Sunday, April 14, 2013

நாலு பேர் நாலு விதமா...


வழமைபோல எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நடந்தன. பார்த்தும் பார்க்காமல் போகும் பக்கத்துவீட்டுக்காரன், எனக்கு மட்டும் குட்மோர்னிங் சொல்லாத வாட்ச்மேன், என்னைப் பார்த்ததும் முகத்தை சுழிக்கும் கீரைக்காரி… மொத்தத்தில் அக்கம் பக்கத்தால் தள்ளிவைக்கப்பட்ட வாழ்க்கை. அன்னம் தண்ணி புழங்ககூட ஆளில்லை. போதும்டா சாமின்னு இந்த இடத்தை விட்டே போகலாம்னு யோசிச்சாலும் இருக்குறதே ஒரே ஒரு சொந்த வீடு. வாங்க விக்க வற்றவங்களும் ஆயிரம் குத்தம் சொல்றாங்க. இங்க இருந்து வேலை பாக்குற ஆபிஸ்ஸுக்கு பக்கமா ஒரு நல்ல வீடு வாங்கவே முடியாது. அப்பிடியே வாங்கினாலும் இதவிட ரொம்ப சின்னா வீடாத்தான் இருக்கும். பையனுக்கும் ஸ்கூல்போக சிக்கலாயிருக்கும். நாம வாங்குற சம்பளத்துக்கு தனியா எல்லாம் அவனுக்கு ஸ்கூல் வான் பிடிச்சு அதுக்கு ஃபீஸ் எல்லாம் குடுக்கமுடியாது. நான் ஆபீஸ் போகும்போதுதான் பைக்ல அவனையும் விட்டுட்டு போகணும். சரி நம்ம ஏரியாக்குள்ளதான் இவ்வளவு மனஸ்தாபம், ஆபிஸ்லயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்க எவனும் பேசமாட்டேங்குறான். நானா போய் ஏதாவது கேட்டா என் முகத்தப் பாக்கமாத்தான் பதில் வரும். சரி பேசாட்டி போங்கடாங்கனு விட்டுட்டு இருந்துடுவேன். ஆனா சிலபேர் வந்து எனக்கு முன்னாலயே என்னைப்பத்தி பேசி நக்கலா சிரிக்கும்போது அத கேக்கமுடியாம கோபத்தை அடக்குறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஆபிஸ்லதான் இப்பிடின்னா பையனோட ஸ்கூல்ல அதவிட மோசம். டீச்சர், கூடப்படிக்குறவங்கள்ளேல்லாம் தப்பு தப்பா பேசுறாங்கனு வந்து அவன் தினமும் அழுதுட்டு இருக்கான். வீடு, ஆபிஸ், ஸ்கூல் எல்லாத்தையும் மொத்தமா ஒரேநேரத்தில மாத்துற அளவுக்கு வசதியில்லாத ஒரு குடும்பத்தலைவனால சுத்தியிருக்கற இத்தனை சிக்கலையும் சமாளிக்கமுடியாத நிலைமையில என்ன பண்ணமுடியும்? இப்போதைக்கு எனக்கு ஒருக்குற ஒரே ஆறுதல் காலம்தான். காலம் சிறந்த மருந்து. எல்லா காயங்களையும் ஆத்திடும். இதையும் ஆத்திடும். அதவிட முக்கியம் எல்லாரும் இத மறக்கணும். மறந்து…. பழையமாதிரி எங்கிட்ட பேசாட்டியும் பரவாயில்ல, குத்திகாட்டுறமாதிரி நடக்காம இருந்தாலே போதும். அப்பிடி என்னதான் நான் தப்பு செஞ்சிட்டேன்? கொஞ்சநாளைக்கு முந்தி வரைக்கும் இப்பிடி இல்ல….

நல்லா படிச்சு ஒரு கௌரவமான உத்தியோகத்துல இருக்குற உங்களைப்போன்றவன்தான் நானும். மானத்துக்கு அஞ்சி வாழுற சாதாரண மிடில்க்ளாஸ் குடிமகன். அப்பாவோட சேமிப்போட நானும் ஒரு லோன் எடுத்து சொந்தமா வீடு வாங்கினேன். சிக்கனமா இருந்து லோனையும் கட்டியாச்சு. சொந்த வீடு, நல்ல வேலைனு வாழ்க்கைல ஒரு நிலைக்கு வந்ததும் கல்யாணம் ஆச்சு. சந்தோசமா போன கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமா ஒரு பையனும் பொறந்தான். அப்பா அம்மா சாகுறப்போ பையன் நல்ல நிலமைல இருக்கான், பேரன் பொறந்துட்டான்னு நிம்மதியிலதான் கண்ண மூடினாங்க. ஆனா அவங்க போனப்புறம் எனக்கு நிம்மதி போச்சு. குடும்ப பாரத்த சுமக்குறது மட்டுமில்லாம கீதாவ வளர்க்குற பொறுப்பும் எனக்கு வந்திச்சு. என்னோட ஒரேயொரு உடன்பிறப்பு கீதா. என்மேல உயிரையே வச்சிருக்குற என் தங்கச்சி. அவளைப்பத்தி நினைக்கும்போதெல்லாம் பேசாம நான் சின்ன பையனாவே இருந்திருக்கலாம்னு தோணும். ஒரே சாக்லேட்ட அவகூட சண்டை போட்டு யாரு சாப்பிட்றதுனு தலைய பிச்சி உருண்டு பிரண்டு பிறகு ஒருவழியா ஒண்ணா உக்காந்து பாதி பாதி கடிச்சு சாப்பிட்டதுதான் என் வாழ்க்கையிலயே ரொம்ப அழகான நாட்கள். அதுக்கப்புறம் வளர்ந்து படிச்சு வேலை கல்யாணம்னு எத்தனையோ வந்தாலும் அப்பிடி நான் உண்மையா சந்தோசமா இருந்தேனானு தெரியல. அப்பா அம்மாவ விட என்மேலதான் பாசமாயிருப்பா. எனக்கு எப்பிடிபட்ட பொண்ணு வந்தா நல்லா இருக்கும்னும் அவதான் தேர்ந்தெடுத்தா. என் பொண்டாட்டியும் என் குடும்பத்துமேல அப்பிடியே பாசத்தை பொழிஞ்சு கொட்டாட்டியும் கொஞ்சமாவது சமாளிச்சா. அதுவே பெரிய விசயம். அவளுக்கு பொழுது டீ.வி சீரியலோடயே போயிடும். பையனும் ஸ்கூல்ல சேர்ந்து நல்லா படிச்சுட்டு வந்தான். தங்கச்சிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு காலேஜ்ல இடம் கிடைச்சு போய்ட்டு இருந்தா. எனக்கு பகல்ல ஆபிஸ்ஸும் இரவில குடும்பத்தையும் பாத்திட்டு காலம் போய்ட்டு இருந்தப்பதான் நான் கொஞ்சமும் நினைக்காத என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த சம்பவம் நடந்திச்சு.

போலீஸ்காரங்க, பத்திரிக்கைகாரங்க எல்லாம் சுத்தி நின்னிட்டு இருந்தாங்க. என் கண்முன்னால என்ன நடக்குதுனே தெரியல. கண்ணு கூசுற அளவுக்கு கேமரா லைட் அடிச்சிட்டு இருந்திச்சு. டாக்டர் எல்லாம் போலீஸோட ஏதோ பேசிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்ட பெரிய மனுசங்க சிலபேர் தலையகுனிஞ்சு உள்ள வந்து போலீஸ தனியா கூட்டிட்டு போய் ரகசியம் பேசினாங்க. அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல அத்தனை கூட்டத்துக்கு மத்தியில தனி ஆளா என்ன செய்றதுனு தெரியாம சுத்தி சுத்தி பாத்திட்டு இருந்தேன். யார்கிட்ட கேக்குறது எங்க போறது ஒண்ணுமே தெரியல. அறிவு மங்கி போனமாதிரியிருந்திச்சு.

‘கீதாவோட சொந்தக்காரங்க யாராவது வந்துருகீங்களா?’ உள்ளேயிருந்து ஒரு நர்ஸ் வந்து கேட்க ஏதோ ஆவேசம் வந்தவனைப்போல கூட்டத்தை தள்ளி முந்தியடித்துக்கொண்டு போய் அவளைப் பார்த்து.. ‘நான்தான் கீதாவோட அண்ணா… அவ எங்க இருக்கா? எப்படி இருக்கா? ஒருக்கா அவள பார்கணும்… அவளுக்கு என்ன ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்க’ பதட்டத்திலயும் பயத்திலயும் எனக்கு பேச்சு வந்ததே அதிசயம். அந்த நர்ஸ் ஏதாவது சொல்லுவாளா கீதாவ பார்க்கலாமானு அவ முகத்தயே பாத்திட்டு இருந்தேன். அவ ஏதோ நோட்ல குறிப்பு எடுத்திட்டு ‘சரி இந்தப்பக்கம் உக்காருங்க.. டாக்டர் கூப்பிடும்போது வாங்கனு சொல்லிட்டு போய்ட்டா’ நடக்கமுடியாம தள்ளாடிப்போய் ஒரு கதிரையில உட்கார்ந்தேன். ‘உங்க வீட்டுல கீதான்னு பொண்ணு இருக்கா? அவங்கள கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு. சீக்கிரம் வாங்க’னு ஒரு ஃபோன்தான் வந்திச்சு. அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியாம ஹாஸ்பிடல் முழுக்க நாயா சுத்தி வந்தேன். யார்யாரோ வந்திட்டு போறாங்க. என்ன நடக்குது ஏதுன்னு ஒண்ணும் புரியல. மனசும் உடம்பும் சோர்ந்துப்போச்சு. கண்ணமூடி உக்காந்திட்டேன்.

‘எல்லாம் காலக்கொடுமைதான்… என்னத்த செல்றது. காலேஜ் படிக்குற பொண்ணுங்க மூணுபேர கூடபடிக்குற பசங்க பார்ட்டினு கூட்டிட்டு போயி நாசம் பண்ணிட்டாங்க. அந்த பொண்ணுங்க கெஞ்சி கதறிப்பாத்தும் அவனுக விடல. தடுத்த அந்த பொண்ணுங்களுக்குத்தான் பலத்த காயம். பணக்காரப்பசங்கன்னா என்ன வேனா செயவாங்களா? இத்தனைபேரு வந்து பாத்துட்டு போறாங்களே இதால அந்த பொண்ணுங்களுக்கு நல்லது நடக்கும்னு நினைக்குறியா? காலேஜ் பேர் கெட்டுப்போகக்கூடாதுனு அந்த காலேஜ் ஓனர் வந்து கெஞ்சுறான், கெடுத்த பசங்கள காப்பாத்தனும்னு அவங்க பெத்தவங்க வந்து பேசுறாங்க.. நியாயம் கிடைக்கணும்னு பேச யாரும் வரலியே’

கை நடுங்கியது.. வேர்த்து கொட்டியது, என்ன? என் தங்கச்சியா? இல்ல… இருக்காது இருக்கவே இருக்காது… ஐய்யோ ஐயோ….. கீதா… கீதா… இப்பதானே ஸ்கூல் முடிச்சு காலேஜ் போனா. பச்ச பிள்ளைடா அவ ஐயோ அடப்பாவிகளா…. கத்தினேன் கதறினேன்… என் கூச்சலுக்கு பதில் சொல்ல அவ்வளவு பெரிய ஹாஸ்பிடலில் ஒருத்தர்கூட இல்ல. என்னோட ஆற்றாமையில் எனக்கே கோபம் வந்திச்சு. யாரு என்ன ஏதுன்னு ஒண்ணுமே புரியலயே யாரு? யாரு? அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா? அடக்கடவுளே… ஒரு பொண்ணா பொறந்தது அவ குத்தமா? என் கீதா உனக்கு என்ன செஞ்சா? கீதா.. ஆமா கீதா எங்க? என் கீதா? எழும்பமுடியாமல் எழுந்து அங்கும் இங்கும் ஓடினேன்.. எந்த வார்ட்னு தெரியல. மொத்த ஹாஸ்பிடலயும் நாலஞ்சு தடவ சுத்தி அவ இருக்குற இடத்துக்கு போனேன். அவ… என் தங்கச்சி, என் தேவதை ஒரு கட்டில்ல கசங்கிப்போய் படுந்திருந்தா.. இத பாக்காத்தான் நான் இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? தடுமாறி அவளுக்கு பக்கத்தில போனேன். சுத்தியும் டாக்டர்களும் போலீஸும் பத்திரிகைகாரங்களும்.. அவ முழிச்சுட்டுதான் இருந்தா. என்னைப் பாத்ததும் கத்தி அழுதிட்டா. ஐயோ நான் அவளுக்கு பக்கத்துல போய் அவ கைய இறுக்க பிடிச்சுகிட்டேன். அவ என் முகத்தயே பாக்கல. தலைய குனிஞ்சிட்டு அழுதிட்டே இருந்தா. அதுக்குள்ள ஒரு நர்ஸ் வந்து ‘உங்கள அங்க இருக்கதானே சொன்னோம். இங்கல்லாம் வரக்கூடாது. வெளில இருங்க’னு சொன்னார். என்னால முடியல. அவள விட்டுட்டு இனி எங்கயும் நகரமுடியாது.. அதுவும் அவளும் என் கையை பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்காளே.. டாக்டர் என்னை இருக்க சொன்னார். பத்திரிக்கைகாரங்க எல்லாம் கீதாவ சுத்தி நின்னுகிட்டு கேவலமா கேள்விக்கேட்டு கொன்னுட்டாங்க.. ‘நீங்க ஏன் அவங்களோட போனீங்க?, உங்கள எத்தனைபேர் கற்பழிச்சாங்க?, எவ்வளவு நேரம் அவங்களோட நீங்க இருந்தீங்கனு மாத்தி மாத்தி ஈவு இரக்கமே இல்லாம கேள்வி கேட்டிட்டு இருந்தாங்க… ஏன்யா இப்பிடி பண்றீங்க? ஏற்கனவே செத்துபொழைச்சு வந்தவங்கள இப்பிடி கேள்விகேட்டு சாவடிக்குறீங்களேனு கத்தினேன். போங்க போங்க என என் தங்கச்சியும் எல்லாரையும் பாத்து கத்தினா.. எல்லாரும் கலைஞ்சு போனாங்க.. என் தங்கச்சியோட கண்ணீரைத் தவிர..

பல போராட்டங்கள் நடந்திச்சு. பல மகளிர்அமைப்புகள் இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என உண்ணாவிரதம் இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாசம் முழுக்க எல்லா பத்திரிகையிலும் என் தங்கச்சிதான் தலையங்கமானாள். குற்றவாளிகளுக்கு பேருக்கு ஒரு தண்டனை கிடைத்தது. கவர்ன்மென்ட்ல இருந்து காலேஜ்வரைக்கும் எல்லாரும் நஷ்டஈடு கொடுக்கவந்தார்கள். எத்தனைகோடி கொட்டிகொடுத்தாலும் நடந்ததை மாத்தமுடியுமா? என எல்லாத்தையும் கீதா வேணாம்னுட்டா… தன்னை காதலிக்காத பெண்ணை பழிவாங்க ஆசிட் ஊற்றிய வாலிபன், ஓடும் பேருந்தில் ஆறுபேரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் என்று தினமும் ஒரு செய்தி பத்திரிகைகளில் வரும். அப்படி வரும்போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வலி மட்டும்தான் ஊருக்கு தெரியும். அதையும் தாண்டி அந்த பெண்களை ஆயிரம் கனவுகளுடன் வளர்த்த அப்பாவோடயோ அம்மாவோடயோ அண்ணனோடயோ வலியை உணரமுடியாது. உணரவேண்டிய அவசியமும் இந்த பாழாய்ப்போன பொதுமக்களுக்கு தேவையில்லை. உணர்ந்திருந்தால் முதல்முதலா ஒரு தப்பு நடந்தப்பவே அடுத்த தப்பு நடக்காம இந்த மக்கள் பார்த்திருப்பாங்க. தண்டனையை அந்த படுபாவிகளுக்கு கொடுத்திருப்பாங்க. ஆனால் அங்க எல்லாம் ஆட்டுமந்தை மாதிரி வாயை மூடிட்டு இருந்துட்டு அவங்க தண்டனை கொடுக்க வந்தது என் தங்கச்சிக்கும் என் குடும்பத்துக்கும்… எத்தனை ஏச்சு பேச்சு!

ஆசையோட படிக்கப்போன படிப்பும் போய் மானமும் போய் என் தங்கச்சி வீட்டோட முடங்கிப்போயிட்டா.. அக்கம்பக்கத்துல இருந்தவங்க எல்லாம் கெட்டுப்போனவள வீட்டோட வச்சிருக்காங்கனு அரசல்புரசலா பேச ஆரம்பிச்சாங்க.. சாதாரணமா ஒரு பக்கத்துவீட்டுக்காரனோட கொண்டாடுற உறவுமுறை அற்றுப்போனது. அருவருப்பா பாத்தாங்க… எந்த ஒரு தப்பும் பண்ணாம வாழ்க்கையே தலைகீழா மாறிப்போனது. டீவிடீல இருக்குறமாதிரி வாழ்க்கைலயும் ஒரு ரீவைண்டு பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணிச்சு… நாங்க படுற கஷ்டத்த பாத்துட்டு கீதாவாவே வந்து ஒருநாள் சொன்னா நான் தனியா போறேன்னா.. என்னால இனி நீங்க யாரும் கஷ்டப்படாதீங்கனு.. அவளை விட்டுட்டு நாங்க என்ன பண்ணமுடியும்.. அப்புறம் நாங்க பக்கத்துவீட்டுல இருக்குறத அசிங்கமா நினைக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம்? எப்பிடியும் கஷ்டப்படத்தான்போறோம். பிரிஞ்சுபோனா பனவேதனைதான் அதிகமாகும்.  எப்ப பாத்தாலும் அவமேல எரிஞ்சுவிழுற என் பொண்டாட்டியே இப்பல்லாம் அவள குழந்த மாதிரி பாத்துக்குறா.. அவளுக்குத்தேவை ஒரு சுகமான ஆறுதல். வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்கு போகமுடியும்ற நம்பிக்கை. அதை கொடுக்குறதுதானே ஒரு அண்ணனா என்னோட கடமை. அவளுக்கு நான் படிப்பு கொடுப்பேன். அவளோட மொத்த வாழ்க்கையையும் மாத்த எங்கிட்ட சக்தியில்லாம இருக்கலாம். ஆனா இனி வாழப்போற வாழ்க்கைக்கு உறுதுணையா கைகொடுக்க மனசிருக்கு. அவ என் தங்கச்சி. ஆமா.. ஊரு இன்னும் பேசிட்டுத்தான் இருக்கு. முந்திக்கு இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. இன்னும் கொஞ்சநாள்ள மொத்தமா குறைஞ்சிடும். அதுவரைக்கும் பொறுமையா இருப்பேன். கறை எங்க வாழ்க்கையில வரல. வீணாப்போன சில இளைஞர்களின் எண்ணத்துலதான் வந்திச்சு.. அதுக்காக நாங்க காலம் முழுக்க தண்டனை அனுபவிக்கணுமா? வாழ்க்கை ஒரு விபத்துனால நின்னுபோயிடாது.. அது ஓடிக்கிட்டேதான் இருக்கும். வித விதமா பேசத்தான் இந்த சமூகம் இருக்கு ஆனா சமுதாயம் பேசுறதை தாண்டி வாறவங்கதான் வாழ்க்கையில ஜெயிப்பாங்க. என் தங்கச்சி ஜெயிப்பா…

Monday, April 8, 2013

சௌபாக்யா…!


‘என்னப்பா நீங்க? நாங்க வந்து முப்பது நிமிஷத்துக்கு மேலயாகுது. ஏன் வந்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க, யாருக்காக காத்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க…….ஏதாவது சொல்லுங்கப்பா?’

மறுபடியும் மகளுக்கு மௌனத்தையே பதிலாக தந்துவிட்டு தாங்கள் அமர்ந்திருக்கும் அந்த பெரிய ரெஸ்டாரெண்டின் வாசலையே மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மூத்தமகள் சௌபாக்யா. அளவான அங்கத்தவர்களோடும் தேவைக்கேற்ற வசதியோடும் வாழுற இனிமையான குடும்பம் அவர்களுடையது. பண்பான அந்த குடும்பத்தில பட்டாம்பூச்சியாக சிறகடிப்பவள் சௌபாக்யா!. படிப்பில கெட்டிக்காரியாகவும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் மட்டுமில்லாம நல்ல வேலையில நிறைவா சம்பாதிச்சு குடும்பத்தையும் பாத்துக்குறா. ஆனா இளவயதை அடைந்தபின்னும் சுட்டித்தனம், அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் குணம், அதோட கொஞ்சம் திமிரு!

தூரத்தில் ஒரு நிழலாடுவதைக் கண்டு தன்னிலைக்கு வந்தார் அர்ஜூனன். அவளோ ஒன்றும் புரியாமல் அருகில் அமர்ந்திருந்து தன் ஐஸ்கிரீமில் கவனம் செலுத்தினாள். சிறிது நேரத்தில் அவர்களின் இருக்கைக்கு முன்னிருக்கையில் வந்து அமர்ந்தான் கணேஸ்!

‘ஹாய் கணேஸ்! என்ன இந்தப் பக்கம்? ………………. என்னப்பா நீங்க? கணேஸுக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தோமா? முதல்லயே சொல்லியிருக்கலாந்தானே?’

அர்ஜுனனும் கணேஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஸ் கண்ணால் ஏதோ சொன்னான். அர்ஜுனன் அதைப் புரிந்து கொண்டு தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தார்.

‘நான்தான் கணேஸ வரச் சொன்னேன்!’

‘அதுக்கேன்பா என்னை கூட்டிட்டு வந்த போரடிக்க வச்சீங்க?’

மீண்டும் ஒரு அமைதி……….

‘உன்கிட்டதான்மா பேசணும்………….நீ கணேஸ பத்தி என்ன நினைக்குறே?’

‘இதுல நினைக்க என்னப்பா இருக்கு? என் சின்ன வயசில இருந்து ப்ரண்டு… எனக்கு நல்லதுகெட்டதுக்கு முன்னுக்கு நிப்பான். நல்ல பையன். கொஞ்சம் லூசு! ஹாஹா……. ஏன்ப்பா இப்ப இவனப் பத்தி கேக்குறீங்க?’
கணேஸ் சிறு பதட்டத்துடன் அர்ஜுனனை பார்த்தான்.

‘கணேஸுக்கு உன்னப் பிடிச்சிருக்கும்மா! எங்ககிட்ட வந்து பேசினான். எங்களுக்கு உன் முடிவுதானே முக்கியம். அதுதான் பேசி ஒரு முடிவெடுக்க இங்க வரச் சொன்னேன்’

அந்த ஒரு கணத்தில் சௌபாக்யாவிற்குள் என்ன பிரளயம் வெடித்தது என மற்ற இருவருமே சற்று அறிந்திருக்கக்கூடும். கணேஸை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அதை எதிர்கொள்ள முடியாமல் அவன் தலைகுனிந்தான். அதே உஷ்ணத்தோடு பார்வையை தந்தையின் பக்கம் திருப்பினாள்.

‘எங்க நிலமையும் புரிஞ்சுகோம்மா….. உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கணும்ணு எங்களுக்கு மட்டும் ஆச இருக்காதாணு மத்தவங்க மாதிரி பேசமாட்டேன். நல்லா யோசிச்சு பாரு. இந்த கால பசங்கெல்லாம் எப்பிடி இருக்காங்க? வீட்டுக்கு அடங்காம ஊர சுத்துறது, கண்ட கண்ட கெட்ட பழக்கங்கள பழகிக்கறது இப்பிடி சீரழியற சமூகத்துல ஒரு நல்ல பையனுக்கு உன்ன கட்டி வக்கிற பொறுப்பு எங்களோடதுதானே…. கணேஸபத்தி நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும்! அதான் அந்த பையன் வந்து கேட்டதும் மறுக்கமுடியல’

‘எனக்குனு சில லட்சியங்கள் இருக்குறது உங்களுக்கு தெரியுந்தானேப்பா… அப்பிடி இருந்தும் நீங்க என்ன புரிஞ்சுக்காம…’

‘கொஞ்சம் பொறும்மா! நான் எந்த முடிவும் எடுக்கப் போறதில்ல. முடிவு உன்னோடதுதான். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நீ என்ன முடிவு பண்ணாலும் அதுக்கு நான் கட்டு படுறேன். நான் வீட்ட போறேன். நீ பேசிட்டு வாம்மா.’

அதற்குமேல் தான் அங்கிருப்பது தேவையில்லையென அர்ஜுனன் புறப்பட்டார். எதிரெதிர் இருக்கைகளில் கணேஸும் சௌபாக்யாவும்! ஒரு அமைதி. அந்த அமைதியை அடுத்தவர் உடைக்கட்டும் என இருவரும் காத்திருந்தனர். கணேஸ் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை எப்பிடி எதிர்கொள்வதென அறியாது சம்பந்தமேயில்லாமல் அங்குமிங்கும் விழிகளை அலைக்கழித்தான். அவன் கண்கள் செல்லும் வழியில் அவளின் கண்களை சந்தித்து அவளின் உள்மனதை நோட்டம் பார்க்கும் உளவு வேலையை செய்தது. ஆனால் அந்த வேலையை திறம்பட செய்யும் சக்தியற்று அவையிரண்டும் நிலத்தில் மண்டியிட்டன. இதற்கு மேல் பொறுமையிழந்த சௌபாக்யா கண்களில் எரிமலையோடும் உதட்டில் பூகம்பத்தோடும் பேச ஆரம்பித்தாள்.

‘என்ன எண்ணத்துல நீங்க இப்பிடி கேட்டீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

‘…………………………………………..!’

‘என்ன பேசாம இருக்கீங்க? பேசத்தானே வந்தீங்க? சொல்லுங்க கணேஸ்…..’

‘அது வந்து…… அது….. உங்க அப்பா சொன்னார்தானே…… அது…… உங்க முடிவு என்னணு……………’

‘ஏன் தடுமாறுறீங்க? நீங்க ஏதோ தப்பு பண்றீங்கணு உங்களுக்கே தெரியுதுதானே கணேஸ்…. சொல்லவந்தத சொல்லி முடிங்க!’

‘அதாங்க…. அவரு…. நான்….. நீங்க என்ன சொல்றீங்க?’

‘எனக்கு பிடிக்கல’

‘ஏன்? என்னை பிடிக்கலயா?’

‘எனக்கு காதலே பிடிக்காது….. இவளோ நாளா என்கூட நல்ல ப்ரண்டா பழகின உங்களுக்கு அது தெரியாதா? அப்பிடி தெரிஞ்சும் நீங்க கேட்டதுதான் உங்க தப்பு. வாழவேண்டிய காலத்துல மனசைக் கெடுத்து வாழ்க்கைய வீணாக்குற இந்த மண்ணாங்கட்டி காதல்ல எனக்கு உடன்பாடு இல்லனு தெரியாதா? அதோட நான் இப்பதான் வேலையில கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகுறேன். இன்னும் நிறைய சாதிக்கணும். என் டேலண்ட புரூப் பண்ணனும். இப்ப கல்யாணம் அது இதுனு மனசை மாத்தினா இத்தனை நாள் நான் கண்ட கனவு என்ன ஆகும்? எவ்வளவு திறமையிருந்தாலும் ஒரு பொண்ணா பொறந்தா கல்யாணம் பண்ணிகிட்டு அடுப்பாங்கறையிலயே இருக்கவேண்டியதுதானா? சொல்லுங்க?’

‘நல்லா தெரியுங்க….. இவ்வளவு நாள் உங்களுக்கு நல்லா ப்ரண்டா இருந்த என்னால கல்யாணம்னு ஒன்னு பண்ணாலும் அதுக்குபிறகும் அந்த நட்போட உங்கள பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் கேட்டேன். நீங்க இன்னும் ஒருதடவை யோசிச்சு…’

‘நல்லா யோசிச்சுட்டேன் கணேஸ்.. ப்ளீஸ் புரிஞ்சுகோங்க. என்னோட நல்ல ப்ரண்டா இருந்த உங்கள காயப்படுத்த எனக்கு கஷ்டமாயிருக்கு. இப்ப என்னால கல்யாணம்ற ஒன்ன நினைக்கமுடியாது. உங்க வாழ்க்கைய பாத்துகோங்க…’

பதிலை எதிர்பார்க்காம இருக்கையவிட்டு எழுந்து திரும்பிபார்க்காமல் போய்விட்டாள். கண்ணியத்தோட காதலைசொன்ன கதாநாயகன் கண்ணீரோடு அவள் கடந்த பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 


கலகலப்பான காலை நேரம். அலுவலகத்தில் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்க நான் மட்டும் சோம்பலோடு உட்கார்ந்திருந்தேன். அதுக்காக வேலை இல்லாதவன்னு நினைக்காதீங்க. நான் ஒரு ஐ.டி அட்மினிஸ்ரேட்டர். சிலநாள் ஒரு வேலையும் இருக்காது. ஆனா வேலை வந்தா முதுகெலும்பை வளைக்காம விடமாட்டாங்க. ஆனா இப்ப ஐயா வெட்டிதான். சரி ஏதாவது செஞ்சிட்டு இருப்போமேனு ஐபி வெர்ஷன் 4 நெட்வேர்க்கை ஐபி வெர்ஷன் 6 ஆக மாத்த ஒரு சின்ன இன்ப்ராஸ்ரக்‌ஷர் போட ஆரம்பிச்சேன். அட மறந்துட்டேனே… வழக்கம்போல இந்த நேரத்துக்கு சௌபாக்யா வந்திருக்கணுமே, ஆளை காணலயே? என்ன ஆயிருக்கும்.

பத்து நிமிஸத்துக்கு பிறகு மறபடியும் பாத்தேன். அதோ அவ வந்திருக்காளே.. ஆனா டல்லா இருக்காளே.. ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? சரி வெட்டியாத்தானே இருக்கோம் போய் விசாரிப்போம்.

‘ஹாய் சௌபி..!’

‘சனா… எத்தனை தடவ சொல்லியிருக்கேன் அப்பிடி கூப்பிடாதீங்கனு, ஏதோ நாய்க்குட்டிய கூப்ட்றமாதிரி இருக்கு..’

‘சரி திருநிறைச்செல்வி சௌபாக்யா அவர்களே.. இன்று தாங்கள் ஏன் டல்லடிக்கிறீர்கள்’

‘உங்களுக்கு சிரிக்குற நேரமா இது?’

‘ஏன் உங்களுக்கு இது சிரிக்ககூடாத நேரமா?’

சிரித்தேவிட்டாள் அவள். பெண்களை சிரிக்கவைப்பது ஒரு கலை.. நானும் ஒரு கலைஞன் என்பதை அவளது சிரிப்பில் உணர்ந்தேன். ஆனா இன்னும் அவளது சலிப்புக்கு என்ன காரணம்னு தெரியலயே

‘சரி சிரிச்சு முடிச்சாச்சா? இப்பயாவது சொல்லுங்கம்மா ஏன் இவ்வளவு சலிப்பு இன்னிக்கு’

‘இன்னைக்கு நான் சிரிப்பேன்னு நினைக்கவேயில்ல சனா.. மனசு கஷ்டமாயிருந்துச்சு. இப்ப பரவால’

‘ஹயோ அதான் ஏன் மனசு கஷ்டப்படுது? எங்கிட்ட சொல்லக்கூடாதா?’

‘அப்பிடி இல்லங்க.. காலைல என் ஃப்ரண்டு ஒருத்தன பார்த்தேன். சின்ன வயசுலேந்து எங்கூட பழகியிருக்கான். நல்ல ஃபிரண்டாயிருப்பானு நம்பிட்டு இருந்தேன். திடீர்னு உங்கள பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணலாமானு கேட்டுட்டான். அதான் ஒரே தலைவலியா இருக்கு.’

‘ஏங்க.. அவனால ஏதாவது பிரச்சினை வரும்னு பயமா?’

‘ஐயோ இல்லங்க.. அவன் ரொம்ப நல்லவன். மத்தவங்கள கஷ்டப்படுத்த நினைக்ககூடமாட்டான். அவனால எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா என் நம்பிக்கைய கெடுத்துட்டான். அதான் கவலயா இருக்கு சனா..’

‘என்ன சௌபி.. சரி சரி சௌபாக்யா.. அவன இப்பிடி புகழ்ந்து தள்ளுறீங்க.. பேசாம சரினு சொல்லியிருக்கலாமே..’

‘இல்லங்க.. இப்பதான் ஆபிஸ்ல நல்லா வேலை செய்வேனு பேர் வாங்கியிருக்கேன். அப்பிடியே புரமோஷன் வாங்கணும். அதவிட குடும்ப பாரத்த இப்ப நான்தானே சுமக்குறேன். இந்த நேரத்துல கல்யாணம் தேவையா?’

‘அட இவ்வளவுதானா… ம்ம்ம், உங்கள நினைச்சா சிரிப்புதான் வருது’

‘என்ன சனா? உங்களுக்கு நக்கலாயிருக்கா?’

‘அட நக்கல் இல்லிங்க.. நீங்கதான் புரிஞ்சுக்காம முடிவு எடுத்துட்டீங்க. இதுல எனக்கு ரெண்டு விசயம் தோணுது. அத சொல்லாம விட்டா என் தலையே வெடிச்சிடும்.. சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க. முதலாவது எந்த வயசுலயும் சாதிக்கலாம், ஆனா கல்யாணம் அந்த வயசுல பண்ணிகாட்டி பின்னால பிரச்சினைதான். அட இருங்க இது கொஞ்சம் ஓல்டுதான். பச்சே கோல்ட்டு. பிராக்கடிக்களா பாருங்க.. இந்த ஜெனரேஷன்ல எத்தனை பொண்ணுங்க வேலைக்காக முதிர்கன்னியா வாழுறாங்க. சரி அத விடுங்க. அதவிட முக்கியமான பாயின்ட் ஒரு நண்பன் கணவனா கிடைக்குறதுக்கு கொடுத்துவச்சிருக்கணுங்க. கணவன் மனைவி உறவுல நட்பு இல்லாததாலதான் இப்ப இத்தனை விவாகரத்துகளும். உங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லயே. ஆல்ரெடி உங்க நண்பனைத்தானே கட்டிகுறீங்க.’

‘நீங்க சொல்றது எப்பிடி சனா ஏத்துக்கமுடியும்? நட்போட பார்த்த ஒருத்தர எப்பிடி காதலோட பார்க்கமுடியும்?’

‘நட்புன்றதே காமம் கழித்த காதல்தான். சாதாரண நட்பு, நெருங்கிய நட்பு, மிக நெருங்கிய நட்பு, ரயில் நட்புன்னல்லாம் இருக்கே.. அத மாதிரி இதுவும் கல்யாண நட்பு. கல்யாணம் பண்ணிகிட்டு ஒருத்தர புரிஞ்சுக்குறது விட புரிஞ்சிகிட்ட ஒருத்தர கல்யாணம் பண்ணுறது பெட்டர்தானே.. நான் லாஸ்ட்டா ஒன்னு சொல்றேங்க…’

‘ம்ம் சொல்லுங்க’

‘நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்.’

‘என்னை குழப்பிட்டீங்க சனா..’

‘ஹாஹா.. உண்மைய சொன்னேன்.’

‘ம்ம் எப்பிடியோ இன்னிக்கு உங்க கலகத்துக்கு நான் கிடைச்சேன்ல. சரி சரி நான் இன்னிக்கு அரைநாள்னு செல்லிடுங்க.’

‘ஏன் எங்கயாவது போகணுமா?’

‘அதான் சனா குருஜி ஆலோசனையில மனசு மாறிடுச்சே.. கணேஸ பார்க்கணுமே.. ரொம்ப ஓவரா பேசிட்டு வந்துட்டேன். பாவம். நான் போய் சமாதானப்படுத்தனும் வேற.. சரிங்க நான் போய்ட்டு வாறேன்.’

‘சரி சரி நடக்கட்டும்.. கல்யாணத்துக்கு கூப்பிட மறந்துடாதீங்க. நல்ல சாப்பாடு சாப்பிட ரொம்ப நாளாச்சு’

அவ வந்ததுக்கும் இப்ப போறதுக்கும் நிறைய மாற்றம் இருக்கு. தெளிவா ஒரு முடிவ எடுத்திருப்பா. காதல சொல்றதவிட அத ஏத்துக்கிறப்பதான் அதிக பதட்டம்னு அவ நடையில தெரியுது. ஆனா எப்பிடியும் அவ காதல சொல்லிடுவா இல்ல…. ஆனா என் காதல சொல்லலயேனு கேக்குற மனச ரொம்ப கஷ்டப்படுத்திதான் அடக்கி வைக்கணும். சின்ன வயசுலேந்து பழகின நண்பன் காதலிக்குறான்னதுமே அப்பிடி கவலைப்பட்டவ… ம்ம்ம் நான் சொல்லாம விட்டதே நல்லதுதான். எது எப்பிடியோ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதான் கிடைக்கப்போகுது ஏன்னா நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்

Tuesday, April 2, 2013

வெளிநாட்டு மாப்பிள்ளை…


லண்டன் நகரம், ஒரு குட்டி தமிழ்நாடு என்று என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் செரிந்துவாழும் பகுதிகள் பலவற்றை உள்ளடக்கியது. வழக்கம்போல இந்தவருடமும் லண்டன் தமிழ்மன்றத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கினேன். சென்ற வருடத்தைவிட மாலை மரியாதைகள் சற்று அதிகமாகவே எனக்கு கிடைத்தன. நான் எழுதிய இசைவாக்க நரிகள் சென்றவருடத்தின் மிகச்சிறந்த நூலாகவும் அதிக லாபம் கண்டதுவும்தான் அதற்கு காரணம். புகழ்ச்சி ஒரு படைப்பாளியை மேலும் செதுக்கும், அவனையே பாதாளத்திலும் தள்ளிவிடும். நான் என்னை செதுக்ககூடிய புகழ்ச்சிகளை ஏற்க விரும்புகிறேன். தானாக வந்த புகழை தக்க வைக்கத்தெரியாத எத்தனையோர் காணாமல் போனதை கண்ணெதிரே பார்த்தவன். அவ்வாறு நானும் காணாமல் போவதை விரும்பவில்லை. நான் எழுதும் தமிழால் எனக்கு கிடைத்த புகழை அழியாமல் காத்து என்றும் ஒரு வெற்றியாளனாகவே இருக்க விரும்புகிறேன். என் முதல் கதையில் கிடைத்த பாராட்டுகளும் பரிசுமே என்னை ஒரு வெற்றியாளனென எனக்கே உணர்த்தியது. நான் வரும்பும் வெற்றி இன்றுவரை தொடர்கிறது.  அப்படித்தான் நினைத்தேன். அது தவறெனத்தெரிந்தது. பார்க்ககூடாதென நினைத்தவளை பார்த்தபின்…

பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட நேரம்… அறிவியல், கணிதம் போன்றவற்றில் குறைவான மதிப்பெண் என அனைவரும் என்மேல் வருத்தம் தெரவிக்க நானோ தமிழில் முதல் இடம் என கர்வப்பட்ட காலம். என் கவிதைகளும் கதைகளும் காகிதங்களாய் என் அறையை நிரப்பியிருந்தன. கல்லூரிக்கு செல்ல வசதியில்லாததால் ஒரு கொம்ப்னிகேஷன் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும் எனக்குள் இருந்த எழுத்து வெறி பெரிய எழுத்தாளனாகியே தீரவேண்டுமென்ற உத்வேகம் உந்தி தள்ளியதால் என் கதைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகங்களாக ஏறி இறங்கினேன். அறிமுகமில்லாதவன், அடையாளமில்லாதவன், கானமயிலைக் கண்டு வான்கோழிபோல வந்தவன் என்றெல்லாம் வசைகள். அவமானங்களை துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். பலனளிக்காத முயற்சிகளின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டேபோனது. தெருவில் நடந்துகொண்டிருக்கையில் கீழே கிடந்த செய்தித்தாள் ஒன்றில் சிறுகதைப்போட்டி அறிக்கையைப் பார்த்தேன். முதல்பரிசு பத்தாயிரம் ரூபாய். ஆறுதல் பரிசு பத்து பேருக்கு ஆயிரம் ரூபாய்… நிச்சயம் எனக்கு ஒரு ஆறுதல் பரிசு உறுதி என்று ஒரு கதையை அனுப்பினேன். முதல்பரிசே கிடைத்தது. பத்தாயிரம் ரூபாயும் பாராட்டுபத்திரமும் பரிசாக கிடைத்தன. அதைவிட நான் எழுதிய அந்த கதை பிரபலமான ஒரு பத்திரிகையில் வெளியாகி எழுத்தாளனாக என் பயணத்துக்கு அடிக்கல் நாட்டியது. கூடவே என் அம்மாவின் ஆசைக்கும் நீர் வார்த்தது..

நல்லா கதை எழுதுவான் என்று நாலுபேருக்கு தெரிந்துவிட்டது. புத்தகம் வெளியிடவும் பேச்சு நடக்கிறது. இனி கொஞ்சம் தலையெடுத்துடுவான் என்ற நம்பிக்கையில் என் அம்மா என் திருமணத்திற்கு பெண்தேடினார். பார்க்கும் பெண்களையெல்லாம் மருமகளாக எண்ணி படம் ஓட்டிப்பார்த்தார். என் புத்தகம் வெளியிடும்வரை திருமணம் இல்லை என்று நான் பிடிவாதமாக இருந்தேன். அந்த பிடிவாதத்தையும் ஆட்டிப்பார்தாள் ஒரு பெண்.

திருமண வரவேற்பொன்றிற்கு நானும் அம்மாவும் சென்றிருந்த வேளை அங்கே தேவதைபோல சுத்திக்கொண்டிருந்த ஒருத்தி தற்செயலாகத்தான் கண்ணில் பட்டாள். முதல்முறை தற்செயல். இரண்டாம் முறை…. மூன்றாம் முறை? இன்னும் எண்ண முடியாமல் எத்தனையோ… எதில் ஈர்க்கப்பட்டேனோ தெரியவில்லை என் அம்மா என்னை அவதானிப்பதைகூட மறந்து அவள் சிறிதும் இடங்களிலெல்லாம் என் கண்ணும் சுழன்றது. இது ஒவ்வொரு கல்யாண வீடுகளிலும் பஸ் ஸ்டாண்டுகளிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் ஒரு பெண்ணை பார்த்துவிட்டான் என்ற பூரிப்பில் என் அம்மா கொஞ்சம் அதிகமாக திட்டமிட்டு அந்த பெண்ணைப் பற்றி விவரங்களை சேகரித்து நாளைக்கு பொண்ணு பார்க்கபோறோம்னு என்முன் வந்து நின்றார்கள். எந்த பொண்ணு என்று கேட்டேன். அதாண்டா கல்யாணத்துல அவளையே பாத்திட்டு இருந்தியே.. ஒரு வகையில எங்களுக்கும் தூரத்து சொந்தகாரங்கதான். நல்லா விசாரிச்சிட்டேன். நாளைக்கு போவோம்னு சொன்னதும் உண்மையில் நானும் சந்தோசப்பட்டுத்தான் போனேன்.

பெண் பார்க்கும் படலம் முடியும் தருவாயில் சம்பிரதாயமாக மாப்பிள்ளையும் பெண்ணும் பேசட்டுமே என்று தனியாக அனுப்பினர். ஒரு பெண்ணுடன் தனிமையில் உறையாடும் முதல் சந்தர்ப்பம்.. மூச்சுவேறு முட்டியது. அவளுக்கு எப்படியிருக்குமோ.. இதைக்கூட தெரிந்துவைக்காமல் எப்படி எழுத்தாளனாக்கப்போகிறாய் என எள்ளியது மனம். ஆகவே மனதை திடப்படுத்திக்கொண்டு என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டேன். அவளது அறிமுகமும் முடிந்தபின் ஏதோ சொல்வதற்காய் விழிப்பவள்போல் தோன்றவே என்ன என்று கேட்டேன். உங்களுக்கு வெளிநாட்டுப் போக வருப்பம் இருக்கா? என்று கேட்டாள். இந்த கேள்வி நான் எதிர்பாராதது.. எனினும் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ‘இப்பதான் கதையெழுத வாய்ப்பு கொஞ்சம் தேடி வருது. வெளிநாடு அது இதுனு போனா இங்க இருக்குற வாய்ப்பு தட்டிப்போய்டும். அதோட வெளிநாட்டுக்குப் போனா முதல்ல இருந்து எல்லாம் ஆரம்பிக்கனும்… அதுபோக இங்கயே நான் நல்லாதானே இருக்கேன்.. எனக்கு வெளிநாட்டுக்கு போக என்ன அவசியம்’ என்று சொல்லிவிட்டு திருமணத்தைப் பற்றி ஏதாவது கேட்போம் என வாயெடுக்குமுன்னே அவள் பேசத்தொடங்கினாள்.. ‘என்னை மன்னிசிடுங்க.. என் அப்பா அம்மாட்ட நான் அப்பவே சொன்னேன் எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா பாருங்கனு.. என் பிரண்ட்ஸ் எல்லாருமே பாரின்ல செட்டில்லாயிட்டாங்க. நானும் வெளிநாட்டுல செட்டிலானதான் கொஞ்சம் கௌரவமா இருக்கும். அதோட அதுதான் என் கனவும்கூட. அதனால அமெரிக்கா. லண்டன்னுதான் மாப்பிள்ளை பார்க்க சொன்னேன். நீங்க தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு ஏத்த வேள நல்ல பொண்ணு உங்களுக்கு கிடைப்பா’ன்னு சொன்னாள். அந்த இடத்தில் என்னால் அவளை அவமானப்படுத்தியிருக்க முடியும். ஆனால் மனம் வரவில்லை. மறுவார்த்தை பேசாமல் திரும்பிவிட்டேன். அத்துடன் அவளை மறந்தும்விட்டேன். இத்தனை நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காதலியுடன் கழித்தேன். என் கதைகளே என் காதலிகள்.

நினைவுகளிலிருந்து மீண்ட மனது இருப்பது லண்டன் விமானநிலையம் என்றுணர்ந்தது. சற்று தூரத்தில் அவள். அவளே அவள். கொஞ்சம் குண்டாகியிருந்தாள். கையில் ஒரு குழந்தை. ஒரு வெள்ளையனுடன் உரையாடல். என்னைப் பாரப்பாளா என்ற நப்பாசையில் சூழ்நிலையை மறந்து அவளையே பார்துகொண்டிருந்தேன். முதல்நாள் அந்த திருமணவீட்டில் பார்த்தேனே… அதுதான் நினைவு வந்தது. அவள் பார்க்கவில்லை. ஆனால் அந்த வெள்ளையன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏன் என்று தெரியவில்லை. சரி அவள் பார்க்கவில்லை. விழாக்குழுவினரோடு புறப்படுவோம் என்று திரும்பும்போது அந்த வெள்ளையன் என்னருகில் வந்தான். அவளும் அவனைத்தொடர்ந்து வந்தாள். நீங்கள் எழுத்தாளர் வாசகதாசன்தானே என்று ஆங்கிலத்தில் கேட்டான். யார் இவன் என்று புரியாமல் ஆமாம் என்றேன். உடனே சந்தோசத்தில் குதிப்பவனைப்போல சிரித்துகொண்டு கையைக்கொடுத்து, உங்கள் கதைகளை படித்திருக்கிறேன் என்றான். ஆச்சரியம்தான். என் வெற்றி வெள்ளையனிடம்வரை சென்றிருக்கிறது என்று அங்கே ஒரு சிறு பூரிப்பு. தன்னைப்பற்றியும் அவனுக்கு என் கதைகள் எவ்வாறு அறிமுகம் ஆனதென்பதையும் கூறிய அவன் பின்னால் நின்ற அவளைக்காட்டி தன் மனைவி என்றான். அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். வெளிநாட்டில் சொகுசாக வாழ ஆசைப்பட்டவள்தான், அதற்காக வெள்ளைக்காரனையே மணம் முடிப்பாள் என்று நினைக்கவில்லை. இந்த காலத்தில் அது ஒன்றும் தவறில்லைதான். இருந்தாலும் இந்த பெண்களின் மனநிலை திருமணத்தில் அடைந்திருக்கும் மாற்றத்தையறிய விரும்பினேன். அவளது கணவன் அந்த வெள்ளையன் என்னிடம் ஆட்டோகிராப்பும் சில போட்டாக்களும் எடுத்தபின் நான் அவளிடம் திரும்பி என்னை ஞாபகம் இருக்கா என்று கேட்டேன். அவள் குழம்பிய விதத்திலேயே மறந்துவிட்டாள் என்பதை அறிந்து நான் எப்படி அவளுக்கு தெரிந்தவன் என்பதை கூறினேன். தமிழில்.

ஒரு நிமிடம் திகைத்தவள் தன்னை சுதாரித்துக்கொண்டு ஆஹ் நீங்களா? நம்பவேமுடியல. நீங்க சொன்னமாதிரியே பெரிய ரைட்டர் ஆயிட்டீங்க… பாராட்டுவிழால்லாம் எடுக்குறாங்க. ரொம்ப சந்தோசம் என்றாள். இப்போது என்னகு அது முக்கியமில்லை. அவளது நிலையை அறிய சூசகமாக நீங்களும்தான் சொன்னமாதிரியே வெளிநாட்டு மாப்பிள்ளைய பிடிச்சிட்டீங்க… எப்பிடி இவரை கண்டுபிடிச்சீங்க? இண்டர்நெட்லயா? என்றேன். சற்று தயங்கிவிட்டு நான் கல்யாணம் பண்ணது ஒரு தமிழரைத்தான். இங்க வந்த கொஞ்சகாலத்துல நாங்க பிரிஞ்சு டைவர்ஸ் பண்ணிகிட்டாப்புறம் இவரைக் கல்யாணம் செஞ்சிகிட்டேன். ரொம்ப சாதாரணமா அவள் சொல்லிமுடித்ததை தாங்கிக்கொள்ளத்தான் சிரமமாக இருந்தது. அதான் உங்க இஷ்டப்படியே வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சாரே.. பிறகென்ன பிரச்சினை? ஏன் விவாகரத்தெல்லாம் என்று நானும் சாதாரணமாக கேட்பதைப்போல கேட்டேன்.
அவருக்கு கொஞ்சங்கூட பொறுப்பில்ல. நாங்க வாழ்ற காலம் எப்படி? இருக்கிற இடம் எப்படினு தெரியாம தன்னேட இஷ்டத்துக்கே பண்ணிட்டுருந்தார். இங்க உழைக்குற காசு இங்க செலவுக்கே போதாது. இவரு அம்மா தங்கிச்சினு ஊருக்கே அனுப்பிட்டு இருந்தார். அவங்களும் இதான் சாக்குனு நல்லா பணம் பறிச்சாங்க. சொந்த நாட்டுல இருக்குற உறவுக்காரங்களுக்கு உதவி செய்யுறது தப்பில்லதான். அதுக்காக நம்மள சுத்தி இருக்குற சமூகத்துக்கு உடன்படாம ஊரையே நினைச்சிட்டுருக்குறவர் எதுக்கு லண்டன் வரணும்? ஒருநாள் அவர் தங்கச்சி பையனுக்கு காது குத்துறதுக்கு அனுப்ப காசில்லாம நான் ஒருவாரம் ஷாப்பிங் பண்ண வச்சிருந்த பணத்தை கொடுத்துட்டாரு. நானும் பொறுமையாத்தான் இருந்தேன். முடியாத பட்சத்துலதான் விவாகரத்து பண்ணேன். அப்புறம் கூட வேல பாத்த இவரைக்கட்டிக்கட்டேன். என்ன இருந்தாலும் பாரினர்ஸ் பாரினர்ஸ்தான். எனக்கு அப்பிடி ஃப்ரீடம் கொடுக்குறாரு. இவரோடு வாழத்தான் பிடிச்சிருக்கு. அதுபோக அவரும் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டதா கேள்விப்பட்டேன். இந்த நாட்டுல அதெல்லாம் சகஜம்தானே.

இதற்குமேல் அந்த வெளிநாட்டு பிரதாபங்களை கேட்க மனசில்லாமல் விழாவிற்கு நேரமானதாக சொல்லி விடைபெற்றேன். அவள் கூறியது ஒரு பெண்ணின் கருத்து அவ்வளவுதான் என்று விடமுடியவில்லை. தமிழகத்தில் பிறந்து வெள்ளைக்காரியாக ஆசைப்பட்ட ஒரு பெண்ணின் வாக்குமூலம் என்று எடுத்துக்கொள்ளலாம். அது ஒரு பெண்ணோடு முடிந்துவிட்டால் நான் இவ்வளவு யோசிக்கத்தேவையேயில்லை. ஆனால் தொடரும் பட்சத்தில் சமூகத்திற்கு இந்த மனப்பாங்கை எச்சரிப்பது ஒரு எழுத்தாளனின் கடமையல்லவா? விழா முடிந்து எனக்கான அறையில் தனிமையாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

உயிருக்கு கேடு என்பதை அறிந்தே புகைப்பிடிப்பது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துகளை செய்திகளில் படித்துவிட்டுங்கூட வாகனங்களில் குடித்துவிட்டு போவது போன்று தாங்களாக தெரிந்தே செய்கிற முட்டாள்தனங்களில் ஒன்று வரதட்சணை. காலங்காலமாக நம் இனம் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம். ஆனால் காலமாற்றம் செய்த ஒரு சில நல்லவிடயங்கிளில் ஒன்று வரதட்சணைத் திருமணங்கள் இன்று பெருமளவு குறைந்திருக்கின்றன. ஆனால் மாறாக பெண்களின் வரதட்சணைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதே ஷாப்பிங் என்பது மாறி ஷாப்பிங்கே அத்தியாவசியம் என்ற நிலை வந்துவிட்டது. திருமணத்துக்குப் பின் அந்த ஆண் தன் பெற்றோர் சகோதரர்களிடம் நெருக்கம் காட்டுவதை பெண்கள் இப்போது விரும்புவது இல்லை. விவாதம் முற்றிவிட்டால் விவாகரத்து என்றாகிவிட்டது. திருமணத்துக்குமுன் தனக்கு செலவுசெய்யத் தகுதியானவனா என்று பார்க்கும் பெண்களைவிட இவனுடன் இறுதிவரை வாழமுடியுமா என்று பார்க்கும் பெண்கள் மிகக்குறைவு. விவாகரத்து என்று ஒன்று இருப்பதால் முதலில் திருமணம் செய்து பார்ப்போம் பிடிக்காவிட்டால் விலகிவிடலாம் என்ற மனப்பான்மை நிலவுவதையும் மறக்கமுடியாது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் வெளிநாட்டு வாழ்க்கைதான் அவர்கள் கண்ணில் தெரிகிறது. வெளிநாட்டில் அவர்கள் படும் வேதனையை அறிந்தால் எந்த பொண்ணும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்படமாட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற நிலை மாறி அயோத்தியில் இருப்பவனே சீதைக்கு ஏற்ற ராமன் என்று ஆகிவிட்டது. இருக்கும் இடத்தை நல்லா வைத்திருக்கும் பெண்கள் போய் நல்ல இடத்தில் இருக்கவேண்டுமென நினைக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். நன்றாக வாழவேண்டியது உங்கள் உரிமை. ஆனால் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமையல்லவா? மரத்தை வெட்டிவிட்டு அதில் குடையை செய்து வெயில்காய ஆசைப்படுவது நல்லாதா? ஒரு தமிழனாக எனக்கு அது உறுத்துவதால் இந்த கருவை வைத்து ஒரு கதை படைக்க காகிதத்தையும் பேனையையும் எடுத்தேன்.