Tuesday, May 5, 2015

மேகமானவள்

கறுப்பானவள், குள்ளமானவள், ஒல்லியானவள்…ஹ்ம்ம்ம் நான் ஏன் இப்படி பிறந்தேன்? அழகான பெண்கள் சூழ்ந்திருக்கும் ஒரு இடத்தில் ஒருநாளாவது மனங்கூசாமல் இருக்கமுடிகிறதா? இப்படியும் ஒரு பெண்ணா என்று எத்தனை கண்கள் என்னை ஏளனமாக பார்க்கிறதோ என்ற படபடப்பிலேயே அனைத்தையும் அணுக வேண்டியுள்ளதே… அழகு என்பது சிவப்புச்சாயத்தில் இல்லை, சிந்தனையிலும் செயலிலுமே இருக்கிறது என மனது எத்தனை முறை ஆறுதல்கூறியும் புத்திக்கு எட்டமாட்டேன்கிறதே… ஹா… உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் எப்படித்தான் உருவத்தைப் பற்றி அதுவும் ஒரு பெண் கவலைப்படாமல் இருக்கமுடியும். ஒரு பெண் சற்று ஒப்பனை குறைவாக தெரிந்தாலே அடுத்த பெண் அவளது இடத்தைப் பிடித்துக் கொள்ளும் பொல்லாத உலகமிது. அட அவ்வளவேன்… ஒரு ஆணுக்கு திருமணம் பேசும்போது முதல்விடயமே பெண் நல்ல நிறமாக இருக்கவேண்டும் என்றுதானே கேட்கிறார்கள் கறுப்பான ஆண்கள்கூட… அப்படியே யாராவது அதிசயமாக நிறத்தை பார்க்காமல் மனதைப்பார்த்து திருமணம் செய்தாலுமே போயும்போயும் ஒரு கறுப்பியை கல்யாணம் செய்திருக்கிறானே என அவர்களை கேலிபேசும் சாக்கடைசமூகம்.

‘என்னடி.. கண்ணாடிய பாத்துகிட்டே நிக்குற, வெளிக்கிட இவ்வளவு நேரமா? மாப்பிள வீட்டுக்காரங்க வந்து காத்துகிட்டு இருக்காங்க. இந்தா இந்த காப்பியக் கொடுத்துட்டு எல்லாரையும் நமஷ்காரம் பண்ணிக்கோ. இந்த இடமாவது முடியோணும்’

மகளைப் பற்றிய கவலையை மனதில் தாங்கிக்கொண்டு கையில் காப்பியைக் கொடுத்த தன் தாயை பரிவோடு பார்த்த மேகலா ‘இருந்தாலும் உனக்கு ரொம்ப ஆசைதாம்மா’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

பெரிய கூட்டமில்லாமல் ஒரு தாயும் மகனும் மட்டுமே இருந்ததால் பலரது பார்வைகளை ஒரேநேரத்தில் எதிர்கொண்டு மனதிற்குள்ளேயே நெழியவேண்டியிருக்காது என ஒரு பெருமூச்சுடன் அவர்களுக்கு எதிரில் சென்று முதலில் அந்த பெண்ணிற்கு காப்பி கொடுத்தாள். மிகவும் சாந்தமாகத் தெரிந்த அந்த பெண்மணி ஒரு இனிய முறுவலுடன் அதைப் பெற்றுக்கொண்டாள். அடுத்து அமர்ந்திருந்த அந்த ஆள் வைத்தகண் வாங்காமல் மேகலாவையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னிடம் வந்த காப்பியைக்கூட அவளைப் பார்த்துக்கொண்டே எடுத்தான். அவளுக்கு ஒருவித கூச்சம் ஏற்பட சற்று பின்வாங்கி அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இப்படி எத்தனை சந்தர்ப்பங்களை திரும்பத் திரும்ப அனுபவித்திருப்பாள். அவள் தந்தை ஊரில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பவர். அவருக்காக சும்மா பேச்சுக்கென்று பெண்பார்க்கும் படலங்களை நிகழ்த்திவிட்டு ஏற்கனவே முறைப்பெண் இருக்கிறது அவர்கள் கோபிப்பார்கள், மகனுக்கு இப்பொழுது திருமணத்தில் விருப்பம் இல்லை, இந்த இடம் சரிவராதென்று குடும்ப ஜோசியர் கூறுகிறார் இன்ன இன்னவாறு பலகாரணங்களை கூறிக்கொண்டு ஒவ்வொருத்தரும் நழுவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காத்துக்காத்து பூத்துப்போன கண்களுடன் பெற்றோரும் முழு முனைப்புடன் அடுத்த வரனை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோரின் மனது காயப்படக்கூடாதென்பதற்காக தானும் தன்னைப் பார்க்கவருவோரின் முன்பாக ஒரு கொலுபொம்மையாக சென்றுநிற்பாள். அதேபோல தன்னை பிடிக்கவில்லை என்று நிராகரிப்போரின்மீது அவள் கோபம் கொள்வதும் கிடையாது. தனக்கு ரதிபோல ஒரு பெண்ணை மனைவியாக்க கனவுகாணும் கணவான்கள் இப்படி ஒரு கறுப்பியை மணக்க எப்படி முன்வருவார்கள் என மனதை சாந்தபடுத்திக் கொள்வாள். ஆனால் திருமண சந்தையில் ஆண்கள் தங்கள் ஆசைகளை முடிந்தளவு நிறைவேற்றிக்கொள்வதாகவும் பெண்கள் நினைத்தது கிடைக்காவிடில் கிடைத்ததை நினைக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்களோ என அவள் மனம் சிலநேரம் பழுங்கும். திருமணமே செய்யாமல் தனக்கு விருப்பமான சமூகசேவையில் காலத்தைக் கழித்துவிடலாமா என்ற எண்ணம் எழுந்தால்கூட தன் ஒரே பிள்ளையை ஒரு நல்ல பையனிடம் ஒப்படைத்து அவள் சந்தோசமாக வாழ்வதைக் கண்ணாற காண்பதற்கு தவமிருக்கும் பெற்றோருக்காக அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் அந்த பெண்பார்க்கும் நாடகத்தில் நாயகியாகச் சென்று நிற்பாள். எப்படியோ இன்று நாடகம் நல்லபடியாக முடிந்தது என அவள் நினைத்துக் கொண்டிருக்கும்போது அவளது தாய் மகிழ்ச்சியோடு ஒடிவந்து அவளைக் கட்டியணைத்தாள்.

‘மாப்பிள்ளைக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம். எப்பவேனா கல்யாணத்த வக்கசொல்லிட்டாங்க’ என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினார்.
இப்படி ஒரு விடயத்தை அவள் கொஞ்சங்கூட எதிர்பார்க்காததால் அதை கேட்டமாத்திரத்திலே கல்லாட்டம் அப்படியே நின்றாள். திருமணம் சம்பிரதாயம் என்பதை தாண்டி தன்னை ஒருவன்…. ஒருவர் பிடித்திருக்கிறது என்று சென்னதுதான் அவளுக்கு அதிர்ச்சி இல்லையில்லை இன்ப அதிர்ச்சியாக உள்ளது. காரணம் தன்னுடன் படிக்கும் சகமாணவிகள் காதலிக்கும் ஆடவர்களோடு நெருங்கிப்பழகும் சந்தர்பங்களை உடனிருந்து பார்க்கும்போது தன்னையே ஆட்கொள்ள ஒருவன் வரமாட்டானா… அவனது ஸ்பரிசத்தின் வெப்பத்தில் குளிர்காயமாட்டோமா என்று ஒரு கன்னியாக கனவுகண்டு அது பலிக்காமல் போன பல சந்தர்ப்பங்களில் மனமெனும் அணை உடைந்து கண்ணீர் எனும் ஆறு பெருக்கெடுக்கும். அட இதுபோல சுத்த தமிழில் கவிதையாக வார்த்தைகளைக் கோர்க்கலாம். ஆனால் வலியை உணரத்தான் முடியும். ம்ம்ம் தெருவில் செல்லும்போதுகூட அவளை அருவருப்புடன் பார்த்து ஒதுங்கும் ஆண்களை நினைக்கும்போது நிறத்தைவைத்துமட்டும் ஒரு பெண்ணை எடைபோடும் இவ்வாறான ஆண்களுடன் பழகுவதைவிட ஒதுங்குவதே மேல் என்று தோன்றும். இன்று…

‘ஏய் மேகலாக்குட்டி.. மாப்பிள்ள உங்கிட்ட தனியாப்பேசணுமாம். போடி போய் பேசு.. கடவுள் இன்னிக்குத்தான் கண்ண தொறந்திருக்கான்.’ என்று வாயெல்லாம் பல்லாக தாய் சொல்லும்போது என்னதான் தன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னவுடனேயே அந்த மனிதர்மீது ஒரு ஈர்ப்பு வந்ததை அவள் உணர்ந்தாலும் முதன்முறையாக அவரிடம் பேசச்செல்லும்போது ஏனோ இந்த வெட்கத்தை தடுக்கமுடியவில்லை. புரட்சி பேசி என்ன? புதுமைப்பெண் என்று புகழ்ந்துதான் என்ன? இயற்கையாக பெண்பிறவிகள் வாங்கிவந்த வெட்கத்தை எப்படி முழுவதுமாக கலைவது… அதுவும் இந்த இடத்தில் நிச்சயமாக அது முடியாது என்பதை உணர்ந்த மேகலா தடுக்கமுடியாமல் வெட்கத்தில் திளைத்துநின்றாள்.



கம்பீரமான ஒரு இளைஞன் அவள் அருகில் வர அவள் நெற்றி வியர்க்க ஆரம்பித்தது. அந்த ஈரத்தை காயவைக்கும்விதமாக அனல்காற்றாக மூச்சுவாங்கினாள். அவன் வந்து அவள் பக்கத்தில் அமைதியாக நின்றான். பேச்சை தொடங்குவான் என்று எதிர்பார்த்த அவள் அவன் அதை செய்யாததால் ஆச்சரியத்தோடு அவனை நிமிர்ந்து பாரத்தாள். அவன்… அவன் அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து அவளது வெட்கம் இன்னும் அதிகமாகி உடல்கூசிப்போனாள். ஒரு சிறு முறுவலுடன் அவன் பேச ஆரம்பித்தான்.

‘என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?’

‘…………….. ஹ்……. ம்ம்’

‘அப்டினா’

‘…………………………’

‘பிடிக்கலயா’

அவள் வெடுக்கென ‘பிடிச்சிருக்கு’என்றாள்

‘தாங்க்ஸ்… அப்புறம்.. ம்ம்ம் உங்ககிட்ட நிறய பேசணும்னுதான் தோணுது. ஆனா …ம்ம் ஹா. முடியலங்க. நீங்களே ஏதாவது பேசுங்களே ப்ளீஸ்’

‘நான்…. நான் ஒண்ணு கேட்டா தப்ப நினைக்கமாட்டீங்களே?’

‘ம்ம்… என்ன கேளுங்க’

‘அது வந்து… நான் அவ்ளோ அழகில்ல. அதனால….வந்து.. நீங்க எதனால என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க?’

‘ஏன் உங்கள நீங்களே தாழ்வா நினைக்குறீங்க? ஒருத்தர பிடிக்குறதுக்கும் பிடிக்காததுக்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கு. நான் சொல்றதால வருத்தப்படாதீங்க. உங்கள பொண்ணுபார்க்க வந்தவங்கல்லாம் டக்குனு உங்கள பார்த்துட்டு நீங்க நிறம் கம்மி அதால பிடிக்கலனுட்டு போயிட்டாங்க. அதுக்குமேல எவ்வளவோ விசயம் இருக்கு. அத பத்தி தெரிஞ்சிக்ககூட அவங்க விருப்பப்பட்டு இருக்கமாட்டாங்க. உங்க அப்பா ரொம்ப நல்லவர். அவர் பொண்ணுங்குறதால மட்டும் இல்லை. உங்கள பார்க்க வர்ரதுக்கு முன்னால தீர விசாரிச்சேன். காரணம் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் பொருத்தமா இருப்போமானு தெரிஞ்சிக்க. குடும்பத்த பொறுப்பா கவனிச்சிக்குறது, பொரியவங்ககிட்ட ரொம்ப மரியாதயா பழகுறது, விருந்தாளிகள நல்லா உபசரிக்குறது, ஆடம்பர செலவுகள தவிர்க்குறதுன்னு உங்ககிட்ட நிறய பிளஸ்பாய்ன்ற் இருக்கு. அதுமட்டுமில்ல. கிட்டத்துல குழந்தங்க போன ஒரு பஸ் விபத்துல மாட்டினப்போ அங்க இருந்த நீங்க அந்த குழந்தங்கள காப்பாத்த கஷ்டப்பட்டது மட்டுமில்லாம உங்க ரத்தத்தகூட தானம் பண்ணி எத்தனயோ உயிரக் காப்பாத்தினீங்க. அதுல என் அக்கா குழந்தையும் ஒண்ணு. இப்பிடி உங்க குணம் எல்லாமே எனக்கு பிடிச்சதனால நீங்க எனக்கு பொருத்தமாயிருப்பீங்கனு நான் முடிவுபண்ணிட்டேன். நான் உங்களுக்கு பொருத்தமான்னு உங்களுக்கு படுதா?’


எத்தனை பெரிய ஆள் இவன்… எல்லாவிடயத்தையும் மேலோட்டமாக பார்த்து நுனிப்புல்மேயும் இந்த சோம்பேறி சமூகத்தில் எப்படிப்பட்ட மனிதன் இவன். அழகு ஒன்றுமட்டும் இருந்தால் போதும் உடனே அடிமையாகிவிடுவோம் என்று அலையும் ஆண்களுக்கு மத்தியில் தன் வாழ்க்கையை தீர்க்கமாக ஆராய்ந்து தெளிவாக முடிவெடுக்கும் இவனைவிடவா இன்னொருவன் பொருந்திவிடுவான்… ஆனால் அப்பொழுதும் அகலாத வெட்க்கத்துடன் ஆமாம் என்பதாக தலையைமட்டும் அசைத்தாள்.

அவன் சிரித்துக்கொண்டு திரும்பி செல்ல ஆரம்பித்தான். அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ மறந்தவனாக அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

‘உங்க கண்ணு ரொம்ப அழகாயிருக்கு'

4 comments:

  1. ஃஃஃஃஃஈரத்தை காயவைக்கும்விதமாக அனல்காற்றாக மூச்சுவாங்கினாள்.ஃஃஃஃ

    அருமையான தங்களது உவமைகள் பெரிய நாவல் ஒன்றை படித்தது போல இருந்தது...

    ReplyDelete
  2. உங்கள் கருத்து ஊக்கமளிப்பதாக உள்ளது.
    ஒரு கதாசிரியனாக வேண்டுமென்ற என் கனவிற்கு இதுவே முதல்படி.
    உங்கள் பாராட்டே அந்த படியில் என்னை சறுக்காமல் செல்லவைக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பா......

    ReplyDelete
  4. Different concept. nice story. keep it up. wish all the best

    ReplyDelete