Saturday, April 30, 2016

தோத்தவங்க...

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு முதலாளி. அவளோட புருஷன், நான் தனிமனுசனா கட்டி உருவாக்கின என்னோட கம்பெனில இப்போ ஒரு அஸிஸ்டன்ட் மேனேஜர். காதலுக்காக அவ காலடில காத்திருந்த காலம் போய் கண்ணை தொடைச்சிகிட்டு ஏதாவது செய்யனும்னு கிளம்பினதோட பலன்தான் இந்த மாபெரும் கணனித்தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியம். நானும் காதலிச்சேன். கவிதையெல்லாம்கூட எழுதினேன். கவிதையை பிடிச்ச அவளுக்கு என்னை மட்டும் பிடிக்கல. அவ விட்டுட்டு போனபிறகுதான் நான் யார்னு எனக்கே தெரிஞ்சிது. என்னைப் பத்தி நான் சொன்னேன். அவளுக்கு புரியல. சரி அப்ப என்னைப் பத்தி இந்த உலகத்தையே சொல்லவைப்போம். அப்பவாவது அவளுக்கு புரியுமானு... இப்ப புரிஞ்சிருக்கும். இதோ என் கம்பெனி ஆண்டுவிழாவில் தன் கணவனோடு அவள். என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்கத்தானே வேணும். அதுக்காகத்தானே இந்த பகீரதப்போராட்டம். உன்னை ராணி மாதிரி வச்சுப்பேனு நான் அழுதேன். அந்த கண்ணீரை உதாசீனப்படுத்திட்டு உயர்ரக மாப்பிள்ளைக்கு உறுதுணையானாள். ஆனா இப்ப என் மனைவி உண்மையிலேயே ஒரு ராணி. இவளை மாதிரி பல பெண்கள் பக்கத்துல நின்னு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்ற அளவு ராணி. அதயும் பார்க்கட்டும். வேற எதயாவது விட்டுட்டேனா? ஆஹ் சம்பளத்தை உயர்த்தி தர சொல்லி கேட்ட அவ கணவனுக்கு இன்னைக்கு அவ கண்ணு முன்னால போனஸ் கொடுக்கப்போறேன்.

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு நோயாளி. உன்னை பைத்தியமா காதலிக்குறேன்னு அவ முன்னால போய் சொன்னப்போ காதல் என்ற ஒரு விசயம் மட்டுமே இல்லாம அவ கண்டிப்பா சாதிக்ககூடிய ஒரு அட்டவணை ஒண்ணு சொன்னா. அது அடுத்த பதினைஞ்சு வருசத்துக்கான கணக்கு. அத முடிச்சுட்டு அதுக்கு அடுத்த இருபது வருசத்துக்கான கனவுனு அதவிட பெரிய இன்னொரு அட்டவணை சொன்னா. அத கண்டிப்பா சாதிக்கணுமாம்.கனவுகளை சுமக்குற இதயத்துல காதலுக்கு இடமில்லைனு சொல்லிட்டு போய்ட்டா. அவ போய்ட்டா. ஆனா நான் எப்பிடி மறப்பேன். எனக்கும்தானே கனவு இருக்கு. அவகூட சாகுறவரைக்கும் சந்தோசமா வாழணும்னு. அப்போ என் கனவு என்ன ஆகுறது? அழுது வடிந்த கண்ணீரில் ஆறாய் ஓடினேன். என் கடலுடன் கலக்கமுடியாமல். போதைக்கு அடிமையாயிட்டேனு எல்லாரும் சொன்னாங்க. அந்த போதைவஸ்துக்கள் அவளது ஞாபகங்கள் அளவுக்கு வலிமையானவையல்ல. உடம்புல எத்தனையோ வியாதி வந்து குடியேறின. தற்கொலை செய்றவனுக்குகூட ஒருநாள் சாவுதான் ஆனா காதலிக்குறவனுக்கு ஒவ்வொரு நொடியும் மரணம். ஆனா அதுகூட பரவாலனு இப்ப தோணுது. இது தேறவே தேறாதுனு கிட்டத்தட்ட அழுகிப்போற உடலோட என்னை ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. இத்தனை வருஷம் கழிச்சு அவளை ஒரு டாக்டரா இங்க பார்த்தேன். இதோ இதே ஆஸ்பத்திரிலதான். இன்னொரு விசயம் தெரியுமா? அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம். அவ புருஷனும் இதே ஆஸ்பத்திரிலதான் டாக்கடராம். கேக்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு.

இத பார்க்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு. போனஸ் வாங்குற அலுவலகர்கள் வரிசையில கடைசியில இருக்கான் ஒருத்தன். இவன் எல்லாம் ஒரு ஆளானு சொல்லி அவனோட பொண்டாட்டியால உதாசீனமா தூக்கியெறியப்பட்டவன் இப்ப அவனுக்கு சம்பளம் கொடுக்குற எஜமான். அவளுக்கு நிச்சயமா வயிறெறியும். மிஸ் பண்ணிட்டமேனு அழக்கூட வாய்ப்பிருக்கு. அதப் பாக்குற வக்கிரபுத்தியா உனக்குனு ஏதாவது ஆள்காட்டிவிரல் என் பக்கம் திரும்பினா... ஆமா வக்கிரபுத்திதான். காதல் வந்ததுக்கு நானா காரணம்? காதலிக்கும்போது என்கிட்ட காசில்லாம இருந்ததுக்கு நானா காரணம்? புது புது டிசைன் வர வர பழைய செருப்பை கழட்டிபோடுற மாதிரி காதல மாத்துற பொண்ணுங்க இருக்குறதுக்கு நானா காரணம்? உண்மையான உணர்விக்கில்லாத மரியாதை பகட்டு வாழ்க்கைக்கு இருக்கே..அதுக்கு நானா காரணம்? தப்பு பண்ணி திருந்துறது தப்பில்ல. பண்ண தப்ப தப்பே இல்லனு சொல்லுறதுதான் தப்பு. தப்பான ஒருத்திய காதலிச்சதுதான் நான் பண்ண தப்பு. என்ன? அப்ப நான் உண்மையா காதலிக்கலனு சொல்றீங்களா? வாற மாசம் வந்தா என் காதலுக்கு எட்டாவது ஆண்டு திவசம். செத்துப்போய் இருந்த தடமே அழிஞ்சு போன ஒன்னு உண்மையா பொய்யானு ஆராயனுமா? அத உங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம். புரிஞ்சிக்கவேண்டியவ புரிஞ்சிக்கவேண்டிய நேரத்துல புரிஞ்சிக்கலயே.

என்மேலதான் தப்புனு எல்லாரும் சொல்றாங்க. அவள மறந்திட்டு என் வேலைய பாத்திட்டு நான் போயிருக்கணுமாம். அவள மறக்கமுடிஞ்சிருந்தா மறந்திருப்பேனே.. அவளுக்காக அழுறதுகூட சந்தோசமாயிருந்திச்சு. வாழ்க்கையில தனக்கு என்ன தேவை என்றதுல தெளிவா இருக்குறவங்கதான்
ஜெயிக்குறாங்க. அவளோட லட்சியத்தில அவ தெளிவா இருந்தா. அதுக்காக போராடி அவ ஜெயிச்சா. இன்னைக்கு சமூகத்துல பெரிய டாக்டர். சந்தோசம். அதுக்காக நான் எப்படி தோத்தவனாகமுடியும். எனக்கு என்ன தேவைன்றதுல நான் தெளிவா இருந்தேன். அவதான்... அவ கிடைக்கல. அதனால அவளோட நினைவுகளே போதும்னு வாழ முடிவு பண்ணேன். அதவிட எனக்கு என்னதான் நிம்மதிய கொடுத்திடமுடியும். அதுக்கு எனக்கு இந்த உலகம் கொடுத்த பெயர் வாழத்தெரியாதவன், உருப்படாதவன், முட்டாள். வாழ்கைகயை முழுமையா வாழுறதுக்கு ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிஞ்சவிசயத்த பிடிச்சவிசயத்த மனப்பூர்வமா நேசிச்சு உணர்வுபூர்வமா அனுபவிச்சு அது ஒன்னே குறிக்கோளா வாழணும். எனக்கு தெரிஞ்சது அவமட்டும்தான்.. பிடிச்சது அவளமட்டும்தான். அந்த வாழ்க்கையை நான் வாழுறேன். அதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சினைனே புரியல.

காதலிச்சு தோத்தவன் கடைசிவரைக்கும் கண்ணீர் விட்டுகிட்டேதான் இருக்கணுமா? அப்பதான் அவனோட காதல் உண்மைனு உணர்த்தியதா அர்த்தமா? காதல் யாருக்காக? அடுத்தவங்களுக்கு இதுதான் உண்மைக்காதல்னு பாடம் எடுக்கவா இல்லை நாம சந்தோசமா வாழவா? நாம சந்தோசமா வாழணும்னு ஆசப்பட்டு பண்ற காதல் நம்மயே சவக்குழியில தள்ளினா? இப்பிடி எல்லாக் கேள்விகளும் என் மண்டைக்குள்ள போய் குத்தி குடைஞ்சு செதுக்கி எடுத்த பதில்தான் என் வெற்றி. காதல் என்ற ஒரே விசயத்துல தோத்து வாழ்க்கைய நான் அடைஞ்ச வெற்றிகள் ஆயிரம். என்னை தோக்கடிச்சவ ஆயிரம் பார்வையாளர்களில் ஒருத்தியா இப்ப ஒரு ஓரமா உட்கார்ந்து என் வெற்றியை வேடிக்கை பார்த்திட்டு இருக்கா. காதல் என்னை தோக்கடிச்சது. கோமாளியாக்கியது. ஆனா வாழ்க்கைல வெற்றிபெற்று நான் காதலையே தோக்கடிச்சிட்டேன். வாழக்கிடைக்காத ஒரு அற்புத வாழ்கையையும் எட்டமுடியாத பல அரியவெற்றிகளையும் என்னை ஏளனமா எட்டித்தள்ளிய காதலுக்காக இழக்கப்பார்த்தேன். நல்லவேளை தப்பிச்சேன். ஆனா.. எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவனும் என்னை மாதிரி காதல்ல தோத்தவன்தான். ஆனா அந்த மடையன் விட்டுப்போன காதல மறக்காம தன் காதலியையே நினைச்சு போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்து கஷ்டப்படுறான். இப்ப எங்க இருக்கானோ? என்ன பண்றானோ?

நான் என்ன பண்றேன்? என் கல்லறை வாசகத்தின் கடைசிப்பக்கத்தை எழுதிட்டிருக்கேன். கல்லால கல்லறையைக் கட்டினாலும் அதுக்குமேல மென்மையான ரோஜாவ வைக்குறமாதிரி அழிஞ்சு போய்கிட்டிருக்குற என் வாழ்க்கைல அவளோட புன்னகை இதமளிக்குது. இத்தனைக்கும் அவளுக்கு என்னை ஞாபகமே இல்ல. எப்பிடி இருக்கும்? காலம் போனபோக்கில அவள் தடம் பதிச்ச வளர்ச்சியும் என் உடல் இளைச்ச தளர்ச்சியும் அப்பிடி.. ஆனா அதுவும் நல்லதுக்குதான். எத்தனையோ நோயாளிகளுக்கு மருந்தா இருக்குற அவளுக்கு அவளால ஒருத்தன் இப்பிடி ஆயிட்டான்ற குற்றயுணர்ச்சி வேணாமே. மாலைல மறைஞ்சு போனாலும் ராத்திரி வாற நிலவுக்கும் ஒளியை கொடுத்துட்டு போகுதே சூரியன் அந்தமாதிரி பொண்ணு அவ. அவ அப்பிடியே இருக்கட்டும். என்னோட நண்பன் ஒருத்தன் காதல்தோல்வியை சரிகட்டுறேன்னு தொட்ட எல்லாத்தையும் வெற்றியாக்கி இன்னைக்கு அதே காதலிக்கு முன்னால ஒரு தலைவனா இருக்கான். பெரியாளாயிட்டான். அவன் என்னதான் ஒரு சாம்ராஜ்ஜத்தையே ஆண்டாலும் சந்தோசமாவா இருப்பான்? காதல்தோல்வி வலின்றது அவ்ளோ இலகுவா அழியக்கூடியதா? ஆனா நான் சந்தோசமா இருக்கேன். என் காதல் வெற்றியே அவளோட சந்தோசம்தான். அவ ரொம்ப சந்தோசமா இருக்காளே.. அப்போ யாருக்கு வெற்றி? சரி சரி அவ டெஸ்ட் பண்ண வாற நேரம் ஆயிடுச்சு.. இன்னொருநாள் சாவகாசமா பேசுவோம்..நான் சாகாம இருந்தா..

No comments:

Post a Comment