Sunday, November 10, 2013

மஞ்சள் குங்குமம்...

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாதாமாதம் இடம்பெறும் சுமங்கலி பூஜை மிகவும் பிரசித்தம். நூற்றுக்கணக்கான சுமங்கலிகள் வரிசையாக அமர்ந்து விளக்கு ஏற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்வார்கள். அந்த விளக்குபூஜை செய்து அம்மனை வழிபட்டால் அவர்களது மஞ்சள் குங்குமம் நிறைந்து சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல அங்கே வரும் பெண்களின் வாழ்க்கையிலும் மங்களம் நிறைந்து முகம் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர். மாதாமாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் இந்த விளக்குபூஜை இந்த மாதம் கனகாவிற்கு மிக முக்கியமானதொன்று. மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோயிலில் குருக்களாக பணியாற்றும் சுந்தரேஸ்வரனை திருமணம் செய்து அவள் பங்குபெறும் முதலாவது சுமங்கலி பூஜை என்பதால் மகிழ்ச்சியில் பூத்துகுலுங்கினாள் அவள். குருக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை குருக்களின் மனைவியான தனக்கும் கிடைக்கும் என்ற பூரிப்பிலும் புதிதாக வந்திருக்கும் குருக்களின் மனைவி இவர்தான் என்று அனைவரும் தன்னைப்பற்றியே பேசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் பூஜை எப்போதும் தொடங்கும் என காத்துக்கொண்டிருந்தாள். அவள் காத்துக்கொண்டிருந்த தருணமும் வந்தது.

பட்டுசேலையுடனும் தலைநிறைய பூ வைத்து மஞ்சள் குங்குமம் சூடிக்கொண்டு சிரித்தமுகத்துடன் பல சுமங்கலிப்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சந்நிதானத்திற்கு முன்பாக வரிசையாக அமர ஆரம்பித்தனர். ஒவ்வொருவருக்கும் முன்பாக ஒரு குத்துவிளக்கும் சிறுகிண்ணத்தில் குங்குமமும் வைக்கப்பட்டது. பூஜை தொடங்கும் நேரம் வந்தது. அனைவரும் அம்மனை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர். சுந்தரேஸ்வரக்குருக்கள் ஒரு தியானத்தை ஓதிவிட்டு லலிதா சகஸ்ரநாம புத்தகத்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையால் மைக்கை பிடித்துக்கொண்டு 'ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ' என மந்திரத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு நாம உச்சாடணத்திலும் பெண்கள் தமக்கு முன்னேயிருந்த கிண்ணத்திலிருந்து இரண்டுவிரல்களால் குங்குமத்தை கிள்ளி விளக்கிற்கு முன்னேயிருந்த வெற்றிலையில் போட்டு அர்ச்சனை செய்தார்கள். 1008 நாமங்களும் நிறைவு பெற்றபின் விளக்கிற்கு தூபதீபம் காட்டினர். அம்மனுக்கு பூஜை நடந்தது. பூஜை முடியும் தருவாயில் வந்திருந்த சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் சிவப்புதுணி கொடுக்க ஆயத்தம் செய்தார்கள்.

மற்றவர்களிடம் மதிப்புகொண்ட ஒரு சுமங்கலிதான் பிரதானமாக இருந்து அனைவரின் தாலிக்கும் குங்குமம் வைத்து மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டும். நான்தானே இந்த கோயில் குருக்களின் மனைவி. நானே அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் கொடுத்தால் என்ன? அப்போதுதானே மதிப்பாக இருக்கும் என எண்ணினாள் கனகா.

ஒவ்வொரு தட்டுகளிலும் இடம்பெறவேண்டிய துணி, மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வெற்றிலை, பழம் ஆகியவற்றை அடுக்கிக்கொண்டிருந்தார் சுந்தரேஸ்வரக்குருக்கள். அவரிடம் அருகில் சென்று 'இந்த மஞ்சள் குங்குமம் எல்லாம் நானே எல்லாருக்கும் குடுக்கட்டா?' என்றாள். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. கோயில்தொண்டே பணியென்று வாழ்ந்துவரும் சிவநாதருடைய மனைவி பார்வதியம்மாளே ஒவ்வொருமுறையும் மஞ்சள் குங்குமம் கொடுப்பார். அவருடைய கையிலே வாங்கினால்தான் மங்களம் நிலைக்கும் என்பது பக்தபெண்பணிகளின் நம்பிக்கை. அந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி? ஆனால் கேட்பது யார்? புதுப்பெண்டாட்டி... சிறுவயதில் இருந்து செல்லமாக வளர்க்கப்பட்ட அவள் முன்கோபக்காரியாகவும் பிடிவாதக்காரியாகவுமே இருக்கிறாள். தனக்கு மரியாதை கிடைக்காவிட்டால் சட்டென்று உணர்ச்சிவசப்படகூடியவள். சூழ்நிலை புரியாமல் எல்லார்முன்னும் எடுத்தெறிந்த நடந்துவிடுவாளே.. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் குருக்கள். தன் கையால் மஞ்சள் குங்குமம் வாங்கி அனைவரும் தன்னையும் புகழவேண்டுமென்ற கணிப்போடு காத்திருந்தாள் கனகா.

மனைவி சொல்லே மந்திரமாக பாவித்து சுந்தரேஸ்வரரும் பெரியகுருக்களிடம் அனுமதி கேட்கபோனார். ஆனால் தர்மகர்த்தாவின் மனைவி வந்திருப்பதாகவும் அவருக்கு பார்வதியம்மாள் கையால் குங்குமம் வாங்கினால்தான் திருப்தியாக இருக்கும் என்றும் கூறி மறுத்துவிட்டார். சுந்தரேஸ்வரரும் அதோடு மறந்துவிட்டார். ஆனால் தன் கையால் மஞ்சள் குங்குமம் கொடுக்கப்போகிளோம் என ஆசைப்பட்டுக்கொண்டிருந்த கனகா ஒவ்வொரு நொடிப்பொழுதும்தாவலாக இருந்தாள். மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டிய நேரம் வந்தது. அனைவரும் தன்னை மரியாதையாக அழைத்து தன்கையால் கொடுக்கவைக்கபோகிறார்கள் என கனகா ஆசையோடு பார்த்துக்கொண்டிருக்கையில் கோயில் பணியாள் தட்டுகளை பார்வதியம்மாளிடம் கொடுக்க அவர் ஒவ்வொன்றாக ஒவ்வொரு பெண்ணிடமும் கொடுக்க ஆரம்பித்தார். கனகாவிற்கு அவமானமாயிற்று. கோயில் குருக்களின் மனைவி தான் இருக்கும்போது யாரோ ஒரு கிழவியிடம் கொடுத்து மஞ்சள் குங்குமம் கொடுப்பது தனக்கு பெரிய தலைகுனிவாக எண்ணினாள். குருக்களின் மனைவி, புதிதாக திருமணமாகி வந்திருக்கிறாள் என்று தன்னைப்பற்றி அனைவரும் பேசுவார்கள் என எதிர்பார்த்ததும் ஏமாற்றமாய்ப்போனது. அனைவரும் பார்வதியம்மாளின் கைராசியையே புகழ்ந்துகொண்டிருந்தார்கள். எல்லா சம்பவங்களுக்கும் முடிச்சுப்போட்டு தனக்கு இந்த இடத்தில் மரியாதை இல்லை என முடிவுகட்டி தனியாக ஒரு மூலைக்கு சென்று அழ ஆரம்பித்தாள். அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த அனைவரும் 'என்னடா இந்தப்பெண்? நல்ல விசயம் நடக்கிற இந்த இடத்தில இப்பிடி வந்து அழுதுக்கொண்டிருக்கிறாளே' என முகம் சுழித்தனர். சுந்தரேஸ்வரக்குருக்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவள் அருகில் மெதுவாக சென்று 'இதுக்குப்போய் இப்பிடியா அழுவ? மானம் போகுது.. வீட்ட போடி' என அதட்டினார். அவரை முறைப்போடு பார்த்து அழுத கனகா 'உம் பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாம காரியம் நடக்குது. அத கேக்காம என்ன வந்து அதட்டுரீர்?' என ஆவேசமாகி தலையில் இருந்த பூவை இழுத்து கையில் போட்டிருந்த காப்புகளை உடைத்து நகைகளை அறுத்து வீசி புயலடித்ததுபோல சீறினாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் உறைந்துபோனார்கள். கோயில் பிரமுகர்களுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சுந்தரேஸ்வரர் கனகாவை இழுத்துக்கொண்டு போய்விட்டார். அனைவரும் சங்கடத்துடனே வீடு போனார்கள்.

அடுத்தநாள் தர்மகர்த்தாவிடம் மன்னிப்பு கேட்க வந்தார் சுந்தரேஸ்வரர். அவருடைய முகத்தை எப்படி எதிரகொள்வதென தெரியாமல் குழம்பிநின்றார். ஆனால் தர்மகர்த்தவோ குருக்களை தவறாக எண்ணாமல் 'சிறிய பெண். ஏதோ ஆசைப்பட்டுவிட்டாள். நடக்காத கோபத்தில் இப்படி நடந்துவிட்டாள். பரவாயில்லை. அடுத்தமுறை அவளைக்கொண்டே மஞ்சள் குங்குமம் கொடுக்கவைப்போம். கவலைப்படாதீர்கள்' என்றார். சந்தோசமாக வீட்டுக்கு சென்ற குருக்கள் இந்த விசயத்தை கனகாவிடம் பகிர்ந்தார். அவளுக்கு இருப்புகொள்ளவில்லை. முக்கியமாக தான் அவ்வாறு சீற்றத்தோடு நடந்ததால்தான் தனக்கு மரியாதை தேடிவந்தது. இந்த மாதிரி ஆட்களை இப்பிடித்தான் பண்ணவேண்டும் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். தன்னை பார்த்து முகம் சுழித்தவர்களுக்கு அடுத்தமுறை நல்ல பாடம் புகட்டுகிறேன் என இறுமாப்போடு இருந்தாள். அடுத்த பௌர்ணமியும் வந்தது.

வழக்கம்போல எல்லாபூஜையும் முடிந்தபிறகு மஞ்சள் குங்கும தட்டுகளை கனகாவிடம் கொடுத்து கொடுக்க செய்யுமாறு தர்மகர்த்தா சொன்னார். கனகாவும் பெருமையுடன் ஒரு தட்டை எடுத்து முதலாவதாக இருந்த பெண்ணிடம் கொடுக்க சென்றாள். அந்தப்பெண்ணோ அதை வாங்காமல் விலகி சென்றுவிட்டார். எல்லோருக்கும் அதிர்ச்சி. இப்படி சாமி பிரசாதத்தை அலட்சியப்படுத்துகிறாரே என்று. அடுத்த பெண்ணிடம் கொடுக்க சென்றபோதும் அவரும் வாங்கவில்லை. எந்த பெண்ணுமே கனகாவின் கையால் மஞ்சள் குங்குமம் வாங்க முன்வரவில்லை. கனகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன நிலைமை என்பதை புரிந்துகொள்ளமுடியாமல் 'என்னவாயிற்று.. ஏன் பிரசாதம் வாங்கவில்லை' என அந்த பெண்களிடம் விசாரித்தார் தர்மகர்த்தா. அந்த பெண்களில் ஒருவர் முன்னுக்கு வந்து 'எங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவேண்டுமென்றுதான் நாங்களே இந்த பூஜைக்கு வருகிறோம். ஆனால் கணவன் உயிரோடு இருக்கும்போதே பூவை அறுத்து பொட்டை அழித்து காப்புகளை உடைத்து அமங்களமாக நடந்துகொண்ட இந்த பெண்ணிடமிருந்து மஞ்சள் குங்குமம் வாங்கினால் அதற்கு என்னதான் பலன் இருக்கும்?' என்றார். கனகாவிற்கு மனது உறைத்தது. நிலைமையை சமாளிக்க தர்மகர்த்தா பார்வதியம்மாளை அழைத்து மஞ்சள் குங்குமத்தை கொடுக்கவைத்தார். இடம் பொருள் தெரியாமல் ஆணவமாக நடந்துகொண்டதற்கு ஆயுளுக்கும் மறக்கமுடியாத தண்டனை கிடைத்ததை எண்ணி அழ ஆரம்பித்தாள் கனகா. இம்முறை சமாதானம் பண்ண சுந்தரேஸ்வரர் வரவில்லை.

Saturday, November 2, 2013

காலைல ஒரு கிஸ்...

தோழியைப் பார்க்கவந்த இடத்தில் சுகுணாவிற்கு மனதில் ஒன்று பட்டது. திருமணவீடு, நண்பர்கள்வீடு, கோயில் என எங்கு சந்தித்துக்கொண்டாலும் தன் கணவனைப்போல மனைவியை கவனிக்க உலகில் ஆளே இல்லை என நண்பர்களிடம் வாய் ஓயாமல் புகழ்ந்துதள்ளிக்கொண்டே இருக்கிறாளே இந்த காயத்திரி. நேரடியாகவே கேட்டுவிடவேண்டியதுதான். 'நீ சொல்றதயெல்லாம கவனிச்சுட்டுதாண்டி வாறேன். அப்பிடி ஒண்ணும் பெரிசா இல்லையே... ஒரு சாதாரண வேலைதானே பாக்கறார். கார்கூட இல்ல. சொந்தவீடு இருந்தாலும் அவ்ளோ பெரிய வீடில்லியே இது. சம்பளமும் அவரோட ப்ரண்ட்ஷவிட குறைவாத்தானே இருக்கு. சொஷைடில அவ்ளோ கலந்துக்கறதும் இல்ல. எந்த ஒரு கிளப்லயும் மெம்பர் இல்ல. ஸ்டைலா ட்ரெஸ் பண்றதும் இல்ல. எந்த பார்ட்டிலயும் கலந்துக்குறது இல்ல. ஐஃபோன், காலக்‌ஷி மாதிரி காஷ்ட்லி ஃபோன் இல்ல. சிங்கிங்க், டான்ஸிங்க் மாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸும் இல்ல... எதவச்சு உன் வீட்டுகாரர்தான் பெஸ்ட்னு சொல்ற?'

காய்கறி வெட்டிட்டு இருந்த காயத்திரி சுகுணாவ பொறுமையா பார்த்து 'காலைல எழுந்திரிச்சதும் ஒரு கிஸ், உண்மையா ஒரு ஐ லவ் யூ, ஆபிஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வாறது, சமையல்ல ஹெல்ப் பண்றது, டைய்லி ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்றது, எனக்கு தலைவலின்னா தலைதேய்ச்சுவிட்டு தோள்ள சாய்ச்சுக்கிறது, என்ன முடிவுன்னாலும் என்கிட்ட கலந்து பேசறது, வீக்லி ஒருக்கா பீச், மன்த்லி ஒருக்கா வெளியூர் டூர், குடி,சிகரட் இல்ல, தேவல்லாம ஒரு ரூபா செலவழிக்குறது இல்ல. முக்கியமான எந்த பொண்ணையும் திரும்பிப் பாக்குறது இல்ல. இப்பிடி ஒரு புருஷன்கிடைச்சா வாழ்நாள்முழுக்க தூக்கி தலைல வச்சு கொண்டாடலாம். உன் வீட்டுக்காரர நீயும் பெருமையா பேசு! நான் வேணாங்கலையே...' சுகுணா அமைதியானாள்.

Saturday, October 26, 2013

நின்னைச் சரணடைந்தேன்!!!


ராகம் - புன்னாக வராளி

பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
 
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னைச்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தனகொன்றவை போக்கென்று (நின்னைச்)

 
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னைச்)

 
துன்ப மினியில்லைசோர்வில்லைதோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னைச்)

 
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்னைச்)





அவன்தான்!


பொண்ணுங்களே இல்லாத இடத்துல வேலை செய்யுறதுகூட பரவாலங்க.  ஆனா இத்தனை பொண்ணுங்களுக்கு நடுவுல வேலைபாத்துகிட்டு ஒருத்தியும் நம்மள கவனிக்கலங்குற கடுப்பு இருக்கே... அட அதாவது கண்ணமூடிகிட்டு சமாளிச்சு போகலாம். ஆனா தீயா வேலை செய்யணும் குமாருல வர்ர கணேஸ் வெங்கட் மாதிரி ஹாண்ட்ஸம் ஆசாமிங்ககிட்ட இவளுக போய் வழியிறத பாக்கணுமே. வயிறு எரியுற எரிச்சல்ல அடுப்ப வச்சு சமைக்க ஆரம்பிச்ச ஒரு ஊரே சாப்பிடலாம். அட அந்த படத்துலயாவது ஒரு ஆபிஸுல ஒருத்தன் இருந்தான். ஆனா எனக்குன்னு எங்கியிருந்துதான் வாறாங்களோ தெரியல. கமல் மாதிரி, அஜித் மாதிரி, அரவிந்தசாமி மாதிரி, மாதவன் மாதிரி அத்தனை பேரும் இங்கதான் இருக்காங்க. நானும் விஜய்சேதுபதி மாதிரித்தான் இருப்பேன். ஆனா காம்படிஷன் அதிகமா இருக்குறதால ஃபீல்டுல நிக்கமுடியல. இப்பிடி எரிச்சலோட இருக்குறதுக்கு பேசாம வேலைய விட்டு போகாலாமானுகூட தோணும். என்னை மாதிரி ஆளுகளுக்கு எங்க போனாலும் இந்த பிரச்சினை இருக்கத்தானேபோகுதுனு மனச மாத்திப்பேன். ஏனோ வந்தோம், வேலை செய்யுறோம், சம்பளம் வாங்கினோம்னு வாழ்க்கை போய்க்கிட்டு இருந்திச்சு.

இன்னிக்கும் அப்பிடித்தான் வழக்கமா வந்து என் சீட்ல உட்கார்ந்து தூங்குறதுக்கான எல்லா ஏற்பாடும்... ஸாரி எழுத்துப்பிழையாயிடுச்சி, வேலை செய்யுறதுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுருந்தேன். எப்பயும் ஆபிஸ் வந்ததும் எவனாவது ஏதாவது பொண்ணுகிட்டபோய் படம் ஓட்டிகிட்டு இருப்பான். அவங்களும் ஏதோ mr.bean ஜோக் மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பாளுக. குறிப்பா எனக்கு எதிர் சீட்டுல இருக்குற விஜி என்னை வெறுப்பேத்தணும்னே எவனோடயாவது போய் பல்ல காட்டிகிட்டு இருப்பா. இப்பிடி ஒருத்தன்கூட பேசுறதால இன்னொருத்தன காண்ட் ஆக்குறதுல இந்த பொண்ணுக்களுக்கு என்ன சந்தோசமோ தெரியல. இன்னைக்கும் அப்பிடித்தான்.. அட இவன் யாருடா புதுசா? இருக்குற போட்டி பத்தாதுனு புதுசா இன்னொருத்தனா.. அதுலயும் பாருங்க இந்த விஜி வந்த முதல் நாளே அவன்கூட ஃபிரண்டாயிட்டாளே.. எல்லாம் என்னை கடுப்பாக்கணும்னுதானே.. செஞ்சிட்டுபோகட்டும்னு என் வேலையை பார்க்கப்போனேன். முடியல. மைன்ட் அங்கயே போய்ட்டு இருந்திச்சு. அவன் வேற பார்க்குறதுக்கு துப்பாக்கி வில்லன் மாதிரி அவ்வளவு ஹாண்ட்ஸமா இருந்தான். போச்சு. முதல்நாளே இந்த முட்டகண்ணு விஜியோட ஃபிரண்டாயிட்டான். ஒரே வாரத்துல எல்லா பொண்ணுகளோட ஃபேஸ்புக்கையும் வாங்கிடுவான் போலயே. எரிச்சலோட நாள் முடிஞ்சுது.
அவனைக் கடந்து போகும்போதெல்லாம் என்னைப் பார்த்து சின்னதா சிரிப்பான். போனா போகட்டும்னு நானும் சிரிச்சு வைப்பேன். எப்ப பாத்தாலும் அவன் மேசைக்கு ஏதாவது ஒரு பொண்ணு விஜயம் செஞ்சிட்டே இருப்பா.. என் மேசை? ஈயாடுது. இதுனாலயே அவனை ஒரு எதிரி மாதிரி மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். எப்படா இவனை பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் வரும்னு அப்படி ஒரு தீவிரம். ஏதோ இவனை விட்டா ஆம்பிளையே இல்லன்ற மாதிரி எல்லா பொண்ணுங்களும் இவன்கிட்டயே போய் பேசுறீங்கல்ல? இவனை விட நான் ஒசத்தினு நிரூபிக்கிறேன். எல்லாருக்கும் முன்னால நானும் ஹீரோவா டெவலப் ஆகுறேனு மனசுக்குள்ள வைராக்கியம் எல்லாம் வந்திச்சு. நமக்கும் காலம் வராதா...

'என் சிஸ்டத்துல ஏதோ பிராப்ளம் போல இருக்கு. RAM ஒருக்கா செக் பண்ணனும் உங்கிட்ட ஸ்க்ரூ ட்ரைவ் இருக்கா?'

'என்கிட்ட இல்ல புதுசா வந்தான்ல இந்த ஜான் அவன்கிட்ட இருக்கு போய் வாங்கு..'

அவன்கிட்டயா? அவன்தான் நம்ம எதிரியாச்சே. நான் போமாட்டேன்ப்பா. ஆனா சிஸ்டத்த ஓபன் பண்ணனுமே.. கடுப்போட அவன் மேசைக்கு போனேன். என்னைப்பாத்ததும் அழகா சிரிச்சான். ஆமா இது இப்ப ரொம்ப முக்கியம்.. 'எனக்கு ஒருக்கா ஸ்க்ரூ ட்ரைவர் வேணும்' அவன் ஒரு நிமிஷம் யோசிச்சிட்டு டக்குனு எந்திரிச்சு போய் இரண்டு நிமிஷத்துல ஸ்க்ரூ ட்ரைவரோட வந்தான். 'ஸாரி என்கிட்ட இல்ல.. யமுனாகிட்ட இருந்ததா ஞாபகம். அதான் போய் வாங்கிட்டு வந்தேன் ப்ளீஸ் மறக்காம கொடுத்துடுங்க..'

எந்த பொண்ணு என்ன வச்சிருக்கானு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். எவ்வளவு எரிச்சலா இருக்கும். சே நம்ம வாழ்க்கை இப்பிடி இருக்கேனு அதீத கழிவிரக்கதோட கவலையா இருந்தேன். ஆபிஸ் முடியுற நேரம் அவன் வந்து சிரிச்சான். கேள்வியோட அவனைப் பார்த்தேன். 'ஸ்க்ரு  ட்ரைவர் வாங்கிட்டு வந்தீங்களே...' அட.. ஆமால்ல. அந்த கருமத்த எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே. இவன் மேல இருக்குற கோபத்துல நாம என்ன செய்யுறேம்னு நமக்கே தெரியல. இவன்வேற நின்னுட்டு இருக்கானேனு என் மேசை முழுக்க தேடிப்பார்த்தேன். 'சீக்கிரம் தாங்க... நேரமாகுது' இவன் விடுறமாதிரி இல்ல. எங்க வச்சேனு தெரியலயே. 'கவனமா கொண்டு வந்து தாரேனு சொன்னேன். ப்ளீஸ் கொஞ்சம் நல்லா பாருங்க.' வந்த ஆத்திரத்தை எங்க கொட்டுறதுனு கொதிச்சுபோன நேரத்துல கம்ப்யூட்டர்  CPU
மேலதான் ஸ்க்ரூ ட்ரைவர் இருந்திச்சு. எப்பிடி மறந்தேன்? அதை எடுத்து அவன் கையில கொடுத்து 'ஒரு சாதாரண ஸ்க்ரூ ட்ரைவருக்காக இப்பிடி நிக்குறீங்களே'னு கொஞ்சம் ஆத்திரித்தோடயே கேட்டேன். அவன் சிரிச்சுக்கிட்டே 'நான்தானே வாங்கிக்கொடுத்தேன்' என்று போய்விட்டான். நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்.

நான் எப்பிடி இதை கவனிக்க தவறினேன். ஒருவேளை அவன்மேல இருந்த கோபத்தால அவனை பார்க்காமலயே பதில் சென்னதால தவறியிருப்பேனா? அச்சுஅசலாக ஒரு திருநங்கைக்கு என்ன முலாம் பூசி நம்ம ஊடகங்கள் நம்மள வளர்த்திச்சோ அதே சாயல்ல அவன் சொல்லிட்டு போனான். ஒரே குழப்பமா இருந்திச்சு. சுமாரான பசங்களே தங்கள ஹாண்ட்ஸமா காட்டிக்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க. இவன் இயற்கையாவே வசீகரத்தோட இருக்கான். இவனுக்குள்ள இப்பிடி ஒரு குணம் இருக்குமானு இன்னும்கூட நம்ப முடியல. தூரத்துல இருந்து அவனையே நோட்டம் விட்டேன். அவனுடைய அசைவுகள், நெழிவுகள், பார்வைகள், மற்றவருடன் பேசும் பாங்கு.. அப்படியே பெண்குணத்தோடு இருந்தது. இடதுகையை மடித்து வலதுகையை அதன் மேல் வைத்து தாடையைப் பிடித்தனே.. அந்த நேரம் நூறு சதவீதம் உறுதியானது. உள்ளுக்குள் ஒரு குரூர ஆனந்தம். மகிழ்ச்சியோட வீட்ட போனேன். நினைக்க நினைக்க சிரிப்பு வர்ரத தடுக்கமுடியல. அந்த விஜி இவனோட பேசிட்டு இருக்கும்போது இவன் அவளைவிட நெழிஞ்சு அபிநயத்த காட்டினா எப்பிடி இருக்கும். நல்லா வேணும். என்னையவா கடுப்பேத்தினீங்க.. உங்களுக்கு அக்கா ஒருத்தன் வந்திருக்கான் அவனோடயே நல்லா பேசுங்கனு மனம் முழுக்க அதே நினைப்பு ஓடிட்டு இருந்திச்சு.

அடுத்தநாள் ஆபிஸ்ல அவனைப் பார்க்கும்போது முதல்தடவை என்னை நானே முழு மனிதனாக உணர்ந்தேன். இந்த ஆபிஸ்ல என் கண்ணுமுன்னாலயே இவங்க போட்ட ஆட்டத்துல என்மேல ஏதாவது குறை இருக்குமோனு கவலைப்பட்ட காலங்களை நினைச்சுப்பார்தேன். ஆனா இப்ப என் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கத்தான் இவன் வந்திருக்கான்னு சந்தோசமா இருந்திச்சு.. எனக்கென்ன குறை, நான் ஆம்பிளை சிங்கம் அப்படிங்குற அற்ப நிம்மதி. ஹாயா என் கதிரையில உக்காந்து அவன் மேசையைப் பாரத்தேன்.  இன்னைக்கு எவளும் வந்து பேசலயா? ஆஹ் அந்தா வாராலே கீதா. அவள் அவனருகில் வந்து ஏதோ கேட்க அவன் அதே பெண் ஜாடையில் கையை லேசாக வீசினான். அவள் ஒரு மாதிரி பார்த்து கேனைசிரிப்பு சிரித்துவிட்டு போயிட்டா. நான் குபீருனு சிரிச்சிட்டேன். நான் பார்க்க வசீகரமா இல்லாட்டியும் சுமாராவது இருப்பேன். அதுக்காக என்னை திரும்பிக்கூட பார்க்காம அழகான பசங்களா தேடிப்போய் பேசிட்டு இருந்த அத்தனை பொண்ணுகளும் இவனோட இந்த குணத்தால எப்பிடி மூக்கறுபடுறாங்கனு பார்த்தே ஆகணும்ன்ற ஆசைதான் முழுசா இருந்திச்சு.. இனி வயிறு எரியத்தேவையில்ல.. எரிச்சல்படத்தேவையில்ல.. முக்கியமா ஒரு பொழுதுபோக்கு கிடைச்சிருக்கு. என்ஜாய். எனக்குள் சிலிர்த்துக்கொண்டேன்.

அற்ப விசயத்துக்காக இவ்வளவு சந்தோசப்பட்டத நினைக்க மனசு கறுத்துப்போச்சு... இவங்க ஏன் இப்பிடி இருக்காங்க. இந்த கூட்டத்துல நாமளும் சேர்ந்துட்டோமோனு ஒரு மாதிரி இருந்திச்சு. ஒரு மனுசனுக்கு குறை இருந்தா இப்பிடியா குத்திக்காட்டுறது? அப்ப நான் மட்டும் என்ன செஞ்சேன் என்று மனசு குறு குறுத்தது. அவங்க இப்பிடி செஞ்சிருக்ககூடாது.. லஞ்ச் டைம் கேண்டீன்ல கை கழுவப்போனப்பதான் அத கேட்டேன். விஜியும் கீதாவும் இன்னும் சில பொண்ணுங்களும் ஜான் பத்தி பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க. அவன் பண்றமாதிரி ஜாடை பண்ணி அவன கேலி செஞ்சு சிரிச்சிட்டிருந்தாங்க. 'இந்த மாதிரி ஆளுகளெல்லாம் நான் பாத்ததே இல்லடீ, அதான் அவன் எப்பிடியெல்லாம் அபிநயம் பிடிக்குறான்னு பார்க்குறதுக்காகவே  அவன்கூட டைலி போய் பேசுறேன்' என்று அவன்மாதிரி ஒரு அபிநயத்தோட கீதா சொல்ல எல்லாரும் விழுந்துவிழுந்து சிரிச்சாங்க. அப்பிடியே போய் நாலு அப்பு வைக்கலாமானு தோணிச்சு. 'அதுவும் பாருங்கடி அவன் சிரிக்குறதும் நடக்குறதும்.. அப்பிடியே எனக்கு ஒரு அக்கா..' என்ற கீதா திடீருனு நிப்பாட்டினாள். அவள் பார்த்துக்கொண்டிருந்த திசையில் ஜான் இருந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டிருந்திருக்கான். பாவம் என்ன நினைச்சிருப்பானோ. உண்மையா பார்த்தா இந்த ஆபிஸ்லயே நல்லவன் அவன்தான். யாரைப்பார்த்தாலும் முதல்ல அவன் முகத்துல ஒரு சிரிப்பு வரவேற்கும்.லவனை சிடுமூஞ்சியா பார்க்கவே ஏலாது. யாராவது ஏதாவது உதவி கேட்டா உடனே செய்வான். அப்படித்தான் நான் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்க அவனே போய் வாங்கிட்டுவந்து கொடுத்தானே.. மத்தவங்கள கஷடப்படத்தி ஒரு சொல் சொல்லமாட்டான். அவனைப்போய் இவங்க இப்பிடி நடத்தி இருக்காங்களே.. நான் வேற ஏதோ ஒரு காரணத்துக்காக சம்பந்தமேயில்லாத அவன்மேல மனசுக்குள்ளேயே ஒரு விரோதத்த வளர்த்துக்கிட்டு இருந்திருக்கேன். யார்மேல கோபப்படுறது, யாரை குற்றம் சுமத்துறது? மனசு பாரத்தோட வீட்ட போனேன்.

அவன் இன்னைக்கு யார்கூடயுமே பேசல. யாரும் அவன்கூட பேசுறதாவும் தெரியல. அப்பிடி ஒருத்தன் இருக்கான்னுகூட திரும்பி பார்க்கவும் இல்ல. அட நேத்து அந்த குரங்குங்க இவனை கேலி செஞ்சத இவன் பாத்தான்ல. அதுக்கு மன்னிப்பு கேட்கவாவது அவளுக வருவாங்கனு பார்த்தேன் ஒருத்தியையும் காணல. எப்பயும் சிரிச்சமுகத்தேட இருக்குறவன் இன்னைக்கு அத அடகுவச்சிட்டு வந்திட்டான்போல. அவன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு நினைக்கக்கூட பாவமாயிருந்திச்சு. இனி யார்கூட பேசினாலும் இப்பிடித்தானே நினைப்பாங்க. யார்கூடயுமே பேசாம விட்டுடுவோம்னு நினைப்பானோ? இவனோட வித்தியாசமான பாவனைகள் அவங்களுக்கு பிடிக்காட்டி பேசாம போயிருக்கலாம். நல்லா பழகுறமாதிரி பழகி அவனை வித்தியாசமா பாரக்கலைனு நம்பவச்சு ஏமாத்தியிருக்காங்க. அந்த ஏமாற்றம்தான் அவன் இப்பிடி ஒளியிழந்து இருக்கான். பிரேக்பஸ்ட்டும் எடுக்கல. லஞ்சுக்கும் வரல. நாள்முழுக்க இப்பிடியே ஏதோமாதிரி அவன் இருக்குறது இத்தனைநாள் அவனையே அவதானிச்சிட்டிருந்தறெனக்கு புதுசா இருந்திச்சு. வேற வழியில்ல. எழும்பி போய் இரண்டு காஃப்பி எடுத்துகிட்டி அவன் மேசையில வச்சு.. ' இந்த ஆபிஸ்ல நான் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க இத்தனைநாள் ஒரு மனுஷன்கூட இல்லாம போய்டான். கஷ்டத்திலதான் உண்மையான மனுஷனை அடையாளம் காணலாம். காஃப்பி குடிங்க' என்றேன். அவன் சிரித்தான்.

Friday, August 23, 2013

அது ஒரு கனாக்காலம்!

'இல்லம்மா... இன்னும் பஸ் ஏறல. லஞ்ச் சாப்டுட்டு மூணு மணி மாதிரி கிளம்புறேன். நீ சாப்ட்டு ரெடியாகி இரு. அஞ்சு மணிக்கு போனாலும் போதும். இது நமக்கு ஸ்பெஷல் ஷோ... டிக்கெட் எல்லாம் பக்காவா ரெடி. ஆஹ்... அப்புறம் அந்த லைட் ப்ளூ சுடிதாரப் போடு! ஓக்கே நான் பிறகு பேசுறேன்.  ஒழுங்கா சாப்பிடு...'

ஃபோன வச்சிட்டு ஒரு நிமிஷம் நீண்ட மூச்சு எடுத்தேன். இன்னைக்குத்தான் எத்தனை வேலை.. எதனனுதான் பாக்குறது? கஸ்டமர் ரெக்கார்ட்ஸ் கிளியர் பண்ணனும், அக்கவுண்ட் செக் பண்ணனும், இப்பனு பாத்து அம்மா கரண்ட் பில் கட்டு இல்லனா வெட்டிடுவான்னு பதறுறாங்க.. அவங்களுக்கு சீரியல் பிரச்சினை. காலைலருந்து நிற்ககூட நேரமில்லாம சுத்திட்டே இருக்கேன். ஆனாலும் அவ ஆசைப்பட்ட படத்துக்கு கூட்டிட்டு போகவேண்டிய மிகமுக்கிய கடமையில இருந்து தப்பிக்க முடியல. தப்பிக்க விரும்பல. அவள் கார்த்தியாயினி... கார்த்தி. கடந்த ஆறுமாசமா என் உலகத்த தன்னோட உலகமா மாத்தி காட்டினவ. என் சந்தோசத்த இரட்டிப்பாக்கி கவலைய குறைச்சு எனக்காக வாழுற ஒருத்தி. ஒரு சந்தர்ப்பத்துல பாத்துகிட்ட எங்களுக்கு ஒரே நேரத்துல ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் வந்திச்சு. பேசிக்கிட்டோம். நல்லா புரிஞ்சிக்கிட்டோம்.  அவளுக்காக நான் சில விசயங்கள விட்டுக்கொடுத்தேன். எனக்காக அவள் பல விசயங்கள விட்டுக்கொடுத்தாள். பொண்ணுங்க எவ்வளவு அற்புதமானவங்கனு புரிஞ்சிகிட்டாதான் தெரியும். ஆனா இதுவரைக்கும் யாருமே பொண்ணுங்கள முழுசா புரிஞ்சிகிட்டதில்லன்றதுதான் நிதர்சனம். அட அதுவும் கார்த்தி பத்தி சொல்லவே வேணும். ரொம்ப சென்சிடிவ். இன்னிக்கு வேலை இருக்கும்மா பேச டைம் இருக்காதுன்னு கேட்டு பர்மிஷன் வாங்கிட்டு வேலைய செய்வேன். அடுத்த நாள் பேசப்போனா என்கூட பேசமுடியாத அளவுக்கு உனக்கு வேலை முக்கியம்தானேனு மூஞ்சிய தூக்கி வச்சிப்பா. அப்புறம் அவள சமாதானப்படுத்த நான் ஒரு குருஷேத்ர யுத்தமே நடத்தவேண்டி இருக்கும். ஆனா அதுலயும் ஒரு சுகம் இருக்குன்னு உண்மையா காதலிக்குறவங்களுக்குதான் தெரியும். ரெண்டு வீட்லயும் பேசி சம்மதம் வாங்கிட்டதனால பயம் இல்லாம இனி ஊர் சுத்தலாம். அதான் இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் புரோகிராம். ஐயாவோட படத்துக்கு போகணுமாம். காதலிக்குறது உற்சாகம்னா காதலிக்காக நேரம் ஒதுக்குறது அதுவும் இந்த மாதிரி சந்தோசமான விசயங்களுக்கு ... எவ்வளவு பூரிப்பு. லூசு மாதிரி எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டு ரோட்டோரமா போய்ட்டுருந்தேன்.

ஆஜானுபாகுவான அந்த ஆளோட தோற்றத்தை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனேன். நல்லா ஜிம்முக்கு போய் உடம்பை ஏத்தியிருந்தான். அத காட்டுறமாதிரி உடம்போட ஒட்டின ஒரு டிசர்டு போட்டிருந்தான். அண்ணனா இருப்பானோ... எனக்கு தெரிஞ்சு எந்த பொண்ணும் பட்டப்பகல்ல அண்ணன கூட்டிகிட்டு ரெஸ்டாரெண்ட் வரமாட்ட... ஒரு வேளை சொந்தாகாரனா இருப்பானோ.. எனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி தேவையில்லாத விசயத்தப்பத்தியெல்லாம் நினைச்சிட்டு இருக்கேன்னு எனக்கு நானே அறிவுறை சொல்லி கவனத்தை திருப்ப பார்த்தாலும் முடியாம அவளையே பாத்துட்டு இருந்தேன். அவ பேர்கூட எனக்கு தெரியாது. இவ்வளவு கொடுமையான காதலனை எங்காவது பார்த்திருப்பீங்களா? இவளுக்காக எத்தனை நாள்... எத்தனை மாசம் ஏங்கியிருப்பேன்? ஒரு தடவை பார்க்கமாட்டோமானு கதறியிருப்பேன்... காலம் முழுக்க இவதான்ன் கனவு கண்டேனே. கற்பனையிலேயே காலம் கழித்தானே... அவளேதான். அப்படியேதான் இருக்கிறாள். பத்து ஆண்டுகள் கழிந்தும்...

கடவுள் ஏன்தான் இந்த பொண்ணுங்களைப் படைச்சானோனு வெறுப்பில் இருந்தவன் நான். ஹாஹா இப்போ இல்ல.. என் பத்து வயசுல. பொண்ணுங்களே வேணும். இந்த உலகத்துல பசங்க மட்டும் இருந்தா போதும்ன்றது என்னோட நினைப்பு.. பெண்குழந்தைங்கள தூக்கக்கூட மாட்டேன். லூசு மாதிரி எல்லாரும் போய் பொண்ணங்கள கல்யாணம் பண்றாங்க.. நான் கல்யாணமே பண்ணமாட்டேனு பெருமையா சொன்னேன். இந்த வயசுல இப்படித்தான் சொல்லுவ. அந்த வயசு வந்ததும் தானா மாறும் பாருன்னு அப்பா சொன்னதை அலட்சியம் பண்ணது எவளோ தப்புனு என் பதினாறு வயசுல அவளைப் பாக்ககுலதான் தெரிஞ்சிச்சு... அப்ப அவளுக்கு எத்தனை வயசுன்னு தெரியாது. ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு கவிதைப்போட்டிக்கான பரிசு வாங்க போனேன். யூனிஃபோர்ம்ல அங்கயும் இங்கயுமா சுத்திட்டு இருந்த ஒரு சுட்டிப்பொண்ணு திரும்ப திரும்ப அவளை கவனிக்கவச்சா... மேடைக்கு போய் கடவுள் வாழ்த்தெல்லாம் பாடினா.. அவமேல என்னதான் ஈர்ப்போ தெரியல அவ பாடின கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்னு கை தட்டினேன். முழுக்கூட்டமே என்னை ஒரு மாதிரி பாத்திச்சு. இது என்னமாதிரியான உணர்வு? ஐயோ அவளைக் காணமே.. இங்கதானே சுத்திட்டு இருந்தா. கண்ணை அங்கயும் இங்கயும் சுத்தி அலையவிட்டதுல மேடையில நான் வாங்கவேண்டிய பரிசுக்காக என் பெயரைச் சொன்னதைக்கூட கவனிக்கல. விழாவும் முடிஞ்சுது. அவளை அதுக்கப்பொறம் பார்க்கலயே. எப்படியும் இந்த ஸ்கூல்லதான் அவ படிப்பா. நாளைக்கு பார்த்தேயாகணும்னு சபதமெல்லாம் எடுத்தேன். தூங்க முடியலங்க. அவ முகமே கண்ணுக்குல வந்து கரகாட்டம் ஆடிட்டு இருந்திச்சு. சத்தியமாடா, உனக்கு காதல் வந்திடுச்சுடானு ஒரு அசரீரி என் காதுக்கு மட்டும் கேட்டிச்சு.

அடுத்த நாள் அவளைப்பாக்க போனேன். பள்ளிக்கூடம் விடுற நேரம். அவ வீட்டுக்கு போறதப் பார்த்தேன். ஆனா பக்கத்துல போய் பேசமட்டும் தைரியம் வரல. இத மாதிரி எத்தனையோ நாட்கள் கடந்தபோச்சு. நான் அவளைப் பாக்குறது அவளுக்கு தெரியுமா இல்லையானுகூட தெரியல. ஒரு தடவை என்னை திரும்பி பார்த்தா! எப்பிடி இருந்திச்சு தெரியுமா? பத்து ஏஞ்சல் தலைக்குமேல அந்த கால யாழ் வாத்தியம் வாசிச்சுகிட்டு சுத்துற மாதிரி.. ஏதோ என்கிட்ட சொல்லணும்போல அவ என்னையே பாத்திட்டு இருந்தா. இருக்குமே... பின்ன காதல்னா சும்மா? இங்க விதைவிதைச்சா அங்க மரம் முளைக்குமே... அவளுக்கு அந்த உணர்வு வந்திருக்கும்ல. அதானே தெய்வீக காரலோட தனித்துவம். ஆஹா நான் ஒரு கதாநாயகன்னு இவ்வளவு நாளா தெரியாமரே வாழ்ந்திருக்கேனே? டேய் கற்பனையை நிறுத்துடா அவ பக்கத்துல வாறா.. ஐயோ நான் இப்ப என்ன பேசுறது? ஒண்ணும் தயார் பண்ணலயே. சொதப்பிட்டேன்னா? அதோட அவ கண்ணப் பார்க்கவேற வயித்துக்குள்ள வாஷிங்மெஷின் சுத்துதே. அவ கிட்ட வர வர மூச்சு அதிகமாக்க நுரையீரல் காற்றை கடன் கேட்டிச்சு. இதயத்துடிப்பு அடிக்குறசத்தம் மின்னல்மாதிரி கேட்டிச்சு. கண்கருவிழிகளை மேகமெல்லாம் வந்து மூடிடுச்சு. அட சும்மாவா! என் தேவதை என்கிட்ட பேசவராளே... இத்தனை இயற்கை அனர்த்தங்களும் எனக்குள்ள ஆடி அடங்குறதுக்குள்ள அவ என் முன்னாடி வந்து நின்னா. யப்ப்ப்ப்பா அப்ப மூச்சுன்னு நான் ஒண்ண விட்டதே பெரியவிசயம். ஹை அப்பிடினு சொன்னா.. ஆனா என் காதுல என்னமோ கண்ணான்ற மாதிரிதான் கேட்டிச்சு. வானத்து தேவதையெல்லாம் என்னை வந்து தூக்கிட்டுபோயமாதிரி இருந்திச்சு. அடச்சே... பூலோகத்தேவதையே என்கூட இருக்கும்போது வானத்துதேவதைகள் என்னத்துக்கு? அவள் என்ன்னிடம் இருந்து பதில் வராததால் என் முகத்துக்கு முன்னால் கையை ஆட்டி ஹலோ அப்டின்னாள். ஆஹ் ஹை.. ஹல்ல்... ஹல்லோ ஹை.. செமயா உளரித்தள்ளிட்டேன். அவ கையால வாயமூடி கலகலன்னு சிரிச்சு ஒரு டிக்கெட் வாங்குறீங்களானு ஒரு ரசீது நோட்டைக்காட்டினாள். எமதர்மன் ஏரோப்பிளேன்ல இருந்து குதிச்சு கிட்டார் வாசிச்சுக்கிட்டே என் கிட்ட வாற மாதிரி இருந்திச்சு. இதுக்குத்தான் இவ்வளவு கற்பனையா? வடிவேலு மாடுலேஷன்ல என் மைன்ட்வாய்ஸ் கேட்டிச்சு. அதுவா நடக்குறதுக்கு முன்னால நீயா படம் ஓட்டினா ரீலு இப்பிடித்தான் பாதியிலயே அந்துபோகும்ன்னு.. சரி முதல்பரிசுதான் கிடைக்கல ஆறுதல் பரிசாவது இருக்கட்டுமேனு பத்து டிக்கெட் வாங்கிட்டு அந்த பாகவதர் கச்சேரிக்குபோனேன்.

குடும்பம், படிப்புன்னு எதைப்பத்தியுமே யோசிக்கவிடாம அவ நினைப்பு மட்டுமே மண்டைக்குள்ள ராட்டினமா சுத்திச்சு. எத்தனை நாட்கள் அவளுக்காக அவளோட பள்ளிக்கூட வாசல்ல தவம் இருந்தேன்னு எனக்கே தெரியாது. ஆனா எந்த ஒரு விசயமே எதிர்வினை நடக்காம எவ்வளவுதூரம் கொண்டுபோகமுடியும்? அவ பாக்குறதாவே தெரியல. எனக்கும் பரீட்சை அது இதுன்னு அவளை தேடிப்போறது கொறைஞ்சுட்டேபோனது. ஒரு நேரத்துல மொத்தமா அவளைப் பாக்குறதே நின்னுபோச்சு. அவளும் எங்க போனானு தெரியல. நெஞ்சு குமுறுறத அடக்கமுடியல. இனி எங்கன்னு பாக்குறது? அவளுக்கு நான் ஒரு பொருட்டான்னே தெரியாது. அவள் என்னைப்பத்தி அவளோட வாழ்க்கைல ஒரு நிமிஷமாவது நினைச்சுப்பாக்கக்கூட வாய்ப்பில்லை. என்ன தைரியத்துல அவள தேடி அலையுறது? குறைஞ்சபச்சம் அவகிட்ட என் காதலயாவது சொல்லியிருக்கலாம்.. அட அவ பேரையாவது கேட்டிருக்கலாம். நினைக்க நினைக்க அழுகை வர்ரதுதான் மிச்சம். சத்தியமா சொல்றேன். காதலை சொல்ல தைரியமில்லாத கோழையெல்லாம் காதலிக்கவேகூடாது. துக்கமும் தோல்வியுமா கொஞ்சகாலம் சுத்திட்டு இருந்தேன். பிறகு குடும்பபாரம் சுமக்கவேண்டிய சூழ்நிலை. வேலை, புதிய நண்பர்கள், கால ஓட்டம். எல்லாம் மாறிப்போச்சு. ஆனா கொஞ்சகாலம் எந்த பொண்ணைப்பார்த்தாலும் அவ ஞாபகம் வர்ரத தடுக்கமுடியாம ரொம்ப அவஸ்தைப்பட்டேன். இப்பகூட எப்பயாவது அந்த முதல்காதல் அப்பிடினு மனசுக்குள்ள ஆணியடிச்சு மாட்டின அவளோட முகத்தை தூசிதட்டிப் பார்த்துப்பேன். ஆனா இப்ப அந்த வலி இல்லை.

இன்னிக்கு அவளைப் பார்த்தேவிட்டேன். பத்துவருஷம். அதேமுகம். உருவம்தான் கொஞ்சம்வித்தியாசமா.. ரொம்ப பெரியமனுஷி மாதிரி! நல்ல வசதியா வாழ்றானு அவளோட தோற்றத்துலதே தெரியுத். இப்ப போய் ஹை ஹலோனு எப்பிடி அவகிட்ட பேசமுடியும? அட நான் உளராம பேசிடுவேன். அவளுக்கு என்னை தெரிஞ்சிருக்கணுமே. இப்பிடி ஒரு கிறுக்கு இவளுக்காக பல ராத்திரி தூங்காம கனவுகண்டான்னு அவளுக்கு தெரியாதே. தெரிஞ்சும் புண்ணியமில்ல. தெரியக்கூடவேணாம். நல்லா இருக்கிறாள். நால்லவே இருக்கட்டும். அந்த ஒரு துளிநீரைமட்டும் என் மனசாட்ச்சிக்கு தெரியாம அவசரமா துடைச்சேன். ஃபோன் அடிச்சிச்சு. கார்த்தி... 'என்னடா? இன்னுமா சாப்பிடல இடியட்?' என் சந்தோசம் எங்கே இருக்குன்ற பக்குவம் எனக்கு தெரியும். நடுரோடுனுகூட பாக்காம ஃபோன்ல இச் இச்னு முத்தம் கொடுத்துட்டேன்.  

Saturday, July 20, 2013

நடிகர் திலகத்தின் குறும்படம்

தற்செயலாக யூடியூப்பில் இந்த வீடியோவை பார்க்கமுடிந்தது. எப்படியும் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கும். எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒரு தொலைக்காட்சி விளம்பரம். கமலகாஸன், பிரபு போன்றோர் தோன்றுகின்றனர். எயிட்ஸ் பற்றிய பாதிப்பு மற்றும் அதிலிருந்து தப்பிக்க கையாளவேண்டிய தீர்வு போன்றதை நடிகர்கள் எடுத்துகூறுவதாக அமைந்த ஒரு வீடியோதான். ஆனால் இதை நாம் அனைவரும் பாரக்கவேண்டிய ஒரு வீடியோவாக மாற்றிச்சென்றவர் நம் நடிகர்திலகம். நரைத்த வயதிலும் அந்த கம்பீரம் குறையாமல் அவரைப் பார்க்க திகட்டவேயில்லை.

அந்த காலகட்டத்திற்கேயுண்டான தொழில்நுட்பம். அதில் ஒரு கதிரையில் அமர்ந்திருந்து மக்களுக்கு அறிவுரை சொல்வதாக ஒரு அமைப்பு. நடிகர் திலகத்தை விட யார் இதற்கு பொருத்தமாக இருக்கமுடியும்? அவரது காந்த கண்களில் தெரியும் அந்த பரவசம் ஏற்படுத்திய சிலிர்ப்பு அடங்க சற்று நேரமானது. ஒழுக்கத்தை பற்றி அவர் பேசியபோது தெரிந்த அந்த பெருமையும் புரிகிறதா என்று தலையாட்டிய விதமும் ஒரு வார்த்தைக்குள் அடக்கமுடியாத பிரம்மாண்டம். தமிழில் ஒழுக்கம் காத்த நிடகர்களில் முதன்மையானவர் என்பதை நாடறியும். நடிகர்திலகம் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தமிழர்களும் பார்ரகவேண்டிய ஒரு காட்சி. சாதாரண ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு வீடியோ என்றில்லாமல் தமிழ்சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்ட சென்ற முதல் நடிகனின் கம்பீரத்தை பறைசாற்றும் ஒரு காணோளியாக பாருங்கள்.





Friday, July 19, 2013

எப்படி மனசுக்குள் வந்தாய்?

கல்நெஞ்சக்காரி, பிடிவாதக்காரி, எதற்கும் வளைஞ்சு கொடுக்காத திமிரு... இதல்லாம் எங்க போச்சு? காதலா? நிச்சயமா கூடவே கூடாதுனு வெறுத்த காதலா? அது எப்படி வரும்? ஏன் பொண்ணா பொறந்தா காதலிச்சுதான் ஆகணுமா? சகஜமா ஒரு பையன்கூட பேசக்கூடாதா? அதுவும் ஏன் எல்லா பசங்களுமே ஒரு பொண்ணு சிரிச்சு பேசினவுடனே காதல்னு நினைக்குறாங்க... ஒருவேளை எல்லா மீனுக்கும் தூண்டில் போட்டு பாப்போம், எது சிக்குதோ அத அறுத்தடலாம்ற திட்டமா? சஹானா நீ நல்லாதானே இருந்த.. இப்பிடி புலம்ப வச்சிட்டானே.

காலம். ஒரு நல்ல மருந்து, ஒரு நல்ல பள்ளிக்கூடம், புதுமைவிரும்பிகளின் முன்னோடி. எப்போதும் புதிய விடயங்களை தன்னுள் சேர்த்துக்கொண்டேயிருக்கும். எந்த சலசலப்பிற்கும் அஞ்சாது. எந்த கட்டுப்பாடும் அதற்கு கிடையாது. காற்றைப்போல காலமும் எத்தனை சுதந்திரமானது... அப்படிப்பட்ட காலத்தின் மாற்றத்திற்குள் உட்பட்டு புதுமைகளின் ரசிகையாகி இளமையின் கொண்டாட்டமே வாழ்வின் குறிக்கோளாய் வாழும் நான். என்னுடைய அடையாளம் நான்தான். சஹானா. யாரையும் பின்பற்றி நான் கருத்துக்களை உட்கொண்டதில்லை. எனக்கு என்ன தேவை எந்தளவு தேவை என்று நன்றாக உணர்ந்து அதில் மட்டுமே வாழ்ந்து எந்தவிதமான பிச்சல்பிடுங்கலும் இல்லாமல் அலையில்லா ஆற்றில் ஓடமென அமைதியான வாழ்க்கை.

எனக்கு என்ன தேவை, என்ன வரையறை, என்ன கருத்து அப்படின்ற என்னோட அளவுகோல்ல இடம்பொறாத முக்கிய வார்த்தை காதல். அட ஏன்பா காதலிக்குறீங்க? அத வீட்ல ஒத்துக்கொள்ளன்னதும் தற்கொலை. அதுவும் இதுக்காகவே பத்திரிக்கை நடத்துறமாதிரி அவனுக வேற இதே செய்தியா போட்டு கழுத்தறுப்பாங்க... சஹானா நீ எஸ்கேப்டி.. நல்ல வேளை தப்பிச்ச. ஏற்கனவே நல்லா போயிட்டுறுக்குற வாழ்க்கையில ஏதோ ஒன்னு குறையுதுன்னு சொல்லி காதலிக்கப்போனாலிப்ப ஒழுங்கா சாப்பிட்ற மாதிரி நல்லா தூங்குறமாதிரி எந்த விதமான பிரச்சினையும் இல்லாத மாதிரி வாழமுடியுமா? அதுவும் அம்மா அப்பாட செல்லப்பொண்ணுவேற. அவங்கள கலங்கவச்சு ஒரு காதல் தேவைதானா?

அதுக்காக எந்த பையனோடயும் பேசாத நட்புனா ஓடிப்போய் ஒழிஞ்சுக்கற டைப் இல்ல நான். எனக்கு எத்தனேயோ நண்பர்கள் இருக்காங்க.. நல்லா பேசுவாங்க. குடும்ப நலன், படிப்பு இதப்பத்தி பேசுறதோட சம்பாசனை முடிஞ்சுடும். ஆனா சில பேரு ரொம்ப ஆழமா நோட்டமிடுவாங்க. முக்கியமா முகப்புத்தகத்துல... ஹை, ஹலோனு ஆரம்பிப்பாங்க... சும்மா ஃப்ரண்ட்லியா பேசுவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க சுயரூபம் தெரியவரும். அட அதாங்க... காதல் பண்றாங்களாம் காதல். சொல்லி பாப்பேன். ரொம்ப தொல்லை பண்ணா ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன். சஹானா.. என்ன மாதிரி தைரியசாலிடி நீ? அதுவும் இத்தனை பேர் இப்பிடி விழுந்து விழுந்து லவ் பண்ணியும் அசராம இருக்கியே.. ஐயோ நோபல் பரிசு கொடுக்குறவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா அடுத்தவருசம் நீதான்டி ஹைலைட்டு... எப்பிடியெல்லாம் கர்வமா இருந்தேன்... எல்லாம் போச்சே. கடவுளே அந்த படுபாவியோட ஏன்தான் பேசினேனோ?

ஒரு பொண்ணு அதுவும் அழகான பொண்ணுன்னா.. அட நம்புக்கப்பா.. அழகான பொண்ணுன்னா முகப்புத்தகத்துல ஏகப்பட்ட பேர் ரிகுவஸ்ட் கொடுப்பாங்க. அப்பிடி ஒருத்தனாத்தான் அவனையும் நினைச்சேன். விச்சு. விஸ்வநாதன். பேசினான். நானும் பேசினேன். ஒரு பையனோட சும்மா நாலுவார்த்தை பேசுறதுல என்ன உலகமா அழிஞ்சிடும்? அப்பிடி அழிஞ்சிடும்னா அழிஞ்சிட்டு போகட்டும். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சிறகுகளையும் கொடுத்து அதுக்கு பூட்டும் போட்டு வைப்பீங்க? என்னோட கருத்துக்கு நான் எப்பயும் மாறா நடக்கமாட்டேன். அதனால அவன்கூட பேசினேன். அவனோட முதல்தடவை பேசும்போது ரொம்ப பாவம் மாதிரி இருந்திச்சி. பொதுவா நான் எல்லாருக்கும் பாவம் பாப்பேன். நல்லா நண்பனா பேசிட்டு இருந்துட்டு திடீர்னு ஒருத்தன் காதலிக்குறேன்னு சொல்லுவான். கோபமா வரும். இருந்தாலும் பாவமா இருக்கும். எங்கூட பேசினதுல அவனுக்கு காதல் வந்தா அவன் என்ன பண்ணுவான். அதுக்காக எல்லாரையும் காதலிச்சிடமுடியுமா? சொல்லி சொல்லி கேட்காதவங்கள ரொம்ப கவலையோட ஃப்ரண்ட்ல இருந்து தூக்கிடுவேன். அப்பகூட அடச்சே எவ்ளோ பாவம். இனி எவ்ளோ நாள் இதுக்காக கவலைப்படபோறானோ அப்பிடினு தோணும். ஒருவேளை மத்தவங்கமேல பாவம் பாக்குறது பொண்ணுங்களோட இயற்கையோ என்னவோ...   

அட என்மேல எதுவும் தப்பில்லீங்க.. அந்த விச்சுதான். முதல்ல நல்லாத்தான் பேசினான். நானும் மத்த ஃப்ரண்ட்ஸுக்கு என்ன இடம் கொடுத்தேனோ அதே அளவுலதான் இவனோடயும் பேசினேன். அப்புறம் என்ன ஆச்சுனு தெரியில முழுநாளும் உன்னைப்பத்தியே நினைச்சிட்டு இருக்கேன்னு சொன்னான்... ஆஹா ஆரம்பிச்சட்டான்யா. இவனுகள திருத்தவே முடியாது. இவனும் உன்னை லவ் பண்றேன்னு வந்து சொல்லப்போறான். அட கடவுளே இன்னொன்னா? Block பண்ணவங்க லிஸ்ட்டு ஏற்கனவே தாறுமாறா ஏறிப்போய் இருக்கு. சரி இவனுக்கு சொல்லியாவது புரியவப்போம்னு நினைச்சு சூசகமா பேசினேன். ‘இங்க பாரு விச்சு, ஃபேஸ்புக்ல நல்ல ஃப்ரண்டா நினைச்சு நான் பேசின சிலபேரு லவ் பண்றதா சொல்லி என்னை ரொம்ப ஹர்ட் பண்றாங்க. நீயே சொல்லு விச்சு. ஃப்ரண்டா இருந்துட்டு இப்பிடி காதல் கீதல்னு சொல்லி நட்ப கேவலப்படுதலாமா?’ அவன்கிட்ட இருந்து அப்பிடி என்னதான் பதில் வரும்னு பாத்துட்டே இருந்தேன். அவன் என்னடான்னா ஏதோ ஒரு லிங்க் அனுப்பி படிக்கசொன்னான். மிருதங்கம் பிளாக்ல இருக்குற சௌபாக்யா அப்பிடின்ற கதை.. அதுவே ஒரு மொக்கை கதை. அதயேன் வாசிக்க குடுத்தான்னு கேட்க அதுல கடைசியில ஒரு வசனம் வரும் ‘நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தாய்மையோடயும் இருக்கும். தூய்மையோடயும் இருக்கும்’. ஒரு நண்பன் உன்னை காதலிச்சா அவன் எந்தளவு உன்னை சந்தோசமா வச்சிருக்கணும்னு ஆசைப்பட்றான்னு புரிஞ்சிக்கோ, உன்னோட நட்பு எந்த தடங்கலும் இல்லாம வாழ்நாள் முழுக்க அவனுக்கு கிடைக்கணும்னு அவன் ஆசைப்பட்றதுல என்ன தப்பு? அப்பிடி இப்படினு காதுல ரத்தம் வாற அளவுக்கு அறிவுரையா சொல்லி அறுத்துட்டான். உனக்கு தேவையா சஹானா இது? அவன் உன்னை லவ் பண்ணா பேசாம block பண்ணிட்டு போ.. இப்ப பாரு! யார் காது கிழிஞ்சுது?

ஆனாலும் அவனை பார்க்க ரொம்ப பாவமா இருக்கே.. இப்பிடித்தான் ஒருநாள் உனக்கு ஃபேஸ்புக்ல நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா? எல்லாரோடயும் பேசுவியானு கேட்டான். அவன் லவ்க்கு நான் இன்னும் ஓகேயே சொல்லல. அதுக்குள்ள சந்தேகமா? எப்பிடி கோபம் வந்திச்சு தெரியுமா.. அன்னிக்கு முழுக்க அவன்கூட போசவேயில்ல.. ஸாரி ஸாரினு ஆயிரம் மெசேஜ்.. நான் அத பாக்கவேயில்லயே.. ஆனா ரொம்ப பாவமா இருந்திச்சா.. இனி இப்பிடி பேசாதனு சொல்லி மன்னிச்சிட்டேன்.. ஆனா நானா மன்னிச்சேன்? எத்தனை ஆணழகன் வந்து நின்னாலும் மனசு மாறாத சஹானாவா? ஆனா அவன்கிட்ட ஒரு உண்மை இருக்கு.. அவன் குடும்ப போட்டோ, அவங்களப் பத்தின விவரம் நடந்தது, நடக்கிறது, நடக்கப்போறது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிட்டான் தெரியுமா? என்னைபத்தியும் கேட்டான்... என்னதான் இருந்தாலும் ஒரு பையனைப்போல ஒரு பொண்ணால குடும்ப விவரங்கள எல்லார்கிட்டயும் சொல்லமுடியுமா.. அப்பிடித்தானே நினைப்பீங்க.. அப்பிடித்தான் நானும் இருந்தேன். ஆனா இவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

பார்க்கலாம்னு கூப்பிட்டான். அவன்மேல நம்பிக்கை இருந்திச்சு. இருந்தாலும் அது வேணாம்னு பட்டிச்சு. முடியாதுனு சென்னேன். ‘என்ன சஹானா இது? நீ எவ்ளோ முற்போக்கான தைரியமான துணிச்சலான பொண்ணு... இப்பிடி சாதாரணமா பார்க்குறதுக்கு பயப்புடுறியே? அப்ப உன் புரட்சிகரமான சிந்தனையெல்லாம் அவ்ளோதானா? எப்பிடியோ மடக்கிட்டான். பார்க்கபோனேன். முதல்சந்தப்பே முத்தான சந்திப்பானதே.. என்ன சஹானா கவிதையெல்லாம்.. நீயும் லவ் பண்றியானு பயமா இருந்திச்சு... அவன்கிட்ட நேரா சொல்லிட்டேன் என்னால லவ் எல்லாம் பண்ணமுடியாது வேணும்னா வீட்ட வந்து பேசுனு.. ஒரு பக்கம் ஓரமா சிரிச்சு சரின்னு சொன்னான். நான் எழும்பி வந்துட்டேன். போகும்போது ஒருக்கா திரும்ப பார்த்தேன் சும்மா ஸ்டைலா உட்கார்ந்துகிட்டு என்னையே பார்த்துட்டு இருந்தான். மொழி படத்துல வாற மாதிரி தலைக்கு மோல பல்ப் எரிஞ்சுசுங்க.. தூரத்துல ஏதோ சர்ச்சில மணி அடிக்குற சத்தமும் கேட்டிச்சு.. முதல்முறையா வெட்கப்பட்டு அங்க நிக்கமுடியாம வந்துட்டேன்.


அவனே வீட்ட வந்து பேசினான். அப்பா அம்மாக்கு சின்ன அதிர்ச்சிதான். ஆனா அவன் ஸ்மார்ட்டா பேசினவிதமும் என்னை எந்தளவுக்கு காதலிக்குறான்னு புரியவச்சதிலயும் ரெண்டு பேருமே ஓகே சொல்லிட்டாங்க. கடைசியில எல்லாமே சுபம். கல்யாணத்துக்கு மறக்காம வந்திடுங்க... ஆனா எனக்குத்தான் ஒண்ணு புரியல. நீ எப்பிடி சஹானா லவ் பண்ண? வாழைமரத்த சாய்க்கமுடியும் ஆலமரத்த சாய்க்கமுடியுமா? இப்பிடி காதல்ல மாட்டிகிட்டியே... அவன் என்னதான் செஞ்சான்? அப்பாவி மாதிரியே முகத்த வச்சு மயக்கிட்டானா? இத வச்சு வேற பொண்ணு மயங்கிட வாய்ப்பிருக்கு.. கவனம் சஹானா.. எவ்வளவு புத்திசாலியா இருந்த என்னை இப்பிடி பேதையாக்கிடிச்சே இந்த காதல். ஆனா ஒண்ணு.. தப்பி தவறிக்கூட இனி எவன் மேலயும் பாவம் பார்க்ககூடாது. எல்லாமே திருட்டுப் பசங்க...

Saturday, June 29, 2013

தெருவில் ஒரு சிறுவன்...

அதே அண்ணாச்சி கடை வாசலில் அவனை இன்றும் பார்த்தேன். கடந்தசில நாட்களைப்போலவே... ஒருவேளை அவனைப் பார்ப்பதற்காகத்தான் எனக்கு பிடிக்கவே பிடிக்காத மளிகை வாங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறேனோ? இருக்கலாம். மகிழ்ச்சியாக ஓடி விளையாடி விரும்பியதை சாப்பிட்டு பஞ்சுமெத்தையில் பொசுபொசுவென்று முயல்குட்டிபோல போல கண்ணுறங்கும் குழந்தைகளைத்தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன்... ஆனால் இவன்? இவனை வைத்து ஒரு கதை எழுதினால் என்ன....

சனங்களின் பரபரப்பிற்கு குறைவில்லாத அந்த சந்தையின் கோடியில் விசாலமான ஒரு மளிகைக்கடை.. அதன் இடதுபக்கமூலையில் ஒரு சுமாரான அளவுகொண்ட ஒருத்தருக்கு மட்டுமே நிழல்தரக்கூடியதாக நின்ற ஜாம் மரம்... அதன் கீழ் ஒரு சாக்கை விரித்துவிட்டு உட்கார்ந்துகொண்டு செருப்பு தைத்துக்கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. பெயர்.... முருகேசன் என்று வைத்துக்கொள்வோம். முப்பதுகளின் இறுதியான தோற்றம். கறுத்த மெலிந்த தேகம். அவன்மேல் பாவப்பட்டாவது யாராவது செருப்புதைக்க வருவார்கள் என்பதான தோற்றம்... தினமும் கைக்கும் வாய்க்குமான சீவியம். மனைவி கண்ணம்மா... மகன்... குமார். மனைவியின் சிக்கனத்தால் ஒரு வேளையாவது உருப்படியாக சாப்பிடமுடிந்த வாழ்க்கை.

தினமும் காலையிலேயே தனக்கென்று ஆதரவுகாட்டும் அந்த மரத்தின் அடியில் மகன் குமாரையும் கூட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்து தொழிலை கவனிக்க துவங்கிவிடுவான் முருகேசன். பிஞ்ச செருப்போடு யாராவது வருவார்களா என்று பார்ப்பான். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் குப்பைகளில் கண்டெடுத்த பழைய செருப்புகளை தைத்துக்கொண்டிருப்பான். எல்லா நாளுமே நல்ல கூட்டம் என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையென்பதால் நிற்கக்கூட இடமின்றி சனம் அலைமோதும்... எப்போதாவது சிலவேளைகளில் யாருடைய செருப்பாவது பிய்யும். அப்போது நம் முருகேசன்தான் அவர்களுக்கு உற்றதுணை. சப்பாத்து போட்டுக்கொண்டு வருபவர்கள் குறைவு. அப்படி வந்தால் அவர்களும் பாலிஷ் போட்டுக்கொண்டு போவார்கள். வரும் வாடிக்கையாளர்களிடம் முகம் மலர்ந்து பேசும் வித்தையை மளிகை கடை அண்ணாச்சியிடம் கற்றுக்கொண்டான். அப்பதான் திரும்ப திரும்ப வாடிக்கையாளர்கள் வருவார்களாம்... இப்படி அப்பா செய்யும் வேலையை பக்கத்தில் இருந்து பார்த்து வருவான் குமார். சின்ன சின்ன பொருட்களை தூக்கி கொண்டு வர அவனையும் அழைத்து வருவார் முருகேசன். மதியம் கூட்டம் குறைந்த நேரத்தில் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழையசாதத்தை மகனுக்கு ஊட்டி தானும் உண்ணுவார். பிறகு மகனை அணைத்தபடி மரத்தடியில் ஒரு குட்டி சயனம். மாலை வேலை வந்தால் உண்டு... பொதுவாக வராது. இரவு வீடு சென்று என்ன இருக்கோ உண்டுவிட்டு தூங்கி மறுபடியும் காலையில் வழக்கம்போல...

குமாருக்கு அஞ்சு வயசிருக்கும். ஒரேயொரு பழைய காற்சட்டையோடு பரட்டைத்தலையோடு ஒட்டியவயிறும் எப்போதும் எதற்காகவாவது ஏங்கும் கண்களோடும் காட்சிதருவான் குமார். மெல்லியதடியின்மேல் இறுக்கமாக ஒரு துணியை சுற்றியதுபோல அவனது எலம்பும் தோலும் இருக்கும். பணக்கார பிள்ளைகளைப்போல யானைமேலும் குதிரைமேலும் ஏறியவன் இல்லை. ஆனால் அவர்களுக்கேகூட கிடைக்காத தந்தையின் தோள் எப்பயுமே இவனுக்காக இருக்கும். தந்தை லாவகமாக செருப்பு தைக்கும் வித்தை இவனுக்கு மிகவும் பிடிக்கும். கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான். பிஞ்சுபோய் நாறு நாறாக வந்த செருப்பை மந்திரவாதி மாயக்கோலை வைத்து மேஜிக் செய்வதைப்போல இவர் ஒரு ஊசியை வைத்து அழகிய செருப்பாய் மாற்றுவது அவனைப்பொருத்தவரை யாராலும் அசைக்கமுடியாத சாதனை. ஆனால் தன் மகனும் தன்னைப்போல சாலையோர தொழிலாளியாக கூடாதென்று கவனமாக இருந்தார் முருகேசன். அதுவும் ஒருதடவை தெருவில் நடந்துபோகும் பள்ளிச்சீருடை அணிந்த பிள்ளைகளை ஏக்கத்தோடு பார்த்தான் குமார். தன் வயதுப் பிள்ளைகளைப்போல உள்ளார்கள். ஆனால் அவர்கள் அப்பாவோடு வேலைக்குபோகாமல் பையை சுமந்துகொண்டு வெள்ளையுடையுடன் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக போகிறார்கள். அந்த பார்வை முருகேசனை உலுக்கியெடுத்தது. மற்றபிள்ளைகளிலிருந்து தன் மகன் அந்நியமாக உணருகிறானா? எப்படியும் அடுத்தவருசம் தன் பிள்ளையை பள்ளிக்கூடம் சேர்க்கவேண்டுமென்றும் அவனும் புத்தகப்பையை தூக்கிக்கொண்டு பள்ளிச்சீருடையில் செல்லவேண்டுமென்றும் மனத்திரையில் படம் ஓட்டிப்பார்த்தார். தன் கனவு நனவாகும் காலத்திற்காக கடுமையாக உழைக்க உறுதிபூண்டார்.

கருத்தும் கடுமையான உழைப்பும் இருந்தால் மட்டும் போதுமா? காலம் வரவேண்டாமா? ஓட்டுக்குடிலில் காலைநீட்டிப் படுக்கவே இயலாத சூழ்நிலையில் பணமாய்ப் போன படிப்பை அவ்வளவு இலகுவில் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனால் அடையமுடியுமா? ஆனால் முயற்சி எடுத்துத்தான் பார்ப்போமே.. கடலையடைய முயற்சித்து ஒரு ஆற்றையாவது கடக்கமுடியாதா? சாக்கடையோடும் தெருவில் குத்தாட்டம் போடும் நுளம்புகளுக்கு மத்தியில் மழைவந்தால் முழுகிப்போகும் குடிசையில் விமோசனத்துக்காக ஏங்கும் ஒரு வறியவன், புயல்வேகத்தில் பாயும் விலைவாசியை நத்தைபோல் முன்னேறும் வருமானத்தைக்கொண்டு எதிர்கொள்வதே மரணப்போராட்டம். இதில் மகனின் படிப்பு? தினமும் இரவில் படுக்க விடாது சிந்திக்கவைக்கும் யோசனை... ஓலைகளின் விரிசல்களின் வழியே ஒழுகும் மழைநீருக்கும் மின்சாரம் இல்லாத குடிசையின் மிரட்டும் இருளுக்கும் நடுவே கண்ணம்மாவை இடப்புறமும் குமாரை வலப்புறமும் கையால் அணைத்தபடி குளிரில் நடுங்கும்பொழுதும் இராப்பொழுது பட்டினி என்பதைக்கூட கருதாது குமாரைப் படிக்கவைத்தால் இந்த நிலை மாறிவிடும் என்று முருகேசனின் எண்ணம் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

ஆனால் சித்திரம் வரைய சுவரை அழகுபடுத்திக்கொண்டிருக்கும்போது புல்டோசரை வைத்து சுவரை இடித்ததுபோல இருந்தது அந்த சம்பவம். குமார் என்ற ஒரு சிறுவன்... வறுமையின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் காணாமல் போன எத்தனையோ சிறுவர்களின் பிரதிநிதி... பஞ்சத்தின் முகத்தைகிழித்து படிப்பைநோக்கி ஓடும்போது கல்தடுக்கி கீழேவிழுந்ததுபோல, என்ன ஒரு கலவரமோ தெரியல... யார் யாரோட சண்டை பிடிச்சாங்க? ஆமா அருவாள்கள் சீவ கைகால்கள் துண்டிக்கப்பட தலைகள் தெருவில் உருண்டோட இன்னும் எத்தனையோ.. ஓடிப்பிடிச்சு வீளையாடும்போது இப்படி கத்தியால வெட்டுவாங்களா? ரத்தம் வருமா? குமாருக்கு அழுகை அழுகையாக வந்தது... அவனது தந்தையை இறுக்கமாக கட்டிக்கொண்டான். முருகேசனும் யாரும் தங்களைப் பார்த்துவிடக்கூடாதென்பதற்காக ஒரு சிற் ஒடுக்கில் மகனை இறுக்கி பிடித்தபடி ஒளிந்துகொண்டிருந்தான்... எவனுக்கும் எவனுக்குமோ பகை.. அதனால் சண்டை கலவரம் எல்லாம், அதுக்கேண்டா அப்பாவி மக்களை கொல்றீங்க? கண்ணீர் தாரைதாரையாக கொட்ட மூச்சு சத்தம் கேட்கக்கூடாதென்பதற்காக தனது மூக்கையும் மகனின் மூக்கையும் இறுக்கி பொத்தியபடி அந்த இடுக்கிலேயே பதுங்கியிருந்தான். எத்தனை நேரம் இருந்தான் என்று தெரியவில்லை... கலவரம் அடங்கியதா? அதுவும் தெரியவில்லை... மகனை தோளில் போட்டுக்கொண்டு லேசாக வெளியே தலையை எட்டிப்பார்த்தான். ஆ..ஆ...ஆ... யாரும் இல்லை. இப்படியே ஓடிவிடலாம். அதோ அந்தப்பக்கம். அப்படியே போனால்க்கூட வீட்டை அடைய நேரமாகுமே, கண்கள் சொருக புத்தி மயங்க என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான்.  முதுகில் தொத்திக்கொண்டிருந்த குமாரும் என்ன காரணம் என்றே தெரியாமல் அழுதுகொண்டேயிருந்தான்.

ஆ.. அங்கே போலீஸ், அவர்களிடம் போனால் என்ன? ஆனால் அவர்களோ கலவரக்காரர்களை காட்டுமிராண்டிகளைப்போல அடிக்கிறார்களே? நாம் போனால் என்ன என்று சிந்திக்கும்போதே பின்னால் இருந்து ஒரு பலத்த அடி... ஒரு போலீஸ். இவனையும் கலவரக்காரன் என்று நினைத்து கழுத்தை பிடித்து இழுத்துக்கொண்டு போகும் அந்த காவலாளியிடம் காலில் விழுந்து அழுதுபுரண்டு கெஞ்சிகேட்டும் அவர்கள் காதில் விழுந்ததாய் தெரியவில்லை. கலவரத்தில் கைதுசெய்தோம் என்று கணக்கு காட்ட ஆள் தேவையோ தெரியவில்லை. ஆனால் அங்கே அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுவனின் கண்ணீரை துடைக்க கைவிரல் யார் தருவார்? இயலாமையின் உச்சத்தில் குறுகி கழிவிரக்கத்துடன் தூரத்தில் அழுதுகொண்டிருக்கும் குமாரை கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கும்போது போலீஸ் அவனை வண்டியில் ஏற்றினார்கள்...

சாப்பிட்டு எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை... தான் என்றாலும் பரவாயில்லை இந்த பிஞ்சு பாலன் என்ன செய்வான் என்று நினைக்கையில் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது கண்ணம்மாவிற்கு. முருகேசனை எப்போ விடுவார்கள்? யாரைப்பார்ப்பது? ஒன்றும்புரியாமல் அடுத்தது என்ன என்பது சூன்யமான நிலையில் புரியாமல் அவள் இருக்க கையில் செருப்புதைக்கும் ஆணியை எடுத்தான் குமார்.

அதே அண்ணாச்சி கடை மூலை... அதே மரத்தடி... முருகேசன் இருந்த இடத்தில் இப்போது ஏழுவயது குமார். தந்தையின் திறமையை அருகில் இருந்து கண்கூடாக பார்த்த பலன் அவனையும் ஒரு திறமையான செருப்புத்தைக்கும் தொழிலாளியாக்கியது. அதே ஒருவேளை சாப்பாடு.. கைக்கும் வாய்க்குமான சீவியம். சுமாரான வாடிக்கையாளர்கள். தெரிந்ததை செய்து தன் தாய்க்கு உணவளித்தான் ஒரு சிறுவன்.. படித்து ஒரு கணக்காளனாகவோ கணனிதுறை வல்லுனனாகவோ வரவேண்டிய ஒரு எதிர்காலத்தை ஷூ பாலிஸுடனும் செருப்புதைக்கும் ஆணியுடனும் கழிக்கவைத்த ஒரு சமூகம். அடுத்தவர்களைப் பற்றி யோசிக்காமல் தங்கள் ஆத்திரத்தை போக்கிக்கொண்ட கலவரக்காரர்கள், அதிகாரம் கையில் இருந்தால் தாங்கள் செய்வது அனைத்தும் சரி என்று இறுமாறும் காவலாளிகள், ஏழைக்குழந்தைகள் படிக்கவேண்டுமென்று பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு அதற்கு பிரயத்தனம் எடுக்காத பிரபலங்கள் என அனைவருமே இதற்கு காரணம். நீங்கள் இந்த சம்பவத்தில் எந்த இடம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.




                        
‘தெருவில் ஒரு சிறுவன் எப்பிடி இருக்கு தலைப்பு?’

‘நல்லா இருக்குங்க.. ஆனா எதுக்கு?’

‘அட இப்ப நாம செருப்பு தைச்சுட்டு வந்தோம்ல.. அந்த பையனோட கதைய எழுதப்போறேன்டி.. அவனை ஒரு மாசமா பாத்து உணர்ந்து அப்பிடியே உள்ளுக்குள போய் அனுபவச்சு எழுதப்போறன்... இதைபடிக்குறவங்களுக்கு சாட்டையடியா இருக்கணும், அந்த பையனுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும்ல’

‘எப்படி நல்ல வாழ்வு கிடைக்கும்’

‘அட நான் எழுதுற எழுத்த படிச்சு ஒரு சிலராவது மனசு மாறுவாங்களே.. அப்ப இந்த மாதிரி பையங்களுக்கு மறுவாழ்வுகிடைக்க ஏதுவாயிருக்குமே’
‘நீங்க இனி கதைய எழுதி அதை எல்லாரும் படிச்சு அவனுக்கு நல்ல வாழ்வு கிடைக்குறதுக்கு பதிலா அவன் செருப்பு தைச்சதுக்கு கேட்ட எழுபது ரூபாய பேரம் பேசி ஐம்பதா குறைக்காமநப்பிடயே கொடுத்திருந்தா அவனுக்கு இந்த பொழுது நல்லா இருந்திருக்குமே. அப்ப உங்க கதையில சும்மா வீரவசனம் எழுதிவிட்டு அதை நடைமுறையில செய்யாத எழுத்தாளர்களுக்கும் ஒரு சாட்டையடி கொடுங்க...’

‘...............................’

Friday, May 17, 2013

எவளோ ஒருத்தி!


வழமை.. இந்த வார்த்தை என்னோட மிகவும் ஒன்றிப்போனது. வழமையான காலைவேளை.. வழமையான அலுவலக ஓட்டம்.. வழமையான அவசர உணவு.. வழமையான எந்திர வாழ்க்கை.. வழமையான.. வழமையான.. வழமையான.. இத்யாதிகள். மாற்றம் என்பதிலுள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவிடாமல் கட்டிப்போட்டிருக்கும் வழமை. இந்த வழமையிலிருந்து விடுபட எண்ணும் பலரிலும் விடுபட முயற்சிக்கும் சிலரிலும் நானும் ஒருவன். எவனோ ஒருவன். ஆமாம். எவனோ ஒருவன் திடைப்படம் என்னில் இந்த கேள்வியை ஏற்படுத்தி விடைகாண சொல்லியது. ‘சொன்னமாதிரியே வாழு சொன்னமாதிரியே செத்துப்போ’ மாதவன் அடித்துச்சொல்லும் இந்த வார்த்தைகளில்தான் எத்தனை நிதர்சனம்… நம்மில் எத்தனைபேர் இந்த வழமையிலிருந்து விடுபட்டு மாற்றத்தை அடைய ஆசைப்படுகிறோம்.. ஆனால் எத்தனை பேரால் அடையமுடிகிறது? காலையில் உழைப்புகாக எழுந்து மாலையில் ஓய்வுக்காக உறங்கும் மிகச்சாதாரணமான ஒருவனின் உள்ளக்குமுறல் இது. நிச்சயமாக இந்த சமூக வட்டத்தில் விரும்பியும் வேறுவழியில்லாமலும் கட்டுண்டு கிடக்கும் நம்மால் இலகுவாக.. ஏன் இயன்றபோதும்கூட பெரியளவு மாற்றத்தை அடையமுடியாது. ஆகவே  இதையும் ஒரு வேளையாக தினமும் புரட்சிகரமாக சிந்தித்து ஆதங்கப்படுவதை இன்றும் தொடர்வதை நினைத்து மனம் சலித்தது. இந்த மாற்றத்தை பற்றிய எண்ணம் வருவதற்கும் அதுவும் இத்தனை சீக்கிரமாக வருவதற்கு காரணம் அவள்தானே…

அப்பா அம்மா ஊருல இருக்காங்க. தம்பி தங்கச்சி வேற. இங்க சம்பாதிக்குற காசை செலவு செய்யுறது போக மொத்தமா ஊருக்கு அனுப்பிடனும். அப்பதான் அங்க வண்டி ஓடும். ஆனா இங்க? பெரிய நகரம், பெரிய கம்பெனி.. சாதாரண வேலை. ஒரு நிமிஷம் தாமதமா போனாக்கூட ஏதோ கொலைக்குற்றவாளியை விசாரிக்குற விசாரிப்பாங்க. தலையெழுத்து. அட சீக்கிரமா ஆபிஸ் வந்து தொலைக்கலாம்னாலும் நம்ம மாநகரபேருந்து ஊர்ந்து வாறதுக்குள்ள ஆபிஸ் முடியாம இருக்குறது ஆச்சரியம். கடைசியா எப்ப ஒழுங்கா சாப்பிட்டேன்னுகூட ஞாபகமில்ல. ஆனா இப்பிடி ஒரு நாள்ள இருபத்துநாலு மணித்தியாலத்துல இல்லாத ஏதோ ஒரு உன்னதம் ஒரு நிமிஷம் கிடைக்கும். அந்த ஒரு நிமிஷம். அவளைப்பார்க்கும் ஒரு நிமிஷம். அவள் யாரென்று கேட்காதீங்க… சத்தியமா தெரியாது. ஆனா நிதமும் பாக்குறேன். எப்ப மொதல்ல பாத்தேன்னு ஞாபகமில்ல. ஒவ்வொரு ஆம்பிளயும் ஒரு நாள்ள ஆயிரக்கணக்கான பொண்ணுங்கள சந்திக்குறாங்க. எல்லாரையும் எப்ப பாத்தோம் எப்பிடி பாத்தோம்னு எல்லாத்தையும் பதிவு பண்ற அளவுக்கு நம்ம மெமரிகார்ட் ஒண்ணும் அவ்வளவு கெப்பாசிட்டி இல்லியே.. அப்பிடித்தான் அவளையும் எதேச்சையாப் பாத்து அதை எதேச்சையா மறந்தும் போயிட்டேன் இரண்டாம் நாள் பார்க்குறவரைக்கும்.

இதுல ஒரு முக்கியமான விசயத்த விட்டுட்டேன். எந்த ஒரு ஆணுக்குமே அதுவும் வாழ்க்கையில எந்த பொண்ணுகூடயும் பழக்கமில்லாத பிரம்மச்சாரிகளுக்கு கோயில்லயோ கல்யாண வீட்டுலயோ பஸ் ஸ்டாண்ட்லயோ நம்மள கடக்குற பொண்ணுங்கள பார்க்கும்போது இவ நமக்கு மனைவியா வந்தா எப்படி இருக்கும்னு ஒரு எண்ணம் வாறது இயல்பு. அதுவும் சாதரணமா வறாது. அந்த பொண்ணு நம்மள கடக்கும்போது ஏதோ மின்னல் பாயுறமாதிரி இருக்கும். ஒருக்கா பாத்துட்டு விடமுடியாதே. திருப்பி பாக்கணுமே. எப்பிடி பாக்குறது? யாருக்கும் தெரியாம ஏன் அவளுக்கே தெரியாம பாக்கணும். கோயில்னா அவ போற சந்நிதிகளுக்கே நாமளும் பின்தொடரணும். கல்யாணவீட்டுலனா சாப்பாட்டுல அவ என்ன ஐட்டம் பரிமாறுறாளோ அதையே திருப்பிதிருப்பி கேட்டு அவள பாக்கவைக்கணும்.. பஸ்ஸுலனா வழியுறது தெரியாம அவளுக்கு டிக்கெட் எடுக்க உதவிசெய்யணும். இதெல்லாம் காதலிக்குறவிங்களுக்கு தமிழ்சினிமா கத்துக்கொடுத்த டெக்னிக்கல்ஸ். ஆனா கடைசியில லைஃப் ஒஃப் பை பட கிளைமேக்ஸ்ல வாற புலி மாதிரி நம்மள திரும்பிபாக்காமலே போயிடுவாளுக.. அந்த மாதிரி எத்தனையோ பொண்ணுகள எதேச்சையா பாத்து காதலிக்குற மாதிரி கல்யாணம் பண்ணா நல்லாருக்கும்ற மாதிரியெல்லாம் நினைச்சுபாத்துருக்கேன். ஆனா இவள முதல் தடவை பாக்கும்போது அப்பிடி தோணல. அவளோட தோற்றம் அப்படி…

பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன பூக்கடை வைச்சுருக்குற பொண்ணு.. அவளோட தோற்றத்தை வச்சு எத்தனை வயசுன்னு இலகுவா சொல்லமுடியாது. காரணம் எப்பயும் தோய்க்காத சேலையும் கழுவாத முகமுமா இருப்பா. பூ விக்குற பொண்ணுங்க எப்பயும் குளிச்சு மஞ்சள் பூசி பெரிய குங்கும்ப்பொட்டு வச்சு தலைநிறைய பூ வச்சு மங்களகரமா இருப்பாங்க. அப்பதான் அவங்ககிட்ட பூ வாங்குறங்க நல்ல சகுனமா நினைப்பாங்க. ஆனா இப்பிடி விடியா மூஞ்சியா ஒரு பொண்ணு பூ வித்திட்டு இருந்தா யாரும் பூ வாங்கவும் வரமாட்டாங்க.. அவளை ஒரு சகுனத்தடையாவும் நினைப்பாங்க. இப்பிடி ஒரு சந்தர்பத்துலதான் அவளை பாத்திருப்பேன்னு நினைக்குறேன். அவசர அவசரமா பஸ்ஸுக்காக ஓடிவந்து அவ்வளவு கூட்டத்தையும் ஓரங்கட்டி பஸ்ஸுல ஏறி இடம்பிடிக்கணுங்குற தினசரி போராட்டத்துல அந்த பொண்ண பாக்குறது அதிகபட்சம் இரண்டு நிமிஷம்தான். சொல்லப்போனா எனக்கு அவளை பாக்கணுங்குற அவசியம்கூட கிடையாது. ஆனா அந்த ஒரு நிமிட பொழுதுபோக்குக்காக என் கணை அவள் இருக்குற இடத்தையே சுத்திவரும். பெரும்பாலும் வியாபாரமேயில்லாம தனியா இருந்து பூக்கட்டிகிட்டு இருப்பா. எப்பயாவது ஒருக்கா ரெண்டுதரம் யாராவது பூ வாங்க வாறத பாத்திருக்கேன். அதுவும் ஆம்பிளைங்கதான்.

வீட்டுலர்ந்து வாசலால வெளில போகும்போது அங்க சின்னதா ஒரு பிள்ளையார் சிலை இருந்தா திரும்பிபாத்து ஒரு செக்கன் கண்ணை மூடிட்டு போறோம்ல.. அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் பஸ் ஸ்டாண்ட் வந்தா ஒரு செக்கன் அவளை திரும்பிபாக்குறது எனக்கு வழக்கமாயிற்று.. ஆனா நான் முதல்ல சொன்னமாதிரி ஒரு பொண்ணை எங்கயாவது பாத்தா இவ நமக்கு மனைவியா வந்தா எப்பிடி இருக்கும்னு ஏங்கி அவளையே பாக்கணும்னு தோணும்னு சொன்னேனே.. அந்த மாதிரி இல்ல. ஆனாலும் தினமும் பாக்குறேன். திரும்பி திரும்பி பாக்குறேன். ஒருவேளை பழகிப்போன ஒண்ணுன்றதால மாத்தமுடியாம இருக்கோ தெரியல. ஆனா ஒரு சாதாரண விசயம், ரொம்பசாதாரண விசயம் நம்மளுக்குள்ள போய் நம்மள ஆளுது அதாவது அதுல இருந்து வெளில வரமுடியாம பண்ணுதுங்குறப்போ அத மாத்தித்தான் ஆகணும். எனக்கு அவளை பாக்குறதால ஒரு பிரச்சினையும் இல்லனே வச்சுக்கங்க… ஆனா ஒரு பையன் தினமும் பஸ் ஸடாண்டுக்கு வந்து இந்த பொண்ணையே திரும்ப பாக்குறான்னு யாராவது கவனிச்சிட்டா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பிரச்சினை வரும். அதனாலயே அவளை திரும்பி பாக்குறத இன்னியோட விட்டுற்றதுன்னு எத்தனையோ நாள் சத்தியம் பண்ணிட்டு போய் நின்னாலும் அவ பக்கம் திரும்பாம பஸ்ஸுல ஏறினதே இல்ல… இந்த பிரம்மச்சாரிகளோட மனசு இருக்கே எதை செய்யக்கூடாதுனு சொல்றோமோ அதையே செஞ்சுபாத்தா என்னனு விடாப்பிடியா செய்யும்.

என்னடா ஒரு பொண்ண தினமும் திரும்பி பாக்குறது ஏதோ ஒரு பெரிய விசயம் மாதிரி இவ்வளவு ஃபீல் பண்றானேனு பாக்குறீங்களா? மனைவிக்கு ஒருநாள் உடம்பு சரியில்லன்றதுக்காக காஃபி சாப்பிடாம ஆபிஸ் வந்தா அந்த நாள் முழுக்க ஏதோ ஒன்னு குறைஞ்சமாதிரி இருக்குமே.. அதேமாதிரி ஒரு பழக்கத்துக்கு தன்னை ஆட்படுத்திகிட்டு அதுலயிருந்து வெளில வரமுடியாம ஒருத்தன் புலம்புறான்னு வச்சுகங்களே.. ஆனா இதுவரைக்கும் அவளை அந்த பஸ் வாற ஒரு நிமிஷ இடைவெளில திரும்பிபாக்குறதே தவிர அவ யாரு, பேர் என்ன, எங்க இருக்கான்னு ஒண்ணும் தெரிஞ்சிகிட்டது கிடையாது. தெரிஞ்சுக்கவேணும்னு நினைக்கவும் இல்ல. அட அவ கடைக்கு போய் ஒரு முழம் பூ கொடுங்கனு சொல்லி அவகிட்ட பேசினதுகூட கிடையாது. ஏன் பேசனும்? அவகிட்ட எனக்கு எந்தவித எதிரபார்ப்பும் இல்ல. அவளும் என்னை பாக்கணும், என்னை பாத்து சிரிக்கணும், எங்கூட பேசனும் இப்பிடி நான் நினைச்சுகூட பாக்கல. அந்த அவசியமும் இல்ல. அதேபோல இதுவரக்கும் ஒருநாள்கூட அவளும் என்னை பாத்தது இல்ல. நான் யாரு, இப்பிடி ஒருத்தன் இருக்கானானு கூட அவளுக்கு தெரியாது. பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது ரெண்டு செக்கன் திரும்பி அவளை பாக்குறது என்னோட வழக்கம். அதோட எங்க உறவு முடிஞ்சுபோச்சு. இத தாண்டி எந்த ஒரு சின்ன கோடுகூட எங்களுக்குள்ள இல்ல.

வாசலோர பிள்ளையார் சிலை, காலைநேர காஃபி மாதிரி ஒரு வழக்கமாயிருந்த அவளோட தரிசனம் ஒருநாள் ஒரு சம்பவத்தால என்னை ஒரு சமூகபுரட்சியாளனா சிந்திக்கவச்சுது. அன்னைக்கும் அதே மாதிரி பஸ்ஸுக்காக சாலையோரமா தவம் செஞ்சிட்டு இருக்கும்பாது அந்த ரெண்டு நிமிஷ இடைவெளில அது நடந்துச்சு. ஒரு பெறுக்கி பஸ் ஸ்டாண்ட்ல இருந்த பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு இருந்தான். சரி சரி அப்பிடி பாக்காதீங்க. இது ஏதோ தெரியாத விசயம் மாதிரி சொல்ல வந்துட்டானு நினைக்குறீங்க. ஆனா அப்பிடி கேவலமா பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு இருந்த அந்த தடியன் அவளை பாத்துட்டு பாக்காத மாதிரி திரும்பி வேறு பொண்ணை கிண்டல் பண்ணான். அங்க இருந்த ஒவ்வொரு பொண்ண போய் வழிஞ்சு அசிங்கமா பேசி அழவச்ச அவன் அவளை மட்டும் திரும்பி பாக்கல. அந்த பொறுக்கி பண்ற அத்தனை சில்மிஷத்தையும் பாத்துட்டு வழக்கம்போல நம்ம காந்தியின் பேரன்கள் வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல அவன் அவளோட கையைபிடிச்சுகூட இழுத்திருக்கலாம். பஸ்ஸுல ஏறிட்டேன். அருந்தும் அங்கேயே மூளை சுத்திட்டு இருந்திச்சு. இந்த மாதிரியான சமூக அவலங்கள்ள இருந்து தன்னை காப்பாத்திக்கத்தான் அவ இப்பிடி அசிங்கமாயிருக்காளா? பொட்டுல அடிச்சமாதிரி பகீர்னு இருந்திச்சு. அப்ப ஒரு பொண்ணு சுதந்திரமா தனக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்தா அது ஆபத்தானதா? இந்த மானங்கெட்ட சமூகத்துல இருந்து அவ தப்பிக்கணும்னா தன்னை தாழ்த்திக்கிட்டுதான் வாழனுமா? ஆனா இன்னோரு விசயம் வேறு ஒரு திசையால வந்து பிடரியில அடிச்சிச்சு.. அவ மட்டும் குளிச்சு முடிச்சு சீவி சிங்காரிச்சு வந்திருந்தா அங்க இருந்த அழகான பொண்ணங்கள அந்த பொறுக்கி அசிங்கபடுத்தினமாதிரித்தானே இவளையும் அசிங்கப்படுத்தியிருப்பான். அப்பயும் நம்ம குடிமகன்கள் வேடிக்கைதானே பாத்திட்டு இருந்திருப்பாங்க. இவ ஏழைப்பொண்ணுவேற. யாரு இவளுக்கு ஆதரவா அந்த தடியனை எதிர்த்திருப்பாங்க? அவ புத்திசாலின்னு மட்டும் தெரிஞ்சுது. ஆனா இப்பிடி ஒரு சமூக அமைப்புல வாழுறத நினைக்க வெட்காமாவும் இருந்திச்சு. நானும் அந்த ஆட்டுமந்தைக்கூட்டத்தோட ஒருத்தனா இதயெல்லாம் எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்ய யாராவது வருவாங்கனு பெருமூச்சுவிட்டதோட என்னோட சமூகசீர்திருத்த சிந்தனை முற்றுப்பெற்றது.

காரணமேயில்லாம அவளை பார்க்குறத ஒரு வழக்கமா வச்சிருந்த நான் அதுக்கப்புறம் பெருமையோட பார்க்க ஆரம்பிச்சேன். அலுப்பான வழமைகளுக்கு மத்தியில் அது ஒரு அற்புதமான வழமையாக மாறியது. அந்த வழமை தொடரவேண்டுமெனவும் ஆசைப்பட்டேன். ஆனா இப்பிடி என்ன புலம்பவச்சதுக்கு காரணம் ரெண்டு நாளா அவளைப் பார்க்கல. வழமையில் ஒரு தனிமை. அவ வழமையா உட்கார்ர இடத்துல கண்ணு போய்ட்டு போய்ட்டு வருது. அவ ஏன் வரல. ஏதாவது நடந்திருக்குமா? இல்ல ஊருக்கு போய்ருப்பாளா? என்னமோ போங்க ஏதோ ஒன்றை இழந்ததாக… அட அது கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேணும்னா இப்பிடி வச்சுக்கலாம். தினமும் பண்ற வேலையில ஏதோ ஒன்னு கொறைஞ்ச மாதிரி. நாய் மாதிரி ஓடி கழுதை மாதிரி உழைக்குற கடினமான வழமைகளுக்கு மத்தியில் ஆறுதலாக இருந்த ஏதோ குறைந்தமாதிரி… ம்ம்ம் வேலையில் நாட்டமில்லை, மனசு அலை பாயுது, பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்குனலாம் ஓவரா ரீல் விடமாட்டேன். ஆனா ஒரு வெறுமைய உணர்ரேன். ரெண்டுநாளா ஒரு பொண்ண பாக்காதாதால ஒரு வெறுமைய உணர முடியுதுனா அவ எப்பிடி ஆள்கொண்டிருப்பானு நினைச்சு எனக்கே ஆச்சரயமா இருக்கு. சாதாரண ஒரு பார்வை. அதுவும் நான் மட்டும். அது இல்லாமத்தான் இப்பிடியா? இதுக்குமேல இப்பிடி ஆபிஸ்ல உட்கார்ந்து இதப்பத்தியே புலம்பி என்ன பயன்? வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்காவது அவளைப் பார்பேன்ற நம்பிக்கைல!!!

Sunday, April 14, 2013

நாலு பேர் நாலு விதமா...


வழமைபோல எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நடந்தன. பார்த்தும் பார்க்காமல் போகும் பக்கத்துவீட்டுக்காரன், எனக்கு மட்டும் குட்மோர்னிங் சொல்லாத வாட்ச்மேன், என்னைப் பார்த்ததும் முகத்தை சுழிக்கும் கீரைக்காரி… மொத்தத்தில் அக்கம் பக்கத்தால் தள்ளிவைக்கப்பட்ட வாழ்க்கை. அன்னம் தண்ணி புழங்ககூட ஆளில்லை. போதும்டா சாமின்னு இந்த இடத்தை விட்டே போகலாம்னு யோசிச்சாலும் இருக்குறதே ஒரே ஒரு சொந்த வீடு. வாங்க விக்க வற்றவங்களும் ஆயிரம் குத்தம் சொல்றாங்க. இங்க இருந்து வேலை பாக்குற ஆபிஸ்ஸுக்கு பக்கமா ஒரு நல்ல வீடு வாங்கவே முடியாது. அப்பிடியே வாங்கினாலும் இதவிட ரொம்ப சின்னா வீடாத்தான் இருக்கும். பையனுக்கும் ஸ்கூல்போக சிக்கலாயிருக்கும். நாம வாங்குற சம்பளத்துக்கு தனியா எல்லாம் அவனுக்கு ஸ்கூல் வான் பிடிச்சு அதுக்கு ஃபீஸ் எல்லாம் குடுக்கமுடியாது. நான் ஆபீஸ் போகும்போதுதான் பைக்ல அவனையும் விட்டுட்டு போகணும். சரி நம்ம ஏரியாக்குள்ளதான் இவ்வளவு மனஸ்தாபம், ஆபிஸ்லயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்க எவனும் பேசமாட்டேங்குறான். நானா போய் ஏதாவது கேட்டா என் முகத்தப் பாக்கமாத்தான் பதில் வரும். சரி பேசாட்டி போங்கடாங்கனு விட்டுட்டு இருந்துடுவேன். ஆனா சிலபேர் வந்து எனக்கு முன்னாலயே என்னைப்பத்தி பேசி நக்கலா சிரிக்கும்போது அத கேக்கமுடியாம கோபத்தை அடக்குறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஆபிஸ்லதான் இப்பிடின்னா பையனோட ஸ்கூல்ல அதவிட மோசம். டீச்சர், கூடப்படிக்குறவங்கள்ளேல்லாம் தப்பு தப்பா பேசுறாங்கனு வந்து அவன் தினமும் அழுதுட்டு இருக்கான். வீடு, ஆபிஸ், ஸ்கூல் எல்லாத்தையும் மொத்தமா ஒரேநேரத்தில மாத்துற அளவுக்கு வசதியில்லாத ஒரு குடும்பத்தலைவனால சுத்தியிருக்கற இத்தனை சிக்கலையும் சமாளிக்கமுடியாத நிலைமையில என்ன பண்ணமுடியும்? இப்போதைக்கு எனக்கு ஒருக்குற ஒரே ஆறுதல் காலம்தான். காலம் சிறந்த மருந்து. எல்லா காயங்களையும் ஆத்திடும். இதையும் ஆத்திடும். அதவிட முக்கியம் எல்லாரும் இத மறக்கணும். மறந்து…. பழையமாதிரி எங்கிட்ட பேசாட்டியும் பரவாயில்ல, குத்திகாட்டுறமாதிரி நடக்காம இருந்தாலே போதும். அப்பிடி என்னதான் நான் தப்பு செஞ்சிட்டேன்? கொஞ்சநாளைக்கு முந்தி வரைக்கும் இப்பிடி இல்ல….

நல்லா படிச்சு ஒரு கௌரவமான உத்தியோகத்துல இருக்குற உங்களைப்போன்றவன்தான் நானும். மானத்துக்கு அஞ்சி வாழுற சாதாரண மிடில்க்ளாஸ் குடிமகன். அப்பாவோட சேமிப்போட நானும் ஒரு லோன் எடுத்து சொந்தமா வீடு வாங்கினேன். சிக்கனமா இருந்து லோனையும் கட்டியாச்சு. சொந்த வீடு, நல்ல வேலைனு வாழ்க்கைல ஒரு நிலைக்கு வந்ததும் கல்யாணம் ஆச்சு. சந்தோசமா போன கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமா ஒரு பையனும் பொறந்தான். அப்பா அம்மா சாகுறப்போ பையன் நல்ல நிலமைல இருக்கான், பேரன் பொறந்துட்டான்னு நிம்மதியிலதான் கண்ண மூடினாங்க. ஆனா அவங்க போனப்புறம் எனக்கு நிம்மதி போச்சு. குடும்ப பாரத்த சுமக்குறது மட்டுமில்லாம கீதாவ வளர்க்குற பொறுப்பும் எனக்கு வந்திச்சு. என்னோட ஒரேயொரு உடன்பிறப்பு கீதா. என்மேல உயிரையே வச்சிருக்குற என் தங்கச்சி. அவளைப்பத்தி நினைக்கும்போதெல்லாம் பேசாம நான் சின்ன பையனாவே இருந்திருக்கலாம்னு தோணும். ஒரே சாக்லேட்ட அவகூட சண்டை போட்டு யாரு சாப்பிட்றதுனு தலைய பிச்சி உருண்டு பிரண்டு பிறகு ஒருவழியா ஒண்ணா உக்காந்து பாதி பாதி கடிச்சு சாப்பிட்டதுதான் என் வாழ்க்கையிலயே ரொம்ப அழகான நாட்கள். அதுக்கப்புறம் வளர்ந்து படிச்சு வேலை கல்யாணம்னு எத்தனையோ வந்தாலும் அப்பிடி நான் உண்மையா சந்தோசமா இருந்தேனானு தெரியல. அப்பா அம்மாவ விட என்மேலதான் பாசமாயிருப்பா. எனக்கு எப்பிடிபட்ட பொண்ணு வந்தா நல்லா இருக்கும்னும் அவதான் தேர்ந்தெடுத்தா. என் பொண்டாட்டியும் என் குடும்பத்துமேல அப்பிடியே பாசத்தை பொழிஞ்சு கொட்டாட்டியும் கொஞ்சமாவது சமாளிச்சா. அதுவே பெரிய விசயம். அவளுக்கு பொழுது டீ.வி சீரியலோடயே போயிடும். பையனும் ஸ்கூல்ல சேர்ந்து நல்லா படிச்சுட்டு வந்தான். தங்கச்சிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு காலேஜ்ல இடம் கிடைச்சு போய்ட்டு இருந்தா. எனக்கு பகல்ல ஆபிஸ்ஸும் இரவில குடும்பத்தையும் பாத்திட்டு காலம் போய்ட்டு இருந்தப்பதான் நான் கொஞ்சமும் நினைக்காத என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த சம்பவம் நடந்திச்சு.

போலீஸ்காரங்க, பத்திரிக்கைகாரங்க எல்லாம் சுத்தி நின்னிட்டு இருந்தாங்க. என் கண்முன்னால என்ன நடக்குதுனே தெரியல. கண்ணு கூசுற அளவுக்கு கேமரா லைட் அடிச்சிட்டு இருந்திச்சு. டாக்டர் எல்லாம் போலீஸோட ஏதோ பேசிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்ட பெரிய மனுசங்க சிலபேர் தலையகுனிஞ்சு உள்ள வந்து போலீஸ தனியா கூட்டிட்டு போய் ரகசியம் பேசினாங்க. அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல அத்தனை கூட்டத்துக்கு மத்தியில தனி ஆளா என்ன செய்றதுனு தெரியாம சுத்தி சுத்தி பாத்திட்டு இருந்தேன். யார்கிட்ட கேக்குறது எங்க போறது ஒண்ணுமே தெரியல. அறிவு மங்கி போனமாதிரியிருந்திச்சு.

‘கீதாவோட சொந்தக்காரங்க யாராவது வந்துருகீங்களா?’ உள்ளேயிருந்து ஒரு நர்ஸ் வந்து கேட்க ஏதோ ஆவேசம் வந்தவனைப்போல கூட்டத்தை தள்ளி முந்தியடித்துக்கொண்டு போய் அவளைப் பார்த்து.. ‘நான்தான் கீதாவோட அண்ணா… அவ எங்க இருக்கா? எப்படி இருக்கா? ஒருக்கா அவள பார்கணும்… அவளுக்கு என்ன ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்க’ பதட்டத்திலயும் பயத்திலயும் எனக்கு பேச்சு வந்ததே அதிசயம். அந்த நர்ஸ் ஏதாவது சொல்லுவாளா கீதாவ பார்க்கலாமானு அவ முகத்தயே பாத்திட்டு இருந்தேன். அவ ஏதோ நோட்ல குறிப்பு எடுத்திட்டு ‘சரி இந்தப்பக்கம் உக்காருங்க.. டாக்டர் கூப்பிடும்போது வாங்கனு சொல்லிட்டு போய்ட்டா’ நடக்கமுடியாம தள்ளாடிப்போய் ஒரு கதிரையில உட்கார்ந்தேன். ‘உங்க வீட்டுல கீதான்னு பொண்ணு இருக்கா? அவங்கள கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு. சீக்கிரம் வாங்க’னு ஒரு ஃபோன்தான் வந்திச்சு. அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியாம ஹாஸ்பிடல் முழுக்க நாயா சுத்தி வந்தேன். யார்யாரோ வந்திட்டு போறாங்க. என்ன நடக்குது ஏதுன்னு ஒண்ணும் புரியல. மனசும் உடம்பும் சோர்ந்துப்போச்சு. கண்ணமூடி உக்காந்திட்டேன்.

‘எல்லாம் காலக்கொடுமைதான்… என்னத்த செல்றது. காலேஜ் படிக்குற பொண்ணுங்க மூணுபேர கூடபடிக்குற பசங்க பார்ட்டினு கூட்டிட்டு போயி நாசம் பண்ணிட்டாங்க. அந்த பொண்ணுங்க கெஞ்சி கதறிப்பாத்தும் அவனுக விடல. தடுத்த அந்த பொண்ணுங்களுக்குத்தான் பலத்த காயம். பணக்காரப்பசங்கன்னா என்ன வேனா செயவாங்களா? இத்தனைபேரு வந்து பாத்துட்டு போறாங்களே இதால அந்த பொண்ணுங்களுக்கு நல்லது நடக்கும்னு நினைக்குறியா? காலேஜ் பேர் கெட்டுப்போகக்கூடாதுனு அந்த காலேஜ் ஓனர் வந்து கெஞ்சுறான், கெடுத்த பசங்கள காப்பாத்தனும்னு அவங்க பெத்தவங்க வந்து பேசுறாங்க.. நியாயம் கிடைக்கணும்னு பேச யாரும் வரலியே’

கை நடுங்கியது.. வேர்த்து கொட்டியது, என்ன? என் தங்கச்சியா? இல்ல… இருக்காது இருக்கவே இருக்காது… ஐய்யோ ஐயோ….. கீதா… கீதா… இப்பதானே ஸ்கூல் முடிச்சு காலேஜ் போனா. பச்ச பிள்ளைடா அவ ஐயோ அடப்பாவிகளா…. கத்தினேன் கதறினேன்… என் கூச்சலுக்கு பதில் சொல்ல அவ்வளவு பெரிய ஹாஸ்பிடலில் ஒருத்தர்கூட இல்ல. என்னோட ஆற்றாமையில் எனக்கே கோபம் வந்திச்சு. யாரு என்ன ஏதுன்னு ஒண்ணுமே புரியலயே யாரு? யாரு? அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா? அடக்கடவுளே… ஒரு பொண்ணா பொறந்தது அவ குத்தமா? என் கீதா உனக்கு என்ன செஞ்சா? கீதா.. ஆமா கீதா எங்க? என் கீதா? எழும்பமுடியாமல் எழுந்து அங்கும் இங்கும் ஓடினேன்.. எந்த வார்ட்னு தெரியல. மொத்த ஹாஸ்பிடலயும் நாலஞ்சு தடவ சுத்தி அவ இருக்குற இடத்துக்கு போனேன். அவ… என் தங்கச்சி, என் தேவதை ஒரு கட்டில்ல கசங்கிப்போய் படுந்திருந்தா.. இத பாக்காத்தான் நான் இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? தடுமாறி அவளுக்கு பக்கத்தில போனேன். சுத்தியும் டாக்டர்களும் போலீஸும் பத்திரிகைகாரங்களும்.. அவ முழிச்சுட்டுதான் இருந்தா. என்னைப் பாத்ததும் கத்தி அழுதிட்டா. ஐயோ நான் அவளுக்கு பக்கத்துல போய் அவ கைய இறுக்க பிடிச்சுகிட்டேன். அவ என் முகத்தயே பாக்கல. தலைய குனிஞ்சிட்டு அழுதிட்டே இருந்தா. அதுக்குள்ள ஒரு நர்ஸ் வந்து ‘உங்கள அங்க இருக்கதானே சொன்னோம். இங்கல்லாம் வரக்கூடாது. வெளில இருங்க’னு சொன்னார். என்னால முடியல. அவள விட்டுட்டு இனி எங்கயும் நகரமுடியாது.. அதுவும் அவளும் என் கையை பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்காளே.. டாக்டர் என்னை இருக்க சொன்னார். பத்திரிக்கைகாரங்க எல்லாம் கீதாவ சுத்தி நின்னுகிட்டு கேவலமா கேள்விக்கேட்டு கொன்னுட்டாங்க.. ‘நீங்க ஏன் அவங்களோட போனீங்க?, உங்கள எத்தனைபேர் கற்பழிச்சாங்க?, எவ்வளவு நேரம் அவங்களோட நீங்க இருந்தீங்கனு மாத்தி மாத்தி ஈவு இரக்கமே இல்லாம கேள்வி கேட்டிட்டு இருந்தாங்க… ஏன்யா இப்பிடி பண்றீங்க? ஏற்கனவே செத்துபொழைச்சு வந்தவங்கள இப்பிடி கேள்விகேட்டு சாவடிக்குறீங்களேனு கத்தினேன். போங்க போங்க என என் தங்கச்சியும் எல்லாரையும் பாத்து கத்தினா.. எல்லாரும் கலைஞ்சு போனாங்க.. என் தங்கச்சியோட கண்ணீரைத் தவிர..

பல போராட்டங்கள் நடந்திச்சு. பல மகளிர்அமைப்புகள் இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என உண்ணாவிரதம் இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாசம் முழுக்க எல்லா பத்திரிகையிலும் என் தங்கச்சிதான் தலையங்கமானாள். குற்றவாளிகளுக்கு பேருக்கு ஒரு தண்டனை கிடைத்தது. கவர்ன்மென்ட்ல இருந்து காலேஜ்வரைக்கும் எல்லாரும் நஷ்டஈடு கொடுக்கவந்தார்கள். எத்தனைகோடி கொட்டிகொடுத்தாலும் நடந்ததை மாத்தமுடியுமா? என எல்லாத்தையும் கீதா வேணாம்னுட்டா… தன்னை காதலிக்காத பெண்ணை பழிவாங்க ஆசிட் ஊற்றிய வாலிபன், ஓடும் பேருந்தில் ஆறுபேரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் என்று தினமும் ஒரு செய்தி பத்திரிகைகளில் வரும். அப்படி வரும்போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வலி மட்டும்தான் ஊருக்கு தெரியும். அதையும் தாண்டி அந்த பெண்களை ஆயிரம் கனவுகளுடன் வளர்த்த அப்பாவோடயோ அம்மாவோடயோ அண்ணனோடயோ வலியை உணரமுடியாது. உணரவேண்டிய அவசியமும் இந்த பாழாய்ப்போன பொதுமக்களுக்கு தேவையில்லை. உணர்ந்திருந்தால் முதல்முதலா ஒரு தப்பு நடந்தப்பவே அடுத்த தப்பு நடக்காம இந்த மக்கள் பார்த்திருப்பாங்க. தண்டனையை அந்த படுபாவிகளுக்கு கொடுத்திருப்பாங்க. ஆனால் அங்க எல்லாம் ஆட்டுமந்தை மாதிரி வாயை மூடிட்டு இருந்துட்டு அவங்க தண்டனை கொடுக்க வந்தது என் தங்கச்சிக்கும் என் குடும்பத்துக்கும்… எத்தனை ஏச்சு பேச்சு!

ஆசையோட படிக்கப்போன படிப்பும் போய் மானமும் போய் என் தங்கச்சி வீட்டோட முடங்கிப்போயிட்டா.. அக்கம்பக்கத்துல இருந்தவங்க எல்லாம் கெட்டுப்போனவள வீட்டோட வச்சிருக்காங்கனு அரசல்புரசலா பேச ஆரம்பிச்சாங்க.. சாதாரணமா ஒரு பக்கத்துவீட்டுக்காரனோட கொண்டாடுற உறவுமுறை அற்றுப்போனது. அருவருப்பா பாத்தாங்க… எந்த ஒரு தப்பும் பண்ணாம வாழ்க்கையே தலைகீழா மாறிப்போனது. டீவிடீல இருக்குறமாதிரி வாழ்க்கைலயும் ஒரு ரீவைண்டு பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணிச்சு… நாங்க படுற கஷ்டத்த பாத்துட்டு கீதாவாவே வந்து ஒருநாள் சொன்னா நான் தனியா போறேன்னா.. என்னால இனி நீங்க யாரும் கஷ்டப்படாதீங்கனு.. அவளை விட்டுட்டு நாங்க என்ன பண்ணமுடியும்.. அப்புறம் நாங்க பக்கத்துவீட்டுல இருக்குறத அசிங்கமா நினைக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம்? எப்பிடியும் கஷ்டப்படத்தான்போறோம். பிரிஞ்சுபோனா பனவேதனைதான் அதிகமாகும்.  எப்ப பாத்தாலும் அவமேல எரிஞ்சுவிழுற என் பொண்டாட்டியே இப்பல்லாம் அவள குழந்த மாதிரி பாத்துக்குறா.. அவளுக்குத்தேவை ஒரு சுகமான ஆறுதல். வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்கு போகமுடியும்ற நம்பிக்கை. அதை கொடுக்குறதுதானே ஒரு அண்ணனா என்னோட கடமை. அவளுக்கு நான் படிப்பு கொடுப்பேன். அவளோட மொத்த வாழ்க்கையையும் மாத்த எங்கிட்ட சக்தியில்லாம இருக்கலாம். ஆனா இனி வாழப்போற வாழ்க்கைக்கு உறுதுணையா கைகொடுக்க மனசிருக்கு. அவ என் தங்கச்சி. ஆமா.. ஊரு இன்னும் பேசிட்டுத்தான் இருக்கு. முந்திக்கு இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. இன்னும் கொஞ்சநாள்ள மொத்தமா குறைஞ்சிடும். அதுவரைக்கும் பொறுமையா இருப்பேன். கறை எங்க வாழ்க்கையில வரல. வீணாப்போன சில இளைஞர்களின் எண்ணத்துலதான் வந்திச்சு.. அதுக்காக நாங்க காலம் முழுக்க தண்டனை அனுபவிக்கணுமா? வாழ்க்கை ஒரு விபத்துனால நின்னுபோயிடாது.. அது ஓடிக்கிட்டேதான் இருக்கும். வித விதமா பேசத்தான் இந்த சமூகம் இருக்கு ஆனா சமுதாயம் பேசுறதை தாண்டி வாறவங்கதான் வாழ்க்கையில ஜெயிப்பாங்க. என் தங்கச்சி ஜெயிப்பா…

Monday, April 8, 2013

சௌபாக்யா…!


‘என்னப்பா நீங்க? நாங்க வந்து முப்பது நிமிஷத்துக்கு மேலயாகுது. ஏன் வந்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க, யாருக்காக காத்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க…….ஏதாவது சொல்லுங்கப்பா?’

மறுபடியும் மகளுக்கு மௌனத்தையே பதிலாக தந்துவிட்டு தாங்கள் அமர்ந்திருக்கும் அந்த பெரிய ரெஸ்டாரெண்டின் வாசலையே மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மூத்தமகள் சௌபாக்யா. அளவான அங்கத்தவர்களோடும் தேவைக்கேற்ற வசதியோடும் வாழுற இனிமையான குடும்பம் அவர்களுடையது. பண்பான அந்த குடும்பத்தில பட்டாம்பூச்சியாக சிறகடிப்பவள் சௌபாக்யா!. படிப்பில கெட்டிக்காரியாகவும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் மட்டுமில்லாம நல்ல வேலையில நிறைவா சம்பாதிச்சு குடும்பத்தையும் பாத்துக்குறா. ஆனா இளவயதை அடைந்தபின்னும் சுட்டித்தனம், அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் குணம், அதோட கொஞ்சம் திமிரு!

தூரத்தில் ஒரு நிழலாடுவதைக் கண்டு தன்னிலைக்கு வந்தார் அர்ஜூனன். அவளோ ஒன்றும் புரியாமல் அருகில் அமர்ந்திருந்து தன் ஐஸ்கிரீமில் கவனம் செலுத்தினாள். சிறிது நேரத்தில் அவர்களின் இருக்கைக்கு முன்னிருக்கையில் வந்து அமர்ந்தான் கணேஸ்!

‘ஹாய் கணேஸ்! என்ன இந்தப் பக்கம்? ………………. என்னப்பா நீங்க? கணேஸுக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தோமா? முதல்லயே சொல்லியிருக்கலாந்தானே?’

அர்ஜுனனும் கணேஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஸ் கண்ணால் ஏதோ சொன்னான். அர்ஜுனன் அதைப் புரிந்து கொண்டு தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தார்.

‘நான்தான் கணேஸ வரச் சொன்னேன்!’

‘அதுக்கேன்பா என்னை கூட்டிட்டு வந்த போரடிக்க வச்சீங்க?’

மீண்டும் ஒரு அமைதி……….

‘உன்கிட்டதான்மா பேசணும்………….நீ கணேஸ பத்தி என்ன நினைக்குறே?’

‘இதுல நினைக்க என்னப்பா இருக்கு? என் சின்ன வயசில இருந்து ப்ரண்டு… எனக்கு நல்லதுகெட்டதுக்கு முன்னுக்கு நிப்பான். நல்ல பையன். கொஞ்சம் லூசு! ஹாஹா……. ஏன்ப்பா இப்ப இவனப் பத்தி கேக்குறீங்க?’
கணேஸ் சிறு பதட்டத்துடன் அர்ஜுனனை பார்த்தான்.

‘கணேஸுக்கு உன்னப் பிடிச்சிருக்கும்மா! எங்ககிட்ட வந்து பேசினான். எங்களுக்கு உன் முடிவுதானே முக்கியம். அதுதான் பேசி ஒரு முடிவெடுக்க இங்க வரச் சொன்னேன்’

அந்த ஒரு கணத்தில் சௌபாக்யாவிற்குள் என்ன பிரளயம் வெடித்தது என மற்ற இருவருமே சற்று அறிந்திருக்கக்கூடும். கணேஸை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அதை எதிர்கொள்ள முடியாமல் அவன் தலைகுனிந்தான். அதே உஷ்ணத்தோடு பார்வையை தந்தையின் பக்கம் திருப்பினாள்.

‘எங்க நிலமையும் புரிஞ்சுகோம்மா….. உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கணும்ணு எங்களுக்கு மட்டும் ஆச இருக்காதாணு மத்தவங்க மாதிரி பேசமாட்டேன். நல்லா யோசிச்சு பாரு. இந்த கால பசங்கெல்லாம் எப்பிடி இருக்காங்க? வீட்டுக்கு அடங்காம ஊர சுத்துறது, கண்ட கண்ட கெட்ட பழக்கங்கள பழகிக்கறது இப்பிடி சீரழியற சமூகத்துல ஒரு நல்ல பையனுக்கு உன்ன கட்டி வக்கிற பொறுப்பு எங்களோடதுதானே…. கணேஸபத்தி நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும்! அதான் அந்த பையன் வந்து கேட்டதும் மறுக்கமுடியல’

‘எனக்குனு சில லட்சியங்கள் இருக்குறது உங்களுக்கு தெரியுந்தானேப்பா… அப்பிடி இருந்தும் நீங்க என்ன புரிஞ்சுக்காம…’

‘கொஞ்சம் பொறும்மா! நான் எந்த முடிவும் எடுக்கப் போறதில்ல. முடிவு உன்னோடதுதான். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நீ என்ன முடிவு பண்ணாலும் அதுக்கு நான் கட்டு படுறேன். நான் வீட்ட போறேன். நீ பேசிட்டு வாம்மா.’

அதற்குமேல் தான் அங்கிருப்பது தேவையில்லையென அர்ஜுனன் புறப்பட்டார். எதிரெதிர் இருக்கைகளில் கணேஸும் சௌபாக்யாவும்! ஒரு அமைதி. அந்த அமைதியை அடுத்தவர் உடைக்கட்டும் என இருவரும் காத்திருந்தனர். கணேஸ் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை எப்பிடி எதிர்கொள்வதென அறியாது சம்பந்தமேயில்லாமல் அங்குமிங்கும் விழிகளை அலைக்கழித்தான். அவன் கண்கள் செல்லும் வழியில் அவளின் கண்களை சந்தித்து அவளின் உள்மனதை நோட்டம் பார்க்கும் உளவு வேலையை செய்தது. ஆனால் அந்த வேலையை திறம்பட செய்யும் சக்தியற்று அவையிரண்டும் நிலத்தில் மண்டியிட்டன. இதற்கு மேல் பொறுமையிழந்த சௌபாக்யா கண்களில் எரிமலையோடும் உதட்டில் பூகம்பத்தோடும் பேச ஆரம்பித்தாள்.

‘என்ன எண்ணத்துல நீங்க இப்பிடி கேட்டீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

‘…………………………………………..!’

‘என்ன பேசாம இருக்கீங்க? பேசத்தானே வந்தீங்க? சொல்லுங்க கணேஸ்…..’

‘அது வந்து…… அது….. உங்க அப்பா சொன்னார்தானே…… அது…… உங்க முடிவு என்னணு……………’

‘ஏன் தடுமாறுறீங்க? நீங்க ஏதோ தப்பு பண்றீங்கணு உங்களுக்கே தெரியுதுதானே கணேஸ்…. சொல்லவந்தத சொல்லி முடிங்க!’

‘அதாங்க…. அவரு…. நான்….. நீங்க என்ன சொல்றீங்க?’

‘எனக்கு பிடிக்கல’

‘ஏன்? என்னை பிடிக்கலயா?’

‘எனக்கு காதலே பிடிக்காது….. இவளோ நாளா என்கூட நல்ல ப்ரண்டா பழகின உங்களுக்கு அது தெரியாதா? அப்பிடி தெரிஞ்சும் நீங்க கேட்டதுதான் உங்க தப்பு. வாழவேண்டிய காலத்துல மனசைக் கெடுத்து வாழ்க்கைய வீணாக்குற இந்த மண்ணாங்கட்டி காதல்ல எனக்கு உடன்பாடு இல்லனு தெரியாதா? அதோட நான் இப்பதான் வேலையில கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகுறேன். இன்னும் நிறைய சாதிக்கணும். என் டேலண்ட புரூப் பண்ணனும். இப்ப கல்யாணம் அது இதுனு மனசை மாத்தினா இத்தனை நாள் நான் கண்ட கனவு என்ன ஆகும்? எவ்வளவு திறமையிருந்தாலும் ஒரு பொண்ணா பொறந்தா கல்யாணம் பண்ணிகிட்டு அடுப்பாங்கறையிலயே இருக்கவேண்டியதுதானா? சொல்லுங்க?’

‘நல்லா தெரியுங்க….. இவ்வளவு நாள் உங்களுக்கு நல்லா ப்ரண்டா இருந்த என்னால கல்யாணம்னு ஒன்னு பண்ணாலும் அதுக்குபிறகும் அந்த நட்போட உங்கள பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் கேட்டேன். நீங்க இன்னும் ஒருதடவை யோசிச்சு…’

‘நல்லா யோசிச்சுட்டேன் கணேஸ்.. ப்ளீஸ் புரிஞ்சுகோங்க. என்னோட நல்ல ப்ரண்டா இருந்த உங்கள காயப்படுத்த எனக்கு கஷ்டமாயிருக்கு. இப்ப என்னால கல்யாணம்ற ஒன்ன நினைக்கமுடியாது. உங்க வாழ்க்கைய பாத்துகோங்க…’

பதிலை எதிர்பார்க்காம இருக்கையவிட்டு எழுந்து திரும்பிபார்க்காமல் போய்விட்டாள். கண்ணியத்தோட காதலைசொன்ன கதாநாயகன் கண்ணீரோடு அவள் கடந்த பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 


கலகலப்பான காலை நேரம். அலுவலகத்தில் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்க நான் மட்டும் சோம்பலோடு உட்கார்ந்திருந்தேன். அதுக்காக வேலை இல்லாதவன்னு நினைக்காதீங்க. நான் ஒரு ஐ.டி அட்மினிஸ்ரேட்டர். சிலநாள் ஒரு வேலையும் இருக்காது. ஆனா வேலை வந்தா முதுகெலும்பை வளைக்காம விடமாட்டாங்க. ஆனா இப்ப ஐயா வெட்டிதான். சரி ஏதாவது செஞ்சிட்டு இருப்போமேனு ஐபி வெர்ஷன் 4 நெட்வேர்க்கை ஐபி வெர்ஷன் 6 ஆக மாத்த ஒரு சின்ன இன்ப்ராஸ்ரக்‌ஷர் போட ஆரம்பிச்சேன். அட மறந்துட்டேனே… வழக்கம்போல இந்த நேரத்துக்கு சௌபாக்யா வந்திருக்கணுமே, ஆளை காணலயே? என்ன ஆயிருக்கும்.

பத்து நிமிஸத்துக்கு பிறகு மறபடியும் பாத்தேன். அதோ அவ வந்திருக்காளே.. ஆனா டல்லா இருக்காளே.. ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? சரி வெட்டியாத்தானே இருக்கோம் போய் விசாரிப்போம்.

‘ஹாய் சௌபி..!’

‘சனா… எத்தனை தடவ சொல்லியிருக்கேன் அப்பிடி கூப்பிடாதீங்கனு, ஏதோ நாய்க்குட்டிய கூப்ட்றமாதிரி இருக்கு..’

‘சரி திருநிறைச்செல்வி சௌபாக்யா அவர்களே.. இன்று தாங்கள் ஏன் டல்லடிக்கிறீர்கள்’

‘உங்களுக்கு சிரிக்குற நேரமா இது?’

‘ஏன் உங்களுக்கு இது சிரிக்ககூடாத நேரமா?’

சிரித்தேவிட்டாள் அவள். பெண்களை சிரிக்கவைப்பது ஒரு கலை.. நானும் ஒரு கலைஞன் என்பதை அவளது சிரிப்பில் உணர்ந்தேன். ஆனா இன்னும் அவளது சலிப்புக்கு என்ன காரணம்னு தெரியலயே

‘சரி சிரிச்சு முடிச்சாச்சா? இப்பயாவது சொல்லுங்கம்மா ஏன் இவ்வளவு சலிப்பு இன்னிக்கு’

‘இன்னைக்கு நான் சிரிப்பேன்னு நினைக்கவேயில்ல சனா.. மனசு கஷ்டமாயிருந்துச்சு. இப்ப பரவால’

‘ஹயோ அதான் ஏன் மனசு கஷ்டப்படுது? எங்கிட்ட சொல்லக்கூடாதா?’

‘அப்பிடி இல்லங்க.. காலைல என் ஃப்ரண்டு ஒருத்தன பார்த்தேன். சின்ன வயசுலேந்து எங்கூட பழகியிருக்கான். நல்ல ஃபிரண்டாயிருப்பானு நம்பிட்டு இருந்தேன். திடீர்னு உங்கள பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணலாமானு கேட்டுட்டான். அதான் ஒரே தலைவலியா இருக்கு.’

‘ஏங்க.. அவனால ஏதாவது பிரச்சினை வரும்னு பயமா?’

‘ஐயோ இல்லங்க.. அவன் ரொம்ப நல்லவன். மத்தவங்கள கஷ்டப்படுத்த நினைக்ககூடமாட்டான். அவனால எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா என் நம்பிக்கைய கெடுத்துட்டான். அதான் கவலயா இருக்கு சனா..’

‘என்ன சௌபி.. சரி சரி சௌபாக்யா.. அவன இப்பிடி புகழ்ந்து தள்ளுறீங்க.. பேசாம சரினு சொல்லியிருக்கலாமே..’

‘இல்லங்க.. இப்பதான் ஆபிஸ்ல நல்லா வேலை செய்வேனு பேர் வாங்கியிருக்கேன். அப்பிடியே புரமோஷன் வாங்கணும். அதவிட குடும்ப பாரத்த இப்ப நான்தானே சுமக்குறேன். இந்த நேரத்துல கல்யாணம் தேவையா?’

‘அட இவ்வளவுதானா… ம்ம்ம், உங்கள நினைச்சா சிரிப்புதான் வருது’

‘என்ன சனா? உங்களுக்கு நக்கலாயிருக்கா?’

‘அட நக்கல் இல்லிங்க.. நீங்கதான் புரிஞ்சுக்காம முடிவு எடுத்துட்டீங்க. இதுல எனக்கு ரெண்டு விசயம் தோணுது. அத சொல்லாம விட்டா என் தலையே வெடிச்சிடும்.. சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க. முதலாவது எந்த வயசுலயும் சாதிக்கலாம், ஆனா கல்யாணம் அந்த வயசுல பண்ணிகாட்டி பின்னால பிரச்சினைதான். அட இருங்க இது கொஞ்சம் ஓல்டுதான். பச்சே கோல்ட்டு. பிராக்கடிக்களா பாருங்க.. இந்த ஜெனரேஷன்ல எத்தனை பொண்ணுங்க வேலைக்காக முதிர்கன்னியா வாழுறாங்க. சரி அத விடுங்க. அதவிட முக்கியமான பாயின்ட் ஒரு நண்பன் கணவனா கிடைக்குறதுக்கு கொடுத்துவச்சிருக்கணுங்க. கணவன் மனைவி உறவுல நட்பு இல்லாததாலதான் இப்ப இத்தனை விவாகரத்துகளும். உங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லயே. ஆல்ரெடி உங்க நண்பனைத்தானே கட்டிகுறீங்க.’

‘நீங்க சொல்றது எப்பிடி சனா ஏத்துக்கமுடியும்? நட்போட பார்த்த ஒருத்தர எப்பிடி காதலோட பார்க்கமுடியும்?’

‘நட்புன்றதே காமம் கழித்த காதல்தான். சாதாரண நட்பு, நெருங்கிய நட்பு, மிக நெருங்கிய நட்பு, ரயில் நட்புன்னல்லாம் இருக்கே.. அத மாதிரி இதுவும் கல்யாண நட்பு. கல்யாணம் பண்ணிகிட்டு ஒருத்தர புரிஞ்சுக்குறது விட புரிஞ்சிகிட்ட ஒருத்தர கல்யாணம் பண்ணுறது பெட்டர்தானே.. நான் லாஸ்ட்டா ஒன்னு சொல்றேங்க…’

‘ம்ம் சொல்லுங்க’

‘நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்.’

‘என்னை குழப்பிட்டீங்க சனா..’

‘ஹாஹா.. உண்மைய சொன்னேன்.’

‘ம்ம் எப்பிடியோ இன்னிக்கு உங்க கலகத்துக்கு நான் கிடைச்சேன்ல. சரி சரி நான் இன்னிக்கு அரைநாள்னு செல்லிடுங்க.’

‘ஏன் எங்கயாவது போகணுமா?’

‘அதான் சனா குருஜி ஆலோசனையில மனசு மாறிடுச்சே.. கணேஸ பார்க்கணுமே.. ரொம்ப ஓவரா பேசிட்டு வந்துட்டேன். பாவம். நான் போய் சமாதானப்படுத்தனும் வேற.. சரிங்க நான் போய்ட்டு வாறேன்.’

‘சரி சரி நடக்கட்டும்.. கல்யாணத்துக்கு கூப்பிட மறந்துடாதீங்க. நல்ல சாப்பாடு சாப்பிட ரொம்ப நாளாச்சு’

அவ வந்ததுக்கும் இப்ப போறதுக்கும் நிறைய மாற்றம் இருக்கு. தெளிவா ஒரு முடிவ எடுத்திருப்பா. காதல சொல்றதவிட அத ஏத்துக்கிறப்பதான் அதிக பதட்டம்னு அவ நடையில தெரியுது. ஆனா எப்பிடியும் அவ காதல சொல்லிடுவா இல்ல…. ஆனா என் காதல சொல்லலயேனு கேக்குற மனச ரொம்ப கஷ்டப்படுத்திதான் அடக்கி வைக்கணும். சின்ன வயசுலேந்து பழகின நண்பன் காதலிக்குறான்னதுமே அப்பிடி கவலைப்பட்டவ… ம்ம்ம் நான் சொல்லாம விட்டதே நல்லதுதான். எது எப்பிடியோ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதான் கிடைக்கப்போகுது ஏன்னா நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்