம் இருந்தது. அவனிடம் நட்பு கொண்டு அவள் நெருங்கி வந்தபின் அவன் மனது மார்பை பிய்த்துக்கொண்டு வானத்தில் பறந்தது. தன்னிடம் ஒரு பெண் இவ்வாறான முறையில் பழகுவது அவனுக்கு தன்மீதே ஒரு பொறாமை வந்தது. ஆண்பெண் நட்பு கூடாது என்று வளர்ந்ததினாலேயே அவளது உறவை வெறும் நட்பு என்ற வட்டத்துள் அவனால் கடைசிவரை பார்க்கமுடியாமல் போனது. செல்போன் மெசேஜ் என்பது அவளுக்கு கண்சிமிட்டுவது போல. பல நண்பர்களுக்கு பலவாறாக மெசேஜ் போய்க்கொண்டேயிருக்கும். ஆனால் அவளது எஸ்.எம்.எஸ் அவனுக்கு இதயத்துடிப்பாக இருந்தது. ஒரு மெசேஜ் வரத்தாமதமானாலும் இதயம் நின்று போவது உறுதி. அவளது தொடுகை அவளுக்கு சாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு பெண் தெட்டால் ஆணுக்குள் ஏற்படும் ஆயிரக்கணக்கான அதிர்வுகளை அவர்கள் உணர்வதில்லை. இதுபோக அவர்கள் இருவரின் நட்பை காதலென்று கதைகட்டும் நண்பர்கள் வேறு. அதை கேட்கும்போது ஒருபக்கம் கூத்தாடவேண்டும் போலவும் மறுபக்கம் கூச்சமும் அவனை கொன்றுதீர்க்கும்.

இதற்குமேல் தாங்காது என்று பொறுமையிழந்தவனாய் பெரும்பாடுபட்டு அவளது கண்களைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று செல்லிவிட்டான். அவள் என்ன சொல்லப்போகிறாளோ என இருதயம் துடித்த ஓசை அவனது காதில் கோயில்மணி போல ஒலித்தது. இருக்கும் நட்பிற்கும் வேட்டு வைத்து விட்டோமா என கண்கலங்க ஆரம்பித்தது. ஆனால் அவளோ எந்த அதிர்ச்சியும் இல்லாதவளாய் சிரித்துக்கொண்டு ‘ஐ லவ் யூ சோ மச்’ என்றாள். என்னது, லவ்…. என் காது என்னிடம் பொய் சொல்லுமா? இல்லை உண்மைதான்… அட உண்மைதான். எரிமலையொன்றில் பனிமழை பெய்ததுபோல மனதுகுளிர்ந்தது. நிற்கமுடியாமல் தடுமாறினான். உலகத்தின் ராஜாவாகிவிட்ட நினைப்பு அவனுக்கு. டங் டடங் டடடங் டடடடடங் என்று மனசுக்குள்ளேயே ஒரு குத்துப்பாட்டு போட்டு ஆட தயாராகும்போது அவனுக்கு மட்டுமில்லை அவளுடன் நட்பாய் பழகும் அனைத்து ஆண்களுக்குமே அவள் ஐ லவ் யூ சொல்வது வழக்கம் எனத்தெரிந்ததும் அவனது குத்துப்பாட்டு டடடடடங் டடடங் டடங் டங் என சுதிகுறைந்தது.

அவளைப் பொருத்தவரை மற்றவர்களும் தானும் ஒன்றில்லை என்பதை அனைவருக்கும் நிரூபிக்க அவன் இல்லாத முயற்சியெல்லாம் எடுத்துப் பார்த்தான். நானும் நீயும் ஒரேமாதிரி யோசிக்குறோம் நாம ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது, என்னைவிட இன்னொருத்தன் உன்னை சந்தோசமா பாத்துக்கமாட்டான், வாழ்ந்த உன்கூடமட்டும்தான் இல்லேனா கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என்று இப்படி பல சினிமா வசனங்களெல்லாம் சொல்லி சொல்லி அவர்கள் சந்திக்கும் தருணங்களையெல்லாம் அவளுக்கு வெறுப்பாக மாற்றினான். அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சுகமாக சந்தோசமாக வாழத் துடிப்பவள். காதலினால் கஷ்டங்கள்தான் மிஞ்சும் என்பதையறிந்தும் அவள் காதலிப்பாளா? வேண்டாம்… நாம பிரண்ட்ஸாவேயிருப்போம், ஏன் காதல் காதல்னு வாழ்க்கைய கெடுத்துக்குற?, காதலத் தவிர நாம நாதிக்க எவ்வளவோயிருக்கு அப்படின்னு அவளும் அதிகமா யோசித்து பல அறிவுரைகளைக் கூறினாள். அவன் எதையும் ஏற்க தயாராக இல்லை. அப்ப ஏண்டி உரசி உரசி வந்த? பார்க்குல ஒண்ணா உக்காந்து ஐஸ்கிறீம் தின்னது, கடல்ல இரண்டுபேரும் ஒண்ணா குளிச்சது இதுக்கெல்லாம் என்னடி அர்த்தம் அப்படினு அவனும் கொஞ்சம் மதியிழந்தவனாய் பேச ஆரம்பிக்க அவர்கள் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. அவள் அவனை தவிர்க்கத் தொடங்கினாள். அவன் முன்பாக மற்ற ஆண்களுடன் நெருக்கமாகப் பழகினாள். கல்லூரிக்கு வெளியே அவனது தொடர்பை துண்டித்தேவிட்டாள். இதனால் மேலும் டிஸ்டர்ப்பான கண்ணன் நீ சரியென்று சொல்லாவிட்டால் நான் தற்கொலை செய்திடுவேன் என்று பூச்சாண்டிகாட்டினான். இந்த கடும் நெருக்கடியான சூழலைழெவ்வாறு சமாளிப்பது என்று தெரியாதவளாய் அவள் யோசித்து ஒரு முடிவெடுத்தாள்.

அவன் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றான். எல்லாம் சாதாரணமாக இருப்பது போலவே அவனுக்கு தோன்றியது. இடைவேளையின்போது அவனது நண்பர்கள் கூப்பிட்டார்கள் என்று மாடியில் உள்ள தனியறைக்கு சென்றான். அவனது ஆசிரியர்களோடு அவனை முறைத்தவண்ணம் அங்கே நின்றிருந்தாள் அஸ்ரா… எதற்கு இவர்கள் இங்கே நிற்கிறார்கள், என்னையேன் இங்கே அழைத்துவந்தார்கள் என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் இடதுபுறமாக ஒரு பலம்வாய்ந்த கை அவனது கன்னத்தில் பளார் என்று அளைந்தது. நிலைதடுமாறிய கண்ணன் இந்த யொங் என்ற சத்தம் அறையின் எந்தப் பக்கம் இருந்து வருகிறது என சுற்றிமுற்றிப் பார்த்தான். அங்கிருந்த பெரியவர்களின் வாய் அசைவது மட்டும் விளங்கியது. என்ன சொல்லியிருப்பார்கள் என உணர்வது அவ்வளவு கடினமானது அல்ல. இவ்வளவு நாளும் நல்லவன் என்று பெயர்வாங்கிய கல்லூரியில் இன்று ஒரு பொம்பளப்பொருக்கி என முத்திரை குத்தப்பட்டதுகூட அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அவளுக்கு தான்தான் விருப்பமான நபர் என்று நினைத்திருந்தானே… இன்று அவனை அடிக்க யார்யாரையோ கூட்டி வந்திருக்கிறாளே? அப்போ என்னை அவளுக்கு தேவையில்லையா என்று நினைக்க நினைக்கத்தான் அவன் மனம் வெதும்பியது. அந்த யொங் ஓசை மறைந்து காது கேட்க ஆரம்பிக்கம்போது ‘இனிமேல இவள தொந்தரவு பண்ணா போலீஸ்கிட்ட சொல்லவேண்டியிருக்கும், ஜாக்கிரதை’ என அவனது கல்லாரி தலைமை ஆசிரியர் சொன்னது மட்டும் அவனுக்கு கேட்டது.


என்ன யோசித்து என்ன பலன்? எல்லாம் நடந்துபோன விசயங்கள்… யாரால மாத்தமுடியும்…. அதன்பிறகு அவளை அவன் பார்க்கவேயில்லை. ஒருமுறைமட்டும் கல்லூரிக்கு சென்றான். அனைவரின் பார்வையிலும் ஒரு தோத்தாங்கோளியாக மானம் போனவனாக நிற்பதை விட படிப்பைவிடுவதே மேல் என்று மயிர்நீப்பின் வாழாக்கவரிமானாக சொல்லாமல் கொல்லாமல் கல்லூரியைவிட்டு நீங்கினான். இன்றுவரை பெற்றோருக்கு தெரியாமலும் பாதுகாத்து வருகிறான். மகன் என்ன செய்தாலும் சரியாத்தான் இருக்கும் என்று நம்பும் பெற்றோரும் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவளை காலம் முழுக்க நான்தான் பார்க்கபோறேன்னு நினைச்சான். ஆனா அவ அவனை பார்க்கவேபோறதில்லன்றததான் அவன் மனசு ஏத்துக்க கஷ்டப்படுது. ஆனால் பல சமயங்களில் அந்த கஷ்டத்தை மறந்து குடும்பம், படிப்பு, வேலைதான் உலகத்திலேயே முக்கியம் என்பதை உணர்ந்து பாடுபட்டு வெளியுலகில் தன் நல்லபெயரைக் காப்பாற்றிவருகிறான். பஸ் எஞ்சின் ஸ்டார்டானதில் தான் இருக்கும் நிலையுணர்ந்து ஓரக்கண்ணில் வரும் கண்ணீர்த்துளியை யாரும் காணாமல் துடைத்தான். எஞ்சினின் பேரிரைச்சலுடன் பஸ் புறப்பட்டு செல்ல ஆரம்பிக்க அந்த இடத்தில் இன்னொரு பஸ் வந்து நின்றது.