Thursday, May 31, 2012

மே 31

இன்று உலக புகையிலை எதிர்ப்புதினம். உலகம் முழுதும் பல கோடி பேரை காவு வாங்கியும் மனிதனின் அலட்சியத்தால் இன்றும் வெற்றிகரமாக உயிர்வேட்டை நடாத்திவரும் புகைபாவனையை முடிந்தளவு குறைத்து சூழலை சுத்தப்படுத்தவும். உங்கள் உயிர்மேல் உங்களுக்கு அக்கறை இல்லாவிடினும் உங்கள் குடும்ப நலனையும் உங்களை சுற்றி வாழும் மக்கள் நலனையும் மனதில் கொள்ளுங்கள். புகை எதிர்ப்பிற்கான பிரத்யேக வீடியோவைக் காண இங்கே அழுத்துங்கள்.

Thursday, May 24, 2012

மூன்றாம் தலைமுறை!

2012ம் ஆண்டு தமிழ்சினிமாவிற்கு மூன்றாம் தலைமுறை நடிகர்கள் இருவர் அறிமுகமாகின்றனர். அதுவும் அறுபது ஆண்டுகளாக தமிழ்சினிமாவின் முண்ணனி நட்சத்திரக் குடும்பங்களிலிருந்து. வாரிசு நடிகர்கள் என்பது தமிழ்சினிமாவிற்கு புதிதல்ல. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசு விஜய், நடிகர் சிவகுமாரின் வாரிசுகள் சூர்யாவும் கார்த்தியும், டீ.ராஜேந்தருக்கு சிம்பு, கஸ்தூரிராஜாக்கு தனுஷ்,எடிட்டர் மோகனுக்கு ஜெயம்ரவியென பட்டியல் நீளும். கமல் மகள் ஸ்ருதியும் தற்போது களத்தில் குதித்துள்ளார். ஆனாலும் மூன்றாம் தலைமுறையென்பது தமிழ்சினிமாவிற்கு புதிய விடயம். அதிலும் இந்த இருவருக்கும் பல சிறப்புகள் உண்டு.

ஒருவர் மறைந்த நடிகர்திலகம் செவாலியே சிவாஜிகணேஸன் அவர்களின் பேரனும் இளையதிலகம் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு. இன்னொருவர் மறைந்த நவரசத் திலகம் முத்துராமனின் பேரனும் நவரசநாயகன் கார்த்திக்கின் மகனுமான கௌதம்.

யார் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் தமிழ்சினிமாவின் அடையாளம் எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்தான். இதில் நடிப்புக்கு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் சிவாஜி. 1927ம் ஆண்டு பிறந்த இவர் எட்டு வயதில் ராமாயண நாடகத்தில் சீதை வேடமேற்றதிலிருந்து ஆரம்பித்த நடிப்புப்பயணம் அவர் இறக்கும்வரை ஓயவில்லை.கிட்டத்தட்ட 300 திரைப்படங்கள். 50 வருட திரைவாழ்க்கை. ஆங்கிலேயர்கள் இவரை புகழும்போது untired acting career என்பார்கள். தமிழ்சினிமாவில் உழைப்புக்கு சிறந்த உதாரணமே சிவாஜிதான். இது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. 1952ம் ஆண்டு பராசக்தியில் அறிமுகமானார். பாடல்கள் ஆட்சி செய்த தமிழ்சினிமாவை மாற்றி வசனங்களால் விளையாடினார். சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகன் என்ற பெருமைக்கு உரியவர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஆஃப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பட்டம் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல அமெரிக்காவில் 1962ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கலாசார விழாவில் இந்திய கலாசாரத்தின் பிரதிநிதியாக நடிகர்திலகம் அழைக்கப்பட்டார். அப்படி வெளிநாட்டினரால் அழைத்து கௌரவிக்கப் பட்ட முதல் இந்திய நடிகர் சிவாஜிதான். உத்தம புத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், தில்லானா மோகானாம்பாள், திருவிளையாடல், கௌரவம், வியட்னாம் வீடு, எங்க மாமா, திரிசூலம், முதல் மரியாதை போன்றவை சிவாஜியின் கிரீடத்தில் உள்ள சில முத்துக்கள். 1990ம் ஆண்டு கிட்டதட்ட நடிகர்திலகத்தின் இறுதி தசாப்தத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக சிவாஜி முதல் இடத்தில் காணப்பட்டார். இரண்டாவதாக எம்.ஜி.ஆரும் மூன்றாவதாக ரஜினியும் காணப்பட்டனர். இன்றும்கூட இன்றைய இளம் நடிகர்கள் பலரைக் காட்டிலும் நடிகர்திலகத்திற்கு அதிக ரசிகர்கள் இருப்பதைக் காணலாம். 1996ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் கலைத்துறைக்கு வழங்கப்படும் செவாலியே பட்டத்தை பெற்றார். இறுதிவரையும் தமிழ்சினிமாவிற்கு சேவையாற்றிய நடிகர்திலகம் 2001மாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி பூவுலகை நீத்தார். தமிழ்சினிமா உள்ளவரை சிவாஜி நாமம் இருக்கும்.

அதேபோல தமிழ்சினிமாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் 1960களில் தனக்கென தனி முத்திரையுடன் வலம் வந்தவர் நவரசத்திலகம் முத்துராமன். திரைப்பிண்ணனி ஏதுமில்லாமல் கலையார்வத்தால் தனது சொந்த முயற்சியில் ஜெயித்தவர். அந்தக்காலத்தில் மிகவும் அழகான கவர்ச்சியான நடிகராக கருதப்பட்ட முத்துராமன் அனைவராலும் விரும்பப்பட்டார். 60களிலும் 70களிலும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ் ஈட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன் என பலருடனும் இணைந்து நடித்த முத்துராமன் சூரியகாந்தி, காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா, அனுபவி ராஜா அனுபவி, சர்வர் சுந்தரம் போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். பாலச்சந்தரின் ஆரம்பகால படங்கள் அனைத்திலும் சிறந்த கதாபாத்திரங்கள் பலவற்றில் தோன்றினார். காலம் கைகொடுக்காததால் பிரகாசமாகவிட்டாலும் தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத நபர்களில் ஒருவராகிவிட்டார் முத்துராமன். தனது ஐம்பத்திரெண்டு வயதிலேயே அவர் இறந்ததால் தமிழ்சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்த சோகம் கொண்டது.



சிவாஜி கணேசனும் முத்துராமனும் இணைந்து பார்மகளேபார், அன்னை இல்லம், பழனி, கர்ணன், திருவிளையாடல், திருவருட்செல்வர், வாணி ராணி, மூன்று தெய்வங்கள், காவல் தெய்வம், எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், இரு துருவங்கள், சிவந்த மண், வைர நெஞ்சம் மற்றும் மேலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறை பிரபுவும் கார்த்திக்கும். நடிகர்திலகத்தின் இளையமகன் பிரபு. நடிகர்திலகத்தின் நேரடியான கலைவாரிசு. 1956ம் ஆண்டு பிறந்த பிரபு சங்கிலி படம் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இளையதிலகம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபு இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஆங்கிலம் என நூறு படங்களுக்குமேல் நடித்துள்ளார். இவரது ப்ளாக்பஸ்டர் படமாக சின்னத்தம்பி திகழ்கிறது. தமிழ்சினிமாவின் வாரிசுகளுக்கு உதாரணம் கேட்டால் பிரபுவின் பெயர்தான் முதலில் கேட்கும். கிட்டதட்ட இருபது வருடங்களுக்குமேல் கதாநாயகனாக நடித்த பிரபு 2006மாண்டு வந்த உனக்கும் எனக்கும் படம்மூலம் குணசித்திர நடிகராக உருவாகினார். இன்றும் தினந்தோறும் படப்பிடிப்பகளுக்கு செல்லும் பிஸியான நடிகர். சந்திரமுகி, அசல் போன்ற படங்களை தயாரித்துள்ளார். குழிவிழும் கன்னம் இவரது ஸ்பெஸாலிடி. அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்தவர். இவரது ரசிகர்களுக்கு இன்றும் குறைவில்லை. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் வெற்றி நாயகனாக வலம்வந்தவர்.

பிரபுவின் சககாலத்தில் இன்னொரு வெற்றிநாயகனாக வலம்வந்தவர் நவரசநாயகன் கார்த்திக். பலவருடங்கள் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதிக ரசிகர்களைக்கொண்ட நாயகனாகத் திகழ்ந்தார். அதுவும் பெண் ரசிகர்கள் ஏராளம். தனக்கென தனித்துவமான ஸ்டைல் உடையவர். இவரது காதல்காட்சிகள் இனிமையாக இருக்கும். அனைவரையும் போல நானும் மௌனராகத்தையே உதாரணமாக காட்டுகிறேன். அந்த சார்ம் இதுவரை முறியடிக்கபடவில்லை. சிறந்த நடிப்பாற்றலை கொண்ட நடிகராக இருந்தாலும் பல ரசிகர்களைக்கவர்ந்தவர் என்றாலும் இன்றும் தனக்கென ஒரு கூட்டத்தை பலமாக கொண்டவராயினும் காலக்கொடுமையோ தீயசகவாசமோ வேண்டாத பழக்கவழக்கங்களோ ரஜினி கமலுக்கு அடுத்ததாக இன்று வளர்ந்திருக்கவேண்டியவர் யாராலும் கவனிக்கபடாதவராகவே இருக்கிறார். அரசியலுக்குள் சென்ற அனைவரும் ஜெயிப்பதில்லை என்பதை அவருக்கு யாராவது உணர்த்தவேண்டும். நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்வதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர்மேல் இருந்தாலும் பெரும்பான்மையோரால் ரசிக்கப்பட்ட சிறந்த நடிகன் கார்த்திக் என்பதில் ஐயமில்லை. அத்துடன் சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறையும் மாநிலவிருதை ஒருமுறையும் இவர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபுவும் கார்த்திக்கும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். உதாரணமாக அதிசயப்பிறவிகள், அக்னிநட்சத்திரம், காவலன் அவன் கோவலன், சுயம்வரம், தை பொறந்தாச்சு, குஷ்தி, மாஞ்சாவேலு, ராவணன் போன்ற படங்களை குறிப்பிடலாம். ஒன்றாக சேர்ந்து நடித்த ஒரு நடிகர்களின் வாரிசுகள் இணைந்து நடித்த பெருமையை பிரபுவும் கார்த்திக்கும் அன்றே அடைந்தனர்.

இன்று மூன்றாம் தலைமுறை நடிகர்கள் உருவாகிறார்கள் அதுவும் ஒரே ஆண்டில். இளையதிலகம் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கும்கி படம் மூலம் அறிமுகமாகிறார். மைனாவின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த பிரபுசாலமன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படம் வெளியாகும் முன்னே இளையதளபதி விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.


அதேபோல நவரசநாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கடல் படம்மூலம் திரையுலகத்திற்குள் பிரவேசிக்கவிருக்கிறார். அதுவும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில். சமந்தா, அர்ஜூன், அரவிந்தசாமி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். முதல்படமே இவ்வளவு பெரிய கூட்டணி என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இரண்டு பெரிய திரைக்குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் என்பதால் இவர்கள்மேல் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா? ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் மூன்றாவது தலைமுறையாக இணைந்து நடிக்கும் பெருமை இவர்களை வந்தடையும்.

Tuesday, May 22, 2012

விளையாட்டு வியாபாரம்…!

இத்தனை கமராக்கள், ஏசி போட்ட பெரிய அரங்கில் சந்திப்பு, வெளிநாட்டு பாணியில் மதுவிருந்து…… இதெல்லாம் சுப்புவிற்கு புதிதல்ல. ஆனால் பார்த்து பல காலமாகிவிட்டது. கிரிக்கெட்தான் தன் வாழ்க்கை என அவர் முடிவெடுத்த அந்த பத்தாமாண்டு ரிசல்ட்ஸ் வந்த நாளிலிருந்து மாவட்டம், மாநிலம் என கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி தேசிய அணிக்கு விளையாடியதும் சர்வதேச கிரிக்கெட்டில் யார்யாரையெலாம் மானசீக குருவாக நினைத்தாரோ அவர்களையே எதிர்த்தாடியதும் இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிகளை குவித்தபின் மனமுவந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவதும் சுப்புவின் மனத்திரையில் படமாய் ஓடியது. இன்று….. மீண்டும் தான் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்திருப்பது அவராக விரும்பி நடந்ததா? இல்லை

உலக பணக்காரர்களில் ஒருவரான ரோய் வில்லியம்ஸ் தான் தேடிய செல்வம் போதாமல் இன்னும் நிறைய சம்பாதிக்க இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன்(Indian championship federation) என்ற கிரிக்கெட் லீக் போட்டிகளை ஆரம்பித்து கொஞ்சம் மேல்நிலையடைந்திருக்கும் மாநிலங்களுக்கிடையில் போட்டிகளை நடத்தி தனது கல்லாவை நிரப்புகிறார். பெரிய வியாபாரியல்லவா! எந்த சந்தையில் எந்த வியாபாரம் களைகட்டும் என நன்கு தெரிந்துவைத்திருக்கிறார். அவருக்கென்ன?.....இந்தியாவில் மின்பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதால் பாதிக்கப்படும் சிறுவர்களின் கல்வி என்பதையெல்லாம் பற்றி எங்கோ லண்டனில் மில்லியன் பவுண்டு ஏசி மாளிகைக்குள் அல்ட்ரா ப்ரீமியம் சரக்கை குடித்துக்கொண்டிருப்பவருக்கு என்ன கவலை? அட அவரை விடுங்க…. தமிழ்நாட்டிலேயே நாள்முழுக்க கஷ்டப்பட்டு உழைக்குற காசை வீட்டுக்கு கொடுக்காம பொண்டாட்டி பிள்ளைங்க சாப்பிடாம இருக்க குடி, கஞ்சா, சூதாட்டம்னு செலவழிக்குற நம்ம நாட்டு முதுகெலும்புகளை என்ன சொல்வது? அடக்கடவுளே! எதையோ சொல்லவந்து எதையோ சொல்லிக்கிட்டிருக்கேன். இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன் பார்த்தோம்ல… அதுல தமிழ்நாட்டு டீம் பேரு சென்னை சிங்கம்ஸ். இந்த அணியின் உரிமையாளர் கௌதம் சர்மா. சோப்புல இருந்து சோடா வரைக்கும் இவரு பண்ணாத வியாபாரமே இல்லை. இருந்தும் தன்னை பற்றி இந்த உலகத்துக்கு தெரியாதே என்ற அவரது கவலையை போக்கத்தான் இந்த அணியை இவரு வாங்கியிருக்காரு. பின்ன சும்மாவா? ஆயிரம்கோடி சொத்து இருக்குறவங்களக்கூட மக்களுக்கு தெரியாது. ஆனா நாள் சம்பளத்துக்கு தொலைக்காட்சியில வந்து நிகழ்ச்சி பண்ற தொகுப்பாளர்கள் ரொம்ப பிரபலம். மீடியாவோட பவர் அப்பிடி. கௌதம் சர்மா சென்னை அணியை வாங்கின அடுத்து நிமிஷமே தமிழ்நாடு முழுக்க ஏன் இந்திய அளவுல பிரபலமாயிட்டாரு. பேப்பர்ல அவரைபத்தி நிறைய செய்திகள் வருது. facebookல அவருக்காக பக்கங்கள் எல்லாம் உருவாகியிருக்கு. சும்மாவே கார்ல பறக்குற அவரை இந்த புகழ் காத்துல பறக்க வச்சுது. தொடர்ந்து இந்த அணியை மேலும் வலுப்படுத்தி பிரபலமடையவைக்க வழிகளை தேடினார். இன்றைய இளைஞர்கள் அனைவரின் இதயநாடியாக இருக்கும் கிரிக்கெட் வீரர் ஜோஷியை பலகோடிகள் கொட்டி அணிக்குள் கொண்டுவந்தார். சிம்கார்ட்ல இருந்து சேலைகடை வரைக்கும் அனைத்து ஸ்பான்ஸர்களையும் வளைத்துப்போட்டார். தமிழ்நாட்டுல உச்சத்துல இருக்கும் நடிகர் மதனை ப்ராண்ட் அம்பாஸ்டராக்கினார். தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய திறமையான சுப்புவை பயிற்சியாளராக்கினார். இவற்றையெல்லாம் விட மைதானத்தில் வீரர்கள் களைப்படையாமல் இருக்க ஊக்கமளிக்கும் நடன அழகிகளை பார்த்துபார்த்து தெரிவுசெய்தார். காரணம் அவர்களை பார்பதற்காகவே ஒரு கூட்டம் இருப்பது அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பத்திரிகை தொலைக்காட்சிகளில் அணியின் பெயரை விளம்பரப்படுத்தி தள்ளினார். ஊருக்கு ஊரு தெருவுக்கு தெரு பேனர் போஸ்டர் என அமர்களப்படுத்தினார். வாராவாரம் பத்திரிகைகூட்டத்திற்கும் ஏற்பாடானது.

இதுவும் அப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்புதான். அத்துடன் சில புரோமோஷன்களும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்தவாரம் போட்டிகள் தொடங்கப்போவதால் இது முக்கியமான ஒரு சந்திப்புதான். கௌதம்சர்மா நேரத்தோடு வந்து அனைத்து வேலைகளையும் சரிபார்த்தார். அனைத்துமே சரியாக நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரமும் வந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுவிடாமல் கலந்தகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களும் வந்தாயிற்று. அணித்தலைவர் ஜோஷி அரங்கில் நுழையும்போது கைதட்டல் பட்டாசாய் வெடித்தது. அதைவிட நடிகர் மதன் வரும்போது கைதட்டல் ஒலி அடங்க சிலநேரம் ஆனது. அந்த ஏற்பாடுகள் எதிலும் மனம் ஒட்டாதவராய் விலகியே இருந்தார் சுப்பு. ஓய்வுபெற்றபின் கிரிக்கெட்டிலிருந்து அது முழு ஓய்வாக இருக்கவேண்டுமென அவர் நினைத்தார். தேசிய அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டுமென்றுகூட அழைப்பு வந்தது. அப்போதுகூட உறுதியாய் இருந்த அவரது முடிவை இந்த ஐ.எஸ்.எஃப் மாற்றிவிட்டது. இதன் தீவிர ரசிகனான தன் மகனை சமாதானப்படுத்த முடியாமல் தன்னிடம் வந்த இந்த பயிற்சியாளர் பதவியை ஏற்றார் சுப்பு. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தேசிய அணியில் பத்து வருடம் உழைக்கும் பணத்தை இதில் ஒரே வருடத்திலேயே உழைத்துவிடலாம். இப்பிடி ஒரு வாய்ப்பு இனி வருமா என மனைவியின் நச்சரிப்பும்தான் அவரை இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறது. அவரது காலத்தில் அவர் செய்த சாதனைகளை யாரும் இன்னும் மறக்கவில்லைஎன்ற ஒரே விடயம்தான் இங்கே ஆறுதல். அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அவர் மனதில்தான் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறை இருந்துகொண்டேயிருந்தது. அந்த குறை அவர் மனதை சோரவடையச்செய்திருந்தது. அந்த நேரத்தில் மேடையில் நிகழ்ச்சி ஆரம்பம் என்பதால் அனைவரும் மேடையேறி அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அனைவருக்கும் நடுவிலே கௌதம் அமர்ந்திருந்தது ஒரு ராஜா பாணியை ஒத்திருந்தது. ராஜவாழ்க்கை வாழ்பவன்தானே!....சுப்பிற்கு அருகில் நடிகர் மதன் வந்து அமர்ந்தார். சுப்புவை பார்த்து சிரித்து அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.


‘ஹாய் ஸார்’

‘ஹாய்’

‘நான் உங்க பெரிய ரசிகன் ஸார். எனக்கு அவ்வளவா கிரிக்கெட் விளையாடத்தெரியாது. ஆனா சின்ன வயசில உங்க மேட்ச்சு தவறினதே இல்ல. இப்ப உங்க பக்கத்துல உக்காந்து இருக்கறதே ரொம்ப சந்தோசமா இருக்கு.’

‘அப்படியா? இவ்வளவு பெரிய நடிகன் என் ரசிகரா இருக்குறது எனக்கும் ரொம்ப சந்தோசம். ஆமா…. கிரிக்கெட் தெரியாதுன்றீங்க. அப்புறம் எப்பிடி இங்க?....’

‘என்ன ஸார் பண்றது? காசு கொடுக்குறவங்க சொல்றத திருப்பி சொல்றதுதான் நடிகனோட வேல. ஆயிரம்கோடி கொடுத்து அணியை வாங்குறவர் எந்தெந்த வழியில அத திருப்பமுடியும்னு யோசிச்சிருப்பார்தானே.. எனக்கிருக்குற மக்கள் சப்போட் அவருக்கு தேவப்படுது. சோ… கமராவிற்கு வெளியேயும் இந்த மாதிரி நடிக்கவேண்டி இருக்கு.’

‘என்ன தம்பி சொல்றிங்க?... நடிகர் ஒருவர் சொல்லித்தான் ஜனங்க கிரிக்கெட் பார்க்கணுமா?ஆ… அப்ப அது கிரிக்கெட்டா இருக்காதே…’

‘நீங்க சொல்றது சரிதான் ஸார். எல்லாமே பணம்னு ஆனதுக்குப்பிறகு விளையாட்டுக்கு மரியாதை இருக்கும்னு நான் நினைக்கல. எல்லாமே பொழுதுபோக்குன்ற ஒரே கட்டதுக்குள்ள வந்திடுச்சி. இப்ப பொழுதுபோக்குன்றதுக்கு அர்த்தமே பாமரர்களிடம் பணம் சூரையாடப்பட்டு பிரபலங்களிடம் அது பரிமாறப்படுவதுதான். ஒரு படம் ரிலீஸான வேலை, குடும்பம், சாப்பாடு எல்லாம் விட்டுட்டு ஒருத்தன் உசிர வெறுத்து டிக்கெட் வாங்குறானே…அதுல எங்களுக்கு ஆயிரம் பலன் இருக்கு.ஆனா அவனுக்கு?.... அவங்கள பார்த்தா எனக்கு பாவமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ணமுடியும். இப்ப எனக்கிருக்குற போட்டிகளாள அவங்கள அப்பிடி பண்ணவேணாம்னு சொல்லமுடியல. நான் நடிக்க வரும்போது இத கடவுளா நினைச்சுதான் வந்தேன். ஆனா இங்க வளைஞ்சு கொடுக்காட்டி நம்ம அட்ரஸ் தொலஞ்சிபோயிடும். ஏன் கிரிக்கெட்கூட அப்பிடிதான். இத ஒரு புனிதமான தொழிலா நினைச்சு வாறவங்க எல்லாம் கடைசிவரைக்கும் அப்படியா இருக்காங்க?’

மேடையில் ‘அடுத்ததாக உங்கள் அபிமான நடிகர் மதன் இப்பொழுது’

மதன் சுப்புவிடம் விடைபெற்றுக்கொண்டு பேசச்சென்றான். ‘அனைவருக்கும் வணக்கம். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில உங்கள சந்திக்கிறத நான் சந்தோசமா நினைக்கிறேன். ஏன்னா நானும் ஒரு கிரிக்கெட் பிளேயர்தான். சினிமாவுல வந்துட்டதனால கிரிக்கெட் விளையாட முடியாமப் போச்சு. இல்லாட்டி நிச்சயமா நானும் கிரிக்கெட்டராகியிருப்பேன்.’
மதன் பேசப்பேச ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பு. சூழ்நிலை மனிதனை மாற்றுகிறதா? இல்லை மனிதனே சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகிறானா? மதன் சொன்னது சரிதான் இங்கே வளைஞ்சு கொடுக்காட்டி அட்ரஸ் தொலைஞ்சிடும். வயித்துக்காக மனுசன் இங்க கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறந்தானே சோறு என்ற பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்தது. உடனே அது தவறெனப் பட்டது. இங்கே யாரும் வயித்துக்காக பிழைக்கிறவங்க இல்ல. லாபத்துக்காக பிழைக்கிறவங்க. அந்த லாபத்த வச்சு இன்னும் லாபம் சம்பாதிக்கத்தான் பார்ப்பார்கள். வாழ்க்கையே இவர்களுக்கு வியாபாரம்தான். கிரிக்கெட்டா இங்க நடக்குது? ச்சீ கிரிக்கெட்டுக்காக நடக்குற விழாவுல கிரிக்கெட்னாலே என்னனு தெரியாத இந்த நடனமங்கைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நாம இங்க வந்தே இருக்ககூடாது. எல்லாம் வியாபாரம். இவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம்? இப்ப எங்கதான் வியாபாரம் இல்ல…. உயிர்போற நிலையில இருக்குற நோயாளிகிட்டகூட காசு வாங்காம மருத்துவம் பார்க்குற டாக்டர் யாராவது இருக்காங்களா? நல்லா படிக்குற ஆனா வசதியில்லாத ஒரு மாணவனுக்கு இலவசமா பாடம் சொல்லிக்கொடுக்குற வாத்தியார் யாராவது இருக்காங்களா? ஏன் கோயில்லகூட பாருங்க பத்துரூபா தட்சிணை கொடுக்குறங்களுக்கு ஏனோதானோன்னும் நூறுரூபா தட்சிணை கொடுக்குறவங்களுக்குவ ஆரஅமர பொறுமையாத்தானே அர்ச்சனை பண்றாங்க…. வியாபாரம் இல்லாத இடமே இல்லயே என அவர் எண்ணிக்கொண்டிருக்கையில் மதன் பேசிமுடித்து வந்து அமர்ந்தான்.

‘அடுத்ததாக அணித்தலைவர் ஜோஷி’ என்றதும் அரங்கமதிரும் விசிலோசைக்கு நடுவே பேசவந்தான் ஜோஷி. அவன் வடநாட்டுக்காரன் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசினான். அவன் பேசுவதை சுப்பு பெரிதாக கணக்கெடுகவில்லையென்றாலும் சில இடங்கள் அவரை உற்றுநோக்கவைத்தது. முக்கியமாக எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே உங்க முன்னால நல்லா தமிழ் பேசுவேன். தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இத விட்டு போகவே மனசில்லை என்றான். சுப்புவுக்கு சிரிப்புதான் வந்தது. ஒப்பந்தம் முடிஞ்சிட்டா வேறொரு மாநிலத்துக்கு வேறொரு அணிக்கு போயிடுவான். அங்க போயும் இப்பிடிதானே பேசப்போறான். தமிழ்நாட்டுக்காரனை சேர்த்தாதானே நம்ம ஊருக்காக விளையாடுற உணர்வு இருக்கும். இவங்கெல்லாம் காசுக்காகத்தானே விளையாடுறாங்க. ஊரு உணர்வெல்லாம் இவங்களுக்கு ரெண்டாம்பட்சம்தானே! ஏன் இப்ப தமிழ்நாட்டு அணியில இருக்கவங்கள்ள பாதிக்குமேல வேற ஊரு வேற நாடு… தமிழனுக்கு வாய்ப்பு குடுத்தா என்ன கொறஞ்சா போயிடும். இந்தியா தமிழர்கள் விசயத்துல பாரபட்சமா இருக்குதோனு சுப்பு சிலநேரம் நினைப்பார். ஆனா பாருங்க. மக்கள்தொகையில மூணுக்கு ஒரு வீதம் தமிழர்கள் இருக்குற இலங்கையில கிரிக்கெட் அணியில இப்ப ஒரு தமிழன்கூட இல்ல. அதுக்கு இந்தியா எவ்வளவோ மேல்.

ஏன் நான் கண்டதையும் நினைச்சிட்டு இருக்கேன்…ம்ம்ம் மனம் முழு ஈடுபாடோட இங்க கவனமா இருந்தாதானே.. இதுக்குமேல போலி பகட்டுக்கு நடுவுல இருக்குறது கஷ்டம் உடம்பு சரியில்லைனு சொல்லிட்டு கெளம்புவோம்னு சந்திப்புல இருந்து பாதியில புறப்பட்டார் சுப்பு. மனசு சரியில்லாததால் காரை போக சொல்லிவிட்டு நடந்தேசென்றார். ஆமா ஏன் மனசு சரியில்லை? காலைல இருந்து நடந்தவைகளை நினைத்துப்பார்த்தார். கிரிக்கெட்டை இப்படி நாசமாக்குகிறார்களே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அதிலிருந்து விடுபட கவனத்தை மாற்ற ஏதாவது இருக்கிறதா என எண்ணிக்கொண்டே சாலையில் சென்றார். ரோடு. ரோடா இது. ரோடு போட சொன்னா சின்ன பிள்ளைங்க களிமண்ல செய்ற பொம்மைமாதிரி பண்ணிவக்கிறாங்க. ஒரு மழை பெஞ்சாலே பாதி ரோடு தண்ணியோட போயிடுது. அந்த அணியை ஆயிரங்கோடிக்கு வாங்கினாராமே… அதுல நூத்துல ஒரு பங்கை இந்த மாதிரி ரோடு போட செலவு செஞ்சிருக்கலாமே… அதோ அங்க…. தண்ணிவண்டியில தண்ணிக்காக பொம்பளைங்க குடத்தே வச்சிகிட்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. என்ன கம்ப்யூட்டர் வந்தென்ன தொழில்நுட்பம் இந்தளவுக்கு முன்னேறியென்ன? இந்த சண்டேக்கு இன்னும் முடிவு வரல. யூத்ஸ்டார் மதன் நடிக்கும் வாலிபன். டிக்கேட் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம்ரொருக்கு. உப்பவே வந்த கால் வலிக்க நிக்குறாங்க. அஞ்சு நிமிஷம் படிக்க சொன்னா கசந்துடும். பத்தடி உயரமான கட்அவுட்டுக்கு ஒருத்தன் பால் ஊத்துறான். தவறுதலா கீழ விழுந்தா அவனுக்கே பால் ஊத்தணும்னு அவனுக்கு ஏன் புரியல? அவன் குடும்பத்துக்கு என்ன வழி? இந்த மாதிரி ரசிகர்களாளத்தான் தங்கள் பொழப்பே ஓடுதுனு மதன் சொன்னது நினைவுக்கு வந்தது.
திடீரென்று சுப்புவுக்கு உலகமே வெறுத்துப் போயிற்று. இந்த நிலையை மாத்த என்ன அவதாரபுருஷனா வரமுடியும்? அங்கே என்ன கும்பல்? ஓஓ… பிச்சைக்காரனா?.... ம்ம்ம் உலகத்தையே மாத்தக்கூடியளவுக்கு காசிருக்குற அந்த கௌதமே சும்மா இருக்கான். இந்த பிச்சைக்காரனால என்ன பண்ணிட முடியும்….

‘காலையில கிழக்குல சிவப்புவெளிச்சம் பாரு…
கரண்டில்லாம வானத்துக்கு லைட்டு போட்டது யாரு?
ஆளைப்பாக்காம இடிச்சிட்டு சிட்டாபோகுது காரு…
காலுபோன ஏழைக்கு பிச்சையெடுத்து சோறு!
ஆம்பளயும் பொம்பளயும் ஒண்ணாசேர்ந்து குடிக்குது…
உழைச்சகாச செலவுபண்ண வழியதேடி துடிக்குது…
தண்ணிக்காக ஒருகூட்டம் தலைதலையா அடிக்குது,
விஐபிங்க வீட்டுக்குத்தான் சுமிங் புல்லு கேட்குது!
ஒருவாய் சோத்துக்குத்தான் ஓயாமப் பாடுறேங்க.
பத்துபைசா பிச்சைபோடும் சாமியத்தான் தேடுறேங்க
பசிக்காத கடவுளுக்கு பால ஊத்தும் மனுசங்களே
பட்டினி வயித்துக்கு கஞ்சி ஊத்திட்டு போங்களே!’

ஒரு மத்தளத்த கையில வச்சிகிட்டு சின்னபையன் ஒருத்தன் பாட்டுபாடி பிச்சை கேட்டுகிட்டு இருந்தான். நிச்சயமா இந்த பாட்டில் ஏதோ இருக்கவேண்டும். நம்ம சுப்பு அசையாம அந்த பையனையே பாத்திட்டிருந்தார். அந்த பாட்டொண்ணும் அவ்வளவு புரட்சிகரமா இல்ல. அப்பிடியே பாட்டு பாடியே புரட்சி பண்ண அவன் ஒண்ணும் பாரதியும் இல்ல. ஆனா நம்ம சுப்பு கொஞ்சம் அமைதியாகிட்டார். உலகத்த ஒரேயடியா மாத்திட முடியாது. ஏதோ நம்மளாள முடிஞ்சத செஞ்சோம்னு ஒரு திருப்தி வரணும். அதுக்கு ஏதாவது செய்யணும். எப்பப்ப முடியுதோ அப்பப்ப இல்லாதவங்களுக்கு ஒரு வாய் சோறாவது போடணும். அதான் நம்மளாள முடிஞ்சது. இந்த பையனாலதானே இந்த எண்ணம் வந்திச்சு. இவன்கிட்ட இருந்தே தொடங்குவோம்னு அவனருகில் சென்றார். பார்த்துகிட்டு இருந்த கூட்டம் ஏதோ தங்களாள முடிஞ்சத போட்டுட்டு கலைஞ்சு போனது. சுப்பு அவன் அருகில் போய் ஒரு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டு..

‘நல்லா பாடின தம்பி..உன் பேரு என்ன?’

ஐநூறு ரூபாயை பார்த்த சந்தோசத்தில் கும்பிட்டுக்கொண்டே ’ஸார் பாரதி ஸார்’.

Tuesday, May 15, 2012

காதலை சொன்னபின்...!

காதலின் நினைவுகள் அழிந்துவிடாது
கனவுகள் கண்களை மூடவிடாது!
காற்றும் காதலும் வேலியைபோட்டு
காவல் காப்பதால் மறைந்துவிடாது!
உதட்டுக்கு சாயம்பூசி சிவப்பாக்கும் பெண்ணே!
உள்ளம் மட்டும் கருப்பாக ஏன் விட்டுவிட்டாய்?
உன்னிடம் காதலை உளறாமல் சொல்லியும்
உண்மையோடு உன் உணர்வையும் ஏன் மறைத்தாய்?
காசு கேட்டால் பிச்சை போடுவாய்!
காதலை கேட்டால் பிய்த்துக்கொண்டு ஓடுவாய்!
கண்டவரைக் கவரும் கண்களை உனக்கு தந்தான்
கருணையை தர அந்த கடவுளும் மறந்துவிட்டான்!

பெண்ணே!
உன்னிடம் என் காதலைப்பற்றி
உரைத்தது கொஞ்சம் மறைத்தது அதிகம்!
சூரியன் எங்கேயோ உதிக்க அந்த கதிர்கள் இங்கே விடிவதுபோலே
தொலைவிலே உன்னைக் கண்டதும் என் மனம் பிரகாசிப்பதும் ஏனோ?
பாரதியோ கம்பனோ துணைக்கு வரவில்லை,
தனியாக உன்னிடம் வந்து மாட்டிக் கொண்டேன்!
பேச்சுப்போட்டியில் வாங்கிய அத்தனை விருதுகளும்
பலனற்று போயின உன் பார்வையின் முன்னே!
கடவுளை வேண்டிக்கொண்டு காதலை சொன்னபோது உன்
கண்ணிமை துடித்த துடிப்பினிலே என் உடலே சற்று அதிர்ந்ததடீ!
காதலையும் சொல்லிவிட்டேன் கண்களையும் பார்த்துவிட்டேன்
இரண்டுமே வெற்றிதான் இப்போதைய சூழ்நிலைக்கு!
ஒன்றுமே சொல்லாமல் திரும்பிசென்றாலும்
ஒரப்பார்வை ஒன்று பார்த்தாயே! அதுவே போதும்!
காத்திருப்பேன் என்றும்…
என் காதலிக்காகவும் அவள் காதலுக்காகவும்…!

Wednesday, May 9, 2012

தமிழும் அழகும்…!

கொழும்பு கம்பன் கழகத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படும் கம்பன் விழா இந்த வருடமும் மிகசிறப்பாக கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. பேராசிரியர் ஔவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான், பேராசிரியர் மு.ராமச்சந்திரன் போன்ற தமிழறியர்கள் பலர் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். Seminar, workshop, assignment என்று சதா எந்திரவாழ்க்கை வாழும் 2012 தகவல்தொழில்நுட்ப அவசரயுகத்தின் சாதாரண பிரதிநிதிகளில் ஒருவரான நான் திகட்டதிகட்ட(என்றும் திகட்டாத) தமிழை பருகிய தருணம் அது. தித்திக்கும் விவாதங்கள், தீந்தமிழ் கவியரங்கம், கருத்துச் சொல்லும் பட்டிமன்றம், அதை எடுத்துச் சொல்லும் பேச்சுகளென நான்கு நாட்களும் தமிழ்தாய்க்கு திருவிழாயெடுத்தனர். அவற்றை முழுதும் எழுதப்போனால் ஒரு பதிவு போதாது. இருந்தாலும் விழாவின் இறுதிநாள் திரு.கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் ‘என்றுமுள தென்தமிழ்’ என்னும் தலைப்பிலான பேச்சுக்கு நான் அடிமையானதால் அதில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதியை பகிர விரும்புகிறேன். தமிழின் பெருமையை தனது தள்ளாத வயதிலும் போற்றிக் காக்கும் அப்துல்ரகுமான் ஐயாவிற்கு நன்றி.



என்றுமுள தென்தமிழெனும் கடலில் முத்தெடுக்க முப்பது நிமிடங்களே தந்திருக்கிறார்கள். முடியாவிட்டாலும் முயற்கி செய்கிறேன். உலகில் தமிழ் மொழிக்கு உண்டான சிறப்புகள் காலங்காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளன. இல்லாவிடில் இப்போதைக்கு தமிழறிவின் வளர்ச்சி அபரிமிதமானதொன்றாயிருந்திருக்கும். இது சாதாரண ஒரு மனிதன் உட்கார்ந்து எழுதிய மொழி அல்ல. தமிழ்மொழியின் அற்புதங்களை மேலோட்டமாகவே படித்துவரும் நாம் அதை ஆழ்ந்து ருசித்தால்த்தான் தெரியும் அதை ஒரு சாதாரண மனிதனால் உருவாக்கியிருக்கமுடியாது என்று. உதாரணமாக சில வார்த்தைகளை நீங்கள் கவனிக்கலாம். அதன் பொருள், விளக்கம், தன்மை, வடிவம் போன்றவை அந்த வார்த்தைகளை ஒரு சாதாரண மனிதனால் இயற்றமுடியாது. தமிழ்மொழியை உருவாக்கியவர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கணநூலை அவர் இயற்றியதாலேயே அகத்தியர் எனப் பெயர்பெற்றார். அவர் ஒரு சித்தர். பிற்காலத்தில் அவரை புராணக்கதைகளோடு இணைத்து கூறிவருகிறார்கள். அவரது ஞானம் தமிழை உருவாக்கியிருக்கும் திறனில் வெளிப்படும். உதாரணமாக கடவுள் என்னும் சொல் இறைவனை விளிப்பதற்கு பயன்படுகிறது. வேறெந்த மொழியிலும் இவ்வளவு திறனாக பொருள்பட இயற்றப்படவில்லை. அனைத்திலும் கடந்து இருப்பவன். அனைத்திலும் உள்ளும் இருப்பவன். ஆதலால் கடவுள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட திறன் இது. தமிழ்மொழியை சிவபெருமான் அருளியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த மொழியை செதுக்க ஒரு அளப்பரிய ஞானம் வேண்டும். அதனால்தான் அந்த நம்பிக்கை நிலவுகிறது என நினைக்கிறேன். தமிழ்மொழியின் சொல்மாத்திரை அதாவது அளவு மிக குறைவு. அதனால் தமிழைப்பேசினால் மூச்சு அதிகமாக வெளியேறாது. மூப்பு விரைவில் வராது. அதிக காலம் இளமையோடு வாழலாம். யப்பான், ஜேர்மன் போன்ற மொழிகள் பேசினால் அதிக மூச்சு வெளியேறும். ஆகவே பேச்சின் மூலமாகவும் நோய்த்தடுப்பை கையாண்டுள்ளனர் முன்னோர்கள். இன்னொரு ஆச்சரியம். எழுத்துக்களை அடுக்கியவிதம். கஙசஞடணதநபம இது ஏனோதானோவென்று செய்த விடயமில்லை. இந்த எழுத்துக்களை காதலர்கள் என சொல்லலாம். ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது. ங என்பது க உடன்தான் வரும். சங்கு,தங்கம்,கங்கை போன்றவையை குறிப்பிடலாம். ஞ என்பது ச உடன்தான் வரும் பஞ்சு,நஞ்சு,தஞ்சம் இப்படி. அதேபோல் டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும். இப்படி சொல்லடுக்கிய விதத்திலும் மற்றைய மொழிகளுக்கு அப்பன் என்பதை உணர்த்துகிறது.

முருகு. இந்த வார்த்தையின் அற்புதத்தைப் பாருங்கள். மூன்று எழுத்துக்கள். ஒவ்வொன்றும் வல்லினம்,மெல்லினம்,இடையினம் எனும் மூன்று இனத்தினலிருந்தும் எடுக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார் இந்தியாவில் முதன்முதலாக வாழ்ந்த இனம் தமிழினமென்று. நாங்கள் சொன்னால் நம்பமாட்டார்கள். சொல்லவேண்டியவர் சொல்லவேண்டும். ஆரியர்கள் நீர்,நெருப்பு,வானம்,காற்று,இடி போன்றவற்றை வணங்கியதாக சதுர்வேதம் கூறுகிறது. ஆனால் ஆதிகுடியான தமிழர்கள் முருகு என்னும் கடவுளை வணங்கியதாக வரலாறு. முருகு என்றால் அழகு என்று பொருள். பிற்காலத்தில் அன் சேர்த்து முருகன் என்று வழிபடுகிறார்கள். ஆனால் இதன் ஆதி முருகுதான். அனைவரும் நன்றாக கவனிக்க வேண்டிய இடம் இது. அழகு என்னும் அம்சத்தை தமிழன் வழிபட்டிருக்கிறான். உலகில் வேறெந்த நாகரிகமும் மொழியும் இனமும் செய்யாத ஒரு விடயம். அழகை வணங்குவது. இது தமிழனின் பாரம்பரியம். வாழ்வியலின் ரசனையை இதைவிட அருமையாக யாரால் கூறமுடியும்? அழகை வணங்குவது என்பது ஒரு பண்பாட்டின் உச்சம். உலகில் பழமையான நாகரிகம் என்று கூறிக்கொள்ளும் எவரிடத்திலும் இப்படி ஒரு சிறப்போ மாண்போ காணப்படவில்லை. பஞ்சபூதங்களினால் வரும் தீமைகளுக்கு பயந்து அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவற்றை வணங்கிய ஆரியருக்கும் வாழ்க்கையை இனிமையாக அனுபவித்து சமூகப்பண்பில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழருக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு பின்னணியிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் வந்ததில் ஆச்சரியமில்லையே.

இன்றும் இளைஞர்கள் சாலையோரங்களில் நின்றுகொண்டு அழகை வணங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். பாரம்பரியமல்லவா…. ஆனால் அந்த அழகுக்கு தெரியாது இவர்கள் வணங்குகிறார்கள் என்று.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால பழமை, வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதி என எத்தனையோ காதலர்களை கொண்டிருந்தாலும் என்றும் மாறாத கன்னித்தன்மை, தன்னோடு கூடப்பிறந்த எத்தனையோ மொழிகள் இன்று அழிந்துவிட்ட போதும் உறுதியாய் நில்க்கும் வன்மை, உலகுக்கு எடுத்துகாட்டான பண்பாடு இப்படி எத்தனையோ சிறப்புகளை தன்னகத்தே கொண்டது நமது செம்மொழி.டதை நாம் போற்றிட வேண்டாமா? தமிழர்களைவிட சனத்தொகையில் குறைந்த பிரெஞ்சு, யப்பான், இத்தாலி போன்றவை உலகில் தலைதூக்கி நிற்க நாம் இன்னும் தலைகுனிந்து வாழ்வதா? தமிழர்கள் இல்லாத நாடு எங்கே உள்ளது? உலகில் பரந்துவாழும் தமிழர்கள் தாம் வாழும் பிரதேசத்தில் தமிழ்மொழியையும் தமிழ்பண்பாட்டையும் போற்றி வளர்த்தானேயானால் இன்று உலக மொழியென்று சொல்லும் ஆங்கிலத்துக்கு சவால்விட முடியாதா? அந்த திறன் தமிழனுக்கு இல்லையா? உலகம் இனி தமிழனின் சாதனைகளுக்கு சலாம்போடும் காலம் தூரத்தில் இல்லை. தமிழர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுகொடுக்காமல் வாழ்வதுதான். அழகுத்தமிழை பேசுங்கள். தமிழர்கள் தமிழர்களாக வாழ்வோம். உலகம் நம்மை போற்றும்.

Monday, May 7, 2012

கவிதையானவளுக்கொரு கவிதை...!

வெள்ளைநிலா மாநிறமாய் மாறியமுகம்- விடி
வெள்ளியினை குங்குமமாய் தீட்டிய பொட்டும்
மடியினிலே எனைசாய்த்து மயங்கவைத்து- சிறு
மழலையினை கற்றுதரும் அவள் முத்தம்…!

குறும்புகள் ஓரக்கண்ணில் குதூகலிக்கும்
குறுநகையும் இதழோரம் கவிவடிக்கும்…!
கூந்தலிலே மல்லிகையும் குதித்தாடும்- அவள்
கூச்சமுமே எனைக்கொஞ்சம் கொலைசெய்யும்…!

இடியின்மீது எனக்கு பயமில்லை- அவள்
இடைமேல் பிழைப்பேனா தெரியவில்லை…!
வணங்கும் தேவியேயென் பத்தினியானபின்
படியேறி கோவிலுக்கு செல்லவுமில்லை…!

என் மகிழ்ச்சியை சிரிப்பாய்க் காட்டிடுவாள்
என் கவலையை கண்ணீராய் சிந்திடுவாள்
மனதிலே நானொன்றை நினைத்தேனானால்
மறுகணம் அதனை செய்துமுடிப்பாள்…!

என்னைவிட எனைமிக நேசிக்கும்- ஒரு
அன்னையை மனைவியாய் நான் பெற்றேன்
எண்ணங்களை எதிரொளிக்கும் கண்ணாடியாய்
எதிரிலே என்னுயிரை நான் கண்டேன்..!