Tuesday, June 5, 2012

முகப்புத்தகம்

என்ன ஒரு முட்டாள்த்தனம்! நான் ஏன் இப்படி செய்தேன்? சரியா தவறா என்று யோசிக்காமல் அவசரத்தில், அவசரம் என்றுகூட சொல்லமுடியாதே… இது ஒரு சபலம். இந்த சபலத்தில் நான் செய்த காரியம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்படுத்தப்போகிறதோ என்று நினைத்தாலே தலையை சுத்தி பத்துபேர் நின்று ஒரேநேரத்தில் சுடுவதுபோல இருக்கு… ஆ… என்ன சுடும்போது குனிந்துவிடவேண்டியதுதானே என்கிறீர்களா… என் மனச்சாட்சி என்னை சுடுமே அதிலிருந்து எப்படி தப்பிச்செல்வது? ஆ… அதற்கு முதல் அந்த ஃபேஸ்புக்கை சுடவேண்டும். எவன்தான் கண்டுபிடிச்சானோ அவன் இடி விழுந்துதான் சாவான். என்னை என்ன பாடு படுத்தியது…….

ஃபேஸ்புக். முகப்புத்தகம். 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இன்று இலங்கையில் 90வீத மக்களுக்கு இணையஅறிவு இருக்கிறது. ஆனால் 2005, 2006 ஆண்டுக்காலங்களில் 50வீதமானோருக்கும் குறைவாகவே இணையபாவனையாளர்கள் இருந்தார்கள். முகப்புத்தகம் முதலில் சென்றடைந்தது பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்தான். அந்த கவர்ச்சியில் உந்தப்பட்டு இன்னும் பலர் அதற்கு அடிமையானார்கள். 2007,2008,2009 என வருடாந்தம் அதன் பாவனையாளர்கள் அதிகரித்து இன்று இலங்களையில் முகப்புத்தக பாவனையாளர்களாக இல்லாதோர் எவரும் இல்லை என்று ஆகிவிட்டது. மன்னிக்கவும் அகதிமுகாமில் அடுத்தவேளை உணவை யார் தருவார்கள் என்று ஏக்கத்தோடு வாழ்வோரும் புறக்கோட்டையில் நாள்கூலிக்காக தினமும் வண்டி இழுத்தும் மூட்டைதூக்கியும் சம்பாதித்து அந்த காசுகூட கையில் நிலைக்காமல் எதிர்காலத்தை வெறுங்கையுடன் எதிர்நோக்குவோரும் மலைநாட்டில் பிறந்து படிக்க வசதியில்லாமல் குடும்ப வருமானத்திற்காக கொழும்புக்கடைகளில் வேலைபார்க்கும் சிறுவர்களும் இந்த பட்டியலில் வர வாய்ப்பில்லை. காரணம் அவர்களுக்கு முகப்புத்தகத்தை அணுகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. கசப்பான உண்மை என்னவென்றால் இப்படி பரிதாபத்திற்குரிய மக்களுக்கும்கூட முகப்புத்தகத்தை பாவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களையும் அது விட்டுவைக்காது. அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? பொதுவாக இந்தமாதிரியான விடயங்கள் செவிவழியாகத்தான் பிரபலமடையும். 2009ல் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிமாணவர்களும் முகப்புத்தக பாவனையாளர்களாக இருந்தநேரம் எனக்கு அதைபற்றிய அணுகமுறை தெரியாததாலும்(ஏன் முகப்புத்தகம் பாவிக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது) எனது வீட்டில் கணினி இல்லாததாலும் நான் முகப்புத்தகத்தை உபயோகிக்கவில்லை. அது போகப்போக எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. மற்ற மாணவர்கள் என்னை ஒருவித பரிதாபத்தோடு பார்த்தார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எப்பாடுபட்டாலும் நாமும் முகப்புத்தகத்தில் இணைவது என்று முடிவெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக அதைபற்றி தெரிந்துகொண்டு எப்படியோ 2010ல் முகப்புத்தகத்தில் இணைந்தும்விட்டேன். புதிதாக ஒருவிடயத்தை பார்க்கும்போது அதுவும் உலகமே கொண்டாடும் ஒரு விடயத்தை நாமும் அனுபவிக்கபோகிறோம் என்ற வியப்பும் மிரட்சியும் என்னில் தொற்றிக்கொண்டன.



முகப்புத்தகத்தில் இணைந்தாயிற்று. இப்போ யாரை நண்பராக்குவது? என் பள்ளிதோழர்களின் பெயர்களை தட்டிப்பார்த்தேன். தக்ஷன் என்று கேட்டால் நூறு தக்ஷன்களின் வந்தது, அனைவரும் ஏதாவது ஒரு சினிமாநடிகனின் படத்தை போட்டிருந்தார்கள். இதில் என் நண்பனை எப்படி கண்டுபிடிப்பது? அதனால் அவர்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் விபரங்களை கேட்டுதெரிந்துகொண்டு அதன்பிறகு இணைத்துக்கொள்வோம் என நினைத்து அவர்களை தேடும் முயற்சியை விட்டுவிட்டு பொதுவாக தேடும் பொழுது அழகான பெண்கள் பலரின் முகவரிகள் கிடைத்தன. இத்தனை பெண்களோடு ஒரேநேரத்தில் நட்பு கிடைப்பதென்பது எத்தனை பெரியவிடயம்… முகப்புத்தகத்திற்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம்செய்து நானே முதல் ஆளாய் அர்ச்சனை செய்யவேண்டும் போலஇருந்தது. நான் கொடுத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு நண்பராக இணைத்த சில பெண்களோடு முதலில் ‘ஹை’ அளவில் பேச்சுக்கள் தொடங்கின. சிறிது நாட்களுக்குள் சிலர் நல்ல நெருக்கமாக பழகுவதால் மெதுவாக இரட்டையர்த்த வார்த்தைகளுடனான பேச்சு இடம்பெற்றது. அதற்கு மறுப்பு வராத நண்பிகளிடம் கொஞ்சம்கொஞ்சமாக ஆபாச உரையாடல் ஆரம்பமானது. சிலர் அந்த கணமே நண்பர்பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் சிலர் அதனூடும் தொடர்ந்தனர். இணையத்தினூடாக எத்தனையோ பெண்களுடன் சல்லாபித்திருக்கிறோம் என எனது நண்பர்கள் அளந்துவிடும்போதெல்லாம் வயிறு எரிந்து காதுவழியாக வந்த புகைக்கு நீர் ஊற்றி அணைக்கும் விதமாக ஆஹா!....ஓஹோ!... எத்தனை பெண்களடா! நாம் சொல்லும் அனைத்திற்கும் ஆமோதிக்கிறார்களே என்று பூரித்து இருக்கும் வேளையில்தான் நண்பர்கள் மூலமாக ஒரு விடயம் தெரிந்தது. அதாவது பொழுதுபோகாத சில பொறுக்கி பசங்க, பொண்ணுங்க மாதிரி கணக்கு வைத்துக்கொண்டு இன்னொரு ஆண், பெண் என்று நினைத்து வழியிறதை ரசிப்பாங்களாம். கண்றாவி. ஐயய்யோ! நான் எத்தனை பேரிடம் ஏமாந்தேன் என்று தெரியவில்லையே! அட மடையா எந்த பெண்ணாவது முன்னபின்ன பார்க்காத முகம்கூட தெரியாத ஆளோட இப்பிடி பேசுவாங்களா? முதல்வேளையாக அனைவரையும் நண்பரிலிருந்து தூக்கிவிட்டேன். என்னை ஏமாத்தின அத்தனை பாவிகளும் நடுரோட்ல நாய் தொரத்தாம சாகமாட்டாங்க.. அப்பிடி இருந்தும் மனம் ஆராததால் உடனே பெண்போல ஒரு கணக்கை ஆம்பித்து என்னை பத்துபேர் ஏமாத்தியதற்கு ஈடாக ஆயிரம்பேரை நான் ஏமாற்றியபின்தான் மனம் சற்று அடங்கியது.

அதன்பிறகு எனக்கு முகம் தெரியாத ஆட்களை நான் இணைத்துக் கொள்வதில்லை. தெரிந்தவர்களை இணைத்து அவர்கள் மூலமாக வேறு யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என அவர்களது நண்பர் பட்டியலை ஆராய்ந்து அவர்களையும் இணைத்துகொள்வது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் தேடும்போது சிவானியின் படத்தை பார்த்தேன். சிவானி ஜெய் என்று பெயர் இருந்தது. என் நினைவிலே என்றுமே துருப்பிடிக்காத அவளது சிரிப்புடனும் அவளை பார்த்து கிறங்கவைத்த அந்த பொட்டுடனும் அப்படியே இருந்தாள். ஒரு சிறு வித்தியாசம் நெற்றியில் வைத்திருந்த பொட்டுக்கு மேலாக உச்சிவகிட்டில் இன்னொரு பொட்டும் வைத்திருந்தாள். இவளை இனி என்றுமே பார்க்கமுடியாது என நினைத்த என் வாழ்க்கையைவிட்டு தொலைந்து போனவளை மீண்டும் கண்டுபிடித்து என் கண்முன்னே நிறுத்தியது முகப்புத்தகம்.

சிவானி. என் காதலி. ஜெய் அவளின் காதலன். அவளுக்கு என்னைவிட நான்கு வயது அதிகம். நான் பள்ளியில் படிக்கும்போது அவள் கல்லூரி முடித்திருந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் என் பெரியப்பாவின் மளிகைகடையில் ஆள்குறைவதால் என்னையும் உதவிக்கு அழைத்தார். ஒரு மாதம் தவணைவிடுமுறை இருந்ததால் ஒரு உதவிக்காகவும் வேலை பழகின மாதிரி இருக்கும் என்பதாலும் அங்கே சென்றேன். ஒரு மாதம்தான் அங்கே இருந்தேன். அந்த ஒரு மாதம்தான் அவளைப் பார்த்தேன். ஆனால் வாழ்க்கைக்கு மறக்கமுடியாது. பெண்களுக்கு இரண்டு காதல்கள் இருந்தாலும் புதுக்காதல் வந்தவுடன் தேவையில்லை என்று உதறிய பழைய காதலை அடியோடு மறந்துவிடுவார்கள். ஆனால் ஆண்களோ ஆயிரம் காதலிகள் வந்தாலும் அனைவரோடும் இருந்த தருணங்களை புத்தகமாக போடும் அளவுக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். சும்மா காதலுக்கே அப்படியென்றால் என்னுள் முதன்முதல் காதல் உணர்வை ஏற்படுத்தியவள் சிவானி. மரணத்தில்கூட அவள் நினைவு பசுமையாகத்தான் இருக்கும். எங்கள் கடைக்கு பக்கத்தில்தான் அவர்கள் வீடு இருந்தது. எதற்கெடுத்தாலும் அங்கே வந்துதான் பொருள் வாங்குவாள். நான் புதுசு என்பதால் பெரிதாய் பழக்கமில்லை. எங்கள் பெரியப்பாவுடன் நல்ல நட்பாய் பழகுவாள். ஒருநாள் பெரியப்பா கடையில் இல்லாத நேரம் வந்திருந்தாள். நானோ ஏற்கனவே வந்திருந்த ஒரு பெரியவரின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் ஏகப்பட்ட பொருட்களை கேட்டிருந்ததால் அனைத்தையும் சரிபார்ப்பதற்குள் விழிபிதுங்கிவிட்டது. அவள் என்னை திரும்பதிரும்ப கூப்பிட்டும் நான் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றவளாட்டம் ‘நீங்க இந்த கடையில வேல பாக்கணுமா வேணாமா?’ என்றாள். நிமிர்ந்து அவள் முகத்தை முதல்தடவையாக பார்த்தேன். அழகுல மயங்குறதுன்னு சொல்லுவாங்களே அதுதான் அதேதான்… என்ன முறைப்பு சாமி முன்னுக்கு நிற்பவர்கள் எரிந்துபோவதுபோல கோபம். முறைக்கும்போதே இவ்வளவு அழகென்றால் சிரித்தாள் எப்படி இருப்பாள். அட… இவள் எப்படி என் பெரியப்பா கடையில் இருந்து என்னையே மிரட்டுவாள் என எனக்கும் கோபம் வந்துடுச்சுனா பாருங்களேன். நானும் ஏட்டிக்குபோட்டியாக நின்றதால் கோபத்துடனே சென்றுவிட்டாள். பெரியப்பாவிடம் அவளைப்பற்றி கூற அவரும் அவள் விளையாட்டுப்பெண் சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பாள் என்று போய்விட்டார்.
நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கிடையிலான பேச்சு கொஞ்சமாய் மிகக்கொஞ்சமாய்த்தான் அதிகரித்தது. ஆனால் அவள் மீது கொண்ட காதலோ ஜெட் வேகத்தில் பறந்தது. வயது பிரச்சினை வருமே என புத்தி சுட்டிக்காட்டினாலும் இளமைக்கேயுண்டான துடுக்கால் அதெல்லாம் பெரியவிசயமா என மனசு போலிவீராப்பு காட்டியது. அவள் ஒவ்வொருமுறையும் கடைக்கு வரும்போதும் பாரதிராஜா படத்துல வாறமாதிரி நாலு தேவதைகள் அவளை பூத்தூவி வரவேற்பது போல கற்பனைக்குதிரை பூட்டிய கனவுத்தேர் என் தலையைசுற்றி வலம் வந்தது. அவள்தான் என் வாழ்க்கை என்று செத்துப்போன அப்பத்தா மேல சத்தியம்லாம் செஞ்சேன். அப்போதுதான் அவளும் ஜெய்ன்றவனும் லவ்வுறதாவும் அவன் கனடால இருக்குறதால இந்த மாசமே அவளும் கனடா போறாள்ன்றதும் தெரியவந்தது. ஒருநாள் முழுக்க கடைக்கு லீவு போட்டு ரூம் பூட்டிட்டு விடியவிடிய உக்காந்து அழுதேன். கனடாவுல இருக்குற அந்த ஜெய்க்கும் ஏதாவது ஒரு வெள்ளைக்காரிக்கும் காதல் வரக்கூடாதா? இல்லாட்டி இவளுக்கு விசா கிடைக்காம இருக்கணும் இப்படி ஆயிரம் பிரார்த்தனைகள் வைத்தும் கனடாக்கு போறதுக்கு ஆயத்தமாகி வந்து நின்றாள். மனம்திறந்து சொல்லவும் முடியவில்லை. பெரியப்பாவுக்கு தெரிந்திருந்தால் இந்நேரம் என் படம் பத்திரிகையில் இரண்டாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்று வந்திருக்கும். இப்படி நான் புலம்பி முடிப்பதற்குள் அவள் கனடா போய்விட்டாள். போறவள் சும்மா போகலாம்தானே சொல்லிட்டு போறதுன்ற பேர்ல வந்து சிரித்துட்டு போனாளே…. செத்துட்டேன். அப்ப அவ்வளதானா? என் தெய்வீக காதல் இப்படித்தான் முடியவேண்டுமா? யாரென்றே தெரியாத அந்த ஜெய்மீது கொலைவெறி உண்டானது. டேய் மவனே உன்னையே நம்பி வாற என் சிவானிக்கு ஏதாவது கொடுமை செஞ்சே….. செத்தடா.. ஐயோ இப்படி பைத்தியக்காரனாய் மாத்திட்டு போய்ட்டாளே!

போனவள் போனவள்தான் அவள் நினைவு மட்டுமே இனி நிஜம் ன்றிருந்த வேளையில் அவளோடு பேச இன்னொரு வாய்ப்பு கம்ப்யூட்டர்கதவை தட்டும் போது வேணாம்னா சொல்வேன். முதல்தடவை பார்க்கும்போது அவள் முறைத்த முறைப்பும் கடைசியாக போறதுக்கு முன்னால திரும்பி பார்த்து சிரித்த சிரிப்பும்தான் இப்போதைக்கு என் காதல்சின்னங்கள். இன்று அவளது முகப்புத்தக கணக்கும். அவளுக்கு உடனடியாக விண்ணப்பம் அனுப்பினேன். அவள் எப்போ வருவாள் எப்போ என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வாள் என முகப்பத்திலேயே தூங்கினேன். ஒரு தகவல் வந்தது. சிவானி ஜெய் உங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். என் காலை தரையில் தேடிப்பார்த்தேன். அது வானத்தில் பறந்துகொண்டிருந்தது. ‘ஹை, என்னை ஞாபகம் இருக்கா?’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்தேன். ம்ம்ம் என்று மட்டுமே பதில் வந்தது. அவளோடு நிஜமாகவே பேசுகிறோம் என்ற பிரமிப்பில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்ன செய்றீங்க சிவானி எனக்கு உங்க நினைவு பசுமையா அப்படியே இருக்கு என்றேன். சரி அந்த நினைவுகளை கொஞ்சம் சொல்லுங்கள் என்றாள். பதட்டம் அதிகரித்தது. கைகளும் நடுங்கியது. அவள் இருக்கும்போது என் மனது இறக்கைகட்டி பறந்த நினைவுகளை அழகாக எடுத்து சொன்னேன். கருமம் பிடிச்சவன் அவளை காதலிக்குறதையும் சொல்லி தொலச்சுட்டேன். எப்ப சொன்னேன்னு தெரியல. மனசுல இருந்ததெல்லாம் தட்டிகிட்டு இருக்கும்போது அதுவும் வந்திடுச்சு. கணனித்திரையில் நான் எழுதிய செய்தியை பார்த்தவுடன்தான் தெரிந்தது எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், நான் உங்கள காதலிச்சேன் இப்பயும் காதலிக்குறேன்னு எழுதியிருக்கிறேன். ஐயோ என்ன சொல்லப்போறாளோ என்று பயத்துடன் நகத்தை கடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் ‘நானும்தான்’ என்று பதில் வந்தது. இதயம் நின்னேபோச்சு. நெஞ்சுல தட்டிதட்டி இயங்கவைத்தேன். நான் மறுமொழி கூறுவதற்குள் ‘எனக்கு நேரமாச்சு ரவி, நான் நாளைக்கு வாறேன்’னு சொல்லிட்டு போயிட்டா. என்னையும் ஒருத்தி விரும்புறா அதுவும் நான் உயிருக்கு உயிரா விரும்பியவள் என நினைக்கும்போது அந்த உணர்வை அனுபவித்தால்தான் தெரியும். அதுவும் நிலைக்கவில்லை. மூளைக்கு வேலை கொடுக்காமல் உணர்வாலேயே அவளின் உறவை எதிர்பார்த்ததால் முட்டாளானேன். மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. உண்மை விளங்கியது.

அவளோடு நட்பாய் பழகிய காலத்தில் (நான் எங்கே நட்பாய் பழகினேன்? அவள் என்னோடு நட்பாய் பழகிய காலத்தில்) பொதுவாக சில விடயங்களை பேசிக்கொண்டு செல்வோம். அப்போது அவள் சொன்ன ஒரு விடயம். அவளுக்கும் அவள் காதலனுக்கும் ஒரு விசித்திர பழக்கம் இருக்கிறதாம். அதாவது அவன் இவளது பெயரை முதலாவதாகவும் அவனது பெயரை இரண்டாவதுமாக வைத்து முகப்புத்தக கணக்கு ஆரம்பித்து அதில் இவளின் படத்தை போட்டானாம். அதேபோல இவளும் அவனது பெயரை முதலாவதாக வைத்து அவனது படம் போட்ட கணக்கு ஆரம்பித்தாளாம். அப்படி பார்த்தால் நேற்று நான் பேசியது? அடச்சீ என்ன ஒரு முட்டாள்த்தனம்…. இப்போது நினைவுக்கு வருவது நேற்றே வந்திருக்கலாமே.. அட அதைவிடு! இங்கே இருக்கும்போது உன்னை நண்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து வேறுபட்டு ஒரு பார்வைகூட பார்க்காதவள் அங்கே சென்றதும் காதல் என்கிறாளே…. அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டாமா? ஒருவேளை இது அவளது காதலனாக இருந்து இன்னொருவன் அவளை காதலிப்பது பொறுக்காமல் அவளுக்கு எதாவது தீங்கு செய்தால்? ஐயோ நினைச்சுகூட பார்க்கமுடியலயே…. இனி மனதை போட்டு அலட்டிக்கொள்வதில் பிரயோசனம் இல்லையென்று ஒரு தீர்மானமான முடிவு எடுத்தேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக முகப்புத்தகம் சென்று அவளுக்கு செய்தி அனுப்பினேன். ‘என்ன அக்கா பயந்துட்டீங்களா? எனக்கு தெரியாதா நீங்க ஜெய் அண்ணாவ எவ்ளோ லவ் பண்றீங்கனு. நான் சும்மா உங்ககூட விளையாடினா நீங்களுமா எங்கூட இப்பிடி விளையாடுவீங்க? இங்க இருக்கும்போது யாரோடும் பேசாமல் தன் வேலை உண்டுனு அமைதியா இருக்குற சிவானி அக்காவ இப்பிடி பேசுறதுன்னு எப்பிடி ஆச்சரியப்படேன் தெரியுமா? சரி அக்கா… எனக்கு நிறைய படிக்க இருக்குறதால என் ஃபேஸ்புக் அக்கவுண்ட க்ளோஸ் பண்ணப்போறேன். திரும்பி வந்தா உங்களோடு மறுபடியும் பேசுறேன். நீங்களும் ஜெய் அண்ணாவும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா வாழ என் நல்லூர் முருகனை வேண்டிகொள்றேன். என்று சொல்லிவிட்டு என் முகப்புத்தக கணக்கை அழித்துவிட்டேன். அது அவளா அல்லது அவனா அல்லது வேறு யாராவது அவளது பெயரில் விளையாடினார்களா ஒன்றும் தெரியாது… ஆனால் இந்த முடிவுதான் சரியென்று மனதுக்கு பட்டது. ஏதோ மிகப்பெரிய பாரம் இறங்கிவிட்ட உணர்வு. கலைந்துபோன கனவை மீண்டும் முயற்ச்சிப்பது முட்டாளத்தனம். அத்தோடு அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. பழைய ரணம் என்றாலும் ஆறாவிட்டால் மருந்து போடத்தானே வேண்டும். மற்றவர்கள் என்றால் மதுவிலே மருந்து தேடியிருப்பார்கள் எனக்கு இசைதான் மது மருந்து எல்லாமே….அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வானொலியைப் போட்டேன்.

‘நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகாலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகாலாமா?’

No comments:

Post a Comment