Saturday, April 30, 2016

தோத்தவங்க...

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு முதலாளி. அவளோட புருஷன், நான் தனிமனுசனா கட்டி உருவாக்கின என்னோட கம்பெனில இப்போ ஒரு அஸிஸ்டன்ட் மேனேஜர். காதலுக்காக அவ காலடில காத்திருந்த காலம் போய் கண்ணை தொடைச்சிகிட்டு ஏதாவது செய்யனும்னு கிளம்பினதோட பலன்தான் இந்த மாபெரும் கணனித்தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியம். நானும் காதலிச்சேன். கவிதையெல்லாம்கூட எழுதினேன். கவிதையை பிடிச்ச அவளுக்கு என்னை மட்டும் பிடிக்கல. அவ விட்டுட்டு போனபிறகுதான் நான் யார்னு எனக்கே தெரிஞ்சிது. என்னைப் பத்தி நான் சொன்னேன். அவளுக்கு புரியல. சரி அப்ப என்னைப் பத்தி இந்த உலகத்தையே சொல்லவைப்போம். அப்பவாவது அவளுக்கு புரியுமானு... இப்ப புரிஞ்சிருக்கும். இதோ என் கம்பெனி ஆண்டுவிழாவில் தன் கணவனோடு அவள். என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்கத்தானே வேணும். அதுக்காகத்தானே இந்த பகீரதப்போராட்டம். உன்னை ராணி மாதிரி வச்சுப்பேனு நான் அழுதேன். அந்த கண்ணீரை உதாசீனப்படுத்திட்டு உயர்ரக மாப்பிள்ளைக்கு உறுதுணையானாள். ஆனா இப்ப என் மனைவி உண்மையிலேயே ஒரு ராணி. இவளை மாதிரி பல பெண்கள் பக்கத்துல நின்னு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்ற அளவு ராணி. அதயும் பார்க்கட்டும். வேற எதயாவது விட்டுட்டேனா? ஆஹ் சம்பளத்தை உயர்த்தி தர சொல்லி கேட்ட அவ கணவனுக்கு இன்னைக்கு அவ கண்ணு முன்னால போனஸ் கொடுக்கப்போறேன்.

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு நோயாளி. உன்னை பைத்தியமா காதலிக்குறேன்னு அவ முன்னால போய் சொன்னப்போ காதல் என்ற ஒரு விசயம் மட்டுமே இல்லாம அவ கண்டிப்பா சாதிக்ககூடிய ஒரு அட்டவணை ஒண்ணு சொன்னா. அது அடுத்த பதினைஞ்சு வருசத்துக்கான கணக்கு. அத முடிச்சுட்டு அதுக்கு அடுத்த இருபது வருசத்துக்கான கனவுனு அதவிட பெரிய இன்னொரு அட்டவணை சொன்னா. அத கண்டிப்பா சாதிக்கணுமாம்.கனவுகளை சுமக்குற இதயத்துல காதலுக்கு இடமில்லைனு சொல்லிட்டு போய்ட்டா. அவ போய்ட்டா. ஆனா நான் எப்பிடி மறப்பேன். எனக்கும்தானே கனவு இருக்கு. அவகூட சாகுறவரைக்கும் சந்தோசமா வாழணும்னு. அப்போ என் கனவு என்ன ஆகுறது? அழுது வடிந்த கண்ணீரில் ஆறாய் ஓடினேன். என் கடலுடன் கலக்கமுடியாமல். போதைக்கு அடிமையாயிட்டேனு எல்லாரும் சொன்னாங்க. அந்த போதைவஸ்துக்கள் அவளது ஞாபகங்கள் அளவுக்கு வலிமையானவையல்ல. உடம்புல எத்தனையோ வியாதி வந்து குடியேறின. தற்கொலை செய்றவனுக்குகூட ஒருநாள் சாவுதான் ஆனா காதலிக்குறவனுக்கு ஒவ்வொரு நொடியும் மரணம். ஆனா அதுகூட பரவாலனு இப்ப தோணுது. இது தேறவே தேறாதுனு கிட்டத்தட்ட அழுகிப்போற உடலோட என்னை ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. இத்தனை வருஷம் கழிச்சு அவளை ஒரு டாக்டரா இங்க பார்த்தேன். இதோ இதே ஆஸ்பத்திரிலதான். இன்னொரு விசயம் தெரியுமா? அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம். அவ புருஷனும் இதே ஆஸ்பத்திரிலதான் டாக்கடராம். கேக்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு.

இத பார்க்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு. போனஸ் வாங்குற அலுவலகர்கள் வரிசையில கடைசியில இருக்கான் ஒருத்தன். இவன் எல்லாம் ஒரு ஆளானு சொல்லி அவனோட பொண்டாட்டியால உதாசீனமா தூக்கியெறியப்பட்டவன் இப்ப அவனுக்கு சம்பளம் கொடுக்குற எஜமான். அவளுக்கு நிச்சயமா வயிறெறியும். மிஸ் பண்ணிட்டமேனு அழக்கூட வாய்ப்பிருக்கு. அதப் பாக்குற வக்கிரபுத்தியா உனக்குனு ஏதாவது ஆள்காட்டிவிரல் என் பக்கம் திரும்பினா... ஆமா வக்கிரபுத்திதான். காதல் வந்ததுக்கு நானா காரணம்? காதலிக்கும்போது என்கிட்ட காசில்லாம இருந்ததுக்கு நானா காரணம்? புது புது டிசைன் வர வர பழைய செருப்பை கழட்டிபோடுற மாதிரி காதல மாத்துற பொண்ணுங்க இருக்குறதுக்கு நானா காரணம்? உண்மையான உணர்விக்கில்லாத மரியாதை பகட்டு வாழ்க்கைக்கு இருக்கே..அதுக்கு நானா காரணம்? தப்பு பண்ணி திருந்துறது தப்பில்ல. பண்ண தப்ப தப்பே இல்லனு சொல்லுறதுதான் தப்பு. தப்பான ஒருத்திய காதலிச்சதுதான் நான் பண்ண தப்பு. என்ன? அப்ப நான் உண்மையா காதலிக்கலனு சொல்றீங்களா? வாற மாசம் வந்தா என் காதலுக்கு எட்டாவது ஆண்டு திவசம். செத்துப்போய் இருந்த தடமே அழிஞ்சு போன ஒன்னு உண்மையா பொய்யானு ஆராயனுமா? அத உங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம். புரிஞ்சிக்கவேண்டியவ புரிஞ்சிக்கவேண்டிய நேரத்துல புரிஞ்சிக்கலயே.

என்மேலதான் தப்புனு எல்லாரும் சொல்றாங்க. அவள மறந்திட்டு என் வேலைய பாத்திட்டு நான் போயிருக்கணுமாம். அவள மறக்கமுடிஞ்சிருந்தா மறந்திருப்பேனே.. அவளுக்காக அழுறதுகூட சந்தோசமாயிருந்திச்சு. வாழ்க்கையில தனக்கு என்ன தேவை என்றதுல தெளிவா இருக்குறவங்கதான்
ஜெயிக்குறாங்க. அவளோட லட்சியத்தில அவ தெளிவா இருந்தா. அதுக்காக போராடி அவ ஜெயிச்சா. இன்னைக்கு சமூகத்துல பெரிய டாக்டர். சந்தோசம். அதுக்காக நான் எப்படி தோத்தவனாகமுடியும். எனக்கு என்ன தேவைன்றதுல நான் தெளிவா இருந்தேன். அவதான்... அவ கிடைக்கல. அதனால அவளோட நினைவுகளே போதும்னு வாழ முடிவு பண்ணேன். அதவிட எனக்கு என்னதான் நிம்மதிய கொடுத்திடமுடியும். அதுக்கு எனக்கு இந்த உலகம் கொடுத்த பெயர் வாழத்தெரியாதவன், உருப்படாதவன், முட்டாள். வாழ்கைகயை முழுமையா வாழுறதுக்கு ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிஞ்சவிசயத்த பிடிச்சவிசயத்த மனப்பூர்வமா நேசிச்சு உணர்வுபூர்வமா அனுபவிச்சு அது ஒன்னே குறிக்கோளா வாழணும். எனக்கு தெரிஞ்சது அவமட்டும்தான்.. பிடிச்சது அவளமட்டும்தான். அந்த வாழ்க்கையை நான் வாழுறேன். அதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சினைனே புரியல.

காதலிச்சு தோத்தவன் கடைசிவரைக்கும் கண்ணீர் விட்டுகிட்டேதான் இருக்கணுமா? அப்பதான் அவனோட காதல் உண்மைனு உணர்த்தியதா அர்த்தமா? காதல் யாருக்காக? அடுத்தவங்களுக்கு இதுதான் உண்மைக்காதல்னு பாடம் எடுக்கவா இல்லை நாம சந்தோசமா வாழவா? நாம சந்தோசமா வாழணும்னு ஆசப்பட்டு பண்ற காதல் நம்மயே சவக்குழியில தள்ளினா? இப்பிடி எல்லாக் கேள்விகளும் என் மண்டைக்குள்ள போய் குத்தி குடைஞ்சு செதுக்கி எடுத்த பதில்தான் என் வெற்றி. காதல் என்ற ஒரே விசயத்துல தோத்து வாழ்க்கைய நான் அடைஞ்ச வெற்றிகள் ஆயிரம். என்னை தோக்கடிச்சவ ஆயிரம் பார்வையாளர்களில் ஒருத்தியா இப்ப ஒரு ஓரமா உட்கார்ந்து என் வெற்றியை வேடிக்கை பார்த்திட்டு இருக்கா. காதல் என்னை தோக்கடிச்சது. கோமாளியாக்கியது. ஆனா வாழ்க்கைல வெற்றிபெற்று நான் காதலையே தோக்கடிச்சிட்டேன். வாழக்கிடைக்காத ஒரு அற்புத வாழ்கையையும் எட்டமுடியாத பல அரியவெற்றிகளையும் என்னை ஏளனமா எட்டித்தள்ளிய காதலுக்காக இழக்கப்பார்த்தேன். நல்லவேளை தப்பிச்சேன். ஆனா.. எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவனும் என்னை மாதிரி காதல்ல தோத்தவன்தான். ஆனா அந்த மடையன் விட்டுப்போன காதல மறக்காம தன் காதலியையே நினைச்சு போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்து கஷ்டப்படுறான். இப்ப எங்க இருக்கானோ? என்ன பண்றானோ?

நான் என்ன பண்றேன்? என் கல்லறை வாசகத்தின் கடைசிப்பக்கத்தை எழுதிட்டிருக்கேன். கல்லால கல்லறையைக் கட்டினாலும் அதுக்குமேல மென்மையான ரோஜாவ வைக்குறமாதிரி அழிஞ்சு போய்கிட்டிருக்குற என் வாழ்க்கைல அவளோட புன்னகை இதமளிக்குது. இத்தனைக்கும் அவளுக்கு என்னை ஞாபகமே இல்ல. எப்பிடி இருக்கும்? காலம் போனபோக்கில அவள் தடம் பதிச்ச வளர்ச்சியும் என் உடல் இளைச்ச தளர்ச்சியும் அப்பிடி.. ஆனா அதுவும் நல்லதுக்குதான். எத்தனையோ நோயாளிகளுக்கு மருந்தா இருக்குற அவளுக்கு அவளால ஒருத்தன் இப்பிடி ஆயிட்டான்ற குற்றயுணர்ச்சி வேணாமே. மாலைல மறைஞ்சு போனாலும் ராத்திரி வாற நிலவுக்கும் ஒளியை கொடுத்துட்டு போகுதே சூரியன் அந்தமாதிரி பொண்ணு அவ. அவ அப்பிடியே இருக்கட்டும். என்னோட நண்பன் ஒருத்தன் காதல்தோல்வியை சரிகட்டுறேன்னு தொட்ட எல்லாத்தையும் வெற்றியாக்கி இன்னைக்கு அதே காதலிக்கு முன்னால ஒரு தலைவனா இருக்கான். பெரியாளாயிட்டான். அவன் என்னதான் ஒரு சாம்ராஜ்ஜத்தையே ஆண்டாலும் சந்தோசமாவா இருப்பான்? காதல்தோல்வி வலின்றது அவ்ளோ இலகுவா அழியக்கூடியதா? ஆனா நான் சந்தோசமா இருக்கேன். என் காதல் வெற்றியே அவளோட சந்தோசம்தான். அவ ரொம்ப சந்தோசமா இருக்காளே.. அப்போ யாருக்கு வெற்றி? சரி சரி அவ டெஸ்ட் பண்ண வாற நேரம் ஆயிடுச்சு.. இன்னொருநாள் சாவகாசமா பேசுவோம்..நான் சாகாம இருந்தா..

Saturday, April 9, 2016

அவளும் நானும்...


உடலைத் தாங்குவதை விட உயிரைத்தாங்குவது சிரமமாகும்போது தற்கொலை எண்ணம் உண்டாகிறது. ஆயுள் முழுவதும் கஷ்டப்படுவதுக்கு பதிலாக ஐந்து நிமிடம் கஷ்டப்படுவது பெரிதாக இருக்காது. உலகம் முழுவதும் கோழைத்தனம் என்றும் செய்பவர்களுக்கு வீரச்செயலாகவும் தெரியும் தற்கொலைக்கு எண்ணிக்கை அதிகமாக்க என்னை தயார் செய்தேன். இது முட்டாள்தனம் என்றால் அந்த முட்டாள்களில் நானே முதலாமவன் ஆகிறேன். இது தப்பிக்கும் வழி என்றால் தம்பிரான் புண்ணியம் என்று தப்பித்துக் கொள்கிறேன். வாழுறதை விட சாகுறதுக்குதான் அதிக தைரியம் வேண்டும் என்றான் ஒருவன். சாகுறதுக்கு இருக்குற தைரியத்துல வாழ்ந்து பார்த்துவிடு என்றான் இன்னொருவன். கனவுகள் கலைந்து வாழவும் பிடிக்காமல் தைரியம் இல்லாததால் சாகவும் துணியாமல் இரண்டிற்கும் நடுவில் வாழ்வா சாவா சதுரங்கம் ஆடினேன். வாழத்தான் வேண்டும் என்ற பக்கத்தில் வலுவான வாதங்கள் இல்லை. இனி வாழ்ந்தும் பயனில்லை. சாவு என்ற கருப்பு ராணி சந்தோசம் என்னும் வெள்ளை ராணியை வெட்டிவிட்டு உயிர் என்னும் வெள்ளை ராஜாவிற்கு செக் வைத்தது. கருப்பு வென்றுவிட்டது. இனி என் இருப்பு எதற்கு?

போயும் போயும் இந்தாளுகிட்ட மாட்டிகிட்டேனே. சாவை விடக்கொடுமையானது தன்னை புத்திசாலியென்று நினைத்துக்கொண்டு சிலர் பண்ணும் அறிவுரையை சகித்துக்கொண்டு கேட்பது. கார் ஒட்டுபவர் மதன். நான் பணிபுரியும் அலவலகத்தின் பொதுமுகாமையாளர். அவருக்கு அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். எங்கள் இருவருக்கும் நடுவில் அமைதி உட்கார்ந்திருந்தது. வழக்கமாக அலுவலகத்தில் நான் செய்யும் சிறு பிழையைக்கூட கண்டுபிடித்து மணிக்கணக்காக நிற்கவைத்து விளாசும் மனுசன் இன்று நான் தற்கொலைக்கு முயன்று அதில் தோற்று இவர்மூலமாக காப்பாற்றப்பட்டு அவர் பக்கத்தில் குற்றவுணர்வுடன் அமர்ந்திருக்கும்போது வாயே திறக்காமல் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். அவர் பார்க்கும் பார்வைக்கே என்னால் பதில் பார்வை பார்க்கமுடியவில்லையே இதில் வாய்திறந்து கேள்விகேட்டால் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே 'என்ன காதல் தோல்வியா?' என்று கேட்டார்.

இல்லை என்றா சொல்லமுடியும்... நிஜத்தில் தொலைந்து நினைவில் மட்டும் நிறைந்தவளை, நண்பர்களாக நல்லமுறையாகப் பழகி பின் காதலைசொன்னபோது காணாமல் போனவளை, அலுப்பூட்டூம் அறிவுரைகளை அவள் சொல்லும்போதுமட்டும் அழகாக்கியவளை. கண்களில் கனவுகளையும் கால்களில் காற்றையும் பூட்டியவளை, அவளை நினைத்து காதலிக்கவைத்து அந்த காதல்தோல்வியைக்கூட பெருமைப்பட வைததவளை. இல்லை என்றா சொல்லமுடியும். ஆம். காதல் தோல்விதான். நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அற்பனின் அறிவுத்தோல்வி. பதின்மூன்று வருடங்கள் பள்ளியில் படித்ததை வாசல் தாண்டியதும் மறந்தவன் அவளுடன் பகிர்ந்த பத்து நொடிகளையேனும் மறக்கமுடியாமல் தவிக்கும் மறதித்தோல்வி. ஆயிரம் பெண்களைக் கடந்தபோதும் அசராத மனம் அவள்  போனபோது ஆடிப்போனதே அந்த தன்னம்பிக்கைதோல்வி. அவள் என்னை ஒரு மேகமாக நினைத்து கடந்துபோயிருந்தாலும் நான் அவளை வானமாக நினைத்து அழுது அழிந்துபோனேனே அந்த வாழ்க்கைதோல்வி. இத்தனையும் இந்த இரும்பு இதயத்திடம் சொல்லி ஆறுதலா பெறமுடியும்? அவனவன் வலிக்கு அவனவனே உரிமையாளன். அடுத்தவன் வெறும் வேடிக்கையாளன் மட்டுமே.

'ஏன் என்னைப் பிடிக்கல'

'பிடிக்கலனு இல்ல..எனக்கு இப்ப காதல் வேணாம்..'

'நான் காத்திருக்க தயாரா இருக்கேன்.'

'எனக்காக நீ ஏன் காத்திருக்கணும். இங்க பாரு ஆதி. எனக்குனு எவ்ளவோ கனவுஇருக்கு. அததேடித்தான் என் வாழ்க்கை. உன் லட்சியங்கள தேடி நீ போ.சாதிச்சு காட்டு.'

'ஆனா என் லட்சியமே நீதான்.'

'போடா'

கடைசியாக அவளோடு பேசிய வார்த்தைகள் கண்முன் வந்துபோகவும் மதன் கார் பிரேக் போடவும் சரியாக இருந்தது. எங்கே? மதனின் வீடாக இருக்கவேண்டும். இங்கே ஏன் என்னைக் கூட்டிவரவேண்டும். காதலில் தோற்று வாழ்க்கையில் தோற்று இப்போது தற்கொலையிலும் தோற்று தோல்வியை மொத்தக் குத்தகைக்கு எடுத்து வந்திருக்கேன். அதை சொல்லி குத்திக்காட்டவா.. இல்லை அறிவுரை சொல்லி இன்னும் அழவைக்கவா..
அவனது வீட்டிற்குள் சென்றதும் அழைத்து ஒரு இருக்கையில் அமரவைத்தான். அழகாகவும் ரசனையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த அவனது வீட்டில் கண்களை அலைபாயவிட்டபோது அவனது திருமண புகைப்படம் தென்பட்டது. நன்றாகத்தான் இருந்தது. கொஞ்சம் வினோதமாகவும். விளங்கவில்லையே என்று உற்றுப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதேநேரம் கையில் தேநீருடன் வந்த அந்த பெண்மணி தேநீர்க்கோப்பையை என்னிடம் தந்துவிட்டு மதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தார். அவனின் மனைவிதான். இரண்டு கால்களும் சூம்பிபோய் சக்கரநாற்காலியில் தஞ்சமடைந்திருந்தார். மதனின் மனைவி ஒரு அங்கவீனரா? எங்கள் அலுவலகத்திலேயே அழகிலும் திறமையிலும் அனைவரையும் கவர்பவன் அவன். அவனது தகைமைக்கு எப்பேர்பட்ட பெண்ணும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது மதன் என் முகத்திற்கு முன்னால் சொடுக்கு போட்டான். இங்கே அவனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியவனாக அவனை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

'தற்கொலை செய்றவங்க எல்லாம் வெட்கமில்லாதவங்க..' என்றான்.

'உயிரே போகப்போகுது.. இதுல வெட்கத்த மட்டும் வச்சு என்ன செய்யப்போறோம்.' என்றேன். இருவருமே சிரித்துவிட்டு என்னை ஆறுதலோடு பார்த்தார்கள். எனக்குள் ஏதோ வித்தியாசம் உணர்ந்தேன்.

'அண்ணா.. இவரு கார்ல வரும்போதே போன் பண்ணி உங்கள பத்தி சொல்லிட்டாரு. காதல் தோல்வியால தற்கொலை பண்றவங்கதான் உண்மையாவே அதிகமா வாழ ஆசைப்பட்டவங்களா இருப்பாங்க. அந்த ஆசைய ஏன் ஒரு தோல்வி நிர்மாணிக்குது. நாங்க ரெண்டுபேரும் காதலிச்சிட்டு இருக்கும்போது எனக்கு இப்பிடி ஆயிடுச்சு. அவங்க வீட்ட எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணாரு.என்னால ஒண்ணும் செய்யமுடியாது. ஏன் வாழணும்னு நானும் நின்ச்சிருக்கேன். ஆனா ஒவ்வொரு நாள் எழும்பும்போதும் அவர் சின்னப்பிள்ளை மாதிரி சிரிக்குறத பாக்குறது எவ்வளவு சந்தோசம் அதுக்காகத்தான் நான் வாழுறேன்.'

சொல்லிவிட்டு பெருமையா மதனைப் பார்த்தார். எனக்கு என்னமோ செய்தது.

அவன் எழுந்து கதவைத் திறந்தான். என்னைப் போக சொல்கிறானா? நான் எழுந்து கதவைநோக்கி சென்றேன். 'இனி நீ தற்கொலை செய்ய நினைக்கமாட்டேனு தெரியும். எப்பிடி வாழுறதுனு மட்டும் யோசி' என்றான். அவனது வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மனது இலகுவானது. என்னை மனச்சிறையில் அடைத்துவிட்டு சிறகுவிரித்து பறந்து சென்ற அவளும் சரி, இத்தனை நாள் இவ்வளவு உன்னதமான வாழ்வை வாழ்கிறான் என அடையாளம் காணப்படாத மதனும் சரி, என்னிடம் ஒரே ஒரு முறை பேசினாலும் உள்ளத்தை உலுக்கிச் சென்ற சகோதரி..  மதனின் மனைவி.. அனைவருக்குமே வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற கலை நன்றாக தெரிந்திருக்கிறது. கிடைத்தவற்றில் திருப்திபடவும் பிடித்தவற்றில் முழுமைபடவும் தெரிந்தவர்களாலேயே வாழ்க்கையை இனிமையாக்கமுடியும். எப்படியோ இன்னைக்கு நான் சாகல. இயற்கையோ அல்லது விபத்தோ எப்பயாவது நான் சாகத்தான் போறேன். அதுவரைக்கும் நான் வாழுவேன். அவளை மறக்கமுடியுமா? மறக்கப்போறேனு நான் சொன்னேனா? என்னையறியாமல் என் உதடுகள் ஒரு பழைய பாடலை முனுமுனுத்தது 'நானென்றால் அது அவளும் நானும்.'