Friday, December 19, 2014

பருக்கை

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்..
எனது நீண்டநாள் முயற்சிக்குப்பின் நான் வெளியிட்டிருக்கும் எனது குறும்படம் பருக்கை. இதில் என்னுடன் உழைத்த அனைவரையுமே வாழ்நாள் முழுதும் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தயவுசெய்து இந்த குறும்படத்தை கண்ணுற்று உங்கள் கருத்துக்களை பகிரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என் முதல் முயற்சியில் இருக்கும் குறைகளை ஒப்புக்கொள்கிறேன். இதோ உங்கள் பார்வைக்கு



Tuesday, February 18, 2014

சமைக்கலாம் வாங்க!


ஆரம்பிச்சிட்டா.. இனி கதறக் கதற இத பாத்து தொலைக்கணுமே! இந்த நேரத்திற்கு வேற சேனல்ல செய்தியாவது பாக்கலாமே. என்னதான் ஒரு அப்பாவி கணவனின் குமுறல் அடி வயித்துல நெருப்பைமூட்டினாலும் மனைவியின் முறைப்புக்கு முறுவலோடு பம்முவதே காலங்காலமாக பழகிப்போன ஒன்று. இப்படி சமையல் புரோகிராம் பார்க்குறதுகூட சகிச்சிக்கலாம். ஆனா அதேமாதிரி செய்யுறேன் பேர்வழின்னு தினமும் ஏதாவது செஞ்சுகொடுத்து ரத்தக்கண்ணீர் வர வைப்பாளே. எப்படி இதுல இருந்த தப்பிக்குறதுன்னு யோசிக்குறது முன்னால 'நேயர்களே! இது உங்கள் அபிமான சமைக்கலாம் வாங்க நிகழ்ச்சி.. எல்லா வாரமும் போல இந்த வாரமும் அப்படி என்ன புதுவிதமான உணவோட நம்ம செப் வந்திருக்காருன்னு நீங்க காத்திட்டு இருக்குறது எனக்கு நல்லாவே புரியுது. அதுனால தாமதிக்காம நிகழ்ச்சிக்கு போவோம்' னு அடிக்குரல்ல இருந்து ஒரு தொகுப்பாளினி கத்திட்டு இருந்தா. இவ வேற நம்ம அவஸ்தை புரியாம பில்டப் பண்றாளே.. ஆனா பாக்குறதுக்கு நல்லாதான் இருக்கா!

இப்பகூட கடைசி முயற்சி பண்ணிபாக்கலாம். தப்பிக்குறதுக்கு வாய்ப்பிருந்தா நல்லதுதானேனு மனசு நப்பாசையால அரிச்சதால சின்ன கனகனப்புடன் வாயைத் திறந்தார். 'எனக்கு நீ ஆசையா செஞ்சுதாற சாம்பார், ரசமே வயிறு ரொம்பிடும்.. ஏன்ம்மா இப்பிடி கண்டதையும் சமைச்சு கஸ்டபடுற? நான் இதெல்லாம் கேட்கலயே'... 'அட! உங்களுக்கு என்ன தெரியும்? சாம்பார், ரசம் காலம் எல்லாம் மலையேறிப்போச்சு.. இப்பிடி புதுசு புதுசா செஞ்சி சாப்பிட்றதுதான் ஃபேஷன். அப்பதானே ஆபிஸ்ல எல்லாரும் நீங்க தினமும் புதுசு புதுசா சாப்பாடு கொண்டுவாறீங்கனு சொல்லுவாங்க. அதவிடுங்க பாக்கத்துவீட்டு ஜமுனாவ பாருங்க. இந்த புரோகிராம் பாத்துதான் தினமும் அவ புருஷனுக்கு புதுசா சமைச்சி கொடுக்குறா அதுனால அவ புருஷன் ஆபிஸ்ல அவ சமையலுக்கு எவ்ளோ பாராட்டு தெரியுமா? எனக்கு அப்பிடி பேர் வாங்கி கொடுக்க உங்களுக்கு மனசு வராதே? சும்மா உக்காந்து டி.விய பாருங்க'

அப்ப எல்லாத்துக்கும் அவதான் காரணமா? என்னை இப்பிடி அழ வைக்குறதுக்கே பக்கத்துவீட்டுல வந்து குடியேறியிருக்காளேன்னு புலம்புறதுக்குள்ள சமையல்கார புண்ணியவான் வந்து நிகழ்ச்சியைத் தொடங்கினார். 'இந்த மாதிரியான புதுமையான உணவு எங்கயுமே நீங்க பார்த்திருக்கமாட்டீங்க.. இத சாப்பிட்ட எல்லாருமே ஆஹா ஓஹோனுதான் சொல்லிருக்காங்க.. நானே புகழக்கூடாது.. நான் சொல்லிக்கொடுத்ததும் நீங்களே செஞ்சுப் பாத்து செல்லுவீங்க' னு அந்த நளபாக செப் தொடங்க அந்த அழகான தொகுப்பாளினியும் கூடவே ஆமா சாமி போட்டுட்டு இருந்தா.. நமக்குதான் வயித்துல புளிய கரைச்சிகிட்டு இருந்திச்சு.

முத வேலையா அந்த ஆளு பீன்ஸ், காளான், முட்டைகோஸ், கரட்டு, காலிபிளவர் னு எல்லாத்தையும் சின்ன சின்னதா வெட்டிவச்சு அடுப்ப போட்டு ஒரு சட்டியை வச்சு தண்ணியை ஊத்தி எல்லா காய்கறியையும் ஒண்ணா போட்டான். இது என்னடா காம்பினேஷன்னு குமட்டிட்டு வந்திச்சு. காய்கறி எல்லாம் அவியுற வரைக்கும் வைச்சு கிளறிகிட்டே இருந்தான். நடுநடுவே மானே தேனே பொன்மானே மாதிரி இதுல எல்லா சத்தும் இருக்கு. இத சாப்பிட்டா உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு பிட்டு போட்டான். பக்கத்துல இருந்த அந்த தொகுப்பாளினிவேற ஆஹா வாசனையே சூப்பரா இருக்கு. இப்பவே சாப்பிடணும்போல இருக்குனு அதுபாட்டுக்கு ஒரு பிட்டு. அதுசரி அதுக்குதானே அவளுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னம் அவன் அந்த தண்ணியில காய்கறியை கிளறிக்கிட்டுதான் இருந்தான். நான் பாவமா சம்சாரத்த பாத்தேன். அவளும் ஏதோ குழப்பமா என்னை பாத்தா.

இத்தனை நேர அவியலுக்கு பிறகு 'இப்ப அடுத்தது என்ன சார் செய்யபோறோம்'னு அந்த தொகுப்பாளினி கேட்டா. 'காய்கறி எல்லாம் நல்லா அவஞ்சிடுச்சு. இதுல இப்ப இந்த தேங்காப்பால விடணும்'னு ஒரு சட்டி பால ஊத்தினான். 'அட தண்ணி வத்தாம பால விட்றானே'னு எனக்கு பக்கத்துல இருந்து ஒரு சத்தம் வந்திச்சு. நான் அத கேட்கவே இல்ல. ஏன்னா எனக்கு தெரிஞ்சுபோச்சே கடைசியில எனக்குதான் பால்னு. தேங்காப்பால் ஊத்தி அத ஒரு பத்து நிமிஷம் அவிய வச்சு சுவையான கேரளா சூப் தயார்னு சொல்லி  அடுப்பை அணைச்சான். அட அவ்ளோதானா? இவ்ளோ நேரம் சூப்பா செஞ்சிட்டிருந்தான்? கோபமா அப்பிடியே பொண்டாட்டி பாக்கம் திரும்பினேன். அவ என்னை பாக்கவேயில்லையே. 'இந்தாங்க டேஸ்ட் பாருங்க'னு அந்த தொகுப்பாளினிக்கு கொஞ்சம் கொடுக்க அவள் ஆவலா வாங்கி சாப்பிட்டு அப்பிடியே விறைச்சுபோய் நின்னுட்டா. அட பாவமே அந்த பொண்ணு அழுதிடிச்சு. ஆனா அதையும் தாண்டி 'இப்பிடி ஒரு சுவையான உணவு நான் சாப்பிட்டதேயில்ல'னு சொல்லிச்சே பாக்கலாம். எனக்கு சிரிப்பு தாங்க முடியல. என் பொண்டாட்டிக்கு பேச்சே வரல. இனிமே டி.வியே பாக்கமாட்டானு நினைக்குறேன். தலைய தொங்கபோட்டுகிட்டு உள்ள போய்ட்டா. கெட்டதுலயும் ஒரு நல்லாது நடந்திச்சின்னு குதூகலமா தூங்கப்போனேன். இதுல குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னன்னா அந்த மொத்த சமையல்லயும் அவன் ஒரு சொட்டு உப்புகூட போடல.